புதன், 21 ஜூன், 2017

வார்த்தை மீறல்

இப்பவே எல்லாம்
பேசிடாதே
கல்யாணத்திற்கு பின்
பேச மிச்சம் வை
ரகசியம் சொல்லின உறவுகள்...

திருமணத்திற்கு பின்
நம் பேச்சுக்கு செவியே
கொடுக்கப்படுவதில்லை
என உணர்ந்த பின்
திருப்தி பட்டுக்கொண்டேன்
அன்று அவர்களின்
வார்த்தையை மீறியதற்கு..

புரியாத வரைமுறை

குழந்தைகளை ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல.. ஒன்று, அந்த வரைமுறை அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குள் கட்டுப்பட அவர்கள் மனம் சம்மதிக்க வேண்டும்..
மகன் பள்ளியில் , ஆரோக்கிய/ஆரோக்கியமற்ற உணவுகள் தலைப்பில் நடந்த மாறுவேடப்போட்டிக்கு வாழைப்பழம் வேடம் எடுக்க (பல கடைகளில் தேடி அலைந்து கடைசியாக அந்த உடைதான் கிடைத்தது) தீர்மானித்து , அதற்கு சிறிய ஆங்கில குறிப்பை கொடுத்து பயிற்சி செய்ய வைத்து , அதற்கு நன்றாக உடல் மொழி , வார்த்தைகளை ஏற்ற இறக்கத்தோடு சொல்லும் பாணி என அனைத்தையும் கற்றுக் கொடுத்தேன்..
ஆரம்பத்தில் வாக்கியங்களை சொல்லுவதில் மட்டும் கவனம் கொடுத்தவனிடம் .,டிவி-விளம்பரங்களில் வரும் குழந்தைகள் வெறும் வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தி ஒரே போல் முகத்தை வைத்து பேசினால் நன்றாகவா இருக்கும் என சொல்லிக் காண்பித்து புரிய வைத்தேன்.
சிறிது நேரத்தில் புரிந்து கொண்டவன், நானே அசந்து போகும்படி அதை செய்து காண்பித்தான்.. அந்த உடையை போட்டுப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவன் விருப்பத்தின் பேரில் அதை போட்டும் அவன் சொல்லியதை ஆசையாக படம் பிடித்தும் வைத்தேன்.. பின் அவன் அப்பாவிடமும் , வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிடமும் என தானே முன்வந்து எல்லாவற்றையும் அழகாக செய்து காண்பித்தான்..
கடந்த வருடம் விளையாட்டு போட்டிகளில் அவன் வாங்கிய பரிசுகளை அவனிடத்தில் காண்பித்து " இன்னைக்கு ஸ்கூல் -ல சரியா செஞ்சேன்னா இன்னும் ஒரு மெடல் இதுல சேரும்" என வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவனிடம் சொல்லி இருந்தேன்..
மாறுவேடப்போட்டி நடக்கும் நாளில் அவனையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் பள்ளிக்கு சென்றோம்.. காரில் போய்க் கொண்டிருக்கும்போதும் அட்டகாசமாக செய்து காண்பித்தான்..
போட்டிகள் ஆரம்பித்ததும் சில குழந்தைகள் அதிக குறிப்புகளைக் கூட அழகாகவும், சில குழந்தைகள் பாதியில் மறந்து புறப்பட்ட அழுகையுடனேயும் கீழிறங்கி வந்தனர்.. ஆனால் எல்லா குழந்தைகளும் சொல்ல வந்தவற்றை எக்ஸ்பெஷனோ, ஆக்ஷனோ இல்லாமல்தான் செய்தனர்.. ஆனால் இவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் அந்த வார்த்தைகளுக்கேற்றவாறு கை அசைத்தும் , தலை அசைத்தும் சிரித்தவாறும் சொல்லி பழகி இருந்ததால் கொஞ்சம் நபிக்கையும் எதிர்பார்ப்பும் கூடி இருந்தன..
பயப்பட்டு , வார்த்தைகளை விட்டு விடுவானோ என நான் நினைத்ததை , வரிசையில் நின்றிருந்தவாறு என்னை பார்த்து சிரித்து கட்டை விரலை உயர்த்திக்காட்டி உடனே போக்க வைத்திருந்தான்.. அவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும்போதே அவன் ஆசிரியை அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தோம்..
அவன் மைக் முன்பு வருவதற்கு முன்பே படபடப்புடன் மொபைலில் வீடியோ ஆன் செய்து காத்திருந்தேன்.. மைக்-ன் முன் அவன் வந்து பேச ஆரம்பித்ததும் தூக்கி வாரிப்போட்டது போல் ஆனது.. இரு கைகளையும் முன்புறம் கட்டி விட்டது போல் கீழ் நோக்கி தொங்க விட்டுக்கொண்டு மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பவன் போல் கூட்டத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தான்..
இப்படி பேசிட்டு இருக்கானே என்ற அதிர்ச்சியில் , அடுத்த வாக்கியத்துக்கு சொல்லிக்கொடுத்தது போல் செய்வான் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக பேசி முடிக்கும் முன்பாக மொபைலை கீழிறக்கி, திரும்பி என் கணவரை பார்த்தேன்.. அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.. என்னை சமாதானப்படுத்திடும் நோக்கில் தலையை அசைத்தார்..
பேசி முடித்ததும் என்னை பார்த்து சிரித்தவாறு வந்தவனிடம் முகம் கொடுக்காமல் திரும்பிக்கொண்டேன்.. பின்பு அருகில் வந்து அமர்ந்தவனிடம் "வீட்டில எப்படி பேசின , இங்க எப்படி பேசின" என கோபிக்க , உடனே "போம்மா" எனக் கோபமாக எழுந்து பின் வரிசையில் இருந்த அவன் அப்பாவுடன் போய் அமர்ந்து கொண்டான்..
எனக்கோ மனதே ஆறவில்லை .. "ஒருவேளை அவனிடம் பேசிக்கொண்டிருந்த அவன் ஆசிரியை பேசினால் மட்டும் போதுமென சொல்லி இருப்பாரோ" என்ற சந்தேகத்துடன் பதில் சொல்லாமல் போன அவனின் துடுக்கும் கோபத்தை அதிகப்படுத்தியது..
"சின்ன பையன்தானே , அவனுக்கு என்ன தெரியும், இருந்தும் நீ பண்றதெல்லாம் ஓவர் " என கடிந்து கொண்டவரிடம் , அவன் வீட்ல சரியா பண்ணலேன்னா கூட எனக்கு இவ்வளவு வருத்தம் இருந்து இருக்காது, வீட்ல அவ்வளவு நல்லா பண்ணிட்டு , ஸ்கூல்-ல போய் இப்படி சொதப்பிட்டானே, எதுவும் மறக்காம சொன்னான் , அதை அழகா நான் சொல்லிக்கொடுத்தது போல சொல்லி இருந்தா, பிரைஸ் கிடைக்காட்டிக் கூட மனசுக்கு ஒரு திருப்தி கிடைச்சு இருக்குமே " என ஆதங்கத்தில் புலம்பித்தீர்த்து விட்டேன்..
பின் அவனிடம் "ஏன் நீ வீட்ல பேசினது போல அங்க பேசல" எனக் கேட்க என் பிரெண்ட்ஸ் யாருமே எக்ஸ்பெஷனோ, ஆக்ஷனோ செய்யல , அதனால்தான் நானும் செய்யல " என்று கூலாக சொல்லி விட்டு வேறு செயலுக்கு கடந்து போனான்..
போட்டி என்ற ஒன்று அவனுக்கு புரியவே இல்லை என புரிந்தது.. குழந்தைகளுக்கு புரியாத ஒன்றுக்குள் இழுத்து விட்டு அவர்களை செம்மை படுத்துவதும் இயலாத ஒன்று என்று புரிந்தது....

17


பொய்களையும் ரசித்து சிரிக்க முடியுமென்றால் அது , விபரமறியா பிள்ளைகள் முதல் முறையாக சொல்லும் கற்பனை கலந்த பொய்களாக மட்டுமே இருக்கும்.. அதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவை பொய்களாக தெரியாமல் இவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்ற அவர்களின் அனுமானங்களாகவும் இருக்கும்..

இரு பிள்ளைகளுக்கும் அவர்கள் பிறந்தபிறகு அங்கிருந்த , நடந்த சூழ்நிலைகளை கதைகளாகக் கூறியதுண்டு.. ஆர்வமாகக் கேட்பர்.. இரு பிரசவமும் சிசேரியன் என்பதால் சில சமயங்கள் முதுகு வலியால் அவதிப்படும் போ...தும், "நீங்கள் பிறக்கும்போது முதுகில் போட்ட ஊசியால்தான் அம்மாவுக்கு முதுகில் வலி" என்றும் கூறி இருக்கிறேன்.. அதே போல , பெண்ணிடம் , நீ பிறந்தவுடன் சிறிது நேரம் அழவில்லை , நீ அழலையேன்னு டாக்டர்கிட்ட கேட்டேன், பின் அவர் உன் முதுகைத் தட்டியதும்தான் நீ அழுதாய் ,அப்போதுதான் உன் குரலை முதல் முறை கேட்டேன் "என்றும் கூறி இருக்கிறேன்..

என் கதை சிசேரியன் என்பதால், எல்லோருக்கும் பிள்ளைகளை ஆபரேஷன் செய்துதான் எடுப்பார்கள் என்பதுதான் இப்போது வரை அவர்களது எண்ணம்..

ஒருநாள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த மகனிடம் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை கிண்டலாகக் கூறியதும் , சிணுங்கிக்கொண்டே கோபத்தில் என் முதுகில் லேசாகத் கைகளைக் கொண்டு குத்தினான்.. உடனே, :பார்த்தியா, அம்மாவுக்கு ஏற்கனவே முதுகுல ஊசி போட்ட இடத்துல வலி இருக்குன்னு சொல்லி இருக்கேன் , திரும்ப நீ அங்கேயே அடிக்கற இல்ல" , என பொய்க்கோபத்துடன் சொல்ல , "அம்மாக்கு அங்க ஒன்னும் ஊசி போடல , நான்தான் ஊசி போடும்போது உங்க வயித்துல இருந்தேனே , எனக்குத் தெரியும் , நான் ஊசி போட்ட இடத்துல உங்களை அடிக்கலை" எனக் கூறினான்..

அதைக்கேட்டதும் ரசித்தவாறு சிரிக்கத் தொடங்கினேன் , உடனே இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் சமயலறைக்குள் வந்து " அம்மா , நான் பிறக்கும்போது உங்களுக்கு ஊசி போட்ட இடமும் எனக்குத் தெரியும்மா , அந்த ஊசி அப்படியே என் கால்ல பட்டுச்சு, ஆனா எனக்கு வலிக்கவே இல்லை, அதான் நான் பிறக்கும்போது அழவே இல்லை" என நடந்ததை ஆர்வமாக விவரிப்பவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவே மேற்கொண்டு வந்த சிரிப்பையும் சிறிது நேரம் நிறுத்த முடியவில்லை .. திரும்ப நினைத்து நினைத்துப் பார்த்து சிரித்ததோடு அல்லாமல் அம்மாவிடமும், கணவரிடமும் சொல்லி அவர்களையும் சிரிக்க வைத்தேன்..
உண்மையில் கவிதைகளில் நடமாடும் பொய்களை விட , சூது அறியா மழலைகளின் கற்பனை பொய்கள்தான் கொள்ளை அழகு..


எண்ணக்கீற்றுகள் (13)

  1. நிஐங்களோடு தர்க்கம் செய்து ஓய்ந்த மனம், பின் அதன் நினைவுகளோடு கூட தர்க்கம் செய்ய முனைவதில்லை.
  2. குழந்தைகளை ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல.. ஒன்று, அந்த வரைமுறை அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குள் கட்டுப்பட அவர்கள் மனம் சம்மதிக்க வேண்டும்..
  3. நீங்கள் தப்பு செய்ய வேண்டுமா? பணக்காரராகுங்கள்.... என்ன தப்பு செய்தாலும் சட்டம் உங்களுக்கு கீழ்படியும்....
    நீங்கள் நல்லது செய்ய வேண்டுமா? பணக்காரராகுங்கள்.... நீங்கள் செய்த நல்லதை சிலர் நன்றியோடு நியாபகம் வைத்து , அதை வெளியிலும் சொல்வார்கள்..
  4. பெரும்பாலானோர் செய்யும் நல்லவைகளும் கெட்டவைகளும் தான் எவரிடமிருந்து , என்ன பெற்றோமோ அதன் பிரதிபலிப்பே .. ஆதலால் கொடுப்பவைகள் சிறப்பானதாக இருக்க வேண்டும்..
  5. யாராவது ஒருவரிடம் "அவங்க ரொம்ப நல்லவங்க" என ஒரு மூன்றாவது நபரை பற்றி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த "நல்லவங்க"தம் நல்ல பெயரை நம் மனதுக்குள் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தை நம்முள் உருவாக்கி விடுகிறது "அனுபவம்".
  6. ஒரு பிரச்சினைக்கான தீர்வு தேடி பிரார்த்தனையோடு கூடிய நேர்மறை எண்ணம் என ஒரு வழியில் உறுதியாக சென்றும், தீர்வு என்னவோ சோதிடப்படியே கிட்டும் போது நம்பிக்கையோடு சேர்த்து வாழ்க்கையும் சலித்து விடுகிறது.
  7. தமக்கு வரும் பிரச்சனையை கண்டு சிரிப்பதற்கு மனதை பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு பிரச்சனையின் சுமை பாரமாகாது. இந்த மன இயல்பு எளிதில் வழக்கப்படுத்திக் கொள்ளக்கூடியதே..
    ஆனால் நம் பிரச்சனையை கண்டு நாம் அழத்தான் வேண்டுமென கங்கனம் கட்டி/ எதிர்பார்த்துக் கொண்டிருப்போரின் முன்பு சிரித்துக் கொண்டே பிரச்சனைகளை புறம் தள்ளுவதற்குதான் மிகுந்த மனோதிடம் தேவை. இதை எளிதில் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது. பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கோ மேற்கொண்டு வாழ்வில் வரும் பிரச்சனைகள் பிரச்சனைகளாகவே தோன்றாது...
  8. நமக்கு ஒரு பிரச்சினை எனும்போதுதான் ஒதுங்கும் சிலரின் சுயரூபம் தெரிகிறது. அவர்களின் அத்தகைய சுயரூபமே பின்னாளின் நம் சுயநலத்திற்கும் காரணமாகி விடுகிறது.
  9. நடந்த சம்பங்களின் நினைவுகளை மாற்ற முடியாது என்பது என்பது ealau எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை நடக்க விரும்புவதை நம் எண்ணப்படி நடக்க வைக்கலாம் என்பதும்..
  10. "இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் " என்ற வார்த்தைகளுக்கு பின் பெரும்பாலும் பிரார்த்தனைகள் இருப்பதில்லை....