வியாழன், 24 நவம்பர், 2016

16

அன்று பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபமாக , "பெனிட் என்னை முடால்-னு (முட்டாள் என்பதுதான் அவன் உச்சரிப்பில் முடால்(mutaal ) , அதுவும் "மு"-வுக்கு அடுத்து "டா"வை நீட்டி சொல்வது கூட கேட்க அழகாக இருக்கும் என்பது வேறு ) சொன்னான்.. இனி நான் அவன்கிட்ட பேச மாட்டேன்.. அன்னைக்கு நாம மனாமா-ல பார்த்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணி , அவன் அம்மாகிட்ட பெனிட், ரோஹித்-ஐ முடால்-னு சொல்றான்னு சொல்லுங்க.. அவனை அப்படி சொல்லக்கூடாதுன்னு மிரட்டி வைக்க சொல்லுங்க" என்றவன் உடனே குரலை கோபத்தில் இருந்து கொஞ்சம் தாழ்த்தி "திட்ட மட்டும் சொல்லுங்க , அடிக்க சொல்லாதீங்க" என்றான்..

அவன் சொல்ல சொன்ன ஆன்ட்டி, எங்களுக்கு நன்கு பரிச்சயமான தோழி .. என் தங்கையை போன்று.. ஒரு முறை இங்குள்ள ஒரு மாலில் அவருடன் எதிர்பாராத விதமாக பெனிட்டின் குடும்பத்தையும் நாங்கள் சந்திக்க நேர்ந்திருந்தது.. அவர்கள் இரு குடும்பமும் முன்பே பழக்கம் என்பதும் அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது..

குழந்தைகள் எந்த வார்த்தையையும் அர்த்தம் தெரிந்து பேசுவதில்லை என்பதால் அவனை சமாதானப் படுத்த முயன்றேன்.. அவனோ விடுவதாக இல்லை .. அந்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணுங்க என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான்.. சமாளிக்க முடியாது என தோன்றவும் அவங்க நம்பர் என்கிட்டே இல்லை, ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போறப்போ சொல்லலாம் என்று ஒருவாறு சமாதானப் படுத்தி வைத்தேன்.. அதன்பின்னும் இரு நாட்கள் இதே குற்றச்சாட்டை வீட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தான்..

சில நாட்களுக்கு பின் அவன் அவன் தங்கையுடன் சண்டை போடும்போது அவளை முட்டாள் எனக் கூறினான்.. "அண்ணா, என்னை முட்டாள்-னு சொல்றான் " என அவள் கூறவே "அவள் முட்டாளா , அவ அம்மா சொல்றதை எல்லாம் எவ்வளவு அழகா புரிஞ்சு கரெக்ட்டா செய்யறா , அவளை முட்டாள்-னு சொல்றே ...எதை சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாம இருக்கவங்கவங்களையும் , புரிஞ்சுக்க முடியாம நல்லா படிக்காத பசங்களையும், எதுவும் தெரியாதவங்களையும்தான் முட்டாள்-னு சொல்வாங்க.. நிகிதாதான் க்லவர் கேர்ள் ஆச்சே" எனக் கூறினேன்..

உடனே சற்றும் தாமதிக்காமல் "ஓ, அப்போ என்னை நல்லா படிக்க மாட்டேன்னுதான் பெனிட் அப்படி சொன்னானா , என்னை அப்படி நினைச்சுட்டானா, இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன்" என எரிச்சலுடன் வார்த்தைகளை கூறி முடித்தான்..அவன் மனம் பெனிட்டை நோக்கி செல்லும் என்பது அப்போது நானே அறியாததுதான்..

அடுத்த நாள் பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே , "இன்னைக்கு நான் வாங்கின ஸ்டார்-ஐ (அவன் வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை அல்லது வகுப்பு டெஸ்ட்-களை நன்றாக எழுதினால் நோட்டிலும், சரியாக சொன்னால் (ஓரல் ) கையிலும் சின்ன ஸ்டார் வரைந்து கொடுப்பார் அவன் ஆசிரியை) பென்னட்-கிட்ட காண்பிச்சு,நானா முடால் , இனி என்னை முடால்-னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன், அவன் ஒன்னுமே சொல்லல, இனி அப்படி கூப்பிட மாட்டான்னு நினைக்கிறேன்"என்றான்.. அவன் குரலில் தன்னை நிரூபித்து விட்ட திருப்தி தெரிந்தது..இருந்தும் அடுத்த வந்த நாட்களில் சில நாட்கள் அவன் முட்டாள் எனக் கூறுவதாக இங்கு வந்து கோபப்படுவான்..

ஏறக்குறைய இரு மாதங்கள் கழித்து எங்களுக்கு தெரிந்த அந்த தோழியின் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது.. பிள்ளைகளை அவர்கள் அப்பாவிடம் விட்டு விட்டு தனியாக செல்ல இருந்தவளை, (மணி மாலை 6-ஐ தண்டி இருந்ததால் மனதில் யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்குமே எனது தோன்றியது, அதை ஓரிருமுறை கிளம்பும்போது வார்த்தைகளிலும் தெரிவித்து இருந்தேன்.. அவர் அலுவலக வேலையை லேப்டாப்பில் செய்து கொண்டிருந்ததால் அவரை அழைக்கவும் இல்லை)ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

அங்கு சென்றதும் இவனை பார்த்து , பென்னட்டோட Friend தான ரோஹித்.. அன்னைக்கு நாம மால்-ல பார்த்ததுல இருந்து , எப்பவும் என்னை பார்த்தா ரோஹித்-அ பத்தி கேட்டுட்டே இருப்பான்,ரோஹித் வீடு உங்களுக்கு தெரியுமா, ரோஹித் அம்மாகிட்ட பேசுவீங்களா , எங்க வீட்டுக்கு ரோஹித்த கூட்டிட்டு வர சொல்லுங்கன்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்" எனக் கூறினார்..

"இவனும் சில முறை அதே போல உன் மூலமா அவங்க அட்ரஸ் கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாம், நம்ம வீட்டுக்கு அவங்க அம்மாவை பெனிட்-ஐ கூட்டிட்டு வர சொல்லுங்க" என சொல்வதையும் கூறினேன்.. கூடவே
"பெனிட் இவனை க்ளாஸ்ல முட்டாள்னு சொல்றதாவும், அவங்க அம்மாகிட்ட உன்மூலமா அதை சொல்ல சொல்லி கண்டிக்க உனக்கு போன் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணினான் " எனவும் சொன்னேன்.. அவரும் "இருக்கும்க்கா , அவன் சொல்லி இருப்பான் , ஏன்னா அவன் அக்கா அவனை அடிக்கடி அந்த வார்த்தையை சொல்லி கூப்பிடுவா" எனக் கூறினார்.. இவன் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.. பின் வேறு சில விஷயங்கள் பேசி விட்டு நாங்கள் கிளம்பினோம்..

வரும் வழியில் "அம்மா , பெனிட் அந்த ஆன்ட்டிகிட்ட என்ன சொன்னானாம்" எனக் கேட்க "நீயும் கேட்டுட்டுதானே இருந்த" எனக் கூறினேன்.."இருந்தாலும் நீ சொல்லும்மா" எனக்கேட்கவும் "நீ சொல்றது போலவே அவனும் அந்த ஆன்ட்டிகிட்ட உன்னை அவங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடறானாம், உன்னை பத்தி அவங்ககிட்ட எப்பவும் விசாரிக்கறானாம்" எனக் கூறினேன்..

உடனே கொஞ்சம் சாந்தமான குரலில் கூறினான் "அப்போ இனிமே பெனிட் என்னை முடால்-னு கூப்பிட்டா ப்ராப்லம் இல்லை " :) :) :) :)

குழந்தைகளிடம்தான் கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கின்றன...

புதன், 23 நவம்பர், 2016

15

நான்கு நாட்களுக்கு முன் மகனுக்கு கொதிக்கும் காய்ச்சல்.. அதன் எல்லாவித தாக்குதலாலும் துவண்டு போயிருந்தான்.. இரவு அவனுக்கு மருந்து கொடுத்து விட்டு , நெற்றியை தொட்டு பார்த்தேன்.. அவன் நெற்றியின் சூடு என் கையில் பிரதிபலித்தது.

எப்போதும் இல்லா விட்டாலும் அடிக்கடி இரவுகளில் பிள்ளைகளுடன் சேர்ந்து கடவுளை மானசீகமாக வேண்டுவது வழக்கம்.. அன்றும் கடவுளிடம் வேண்டும் போது , "சாமி,ரோஹித் காய்ச்சல் குணமாகனும்..,அவன் காய்ச்சலை வேணா எனக்கு கொடுத்துருங்க, அவனுக்கு குணமானா போதும்" என வேண்டினேன்..நான் வேண்டுவதை போர்த்தியிருந்த போர்வைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்..

இரு நாட்களுக்கு முன்பிருந்து எனக்கும் பெண்ணுக்கும் காய்ச்சல்.. அவனிடம் வெறும் இருமல் மட்டுமே தங்கியிருந்தது..

இன்று ஒரு விஷயத்தை அவன் கேட்டுக் கொண்டே இருக்கவே , "அம்மாவ தொந்திரவு பண்ணாத தங்கம், அம்மாவுக்கு காய்ச்சல் இல்ல , ரெஸ்ட் எடுக்க விடு" என்றேன்.. உடனே " போம்மா, நீ ஏன் சாமிகிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டிக்கிட்ட, அதான உனக்கு காய்ச்சல் வந்துருச்சு" என சோகத்துடன் கூறினான்....

நீ சின்ன பையன் , உனக்கு காய்ச்சல் இருந்தப்போ எவ்வளவு கஷ்டப்பட்டே பார்த்தியா இப்ப நீ எழுந்து நடக்கற , வாமிடிங் எதுவும் இல்ல, அம்மா வளந்தாச்சு இல்ல , அம்மா சமாளிச்சுடுவேன்" என சொன்னேன்..

"போம்மா , உனக்கு தெரியல , சாமிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டறதுக்கு பதிலா, காய்ச்சல் வீட்டுக்கு வெளில போகணும்னு வேண்டி இருந்தேன்னா , இப்ப காய்ச்சல் வெளில போயிருக்கும்ல " என சொல்லியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..

அட ஆமால்ல, அப்படி வேண்டி இருந்தால் காய்ச்சல் வீட்ட விட்டு ஒரேயடியா ஓடி போயிருக்கும்ல =D =D =D ..

ஷார்ஜா
5-2-2016

14

சிறு வயதில் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், குளிப்பதற்கு அங்கு அருகிலுள்ள ஆற்றுக்கு என் பல கெஞ்சல் , அழுகையையும் மீறி என்னை உறவினர்கள் கூட்டி செல்வது வழக்கம்.. நகரத்தில் வாழும் பெண்களுக்கு , கிராமங்களில் உள்ள பெண்களை போல் லாவகமாக குளிப்பது முதல் உடை மாற்றுவது வரை அவ்வளவு எளிதில் வராது.. என் அழுகைக்கும் கெஞ்சலுக்கும் அதுதான் காரணம்..

ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களின் வற்புறுத்தல் நின்றே போனது.. பின்னர் உறவினர்கள் குளிக்க செல்லும்போது, ஆற்றை வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் சென்று வருவேன்..

என் பாட்டி வீட்டுக்கு சில வீடுகள் தள்ளிதான் என் கணவரின் வீடும் என்பதால், இப்போது என் கணவரும் பிள்ளைகளும் ஆற்றில் குளிக்க செல்லும்போது வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் (நேரம் கிடைக்கும் சமயங்களில்) செல்வேன்..

இந்த முறை ஒருநாள் சென்று அவர்கள் குளித்து முடித்ததும் , வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.. அப்போது என் மகனிடம் நடந்த உரையாடல்:

"தங்கம் , இந்த ஆத்துலதான் அம்மா , உன் வயசுல இருக்கும்போதெல்லாம் குளிக்க வருவேன், நான் மட்டும் இல்ல, அம்மம்மா கூட சின்ன வயசுல இந்த ஆத்துலதான் குளிப்பாங்க"..

"அப்போ, நான் எங்க இருந்தேன்"

"அப்போ நீ பிறக்கவே இல்ல தங்கம்"

உடனே கோபத்துடன் "ஏம்மா, அப்போ என்ன பிறக்க வச்சுருக்கலாம் இல்ல"

வந்த சிரிப்பை அடக்காமல் சிரித்து விட்டு, "டேய், அம்மாவே அப்போ பிறக்கலடா"

"அப்போ , அம்மம்மா இங்க வந்து குளிச்சது உனக்கு எப்படி தெரியும்"

அம்மம்மா , இதே ஊர்தான , இங்கதான குளிக்க வந்துருப்பாங்க, அதான் கெஸ்-ல சொன்னேன் என சொல்லப்போனால், அதற்கு மேல் கேள்விகளால் முடக்குவான் என்று , "அம்மம்மாதான் தங்கம் என்கிட்டே சொன்னாங்க" என கூறினேன்.

அந்த பதிலில் திருப்தியுற்றவன் அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை..

அந்த தருணம் அவனின் பேச்சை ரசித்த தருணங்களில் ஒன்று :)

அறிவுரை

"பில்டிங் செட்" வைத்து இரண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.. இடையில் ஏதோ கோபத்தில், நிகிதா அடுக்கி வைத்து இருந்த செட்-ஐ ரோஹித் தட்டி விட்டான்.. உடனே அழ ஆரம்பித்தவளை, "அழாத, அண்ணா "பேட் பாய்" அதான் இப்படி தட்டி விடறான்" என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
உடனே ரோஹித், "நோ. அவதான் பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள்" -னு அவளைப்பார்த்து சொல்லிக்கொண்டே இருந்தான்.. அதைக்கேட்டதும் "நான் பேட் கேர்ள்-னு அண்ணா சொல்றான்" என அழ ஆரம்பித்தாள்..
நீதான் ப...ேட் கேர்ள் இல்லையில்ல , பின்ன ஏன் அழற , நீ பேட் கேர்ளா இருந்தாதான் அவன் சொல்றதுக்கு feel பண்ணி வருத்தப்படணும், இல்லாம feel பண்ணி அழுதா, நான் பேட் கேர்ள்தான் -னு நீயே ஒத்துக்கறதா அர்த்தம்"-னு சமாதானம் பண்ணியதும் அழுவதை நிறுத்தி விட்டு, அவன் சொல்லிக்கொண்டு இருந்ததை கவனிக்காதது போல விளையாட ஆரம்பித்தது விட்டாள்..
ஆனால் இது புரிந்தும், இது போலான நான் கடந்து வந்த சந்தர்ப்பங்களில் சமாதானமாகாமல் மன உளைச்சலில் இருந்ததுதான் திடீரென நினைவுக்கு வந்தது..
"அறிவுரை சொல்வது ரொம்பவே சுலபம்"

துரத்தும் சூரியன் :)

கண்ணாடிக்கதவின் வழி
ஊடுருவிய சூரிய ஒளி
அவன் கைகளில் சுட்டு
ஒரு நிகழ்வை அவன் நினைவிலிருந்து
எடுத்துக் கொடுத்தவாறே ...
தன் பரப்பை விரிக்கத்தொடங்கியது...


இன்று பள்ளிக்கு பேருந்தில்
சென்று கொண்டிருக்கும்போது
சூரியனும் என்னுடனே வந்தது
ஏன்னு தெரியல என்றவனிடம்
காரணத்தை விளக்க ஆரம்பித்தேன்..

விளக்கத்தை விலக்கியவாறே
இல்லை, உங்களுக்கு தெரியல
சன் எதுக்கோ என்னை ஃபாலோ பண்ணுது
என்றவனைப் பார்த்து
சிரித்தது சூரியன்.....

13

அன்றன்று நடந்த நிகழ்வுகளை அப்போது பெற்றோரிடமும்(பெரும்பாலும் அம்மாவிடம்தான்) இப்போது கணவரிடமும் கொட்டி விடும் பழக்கத்திற்கு அவர்களின் காது கொடுத்து கேட்காத உதாசீனத்தால் கூட முட்டுக்கட்டை போட முடிந்ததில்லை....
நான் அப்படி அம்மாவிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்போதே ,திடீரென சம்பந்தமே இல்லாத ஏதோ ஒன்றைப்பற்றி என்னிடம் கேட்டோ அல்லது செய்திருக்க வேண்டிய மறந்து போன செயல்களை தனக்குத்தானே சொல்லியோ , அதுவரை என் பேச்சைத்தான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்திருந்த நினைப்பில் தீ வைப்பார்.. கணவரோ ஒரு படி மேலே போய் கவனிக்காததை வலுக்கட்டாயமாக உடல் மொழியால்(மொபைலை நோண்டுவது, டிவி சேனலை கர்ம சிரத்தையாக மாற்றுவது ,இடையிடையே பிள்ளைகளிடம் பேசுவது , பல நேரங்களில், என்ன தொண தொணன்னு என்று அதட்டுவது வரை ) வெளிப்படுத்தி விடுவார்..
ஆனாலும் எனக்கு தேவை அவர்கள் கேட்டாக வேண்டும் என்பதில் இல்லை, என் மனதிலிருந்ததை சொல்லி விட வேண்டுமென்பதில்தான்.. ஆதலால் அவர்கள் கவனிக்காமல் இருப்பது பெரிய விஷயமாக படுவதே இல்லை..
ரோஹித்-க்கும் என் போல் பழக்கம்.. பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே பள்ளியில் நடந்ததை ஒப்பித்து விடுவான்.. விடுபட்ட மறந்தவைகளை நினைவு வரும்போது இடை இடையே சொல்லுவான்.. ஆனால் கட்டாயமாக, நான் கவனிக்கிறேனா என்பதில் கவனமாக இருப்பான்.. கவனிக்காதது போல் பட்டால் என்னை வார்த்தைகளால் உலுக்கி எடுத்தாவது கேட்க வைத்து விடுவான்..
அன்றும் பேருந்திலிருந்து இறங்கியதும் , "பெனிட் எனக்கும், ஜெகனுக்கும் சாக்லேட் கொடுத்தான்மா.. நானும் , பெனிட்டுக்கும், ஜெகனுக்கும், பிரணவ்க்கும் சாக்லேட் கொடுக்கணும், வாங்கி கொடுங்க" எனக் கூறினான்.. "சரி, பெனிட் பிரணவ்-க்கு சாக்லேட் கொடுக்கலையா "எனக்கேட்டேன்.. "இல்லை, ரெண்டு பேரும் கத்தி சொல்லிட்டாங்க" என சொன்னான்..
"கத்தின்னா " எனக் கேட்டதும், ஆமா, உனக்கு தெரியாதா , கத்தின்னா கட் பண்ணுவோம்ல , அது மாதிரி, கத்தி சொன்னா ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க" என விளக்கினான்..
ஏற்கனவே ஒருமுறை இந்த "கத்தி"அவன் பேச்சில் வந்திருந்தது.. பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலகட்டத்தின் ஒரு வாரம் அது.. அந்த வாரத்தில் ரோஹித் பள்ளியிலிருந்து எந்த புகாரை கொண்டு வருவான் என்றே காத்திருக்க வைத்திருந்தான்.. ஒருமுறை பேருந்தின் இருக்கையை கிழித்து விட்டான் என புகார், அடுத்த இரு நாட்களில் ஒரு பையனை அடித்து விட்டான் என புகார்.. இதை எல்லாம் பள்ளி பேருந்திலிருந்து இறக்கி விடும் பெண்மணி என்னிடம் சொல்லும்போது தலை குனிந்து கேட்டுக் கொண்டிருப்பான்..
அன்று, "ஏன் அந்த பையனை அடிச்சே" எனக்கேட்டேன்.. அவன் கத்தி சொன்னான், அதுதான் அடிச்சேன்"
"என்ன கத்தி சொன்னான் "
"அவன் கத்தி சொன்னான், அடிச்சேன்"
எனக்கு புரியாமல் "அவன் எதை வேணா கத்தி சொல்லட்டும், அதுக்காக அவனை அடிப்பியா, என எச்சரித்து விட்டிருந்தேன்..
அப்போது விளங்காத "கத்தி" இம்முறை எனக்கு விளக்கப்பட்டிருந்தது..
"சரி, யூனுஸ்(?) -க்கு சாக்லேட் கொடுக்க மாட்டியா" என சக மாணவனை குறித்து கேட்டேன்.. "நோ , அவன் அதினா(?)கிட்ட ரோஹித்கிட்ட கத்தி போடுன்னு சொன்னான்.. சோ அவன்கிட்ட நான் கத்தி போட்டுட்டேன்" எனக்கூறினான்..
(?) -இதற்கு அர்த்தம் , அவர்களின் பெயர் எனக்கு அடிக்கடி மறந்து விடும்..இப்போதும் சந்தேகமாகத்தான் போட்டிருக்கிறேன்.. அந்த பெண்ணின் பெயரை மாற்றி நான் அஜீனா என சொன்னால் , "அஜீனாவா , அஜீனாவா" என ஒரு ஆசிரியரை போல கண்டிப்புடன் கேள்வி எழுப்பி கண்டிப்புடனேயே பெயரை திருத்தமாக சொல்லிக்கொடுப்பான்..
உடனே சரி, பேசுவீங்கன்னா அதுக்கு என்ன சொல்லுவீங்க எனக் கேட்டேன்.. "ஜோட்டி" எனக் கூறி கட்டை விரலை உயர்த்தினான்..(இவை இரண்டுக்கும் அர்த்தம் தேடியும் அவன் சொல்லும் அர்த்தத்தோடு பொருந்தவில்லை, உடன் படிக்கும் மாணவர்களின் வட்டார மொழி போல)..
நான் படிக்கும்போது உன் பேச்சு காய், உன் பேச்சு பழம் என்று சொல்லிக்கொண்டதுண்டு.. காய் என்றால் ஆள்காட்டி விரல் நுனியை நடு விரலால் பின்னுக்கு இழுத்து காட்டியும் , பழம் என்றால் ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் தவிர்த்து மற்ற விரல்களை மடக்கி காண்பிப்பது என இருக்கும்..
இவனின் தற்போதைய வகுப்பு வழக்கப்படி "ஜோட்டி" என்றால் கட்டை விரலை மட்டும் உயர்த்தியும், "கத்தி"என்றால் சுண்டு விரலை மட்டும் உயர்த்தியும் காட்டுவதாம்...
சாக்லேட் வாங்கிக்கொடுத்ததும், "இது ரோஹித்-க்கு (அவனையும் சேர்த்து), இது பெனிட்-க்கு, இது ஜெகனுக்கு , இது பிரணவ்-க்கு" என நான்கு சாக்லேட்களை பேக்-ல் போட்டுக்கொண்டான்..
பள்ளியிலிருந்து திரும்பியதும் , "சாக்லேட்ட ஃப்ரெண்ட்ஸ்-க்கு கொடுத்தியா" எனக்கேட்டேன்.. பிரணவ் மட்டும் வேண்டாம்னு சொல்லி வாங்கல , சோ அதை யூனுஸ்-கு கொடுத்துட்டேன்..
"யூனுஸ்(?)தான் உன்கூட கத்தி போட்டான்னு சொன்னே இல்லையா"எனக் கேட்க, சிரித்தவாறே சொன்னான், "சாக்லேட் கொடுத்ததும் ஜோட்டி சொல்லிட்டான்"...
:) :)

12

இப்போது நினைவில் வராத ஏதோ ஒன்றை ரோஹித் சொன்னதற்கு,"ஓகே மை சன்" என்றேன்.. உடனே சிரித்துக்கொண்டே "என்னம்மா, நீங்களும், அப்பாவும் என்னை மை சன்-ன்னு கூப்டறீங்க , நான் என்ன அந்த சன்-ஆ" என பால்கனி கதவின் வழி தெரிந்த சூரியனைக் காட்டினான்..
"அது sun நீ son" என விளக்கிக் கூறியதை புரிந்துகொண்டானா இல்லையா என சுதாகரிப்பதற்குள் , "அப்போ நிகிதாவ எப்படி கூப்பிடுவீங்க" எனக்கேட்டான்.. "நிகிதா அம்மாக்கும் அப்பாக்கும் டாட்டர் " என்றேன்.. "ஹஹாஹா, டாட்டரா, அப்போ அவ ஊசி போடுவாளா" என சிரித்தபடி கேட்டான்.. ஊசி போடறது டாக்டர் , மகள்-னா டாட்டர் என ஸ்பெல்லிங் உடன் விளக்கினேன்.. மேற்கொண்டு கேள்வி எதுவும் எழுப்பாததால் விளங்கியது என நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த தின்பண்டமும்,டிவி-யில் ஓடிக்கொண்டிருந்த டோராவும்தான் மேற்கொண்டு அவனை கேள்வி எழுப்ப தோன்ற விடவில்லை என அதற்கு பின்னான அவன் பேச்சுகளால் புரிந்தது..
எப்போதுமே "என்னவாக ஆகப்போறீங்க" என பிள்ளைகளிடம் கேட்டால் , ரோஹித் "டாக்டராவேன்" எனவும் நிகிதா துப்பாக்கி போல் கை விரல்களைச் சுட்டி "நான் CID " (புகழ் ஜீ தமிழ் டிவி-க்கே) எனவும் கூறுவாள்..
சில நாட்கள் கழித்து திடீரென கோபித்துக் கொண்டவனாக , "நான் மட்டும் மை சன் , ஆனா நிகிதா மட்டும் டாக்டரா , நானும் டாக்டர் ஆகணும்" என்றான்.. "அவ டாட்டர் தங்கம், நீ டாக்டர் ஆகணும்னா நல்லா படி டாக்டராயிடுவே" என திரும்ப ஸ்பெல்லிங் சொல்லி விளக்கி கூறினேன்.. அதை காதில் வாங்கிக் கொள்ளாதவனாக "அப்போ நிகிதா மட்டும் ஸ்கூல்-க்கே போகல, ஆனா இப்பவே அவள டாக்டர்ன்னு சொல்றீங்க , போம்மா , நானும் இப்பவே டாக்டராகணும்" என வார்த்தையில் வீம்பும் பிடிவாதமும் கொண்டு அழவும் தொடங்கி இருந்தான்.. புரிய வைக்க முடியாதென்று தோன்றியதும் வேறு பேச்சை மாற்றிக் கொண்டேன்..
அவன் இப்படி சொல்வதும் , நான் பேச்சை மாற்றுவதும் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது.. எங்காவது டாட்டர், டாக்டர் என வார்த்தை வந்தாலே இதை ஆரம்பித்து விடுவான்..
ஒருமுறை வாட்சப்பில் இருந்த அவன் டீச்சரின் குடும்ப புகைப்படத்தை அவனிடம் காட்டினேன்.. அவருக்கு பள்ளியில் படிக்கும் இரு வளர்ந்த மகள்கள்.. , போட்டோவை பார்த்தவன், "உனக்கு தெரியுமா , இவங்க ரெண்டு பேருமே டாட்டர்ஸ், மேம் சொன்னாங்க (ஏதோ ஒரு நாள் பெண்கள் பள்ளிக்கு வந்திருக்கும்போது பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்து இருப்பார் போல ), ஆனா நான் மட்டும் டாட்டர் இல்ல" என சிணுங்கினான்.. அவங்க டீச்சரோட பொண்ணுங்க தங்கம் , அதான் டாட்டர்ஸ்-னு சொல்லி இருக்காங்க, நான் நிகிதாவ டாட்டர்னு சொன்னேன்ல அது போல" என சொன்னதும் , எப்பவும் நிகிதாவை மட்டும் டாக்டர் ஆக்கு, என்னை ஆக்காதே" என ஏன்தான் புகைப்படத்தை காண்பித்தோமோ என்று நினைக்கும் அளவுக்கு பேசி கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..
நேற்று பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையை கழற்றாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட தொடங்கினான்.. "தங்கம், டிரஸ் கழட்டு, நான் இப்ப வாஷ் பண்ணினாதான் நீ நாளைக்கு ஸ்கூல்க்கு போட்டுட்டு போக முடியும்" எனக் கூறினேன்.. "இல்லை, முடியாது"என விட்டேத்தியாக பதில் கூறினான்..
"ஓகே, எனக்கு என்ன,யூனிபார்ம் டிரஸ் இல்லேன்னா ஸ்கூல்-ல உன்னை சேர்க்க மாட்டாங்க, அப்புறம் ஸ்கூல்க்கு போக முடியாது, ஸ்கூல்-க்கு போய் படிச்சாதான டாக்டர் ஆக முடியும், ஸ்கூல்-க்கு போகலேன்னா நீ நினச்சது போல டாக்டர் ஆகவும் முடியாது" என அசால்ட்டாகக் கூறினேன்..
உடனே "நான் டிரஸ் கழட்டறேன்" எனக் கூறியவன் , கழட்டிக்கொண்டே கேட்டான், "ஆமா, நீங்களும் ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சீங்கன்னு சொன்னீங்கல்ல, அப்போ நீங்க ஏன் டாக்டராகல", :o :o

புதன், 2 நவம்பர், 2016

கதை சொல்லி

என்றோ ஒருநாள் சொன்ன
கதையையே திரும்பத்திரும்ப
சொல்ல சொல்லிக் கேட்கிறாள்....

சொல்லுவதின் சலிப்போ ...
கேட்பதின் ஆர்வத்தை
தொட மறுக்கிறது.....


அசுவாரசியத்தோடு இறக்கப்பட்ட
கதாபாத்திரங்களோ அவள் நினைவில்
அமர்த்தப்பட்ட காட்சிகளின்படி
தத்ரூபமாக வாழ்கின்றன.....

சலிப்பு விழுங்கத் துடித்த
காட்சிகளையும்
கண்டிப்பு பூசிய
வார்த்தைகளைக் கொண்டு
பாந்தமாக உட்புகுத்துகிறாள்.....

இடையிடையே கதை சொல்லியும்
அவளானதால்தான் என்னவோ
முன்பை விடவும் ஜொலிக்கின்றன
கதாபாத்திரங்கள்....

11

நேற்று மதியம் பிள்ளைகளுக்கு சுண்டல் குழம்பு ஊற்றி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தேன்.. சுண்டல் இருவருக்கும் பிடிக்காது.. பெண்ணோ என் மிரட்டலுக்கு பயந்து சாதத்துடன் நான் கொடுக்கும் சுண்டலையும் விழுங்கிக்கொண்டிருந்தாள்..
ஆரம்பத்தில் எனக்கு வேண்டாம்மா என கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த மகனுக்கு சுண்டல் வெளியில் தெரியாதவாறு வைத்து 2,3 வாய் ஊட்டி விட்டேன்.. "இதுல சுண்டல் இருக்கு , இருக்கு" என்றே முகத்தை சுருக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் , "சரி, இனி சுண்ட...ல் போடாம வெறும் குழம்பு சாதம் மட்டும் தர்றேன்" என கூறினேன்..
ஆனால் திரும்பவும் சுண்டலை சாதத்தில் மறைத்து சேர்த்து கொடுத்ததை பார்த்து விட்டான்.. "இதுல சுண்டல் இருக்கு" என்று வாயை திறக்க மறுத்தான்.. "இல்ல தங்கம், இதுல இல்ல , நீ சாப்பிடு" என ஊட்ட போனவளிடம் , "பொய் சொல்றியா . என்கிட்டயே பொய் சொல்றியா, எனக்கு பொய் பேசினா பிடிக்காது , உனக்கு மட்டும்தான் பொய் பேசினா பிடிக்காதா, எனக்கும்தான் பிடிக்காது" என காட்டுத்தனமான கத்தியவனைப் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய் விட்டேன்..
சிறு விஷயத்துக்கு கூட பிள்ளைகள் ஆரம்பத்தில் பொய் பேசியபோது "எனக்கு பொய் பேசினா பிடிக்காதுல்ல, உண்மையை சொன்னா அம்மா மிரட்டி மட்டும் விட்டுருவேன், பொய் பேசினா அடிப்பேன், எங்கேயும் பொய் பேசக்கூடாது, நடந்ததை சொல்லிட்டு இனி அப்படி நடந்துக்க மாட்டேன்னு போயிரணும், life full -ஆ இதை நீ நியாபகம் வச்சுருக்கணும்"னு மிரட்டி அவர்களின் மனதில் பதிய வைத்ததுதான் அவனின் இந்த கோபத்துக்கு காரணம்..
அவனின் கத்தலில் மிரண்டு போய், என்ன சொல்லி சமாளிப்பது, நல்லதுக்குன்னா பொய் சொல்றது தப்பில்லை-னு ஒரு திருக்குறளை மேற்கோள்காட்டி சொல்லி விடலாமா....அப்படி சொன்னா , நாளைக்கு ஒரு பொய் சொல்லிட்டு அதுக்கு இதுதான் காரணம்னு ஒரு காரணத்தை தேடி சொல்லி ,நீதானே நல்லதுக்கு பொய் சொல்லலாம்னு சொன்னன்னு,இப்போ நான் சொன்னதை எடுத்துக் காண்பிப்பானோ(உண்மை, நாம் சொல்வதை நாமே மறந்தாலும் போட இப்போது உள்ள பிள்ளைகள் மறப்பதில்லை ) என நான் திக்கு முக்காடி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவன் கத்திக் கொண்டிருந்தான்..
"சரி இனி தரல, சாப்பிடு "எனக் கூறவும் , "அப்போ முதல்ல சுண்டல் அதுல இல்லேன்னு பொய்தான சொன்ன, ஓத்துக்கோ, பொய் சொன்னேன்னா ஓத்துக்கோ" எனக் கத்தினான்.. நான் உண்மையிலேயே அந்த சூழ்நிலைக்கு பயந்துதான் போயிருந்தேன்.. சின்ன பையன் இப்படி மிரட்டறானேன்னு கோபப்பட்டு "ஆமா, அப்படிதான்னு" அடக்கினா பொய் பேசறது தப்பில்லைனு நானே சொல்ற மாதிரி ஆகிடும்..
பின் அவனிடம் , "நீ நல்லது சாப்பிடணும்னு பொய் சொன்னேன்.. தப்புதான் இனி பொய் சொல்ல மாட்டேன்.. இனி சாப்பிடு "எனக்கூறவும் "அப்போ , ஒரு டைம் பொய் சொல்லிட்ட இல்ல , சோ நானும் ஒரு டைம் எப்பவாது பொய் சொல்லுவேன்" என அவன் கணக்கை ஆரம்பித்து விட்டான்..
பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கும் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவம் திரும்ப நினைவில் நிறுத்தியது..
நேற்று இரவும் அவனின் பொய் கணக்கை நியாபகப்படுத்தினான்.. இனி எந்த சூழ்நிலையில் அவனின் ஒரு பொய் கணக்கு தீரப்போகிறதோ...

- ஷார்ஜா
   3-11-2016