வெள்ளி, 18 மே, 2018

நடிகையர் திலகம்


சாவித்ரியின் வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆவல் , சாவித்ரியாக வாழ்ந்திருக்கிறார் என்று பேசப்பட்ட கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்க்கும் ஆவல் மற்றும் கீர்த்தியின் நடிப்போடு, படத்தின் தரமும் நன்றாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும் என்று எழுந்த உந்துதல் ஆகியவையே இப்படத்தை பார்க்கப் போனதற்கு காரணங்கள்..
ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என சிலவற்றை வாசித்திருந்த காரணத்தால் இப்படம் பார்க்கும்போது , வாசித்ததும் நினைவில் தோன்றி , படத்தோடு ஒன்றி போக செய்யுமா என்ற சந்தேகம் செல்வதற்கு முன் இருந்தது..
வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது எனக்கு முன்பிருந்த பெரியவர் , "சாவித்ரி-யோட வாழ்க்கை வரலாறை பார்க்க வந்துருக்கோம் " என போனில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததே சாவித்ரி என்ற நடிகைக்குள்ள ஈர்ப்பு சக்தியை கூறியது..
ஆரம்ப காட்சியில் எழுந்த சோகம் , அதற்கடுத்த காட்சிகளில் இருந்து ஆர்வம், சிரிப்பு, ரசனை, பிரமிப்பு, கண்ணீர் என பல உணர்ச்சிகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் இப்படம் தந்து கொண்டிருந்தது..
கீர்த்தி சுரேஷ்.. படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவு விமர்சனங்கள்.. வந்த பின் எவ்வளவு பாராட்டுகள்.. ஆரம்ப காட்சிகளில் அவரின் நடிப்பை சாவித்ரியோடு ஒப்பிட்டு பார்க்க இயலவில்லை(அதாவது உருவ வேற்றுமை) ஆனால் பிற்பாதியில் சாவித்ரியின் பிம்பமே தெரிகிறது.. ஒரு இடத்தில் கூட குறை கூற முடியாதபடி நடிப்பு அவ்வளவு அற்புதம்..
அதிலும் மாயாபஜார் சினிமா காட்சி மிக ,மிக ரசிக்க வைக்கிறது.. ஆனால் இந்த காட்சி உட்பட பல பழைய சினிமா காட்சிகள் (மலர்ந்தும் மலராத, மிஸ்ஸியம்மா பாடல் தவிர ) தமிழில் இருந்திருந்தால் தமிழ் ரசிகர்களை இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்..
ஆரம்ப காட்சிகளில் தெலுங்கில் பேசுவது இயல்பை உணர்த்துவதால் அது குறையாகவே தெரியவில்லை.. ஆனால் பழைய சினிமா காட்சிகளில் எல்லாம் இதை தவிர்த்திருக்கலாம் .. ஏனெனில் தமிழில் அவர் நடிப்பை சொல்ல பல படங்கள் இருக்கின்றன.. அங்கு போலவே இங்கும் நடிகையர்களில் நடிப்புக்கு இலக்கணம் இவர் ஒருவரே...
எனவே தெலுங்கில் இந்த படத்தை எடுத்திருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமாவது அந்த காட்சிகளை தமிழில் எடுத்து இணைத்திருக்கலாம்.. ஏனெனில் மற்ற தெலுங்கு பட காட்சிகள் அர்த்தம் புரியாததால் கீர்த்தியின் நடிப்பை புரியாமல் ரசிக்கும் நிலைதான் இருக்கிறது.. அதுவே மலர்ந்து மலராத பாடல் காட்சி (அதிலும் இரு வரிகள்தான் ) ஒளிபரப்பாகும் கைத்தட்டல்கள் அரங்கை நிரப்பின..
துல்கர் சல்மான் நடிப்பும் அற்புதம்.. " நான் ஜெமினி போல இல்லை என்பதால் அவரை உள்வாங்கி நடிக்கவில்லை, அப்போதைய காலகட்டத்தில் தான் ஒரு நடிகராக அது போல இருந்தால் எப்படி இருப்பேனோ அப்படி நடித்திருக்கிறேன் " என ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார்.. சொல்லி இருந்தது போலவே, "காதல் , இயலாமை வெளிப்படுத்தும் பொறாமை, பொறாமை வெளிப்படுத்தும் கோபம்" என எல்லா காட்சிகளிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்..
சமந்தா முதற்கொண்டு குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவருமே நடிப்பு என காட்டாமல் நடித்திருக்கின்றனர்.. காட்சி அமைப்பு, அலங்காரம் , இடங்கள் என எல்லாமே 50 , 80 காலகட்டத்துக்கு கொண்டு செல்கின்றன..
படம் என்பதை தவிர்த்து, சாவித்ரியின் வாழ்க்கை எனப்பார்த்தால் திறமை, காதல் , பணம் , புகழ், ஏமாற்றம், தோல்வி, போதை பழக்கம், தான தர்மம், நம்பிக்கை துரோகம் , இழப்பு, நோய் என அனைத்தும் சூழ்ந்திருந்த ஒரு வாழ்க்கை.. இதில் முக்கிய சில சம்பவங்கள் விடப்பட்டிருக்குமோ , என்னவோ, ஆனால் இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் , இது அவரின் வாழ்க்கை கதை என பகிரப்பட்டிருப்பதால் உண்மையாகதான் இருக்கும்..
ஜெமினி கணேசனின் "மனைவியின் திறமையை ஊக்குவிக்கும் பாங்கு" முதற்கொண்டு சிலது பிளஸ் பாயிண்ட்களாகக் காட்டப்பட்டாலும் , ஒரே ஒரு பலவீனம் ஒரு பெண்ணின் வாழ்க்கையையே சுழற்றி அடித்ததை உணர முடிகிறது..
தெலுங்கு திரைக்கதை ஆசிரியர் ஒருவர் " நாம் சாவித்ரியை இங்கு கொண்டாடுவதை போலத்தான் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர்களே அவரை இழிவாகவும் பேசுகிறார்கள்.. ஆனால் ஜெமினி கணேசனை பற்றி மட்டும் அங்கு யாரும் குறை கூறுவது இல்லை , ஏனெனில் அவர் காதல் மன்னன் " என இப்படி குறிப்பிட்டு இருந்தார் .. அதனால்தானோ என்னவோ தமிழ் திரை வரலாற்றில் நடிகையரில் திலகமாக ஜொலித்தவரை பற்றி , ஒரு தமிழ் இயக்குனர் கூட படம் எடுக்க முன் வரவில்லை போல.. எது எப்படியோ, இங்கிருந்து புறப்படாத ஒரு வாழ்க்கை வரலாற்று பதிவு ஆந்திராவிலிருந்து இங்குள்ளவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது..
படம் தொடங்கி மூன்று மணி நேரம் இலகுவாக கடந்திருந்தது .. முழு நாள் இப்படத்தை நகர்த்தியிருந்தாலும், இடத்தை விட்டு நகராமல் பார்க்கும் அளவுக்கு படத்தினுள் சுவாரசியம் இருந்தது.. இன்னும் சாவித்ரியின் வாழ்க்கையை , கீர்த்தி சுரேஷின் நடிப்பின் மூலம் நீட்டியிருக்கலாமோ என தோன்றியது..அந்த அளவுக்கு கீர்த்தியின் நடிப்பும் , சாவித்ரி என்ற ஆளுமையை போலவே ஈர்த்திருந்தது.. அப்படத்தின் தாக்கம் வீடு வந்து சேந்த பின்னும் தொடர்கிறது..
ஆக மொத்தம் , சாவித்திரியின் நடிப்பு நடிக்க வருபவர்கள் பலருக்கு நடிப்பை சொல்லி தருவது போல , அவரின் வாழ்க்கை பலரின் வாழ்க்கைக்கு படிப்பினையாக இருக்கும்...

- 14.5.2018