இன்றுள்ள அவசர யுகத்தில் கேட்கப்படும் நல விசாரிப்புகளோ, அனுப்பப்படும் வாழ்த்து செய்திகளோ போல அல்ல அன்று அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள்...வாழ்த்து அட்டைகளில் தேர்வுக்கான தேடல்கள் இருக்கும்..கடிதங்களிலோ நல விசாரிப்புகளுக்கு மத்தியில் பகிர, சிறிதோ பெரிதோ குடும்ப/வெளி விஷயங்கள் இருக்கும் ...
வாழ்த்து நம்மை வந்தடைய எடுக்கும் கால நேரத்தில் ஒருவித சந்தோசம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும்... கடிதமோ தபால்காரரின் குரல் வெளிப்பட்ட நிமிடத்திலிருந்து வாங்கி வாசித்து முடிக்கும் வரை ஒரு குறுகுறுப்பைக் கொடுக்கும்..
அன்று பணமதிப்பு குறைவாக இருந்தாலும் பணத்திற்கான மதிப்பு அதிகமிருந்தது... அன்றைய சில நூறு மணியார்டர் சந்தோஷங்களை இப்போதைய பல லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் கூட கொடுப்பதில்லை..
ஆக காத்திருந்து பெறும் விஷயங்கள் மட்டுமல்ல , அந்த நிமிடங்களும் அற்புதமானவை., பொக்கிஷம் போன்றவை..
அப்போது சேர்த்திருந்த / சேர்க்கத்தவறிய பொருள்கள் தொலைந்து போயிருந்தாலும் , அந்த நிமிடங்கள் நெஞ்சின் ஓரத்தில் என்றுமே பசுமையாய் படிந்திருக்கும்...
அப்படி நான் சேமித்து வைத்த பல நினைவுகளோடு சில வாழ்த்து அட்டைகள் , பரிசு பொருட்கள் போன்றவையும் என் மனதை அந்த நினைவுகளில் நிறுத்து சிலிர்க்க வைக்கும்.. அப்படி நான் பார்த்துக் கொண்டிருந்த வாழ்த்து அட்டைகளும் , புகைப்படங்களும் கொடுத்த வார்த்தைகள்தான் மேலே உள்ளவை...
நல்ல நினைவுகள் எப்போதும் பொக்கிஷமே...ஆக இன்றைய ஒவ்வொரு மணித்துளியையும் நாளைய பொக்கிஷமாக நினைத்துப் பார்க்க , நிகழ்வில் (நிகழ் காலத்தில் மனதை வைத்திருந்து ) வாழ்வோம், மகிழ்ச்சியை துணைக்கு கொண்டு...
நாள் 06-04- 20.