திங்கள், 19 டிசம்பர், 2016

நத்தைக்கூடு

ஒரு வாரம் முன்பு சென்னை 28 -II பார்த்துவிட்டு வந்தோம்.. எப்போதும் போல "படம் பிடிச்சுருக்காப்பா" என்ற கேள்விக்கு கணவரிடம் இருந்து "ரொம்ப பிடிச்சு இருக்கு" என பதில் வந்தது..

பின் வீட்டுக்கு வந்தும் கூட அந்த சினிமாவை பற்றி யோசித்ததாலோ என்னவோ "எனக்கு அந்த படம் ரொம்ப பிடிச்சு இருக்கு , கல்யாணம் ஆகி உங்ககிட்ட நாங்க படற கஷ்டத்தை நேர்ல பார்க்கற மாதிரி இருக்குதில்லயா , அது கூட காரணமா இருக்கலாம் " என அவர் சொல்லி முடித்ததும் , "எப்போது ஊருக்கு போனாலும் வீட்டில் இருக்கும் நேரத்தை விட நண்பர்களிடம் உட்கார்ந்து கதை அடித்து நேரம் செலவிடுவதற்கு அவர் செல்லும்போது , மறுப்பு கூறாது வழி அனுப்பி, வழி மேல் விழி வைத்தும் , இங்கும் கூட "நண்பர்களுடன் டின்னர், ஒரு சின்ன பார்ட்டி , சோ நான் போய்ட்டு வர லேட் ஆகும் , சாவி நான் கொண்டு போறேன் , நீ தூங்கு" என சொல்லும்போதெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் இரவு 2 , 3 மணி வரை வராத உறக்கத்தை மற்றவர்களின் முகநூல் எழுத்துக்களை வாசித்தவாறே வராமலே செய்து , அவர் கதவு திறந்ததும் "என்னப்பா, இவ்வளவு லேட்டா" என பதில் தேவையில்லாத கேள்வியை வெறுமனே எழுப்பி தூங்க போகும் மனைவிக்கு நேர்ந்த துர்ப்பெயரை நினைத்து கொஞ்சம் கலங்கித்தான் போனேன்...

பொதுவாகவே ஆண்களுக்குத்தான் நட்பை உருவாக்கிக் கொள்வதிலும் , பேணிக்காப்பதிலும் எந்த நடைமுறை சிக்கல்களும் அதிகம் இருப்பதில்லை.. ஆரம்ப கால பல பள்ளி நட்புகள் கூட இறுதி காலம் வரை பயணிக்கும் அளவுக்கு வரம் வாய்த்தவர்கள்.. இன்னொன்று நண்பர்களுக்குள் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பிரச்சனையாகப் பார்க்காத உள்ளம் ஆண்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறதோ என தோன்றும்படி பல நட்புகளை அவர்களுக்குள் பார்த்திருக்கிறேன்..

ஆனால் பெண்கள் விஷயத்தில், முதல் விஷயமாக அவர்கள் மனம் ஒத்த பெண் நட்புகள் வாய்ப்பது அபூர்வம்.. அப்படியே வாய்த்தலும் அந்த நட்பு சூழ்நிலை பிரச்சனைகளுக்கு முன்பாகவே மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் முடிவும் பெறாமல் இருப்பது அபூர்வம்..
அப்படியும் நீடிக்கும் பெண்களின் நட்பு என்பது காலத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.. பள்ளி, கல்லூரி, சுற்றுப்புறம் என்று பழகிய நட்புகளுக்கெல்லாம் திருமணம் என்ற ஒன்று இடைஞ்சலாகி வழி அனுப்பி வைத்திருக்கும்.. பின் எந்த ஊரில் எல்லாம் வசிக்கிறார்களோ அந்த பகுதிகளில் தோன்றிய நட்புறவு அடுத்த ஊர்களுக்கு போகும்போது கொஞ்சம் நிறம் மங்கிப் போயிருக்கும்.. ஆண்களுக்கும் இது ஒத்து போகும் என்றாலும் , அதை சந்திப்பு என்ற நிகழ்வின் மூலம் பேணிக்காப்பதில் அவர்களுக்கு எல்லா உரிமையும் இந்த சமூகத்தாலும் குடும்பத்தாலும் அளிக்கப்படுகிறது..

ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல , ஒரு நத்தை தன் கூட்டை சுமந்து திரிவதை போல , அவளும் தன் குடும்ப நினைவுகள், பிள்ளைகள் என சுமந்து கொண்டேதான் செல்ல வேண்டும்.. பிள்ளைகள் வளர்ந்தவர்களென்றால் கொஞ்சம் சாத்தியப்படும் என்றாலும் தோழியை பார்க்க செல்கிறோம் என்றால் , குடும்பம்,குழந்தைன்னு வந்தாச்சு , இனியும் என்ன பிரெண்ட்ஸ் , அவ உன்னை பார்க்க வர்றாளா, இல்லையே , எல்லோரும் அவங்கவங்க வாழ்க்கையை பார்க்கறாங்க" என்பது போல வார்த்தைகள் வந்து தடுத்து வைக்கும்.. எதிர்தரப்பிலும் இதே போல் நிலைமை வேறுவிதமாக இருக்கும்..
நண்பர்கள் என்றில்லாமல் சில உறவினர்களை சந்திப்பதிலும் பெண்களுக்கு இதே நிலைதான்.. இதற்கு எல்லாம் வடிகால் , உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள்தான்.. அதனால்தான் பெண்கள் அதில் கலந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள்..

ஆனாலும் அதில் எவ்வளவு பேரால் கலந்து கொள்ள முடிகிறது..
உள்ளூர் என்றாலே கலந்து கொள்ள தடையாக சில சூழ்நிலைகள் இருக்கும்போது வெளியூர் என்றால் கேட்கவே வேண்டாம்.. ஆண்களை போல குடும்ப சிந்தனைகளையும், குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு செல்வது இப்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்று..

இப்படி பெண்களுக்குத்தான் திருமணத்திற்கு பின்பு நட்புகளை பேணுதல் என்பது கடினம்.. அது ஆண்களுக்குத்தான் கடினம் என்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது , பெண்களும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருப்பதால் மட்டுமே எனக்கும் பிடித்திருந்தது...

பெண்களின் நட்புறவை மையப்படுத்தி "சிநேகிதியே" படம் வந்திருந்தாலும் திருமணத்திற்கு முன்பான நட்புதான் அதில் இருந்தது. பெண்களின் நட்புகளை சிறப்பித்து , அதில் இடை நுழையும் பிரச்சனைகளையும் ரசிக்கும்படி காட்சி அமைத்து ஒரு திரைப்படம் வெளிவர வேண்டும் என்ற ஆசையும் என்னுள் எழுகிறது..

அப்படியே பெண்களுக்கு நட்பு பேணிக்காப்பதில் மேற்சொன்ன சிக்கல்களும் விலகும் நாள் வந்தால் இன்னும் மகிழ்ச்சி..
குறிப்பாக திருமணத்துக்கு பின் ஆண்களின் உண்மை நிலை இதுதான் எனக்கூறும் ஆண்கள் பெண்களின் நிலையையும் தங்களின் நிலையோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுதல் பெண்களுக்கு உவப்பாக இருக்கும்..

இரு நாட்களுக்கு முன் எங்கள் 5 வயது மகனும் சொன்னான், "எனக்கு சென்னை 28 ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று.. அப்பாவும் மகனும் இரண்டாவது முறையும் கண் கொட்டாமல் அத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. நானும் பெண்ணும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தோம்..

வியாழன், 24 நவம்பர், 2016

16

அன்று பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபமாக , "பெனிட் என்னை முடால்-னு (முட்டாள் என்பதுதான் அவன் உச்சரிப்பில் முடால்(mutaal ) , அதுவும் "மு"-வுக்கு அடுத்து "டா"வை நீட்டி சொல்வது கூட கேட்க அழகாக இருக்கும் என்பது வேறு ) சொன்னான்.. இனி நான் அவன்கிட்ட பேச மாட்டேன்.. அன்னைக்கு நாம மனாமா-ல பார்த்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணி , அவன் அம்மாகிட்ட பெனிட், ரோஹித்-ஐ முடால்-னு சொல்றான்னு சொல்லுங்க.. அவனை அப்படி சொல்லக்கூடாதுன்னு மிரட்டி வைக்க சொல்லுங்க" என்றவன் உடனே குரலை கோபத்தில் இருந்து கொஞ்சம் தாழ்த்தி "திட்ட மட்டும் சொல்லுங்க , அடிக்க சொல்லாதீங்க" என்றான்..

அவன் சொல்ல சொன்ன ஆன்ட்டி, எங்களுக்கு நன்கு பரிச்சயமான தோழி .. என் தங்கையை போன்று.. ஒரு முறை இங்குள்ள ஒரு மாலில் அவருடன் எதிர்பாராத விதமாக பெனிட்டின் குடும்பத்தையும் நாங்கள் சந்திக்க நேர்ந்திருந்தது.. அவர்கள் இரு குடும்பமும் முன்பே பழக்கம் என்பதும் அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது..

குழந்தைகள் எந்த வார்த்தையையும் அர்த்தம் தெரிந்து பேசுவதில்லை என்பதால் அவனை சமாதானப் படுத்த முயன்றேன்.. அவனோ விடுவதாக இல்லை .. அந்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணுங்க என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான்.. சமாளிக்க முடியாது என தோன்றவும் அவங்க நம்பர் என்கிட்டே இல்லை, ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போறப்போ சொல்லலாம் என்று ஒருவாறு சமாதானப் படுத்தி வைத்தேன்.. அதன்பின்னும் இரு நாட்கள் இதே குற்றச்சாட்டை வீட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தான்..

சில நாட்களுக்கு பின் அவன் அவன் தங்கையுடன் சண்டை போடும்போது அவளை முட்டாள் எனக் கூறினான்.. "அண்ணா, என்னை முட்டாள்-னு சொல்றான் " என அவள் கூறவே "அவள் முட்டாளா , அவ அம்மா சொல்றதை எல்லாம் எவ்வளவு அழகா புரிஞ்சு கரெக்ட்டா செய்யறா , அவளை முட்டாள்-னு சொல்றே ...எதை சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாம இருக்கவங்கவங்களையும் , புரிஞ்சுக்க முடியாம நல்லா படிக்காத பசங்களையும், எதுவும் தெரியாதவங்களையும்தான் முட்டாள்-னு சொல்வாங்க.. நிகிதாதான் க்லவர் கேர்ள் ஆச்சே" எனக் கூறினேன்..

உடனே சற்றும் தாமதிக்காமல் "ஓ, அப்போ என்னை நல்லா படிக்க மாட்டேன்னுதான் பெனிட் அப்படி சொன்னானா , என்னை அப்படி நினைச்சுட்டானா, இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன்" என எரிச்சலுடன் வார்த்தைகளை கூறி முடித்தான்..அவன் மனம் பெனிட்டை நோக்கி செல்லும் என்பது அப்போது நானே அறியாததுதான்..

அடுத்த நாள் பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே , "இன்னைக்கு நான் வாங்கின ஸ்டார்-ஐ (அவன் வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை அல்லது வகுப்பு டெஸ்ட்-களை நன்றாக எழுதினால் நோட்டிலும், சரியாக சொன்னால் (ஓரல் ) கையிலும் சின்ன ஸ்டார் வரைந்து கொடுப்பார் அவன் ஆசிரியை) பென்னட்-கிட்ட காண்பிச்சு,நானா முடால் , இனி என்னை முடால்-னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன், அவன் ஒன்னுமே சொல்லல, இனி அப்படி கூப்பிட மாட்டான்னு நினைக்கிறேன்"என்றான்.. அவன் குரலில் தன்னை நிரூபித்து விட்ட திருப்தி தெரிந்தது..இருந்தும் அடுத்த வந்த நாட்களில் சில நாட்கள் அவன் முட்டாள் எனக் கூறுவதாக இங்கு வந்து கோபப்படுவான்..

ஏறக்குறைய இரு மாதங்கள் கழித்து எங்களுக்கு தெரிந்த அந்த தோழியின் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது.. பிள்ளைகளை அவர்கள் அப்பாவிடம் விட்டு விட்டு தனியாக செல்ல இருந்தவளை, (மணி மாலை 6-ஐ தண்டி இருந்ததால் மனதில் யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்குமே எனது தோன்றியது, அதை ஓரிருமுறை கிளம்பும்போது வார்த்தைகளிலும் தெரிவித்து இருந்தேன்.. அவர் அலுவலக வேலையை லேப்டாப்பில் செய்து கொண்டிருந்ததால் அவரை அழைக்கவும் இல்லை)ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

அங்கு சென்றதும் இவனை பார்த்து , பென்னட்டோட Friend தான ரோஹித்.. அன்னைக்கு நாம மால்-ல பார்த்ததுல இருந்து , எப்பவும் என்னை பார்த்தா ரோஹித்-அ பத்தி கேட்டுட்டே இருப்பான்,ரோஹித் வீடு உங்களுக்கு தெரியுமா, ரோஹித் அம்மாகிட்ட பேசுவீங்களா , எங்க வீட்டுக்கு ரோஹித்த கூட்டிட்டு வர சொல்லுங்கன்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்" எனக் கூறினார்..

"இவனும் சில முறை அதே போல உன் மூலமா அவங்க அட்ரஸ் கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாம், நம்ம வீட்டுக்கு அவங்க அம்மாவை பெனிட்-ஐ கூட்டிட்டு வர சொல்லுங்க" என சொல்வதையும் கூறினேன்.. கூடவே
"பெனிட் இவனை க்ளாஸ்ல முட்டாள்னு சொல்றதாவும், அவங்க அம்மாகிட்ட உன்மூலமா அதை சொல்ல சொல்லி கண்டிக்க உனக்கு போன் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணினான் " எனவும் சொன்னேன்.. அவரும் "இருக்கும்க்கா , அவன் சொல்லி இருப்பான் , ஏன்னா அவன் அக்கா அவனை அடிக்கடி அந்த வார்த்தையை சொல்லி கூப்பிடுவா" எனக் கூறினார்.. இவன் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.. பின் வேறு சில விஷயங்கள் பேசி விட்டு நாங்கள் கிளம்பினோம்..

வரும் வழியில் "அம்மா , பெனிட் அந்த ஆன்ட்டிகிட்ட என்ன சொன்னானாம்" எனக் கேட்க "நீயும் கேட்டுட்டுதானே இருந்த" எனக் கூறினேன்.."இருந்தாலும் நீ சொல்லும்மா" எனக்கேட்கவும் "நீ சொல்றது போலவே அவனும் அந்த ஆன்ட்டிகிட்ட உன்னை அவங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடறானாம், உன்னை பத்தி அவங்ககிட்ட எப்பவும் விசாரிக்கறானாம்" எனக் கூறினேன்..

உடனே கொஞ்சம் சாந்தமான குரலில் கூறினான் "அப்போ இனிமே பெனிட் என்னை முடால்-னு கூப்பிட்டா ப்ராப்லம் இல்லை " :) :) :) :)

குழந்தைகளிடம்தான் கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கின்றன...

புதன், 23 நவம்பர், 2016

15

நான்கு நாட்களுக்கு முன் மகனுக்கு கொதிக்கும் காய்ச்சல்.. அதன் எல்லாவித தாக்குதலாலும் துவண்டு போயிருந்தான்.. இரவு அவனுக்கு மருந்து கொடுத்து விட்டு , நெற்றியை தொட்டு பார்த்தேன்.. அவன் நெற்றியின் சூடு என் கையில் பிரதிபலித்தது.

எப்போதும் இல்லா விட்டாலும் அடிக்கடி இரவுகளில் பிள்ளைகளுடன் சேர்ந்து கடவுளை மானசீகமாக வேண்டுவது வழக்கம்.. அன்றும் கடவுளிடம் வேண்டும் போது , "சாமி,ரோஹித் காய்ச்சல் குணமாகனும்..,அவன் காய்ச்சலை வேணா எனக்கு கொடுத்துருங்க, அவனுக்கு குணமானா போதும்" என வேண்டினேன்..நான் வேண்டுவதை போர்த்தியிருந்த போர்வைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்..

இரு நாட்களுக்கு முன்பிருந்து எனக்கும் பெண்ணுக்கும் காய்ச்சல்.. அவனிடம் வெறும் இருமல் மட்டுமே தங்கியிருந்தது..

இன்று ஒரு விஷயத்தை அவன் கேட்டுக் கொண்டே இருக்கவே , "அம்மாவ தொந்திரவு பண்ணாத தங்கம், அம்மாவுக்கு காய்ச்சல் இல்ல , ரெஸ்ட் எடுக்க விடு" என்றேன்.. உடனே " போம்மா, நீ ஏன் சாமிகிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டிக்கிட்ட, அதான உனக்கு காய்ச்சல் வந்துருச்சு" என சோகத்துடன் கூறினான்....

நீ சின்ன பையன் , உனக்கு காய்ச்சல் இருந்தப்போ எவ்வளவு கஷ்டப்பட்டே பார்த்தியா இப்ப நீ எழுந்து நடக்கற , வாமிடிங் எதுவும் இல்ல, அம்மா வளந்தாச்சு இல்ல , அம்மா சமாளிச்சுடுவேன்" என சொன்னேன்..

"போம்மா , உனக்கு தெரியல , சாமிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டறதுக்கு பதிலா, காய்ச்சல் வீட்டுக்கு வெளில போகணும்னு வேண்டி இருந்தேன்னா , இப்ப காய்ச்சல் வெளில போயிருக்கும்ல " என சொல்லியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..

அட ஆமால்ல, அப்படி வேண்டி இருந்தால் காய்ச்சல் வீட்ட விட்டு ஒரேயடியா ஓடி போயிருக்கும்ல =D =D =D ..

ஷார்ஜா
5-2-2016

14

சிறு வயதில் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், குளிப்பதற்கு அங்கு அருகிலுள்ள ஆற்றுக்கு என் பல கெஞ்சல் , அழுகையையும் மீறி என்னை உறவினர்கள் கூட்டி செல்வது வழக்கம்.. நகரத்தில் வாழும் பெண்களுக்கு , கிராமங்களில் உள்ள பெண்களை போல் லாவகமாக குளிப்பது முதல் உடை மாற்றுவது வரை அவ்வளவு எளிதில் வராது.. என் அழுகைக்கும் கெஞ்சலுக்கும் அதுதான் காரணம்..

ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களின் வற்புறுத்தல் நின்றே போனது.. பின்னர் உறவினர்கள் குளிக்க செல்லும்போது, ஆற்றை வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் சென்று வருவேன்..

என் பாட்டி வீட்டுக்கு சில வீடுகள் தள்ளிதான் என் கணவரின் வீடும் என்பதால், இப்போது என் கணவரும் பிள்ளைகளும் ஆற்றில் குளிக்க செல்லும்போது வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் (நேரம் கிடைக்கும் சமயங்களில்) செல்வேன்..

இந்த முறை ஒருநாள் சென்று அவர்கள் குளித்து முடித்ததும் , வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.. அப்போது என் மகனிடம் நடந்த உரையாடல்:

"தங்கம் , இந்த ஆத்துலதான் அம்மா , உன் வயசுல இருக்கும்போதெல்லாம் குளிக்க வருவேன், நான் மட்டும் இல்ல, அம்மம்மா கூட சின்ன வயசுல இந்த ஆத்துலதான் குளிப்பாங்க"..

"அப்போ, நான் எங்க இருந்தேன்"

"அப்போ நீ பிறக்கவே இல்ல தங்கம்"

உடனே கோபத்துடன் "ஏம்மா, அப்போ என்ன பிறக்க வச்சுருக்கலாம் இல்ல"

வந்த சிரிப்பை அடக்காமல் சிரித்து விட்டு, "டேய், அம்மாவே அப்போ பிறக்கலடா"

"அப்போ , அம்மம்மா இங்க வந்து குளிச்சது உனக்கு எப்படி தெரியும்"

அம்மம்மா , இதே ஊர்தான , இங்கதான குளிக்க வந்துருப்பாங்க, அதான் கெஸ்-ல சொன்னேன் என சொல்லப்போனால், அதற்கு மேல் கேள்விகளால் முடக்குவான் என்று , "அம்மம்மாதான் தங்கம் என்கிட்டே சொன்னாங்க" என கூறினேன்.

அந்த பதிலில் திருப்தியுற்றவன் அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை..

அந்த தருணம் அவனின் பேச்சை ரசித்த தருணங்களில் ஒன்று :)

அறிவுரை

"பில்டிங் செட்" வைத்து இரண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.. இடையில் ஏதோ கோபத்தில், நிகிதா அடுக்கி வைத்து இருந்த செட்-ஐ ரோஹித் தட்டி விட்டான்.. உடனே அழ ஆரம்பித்தவளை, "அழாத, அண்ணா "பேட் பாய்" அதான் இப்படி தட்டி விடறான்" என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
உடனே ரோஹித், "நோ. அவதான் பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள்" -னு அவளைப்பார்த்து சொல்லிக்கொண்டே இருந்தான்.. அதைக்கேட்டதும் "நான் பேட் கேர்ள்-னு அண்ணா சொல்றான்" என அழ ஆரம்பித்தாள்..
நீதான் ப...ேட் கேர்ள் இல்லையில்ல , பின்ன ஏன் அழற , நீ பேட் கேர்ளா இருந்தாதான் அவன் சொல்றதுக்கு feel பண்ணி வருத்தப்படணும், இல்லாம feel பண்ணி அழுதா, நான் பேட் கேர்ள்தான் -னு நீயே ஒத்துக்கறதா அர்த்தம்"-னு சமாதானம் பண்ணியதும் அழுவதை நிறுத்தி விட்டு, அவன் சொல்லிக்கொண்டு இருந்ததை கவனிக்காதது போல விளையாட ஆரம்பித்தது விட்டாள்..
ஆனால் இது புரிந்தும், இது போலான நான் கடந்து வந்த சந்தர்ப்பங்களில் சமாதானமாகாமல் மன உளைச்சலில் இருந்ததுதான் திடீரென நினைவுக்கு வந்தது..
"அறிவுரை சொல்வது ரொம்பவே சுலபம்"

துரத்தும் சூரியன் :)

கண்ணாடிக்கதவின் வழி
ஊடுருவிய சூரிய ஒளி
அவன் கைகளில் சுட்டு
ஒரு நிகழ்வை அவன் நினைவிலிருந்து
எடுத்துக் கொடுத்தவாறே ...
தன் பரப்பை விரிக்கத்தொடங்கியது...


இன்று பள்ளிக்கு பேருந்தில்
சென்று கொண்டிருக்கும்போது
சூரியனும் என்னுடனே வந்தது
ஏன்னு தெரியல என்றவனிடம்
காரணத்தை விளக்க ஆரம்பித்தேன்..

விளக்கத்தை விலக்கியவாறே
இல்லை, உங்களுக்கு தெரியல
சன் எதுக்கோ என்னை ஃபாலோ பண்ணுது
என்றவனைப் பார்த்து
சிரித்தது சூரியன்.....

13

அன்றன்று நடந்த நிகழ்வுகளை அப்போது பெற்றோரிடமும்(பெரும்பாலும் அம்மாவிடம்தான்) இப்போது கணவரிடமும் கொட்டி விடும் பழக்கத்திற்கு அவர்களின் காது கொடுத்து கேட்காத உதாசீனத்தால் கூட முட்டுக்கட்டை போட முடிந்ததில்லை....
நான் அப்படி அம்மாவிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்போதே ,திடீரென சம்பந்தமே இல்லாத ஏதோ ஒன்றைப்பற்றி என்னிடம் கேட்டோ அல்லது செய்திருக்க வேண்டிய மறந்து போன செயல்களை தனக்குத்தானே சொல்லியோ , அதுவரை என் பேச்சைத்தான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்திருந்த நினைப்பில் தீ வைப்பார்.. கணவரோ ஒரு படி மேலே போய் கவனிக்காததை வலுக்கட்டாயமாக உடல் மொழியால்(மொபைலை நோண்டுவது, டிவி சேனலை கர்ம சிரத்தையாக மாற்றுவது ,இடையிடையே பிள்ளைகளிடம் பேசுவது , பல நேரங்களில், என்ன தொண தொணன்னு என்று அதட்டுவது வரை ) வெளிப்படுத்தி விடுவார்..
ஆனாலும் எனக்கு தேவை அவர்கள் கேட்டாக வேண்டும் என்பதில் இல்லை, என் மனதிலிருந்ததை சொல்லி விட வேண்டுமென்பதில்தான்.. ஆதலால் அவர்கள் கவனிக்காமல் இருப்பது பெரிய விஷயமாக படுவதே இல்லை..
ரோஹித்-க்கும் என் போல் பழக்கம்.. பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே பள்ளியில் நடந்ததை ஒப்பித்து விடுவான்.. விடுபட்ட மறந்தவைகளை நினைவு வரும்போது இடை இடையே சொல்லுவான்.. ஆனால் கட்டாயமாக, நான் கவனிக்கிறேனா என்பதில் கவனமாக இருப்பான்.. கவனிக்காதது போல் பட்டால் என்னை வார்த்தைகளால் உலுக்கி எடுத்தாவது கேட்க வைத்து விடுவான்..
அன்றும் பேருந்திலிருந்து இறங்கியதும் , "பெனிட் எனக்கும், ஜெகனுக்கும் சாக்லேட் கொடுத்தான்மா.. நானும் , பெனிட்டுக்கும், ஜெகனுக்கும், பிரணவ்க்கும் சாக்லேட் கொடுக்கணும், வாங்கி கொடுங்க" எனக் கூறினான்.. "சரி, பெனிட் பிரணவ்-க்கு சாக்லேட் கொடுக்கலையா "எனக்கேட்டேன்.. "இல்லை, ரெண்டு பேரும் கத்தி சொல்லிட்டாங்க" என சொன்னான்..
"கத்தின்னா " எனக் கேட்டதும், ஆமா, உனக்கு தெரியாதா , கத்தின்னா கட் பண்ணுவோம்ல , அது மாதிரி, கத்தி சொன்னா ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க" என விளக்கினான்..
ஏற்கனவே ஒருமுறை இந்த "கத்தி"அவன் பேச்சில் வந்திருந்தது.. பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலகட்டத்தின் ஒரு வாரம் அது.. அந்த வாரத்தில் ரோஹித் பள்ளியிலிருந்து எந்த புகாரை கொண்டு வருவான் என்றே காத்திருக்க வைத்திருந்தான்.. ஒருமுறை பேருந்தின் இருக்கையை கிழித்து விட்டான் என புகார், அடுத்த இரு நாட்களில் ஒரு பையனை அடித்து விட்டான் என புகார்.. இதை எல்லாம் பள்ளி பேருந்திலிருந்து இறக்கி விடும் பெண்மணி என்னிடம் சொல்லும்போது தலை குனிந்து கேட்டுக் கொண்டிருப்பான்..
அன்று, "ஏன் அந்த பையனை அடிச்சே" எனக்கேட்டேன்.. அவன் கத்தி சொன்னான், அதுதான் அடிச்சேன்"
"என்ன கத்தி சொன்னான் "
"அவன் கத்தி சொன்னான், அடிச்சேன்"
எனக்கு புரியாமல் "அவன் எதை வேணா கத்தி சொல்லட்டும், அதுக்காக அவனை அடிப்பியா, என எச்சரித்து விட்டிருந்தேன்..
அப்போது விளங்காத "கத்தி" இம்முறை எனக்கு விளக்கப்பட்டிருந்தது..
"சரி, யூனுஸ்(?) -க்கு சாக்லேட் கொடுக்க மாட்டியா" என சக மாணவனை குறித்து கேட்டேன்.. "நோ , அவன் அதினா(?)கிட்ட ரோஹித்கிட்ட கத்தி போடுன்னு சொன்னான்.. சோ அவன்கிட்ட நான் கத்தி போட்டுட்டேன்" எனக்கூறினான்..
(?) -இதற்கு அர்த்தம் , அவர்களின் பெயர் எனக்கு அடிக்கடி மறந்து விடும்..இப்போதும் சந்தேகமாகத்தான் போட்டிருக்கிறேன்.. அந்த பெண்ணின் பெயரை மாற்றி நான் அஜீனா என சொன்னால் , "அஜீனாவா , அஜீனாவா" என ஒரு ஆசிரியரை போல கண்டிப்புடன் கேள்வி எழுப்பி கண்டிப்புடனேயே பெயரை திருத்தமாக சொல்லிக்கொடுப்பான்..
உடனே சரி, பேசுவீங்கன்னா அதுக்கு என்ன சொல்லுவீங்க எனக் கேட்டேன்.. "ஜோட்டி" எனக் கூறி கட்டை விரலை உயர்த்தினான்..(இவை இரண்டுக்கும் அர்த்தம் தேடியும் அவன் சொல்லும் அர்த்தத்தோடு பொருந்தவில்லை, உடன் படிக்கும் மாணவர்களின் வட்டார மொழி போல)..
நான் படிக்கும்போது உன் பேச்சு காய், உன் பேச்சு பழம் என்று சொல்லிக்கொண்டதுண்டு.. காய் என்றால் ஆள்காட்டி விரல் நுனியை நடு விரலால் பின்னுக்கு இழுத்து காட்டியும் , பழம் என்றால் ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் தவிர்த்து மற்ற விரல்களை மடக்கி காண்பிப்பது என இருக்கும்..
இவனின் தற்போதைய வகுப்பு வழக்கப்படி "ஜோட்டி" என்றால் கட்டை விரலை மட்டும் உயர்த்தியும், "கத்தி"என்றால் சுண்டு விரலை மட்டும் உயர்த்தியும் காட்டுவதாம்...
சாக்லேட் வாங்கிக்கொடுத்ததும், "இது ரோஹித்-க்கு (அவனையும் சேர்த்து), இது பெனிட்-க்கு, இது ஜெகனுக்கு , இது பிரணவ்-க்கு" என நான்கு சாக்லேட்களை பேக்-ல் போட்டுக்கொண்டான்..
பள்ளியிலிருந்து திரும்பியதும் , "சாக்லேட்ட ஃப்ரெண்ட்ஸ்-க்கு கொடுத்தியா" எனக்கேட்டேன்.. பிரணவ் மட்டும் வேண்டாம்னு சொல்லி வாங்கல , சோ அதை யூனுஸ்-கு கொடுத்துட்டேன்..
"யூனுஸ்(?)தான் உன்கூட கத்தி போட்டான்னு சொன்னே இல்லையா"எனக் கேட்க, சிரித்தவாறே சொன்னான், "சாக்லேட் கொடுத்ததும் ஜோட்டி சொல்லிட்டான்"...
:) :)

12

இப்போது நினைவில் வராத ஏதோ ஒன்றை ரோஹித் சொன்னதற்கு,"ஓகே மை சன்" என்றேன்.. உடனே சிரித்துக்கொண்டே "என்னம்மா, நீங்களும், அப்பாவும் என்னை மை சன்-ன்னு கூப்டறீங்க , நான் என்ன அந்த சன்-ஆ" என பால்கனி கதவின் வழி தெரிந்த சூரியனைக் காட்டினான்..
"அது sun நீ son" என விளக்கிக் கூறியதை புரிந்துகொண்டானா இல்லையா என சுதாகரிப்பதற்குள் , "அப்போ நிகிதாவ எப்படி கூப்பிடுவீங்க" எனக்கேட்டான்.. "நிகிதா அம்மாக்கும் அப்பாக்கும் டாட்டர் " என்றேன்.. "ஹஹாஹா, டாட்டரா, அப்போ அவ ஊசி போடுவாளா" என சிரித்தபடி கேட்டான்.. ஊசி போடறது டாக்டர் , மகள்-னா டாட்டர் என ஸ்பெல்லிங் உடன் விளக்கினேன்.. மேற்கொண்டு கேள்வி எதுவும் எழுப்பாததால் விளங்கியது என நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த தின்பண்டமும்,டிவி-யில் ஓடிக்கொண்டிருந்த டோராவும்தான் மேற்கொண்டு அவனை கேள்வி எழுப்ப தோன்ற விடவில்லை என அதற்கு பின்னான அவன் பேச்சுகளால் புரிந்தது..
எப்போதுமே "என்னவாக ஆகப்போறீங்க" என பிள்ளைகளிடம் கேட்டால் , ரோஹித் "டாக்டராவேன்" எனவும் நிகிதா துப்பாக்கி போல் கை விரல்களைச் சுட்டி "நான் CID " (புகழ் ஜீ தமிழ் டிவி-க்கே) எனவும் கூறுவாள்..
சில நாட்கள் கழித்து திடீரென கோபித்துக் கொண்டவனாக , "நான் மட்டும் மை சன் , ஆனா நிகிதா மட்டும் டாக்டரா , நானும் டாக்டர் ஆகணும்" என்றான்.. "அவ டாட்டர் தங்கம், நீ டாக்டர் ஆகணும்னா நல்லா படி டாக்டராயிடுவே" என திரும்ப ஸ்பெல்லிங் சொல்லி விளக்கி கூறினேன்.. அதை காதில் வாங்கிக் கொள்ளாதவனாக "அப்போ நிகிதா மட்டும் ஸ்கூல்-க்கே போகல, ஆனா இப்பவே அவள டாக்டர்ன்னு சொல்றீங்க , போம்மா , நானும் இப்பவே டாக்டராகணும்" என வார்த்தையில் வீம்பும் பிடிவாதமும் கொண்டு அழவும் தொடங்கி இருந்தான்.. புரிய வைக்க முடியாதென்று தோன்றியதும் வேறு பேச்சை மாற்றிக் கொண்டேன்..
அவன் இப்படி சொல்வதும் , நான் பேச்சை மாற்றுவதும் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது.. எங்காவது டாட்டர், டாக்டர் என வார்த்தை வந்தாலே இதை ஆரம்பித்து விடுவான்..
ஒருமுறை வாட்சப்பில் இருந்த அவன் டீச்சரின் குடும்ப புகைப்படத்தை அவனிடம் காட்டினேன்.. அவருக்கு பள்ளியில் படிக்கும் இரு வளர்ந்த மகள்கள்.. , போட்டோவை பார்த்தவன், "உனக்கு தெரியுமா , இவங்க ரெண்டு பேருமே டாட்டர்ஸ், மேம் சொன்னாங்க (ஏதோ ஒரு நாள் பெண்கள் பள்ளிக்கு வந்திருக்கும்போது பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்து இருப்பார் போல ), ஆனா நான் மட்டும் டாட்டர் இல்ல" என சிணுங்கினான்.. அவங்க டீச்சரோட பொண்ணுங்க தங்கம் , அதான் டாட்டர்ஸ்-னு சொல்லி இருக்காங்க, நான் நிகிதாவ டாட்டர்னு சொன்னேன்ல அது போல" என சொன்னதும் , எப்பவும் நிகிதாவை மட்டும் டாக்டர் ஆக்கு, என்னை ஆக்காதே" என ஏன்தான் புகைப்படத்தை காண்பித்தோமோ என்று நினைக்கும் அளவுக்கு பேசி கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..
நேற்று பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையை கழற்றாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட தொடங்கினான்.. "தங்கம், டிரஸ் கழட்டு, நான் இப்ப வாஷ் பண்ணினாதான் நீ நாளைக்கு ஸ்கூல்க்கு போட்டுட்டு போக முடியும்" எனக் கூறினேன்.. "இல்லை, முடியாது"என விட்டேத்தியாக பதில் கூறினான்..
"ஓகே, எனக்கு என்ன,யூனிபார்ம் டிரஸ் இல்லேன்னா ஸ்கூல்-ல உன்னை சேர்க்க மாட்டாங்க, அப்புறம் ஸ்கூல்க்கு போக முடியாது, ஸ்கூல்-க்கு போய் படிச்சாதான டாக்டர் ஆக முடியும், ஸ்கூல்-க்கு போகலேன்னா நீ நினச்சது போல டாக்டர் ஆகவும் முடியாது" என அசால்ட்டாகக் கூறினேன்..
உடனே "நான் டிரஸ் கழட்டறேன்" எனக் கூறியவன் , கழட்டிக்கொண்டே கேட்டான், "ஆமா, நீங்களும் ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சீங்கன்னு சொன்னீங்கல்ல, அப்போ நீங்க ஏன் டாக்டராகல", :o :o

புதன், 2 நவம்பர், 2016

கதை சொல்லி

என்றோ ஒருநாள் சொன்ன
கதையையே திரும்பத்திரும்ப
சொல்ல சொல்லிக் கேட்கிறாள்....

சொல்லுவதின் சலிப்போ ...
கேட்பதின் ஆர்வத்தை
தொட மறுக்கிறது.....


அசுவாரசியத்தோடு இறக்கப்பட்ட
கதாபாத்திரங்களோ அவள் நினைவில்
அமர்த்தப்பட்ட காட்சிகளின்படி
தத்ரூபமாக வாழ்கின்றன.....

சலிப்பு விழுங்கத் துடித்த
காட்சிகளையும்
கண்டிப்பு பூசிய
வார்த்தைகளைக் கொண்டு
பாந்தமாக உட்புகுத்துகிறாள்.....

இடையிடையே கதை சொல்லியும்
அவளானதால்தான் என்னவோ
முன்பை விடவும் ஜொலிக்கின்றன
கதாபாத்திரங்கள்....

11

நேற்று மதியம் பிள்ளைகளுக்கு சுண்டல் குழம்பு ஊற்றி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தேன்.. சுண்டல் இருவருக்கும் பிடிக்காது.. பெண்ணோ என் மிரட்டலுக்கு பயந்து சாதத்துடன் நான் கொடுக்கும் சுண்டலையும் விழுங்கிக்கொண்டிருந்தாள்..
ஆரம்பத்தில் எனக்கு வேண்டாம்மா என கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த மகனுக்கு சுண்டல் வெளியில் தெரியாதவாறு வைத்து 2,3 வாய் ஊட்டி விட்டேன்.. "இதுல சுண்டல் இருக்கு , இருக்கு" என்றே முகத்தை சுருக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் , "சரி, இனி சுண்ட...ல் போடாம வெறும் குழம்பு சாதம் மட்டும் தர்றேன்" என கூறினேன்..
ஆனால் திரும்பவும் சுண்டலை சாதத்தில் மறைத்து சேர்த்து கொடுத்ததை பார்த்து விட்டான்.. "இதுல சுண்டல் இருக்கு" என்று வாயை திறக்க மறுத்தான்.. "இல்ல தங்கம், இதுல இல்ல , நீ சாப்பிடு" என ஊட்ட போனவளிடம் , "பொய் சொல்றியா . என்கிட்டயே பொய் சொல்றியா, எனக்கு பொய் பேசினா பிடிக்காது , உனக்கு மட்டும்தான் பொய் பேசினா பிடிக்காதா, எனக்கும்தான் பிடிக்காது" என காட்டுத்தனமான கத்தியவனைப் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய் விட்டேன்..
சிறு விஷயத்துக்கு கூட பிள்ளைகள் ஆரம்பத்தில் பொய் பேசியபோது "எனக்கு பொய் பேசினா பிடிக்காதுல்ல, உண்மையை சொன்னா அம்மா மிரட்டி மட்டும் விட்டுருவேன், பொய் பேசினா அடிப்பேன், எங்கேயும் பொய் பேசக்கூடாது, நடந்ததை சொல்லிட்டு இனி அப்படி நடந்துக்க மாட்டேன்னு போயிரணும், life full -ஆ இதை நீ நியாபகம் வச்சுருக்கணும்"னு மிரட்டி அவர்களின் மனதில் பதிய வைத்ததுதான் அவனின் இந்த கோபத்துக்கு காரணம்..
அவனின் கத்தலில் மிரண்டு போய், என்ன சொல்லி சமாளிப்பது, நல்லதுக்குன்னா பொய் சொல்றது தப்பில்லை-னு ஒரு திருக்குறளை மேற்கோள்காட்டி சொல்லி விடலாமா....அப்படி சொன்னா , நாளைக்கு ஒரு பொய் சொல்லிட்டு அதுக்கு இதுதான் காரணம்னு ஒரு காரணத்தை தேடி சொல்லி ,நீதானே நல்லதுக்கு பொய் சொல்லலாம்னு சொன்னன்னு,இப்போ நான் சொன்னதை எடுத்துக் காண்பிப்பானோ(உண்மை, நாம் சொல்வதை நாமே மறந்தாலும் போட இப்போது உள்ள பிள்ளைகள் மறப்பதில்லை ) என நான் திக்கு முக்காடி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவன் கத்திக் கொண்டிருந்தான்..
"சரி இனி தரல, சாப்பிடு "எனக் கூறவும் , "அப்போ முதல்ல சுண்டல் அதுல இல்லேன்னு பொய்தான சொன்ன, ஓத்துக்கோ, பொய் சொன்னேன்னா ஓத்துக்கோ" எனக் கத்தினான்.. நான் உண்மையிலேயே அந்த சூழ்நிலைக்கு பயந்துதான் போயிருந்தேன்.. சின்ன பையன் இப்படி மிரட்டறானேன்னு கோபப்பட்டு "ஆமா, அப்படிதான்னு" அடக்கினா பொய் பேசறது தப்பில்லைனு நானே சொல்ற மாதிரி ஆகிடும்..
பின் அவனிடம் , "நீ நல்லது சாப்பிடணும்னு பொய் சொன்னேன்.. தப்புதான் இனி பொய் சொல்ல மாட்டேன்.. இனி சாப்பிடு "எனக்கூறவும் "அப்போ , ஒரு டைம் பொய் சொல்லிட்ட இல்ல , சோ நானும் ஒரு டைம் எப்பவாது பொய் சொல்லுவேன்" என அவன் கணக்கை ஆரம்பித்து விட்டான்..
பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கும் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவம் திரும்ப நினைவில் நிறுத்தியது..
நேற்று இரவும் அவனின் பொய் கணக்கை நியாபகப்படுத்தினான்.. இனி எந்த சூழ்நிலையில் அவனின் ஒரு பொய் கணக்கு தீரப்போகிறதோ...

- ஷார்ஜா
   3-11-2016

திங்கள், 30 மே, 2016

அதிக சேட்டைகள் செய்வர் என்று தெரிந்தும், வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறார்களே என்று , கணவர் வெளிநாடு செல்லும் நாட்களிலெல்லாம் பிள்ளைகளை அக்கம்பக்கம் உள்ள இடங்களுக்கு தனியாக அழைத்து சென்று வருகிறேன்.. கடந்த வாரம் அப்படி கொஞ்சம் தொலைவிலுள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றிருந்தேன்..

உள்ளே நுழைந்ததும் , அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த Inflatable Jumping  castles  மற்றும் inflatable  slide  உள்ள பகுதிக்கு சென்று அங்கு விளையாட வேண்டும் எனக்கூறினான்.. ஏற்கனவே ஒருமுறை சென்றபோதும் அங்கு விளையாட வேண்டும் எனக் கேட்டிருந்தான்..  ஒரு மணிநேரம் வரை விளையாடலாம்.. ஆனால் சிறிது நேரத்திலேயே ஆசைக்கு  விளையாடிவிட்டு திரும்ப வந்து விடுவான், அந்த காசுக்கு சாப்பிடவாவது ஏதேனும் வாங்கிக் கொடுக்கலாம் என்று அனுப்பவில்லை..

அன்றும் அதையே நினைத்தவாறு முதலில் அங்கு சென்று விளையாடறேன் என் கெஞ்சிக்கொண்டு நின்றவனைப்பார்த்து "நீ சின்ன பையன், அதனால் உன்னை உள்ள விடமாட்டாங்க"எனக் கூறினேன்..  "அப்போ , என்னை தூக்க சொல்லும்போது நீ பெரிய பையனாகிட்டன்னு ஏன் சொல்ற"எனக் கேட்டான்.. இவனிடம் பேசி சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும் , விளையாட விட தீர்மானித்தேன்..

பெண்ணிடம் நீ அவ்வளவு மேல ஏற மாட்ட,விழுந்துருவ, அதனால் அம்மாகிட்ட இரு" என்று சொன்னதும் "எனக்கு  மட்டும் ஆசை இருக்காதா"என நீட்டி முழக்கினாள்..  இருவருக்கும் 30 திர்ஹாம்ஸ்  ஆகும் என பர்சை பிரித்தால் , வரும்போது டாக்ஸி-க்கு 10 திர்ஹாம்ஸ் கொடுத்தது போக  மொத்தமே 30 திர்ஹாம்ஸ் மற்றும் சில  சில்லரைகளும்தான்  இருந்தன..

பொதுவாக பர்சில் வீட்டு செலவுக்கென இருக்கும் பணம் முழுவதையும் வைக்கும் பழக்கத்தை சமீபமாகத்தான் நிறுத்தி இருந்தேன்.. அப்படி அந்த மாத செலவுக்குரிய பணம் முழுவதையும்  பர்சில் வைத்திருந்தால், மாத கடைசிக்கு நாள்கள் இருக்கும் முன்பே பணம் முழுவதும் செலவாகி இருக்கும்.. என் கை அப்படி.. பர்சில் காசு இருந்தால் பார்த்ததெல்லாம் வாங்க தோன்றும்..ஆதலால் குறிப்பிட்டளவு பணத்தை எடுத்து வைத்து அது செலவழிந்ததும்தான் பீரோவில் உள்ள பணத்தை எடுப்பதை சில மாதங்களாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்..

இங்கு வரும்போதும் பக்கம்தானே போகிறோம் , இதற்குள் செலவு அடங்கி விடுமென நினைத்திருந்தேன்.. இவன் இதில் விளையாட இன்றும் கேட்பான் என எண்ணவில்லை..

ரோஹித்திடம் நீ போய் விளையாடு,  விளையாடிட்டு கொஞ்ச நேரத்துலையே வரக் கூடாது , நான் நிகிதாவ கூட்டிட்டு அந்த பக்கம் எல்லாம் சுத்திக்காட்டி விளையாட விட்டுட்டு , வர்ற வரைக்கும் விளையாடிட்டு  இருக்கணும், தேடக் கூடாது என எச்சரித்தேன்.. "நிகிதாவையும் அனுப்புங்க" எனக்கூறினான்.. "காசு கொண்டு வரல" என சொல்லி அவனை அனுப்பி விட்டு , தேடுவானோ என்னவோ என்று வெளியில் இருந்த  ஸ்டோன் பெஞ்சில்  அவனைபார்த்தவாறு பெண்ணுடம் அமர்ந்தேன்.. அப்போது ஒரு சிறுவனும் அங்கு விளையாட பணம் வசூலித்துக் கொண்டிருந்த அரபுப் பெண்ணின் இரண்டு வயதிற்கும் உள்ளான பெண் குழந்தையும்  மட்டுமே அதில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ..

மடியிலிருந்த நிகிதாவோ , "அந்த அக்கா(?) என்னை விட சின்னதா இருக்கு , அந்த அக்கா விளையாடுது" என அந்த பெண் குழந்தையைக் காண்பித்துக் கேட்டாள். காசு கொண்டு வரல தங்கம்" எனக் கூறியதும் "அப்போ நாளைக்கு இங்க வரும்போது என்னை விளையாட விடனும் , ஒகே வா" எனக் கேட்டு என் "ஒகே" வை வாங்கி சமாதானம் அடைந்தாள்.. இப்போதெல்லாம் அவளை சமாளிப்பது ரொம்பவும் சுலபமாக இருக்கிறது.. அவளுக்கு பிடிக்காததை சாப்பிட சொல்லி வற்புறுத்தினால் கூட  , "நாளைக்கு எனக்கு இது கொடுக்கக்கூடாது , ஒகே வா" , என சமாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விடுகிறாள்..

என்னை பார்த்து சிரித்துக்கொண்டே slide -ல் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தான்.. சும்மா உட்கார்ந்து இருப்பதற்கு , பெண்ணை பக்கத்திலுள்ள தளவாடங்களுள் விளையாட விடலாமென அழைத்து சென்றேன்..

வந்ததிலிருந்து இடையிடையே "மெஹந்தி போடறீங்களா" எனக் கேட்டு நின்ற சில  அரபிப்பெண்களை "வேண்டாம்" என்று புன்னைகயோடு கடக்க வேண்டியிருந்தது.. இந்த பூங்காவில் சிறிய உணவு விடுதியும், சில சிறு சிறு கடைகளும் இருந்தாலும் சில பெண்கள் இப்படி துணிகள், வாசனை திரவியம் விற்பது  என கேட்டு வந்து விற்று செல்வர்..அவர்களுக்கான வருவாய் ஈட்டெடுப்பு இது..

 சென்ற 10 நிமிடத்தில் ஏதோ உறுத்த, தேடுவானோ என்று பார்க்க வந்தால் அழுத முகத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.. அங்கு காசு வாங்கிக் கொண்டு இருந்த அரபிப்பெண், "நீங்கள் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளுங்கள் , அப்போது அழ மாட்டான் "என அரபியில் சொன்னதை , அவர் அங்கிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டிய செய்கையால் புரிந்து கொண்டேன்..

நிகிதாவும்  நானும் உட்புறம்  போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம்.. ரோஹித்தும் குதூகலத்துடன் விளையாட சென்றான்.. அங்கு அமர்ந்தவாறே பின்புறம் கம்பி வலைக்கு பின்னால்  எதேச்சையாகப் பார்த்தபோது மூன்று வயதை ஒத்த ஒரு சிறுவன் கையிலிருந்த இரு ஜீப் பொம்மைகளை கம்பிகளுக்கு மேல் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தான்.. ஆரஞ்சு சட்டையும் , ப்ளூ three fourth  டிரௌசரும் போட்டிருந்த சிறுவன் தன் முன்பக்க மேல் பற்களை நான்கைந்தை  புழுவுக்கோ,எதுக்கோ கொடுத்திருந்தான்..

நான் பார்ப்பதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டு இரு ஜீப் பொம்மைகளையும் ஒன்றோடொன்று மோதுவது போல காண்பித்து சிரித்தான்.. நானும் சிரித்தேன்.. உடனே அந்த slide -ஐ காண்பித்து  ஏதோ மெதுவாக சிரித்தவாறே சொன்னான்.. அதை வைத்து அல்லாமல்  அவன் கண்களில் தெரியும் குழந்தைத்தனமான ஏக்கத்தை உள்வாங்கி . அதில் அவன் விளையாட வேண்டும் எனக்கூறியதைப் புரிந்து கொண்டேன்.. உடனே நெஞ்சில் ஒரு இனம் புரியாத இயலாமையான உணர்வு ஏற்பட்டது.. என்னிடம் போதுமான  பணம் இல்லை என எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.. அப்படி என்னால் வாய் திறந்து சொல்லவும் மனம் வரவில்லை ..  கையறு நிலையில் உள்ளபோது செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன் கலந்த சிரிப்பை உதிர்த்து விட்டு இல்லையென தலையாட்டினேன்..

அவன் சிரித்தவாறே இருந்தான்..அப்போது பக்கத்தில் ஓடி வந்த  அவனை விட சிறிய இன்னொரு  சிறுவன் இந்த சிறுவனை தள்ளி விடுவதும் , மண்ணை எடுத்து அவன் தலையில் போடுவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தான்..அவனை பார்த்தும் சிரித்தவாறு எதிர்ப்பு காட்டாமல் நின்று கொண்டிருந்தான்..

எனக்கு மனம் கனத்துப்போயிருந்தது.. வீட்டுக்கு போக டாக்ஸி-க்கு பணம் வேண்டும்.. அதை எடுத்து மீதம் பார்த்தால் பர்சில் 7 திர்ஹாம்சுக்கு மேல்  இல்லை.. எங்கு வெளியில் சென்றாலும் கூடுதலாக பணம் எடுத்துக் கொண்டு போக கணவர் அறிவுறுத்துவது தோன்றி மறைந்தது..

என் பிள்ளைகள் இது போல மேலும் சில அதிக விலை கொடுத்து விளையாட ஆசைப்பட்டபோது , சில நேரங்களில் மறுத்து இருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் கூட இது போல என் மனம் துடித்ததில்லை.. ரோஹித் அரை மணி நேரம் விளையாடி இருப்பான் , மீதி அரை மணி நேரம் அந்த பிள்ளையை விளையாட விட முடியுமா , எனக் கேட்கவும் மனம் துடித்தது.. அது இயலாது எனத் தெரிந்ததால் கேட்கவும் இல்லை..

அப்போது , ஒரு தம்பதி தங்கள் இரு சிறு குழந்தைகளுடன் உள்ளே நுழைந்து பணம் செலுத்தி பிள்ளைகளை விளையாட விட்டனர்.. அப்போது வாயில் கதவை அவர்கள் அடைக்கவில்லை. பணம் வாங்கும் அரபுப் பெண்ணும் பிள்ளைகள் விளையாடும் பின்பகுதிக்கு சென்றார்.. அப்போது இந்த சிறுவனும் கூட இருந்த குட்டி சிறுவனும்  மெதுவாக நடந்தபடி உள்ளே வந்தார்கள்.. இவர்களைப்பார்த்தால் அந்த அரபுப்பெண் என்ன சொல்வாரோ என  எனக்குள்  சிறு பதட்டம் எழுந்தது.. நான் நினைத்தது போலவே , பின்பக்கமிருந்து வந்த  அந்த அரபுப்பெண் அந்த இரு சிறுவர்களையும் "போங்க போங்க" என சிறிது கடுமையாக அரபியில் சொல்லவே இருவரும் வெளியேறினர்..

நான் என்னவோ போல் அமர்ந்திருந்தேன்.. அவர் ,சிறிது நேரம் பிள்ளைகளை ஆசைக்கு விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது.. ஆனால் காசு வாங்காமல்  விளையாட விட்டால் அவருக்கும்  ஏதும் பிரச்சனை வரலாம் எனவும் தோன்றியது.. அப்பெண்ணின் குழந்தை, அந்த குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்த  அவருக்கு தெரிந்தவர்கள்  போல் இருந்த ஒரு வளர்ந்த பையன் மற்றும் பெண்  எல்லாம் காசு கொடுக்காமல்தான் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நான்கைந்து பிள்ளைகளே விளையாடிக்கொண்டு இருந்த இடத்தில் அந்த சிறுவர்களை  ஒரு ஐந்து நிமிடமேனும் அந்த பெண் விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது..

திரும்ப அந்த சிறுவனை கவனித்தேன்.. அவன் வெளியில் நின்றவாறு, Jumping  castles -ல் குதித்து விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் சந்தோசத்தை சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்..  இடையிடையே என்னுடன் வந்து சென்று கொண்டிருந்த மகனிடம் , அந்த சிறுவன் கேட்டதை சொல்லி, அவனையும் காண்பித்தும்  இருந்தேன்.. என்னால் அங்கு அதற்கு மேல் அமர்ந்து இருக்கவும் முடியவில்லை.. மகனை அழைத்து :நாம போவோமா" எனக்கேட்டேன்.. அவனும் "சரி" என்று சொல்ல வெளியே வந்தோம்..

அதற்குள் அந்த சிறுவன்
எங்கோ சென்றிருந்தான்.. என்னிடம் இருந்த பைசாவுக்கு  அந்த சிறுவனுக்கு ஒரு சாக்லட் வாங்கிக் கொடுத்தால் கூட என் மனம் கொஞ்சம் அமைதி அடையும் எனத் தோன்றியது..என் இயலாமையையும் , மன வருத்தத்தையும் ரோஹித்திடம் (அவன்தான் அப்போது பக்கத்தில் இருந்த பெரியவன்)சொல்லியவாறே நடந்து வந்து கொண்டிருந்தேன்..

சிறிது தூரம் வந்ததும் "ஆரஞ்சு ஷர்ட் போட்ட பையன் அங்க இருக்கான் பாரும்மா" எனக்காட்டினான்.. மெஹந்தி போட்டு விடும் சிறு பெண்கள் இருந்த குழுவில் அமர்ந்து இருந்த சிறுவன் எதையோ use  and  throw  தட்டில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..  என்னை  அவன் பார்க்கும்போது, அவனைப்பார்த்து சிரித்தவாறே பிள்ளைகளிடம்  "அந்த தம்பிக்கு டாட்டா சொல்லு தங்கம்"எனக்கூறினேன்.. நான் சொல்லி முடிக்கும் முன் என்னை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தவன் எனக்கு டாட்டா காட்டினான்..

சிரித்தவாறு நாங்களும் கை அசைத்து  விட்டு வந்தோம்.. பணம் மட்டும் கூடுதலாக கொண்டு சென்றிருந்தால் ஒரு மனத்திருப்தியோடு வந்திருப்பேன்.. இப்போது மனத்திருப்தி இல்லாத ஒரு அனுபவப் பாடத்தோடு வந்தேன்..

அந்த பகுதி வளைவில் திரும்போது அவனை மீண்டும் ஒரு முறை பார்க்கலாமென திரும்பினேன்..  முன்பு நின்றிருந்த விளையாட்டு பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்..

வெள்ளி, 20 மே, 2016

மாற்றத்துக்கான சாவி

ஏனோ இதுவரை அல்லாத சொல்லவியலாத மனவருத்தம் நேற்றைய தேர்தல் முடிவுக்கு பின் இருந்தது.. முக்கியமாக சில தலைவர்களின் தோல்வி.. அதுவும் திருமாவின்  குறைந்த வாக்கு எண்ணிக்கையிலான தோல்வி மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.. பின்னர் வந்த அவரின் அறிக்கை அவர் மேல் இன்னும் நம்பிக்கை ஊட்டியது..

அந்த தலைவர்களின் மேல் மற்றவர்களுக்கு சொல்ல எந்த குற்றச்சாட்டுகள்  இருந்தாலும் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மாற்றத்திற்கான அடித்தளமாக எனக்கு பட்டன..  ஏற்கனவே பல முறை ஆண்டும், பல கெட்ட பெயர்கள் சூழ்ந்தும்  இருக்கிற கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதியை நம்பும் மக்கள் இதுவரை ஆளாத  ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் அதிகமிருந்தது..

பின் இலவசங்களுக்கும் பணத்துக்கும் மக்கள்  அடிமைப்பட்டு கிடக்கும்போது என்ன செய்ய இயலும் என்ற எண்ணம் வந்துவிட்டது..
நேற்று நெருங்கிய தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , நாங்கள் 3 பேரும் நாம் தமிழருக்குத்தான் ஒட்டு போட்டோம், ஆனால் திரும்ப அதிமுக வந்தது எங்களைப் போல பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது, ஆனால் என்ன செய்ய , நமக்கு யார் ஆண்டாலும் ஒரே மாதிரிதானே வாழ்க்கை , தனிப்பட்ட முறையில் நாம் பாதிக்கப்படவில்லையே, அதனால் வருத்தம் வேண்டாம் என கூறினார்..

யோசித்துப்பார்க்கையில் என்னைபோல போல மாற்றத்தை விரும்பும் பலரும் விலைவாசி உள்ளிட்ட பொது பிரச்சனையில் மக்களோடு மக்களாக பாதிக்கபடுவோமே தவிர  எந்த ஆட்சி வந்தாலும் தனிப்பட்டவகையில் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லைதான்..  ஆனால் ஈழப்படுகொலை நடந்த சமயத்தில் இருந்த ஆட்சி சுயநலத்திற்காக நடந்து கொண்ட விதமும் , மதுவிலக்குக்குக்காக போராடிய சசிபெருமாளின் மரணமும் மற்றும் பல மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகளும் மனதில் இருக்கின்றனவே..

மதுவால் உங்களுக்கு தனிப்பட்ட பாதிப்பு இல்லையென்றால், அதனால்  மட்டும் எவ்வளவு பேர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என உங்களை சுற்றி பார்க்கவில்லையென்றால் கூட  ஒருமுறை மெனக்கெட்டு அருகிலிருக்கும் ஆல்கஹால்  De -addiction  சென்டர்  சென்று பார்த்து வாருங்கள்.. இளைய சமுதாயம் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருப்பதை உணர்வீர்கள்..

ஆழ யோசித்திப்பார்க்கும்போது ஒன்று புரிந்தது.. இணையத்தில் பரவும்,விவாதிக்கப்படும் பல  உண்மை அரசியலை வாசிப்பது ஒட்டு போடும் மக்களில் எவ்வளவு பேர்? உண்மையில் மக்களில்  பலர் இணையம் உபயோகிப்பதில்லை.. நம் வீடுகளிலேயே அதற்கு சாட்சிகள் இருப்பர்.. மீதம் உள்ளவர்களில் செய்திகளின் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்பவர்கள் எத்தனை பேர்? குறிப்பாகப் பெண்கள்... பெண்கள் பலரும் சீரியலைத் தவிர நாட்டு நடப்புகளை அறிய என்ன பார்க்கின்றனர்? எவ்வளவு பெண்களுக்கு கல்லூரிப் பருவத்தினருக்கு நாட்டு  நடப்பை பற்றி தெரியும்?

எனக்குத் தெரிந்த வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்த ஆட்சி அமைந்ததற்கு  தன் வருத்தமான,கோபமான,ஆதங்கத்தை தன் பதிவில் வெளியிட்டு இருந்தார்.. ஆனால் உண்மையில் சொந்த நாட்டில் இருக்கும் மனைவியும் தான் விரும்பாத கட்சிக்குதான் ஆதரவு அளிக்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை..

பல ஆண்களும்  இப்படிதான் இருக்கின்றனர்.. நாட்டு நடப்பை தன் வீட்டு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பான வழியை அவர்களுக்கு திறந்து கொடுப்பதில்லை.. நாளேடுகளை படிக்க சொல்லி ஊக்கப்படுத்துவதோ, தான் அறிந்த நாட்டு நடப்புகளைப் பற்றி அவர்களிடம் விவாதிப்பதோ இல்லை.. ஒட்டு போடும் நாளில் மட்டும் அவர்களுக்கு இந்த கட்சிக்கு ஒட்டு போடு என்று சொல்வதோடு தன் கடமை முடிவுறுவதாக நினைக்கின்றனர்.. அப்படி சொல்லும்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் பகுதியில் ஓட்டுக்காக  அளிக்கப்பட்ட  பணமும், இலவசங்களும் கொடுக்கும் வசதிதான் பெரிதாகத் தெரியுமே தவிர எல்லாம் அறிந்த தன் வீட்டு ஆண்கள் சொல்லும் சொல்லல்ல.. மேலும் குருட்டுத்தனமாக இவருக்கு மாற்று இவர்தான் என கணிக்கின்றனர்..

இன்னொரு முக்கிய குறை,பல செய்திகளை பல காரணங்களால் மறைத்து வரும் ஊடகங்கள்.. எடுத்துக்காட்டுக்கு சாதிக் பாட்சா கொலையை பற்றி கொலையாளி அளித்த வாக்குமூலத்தை எவ்வளவு ஊடகங்கள் வெளியிட்டன.. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதுவும் செய்தவர்களுக்கு  எதிரான  ஆட்சி உள்ள மாநிலத்திலேயே.. உற்றுப்பார்த்தால் ஒருவருக்கொருவர் மற்றவரை காப்பாற்றித்தான் வருகின்றனர்.. ஏனெனில் இருவரின் மேலுமே குற்றம் உண்டு..இது போல இன்னும் பல பெரிய இடத்து விஷயங்கள்..

இதே  ஒரு சாதாரண மக்களில் ஒருவன் ஒரு கொலையிலோ  கொள்ளையிலோ ஈடுபட்டிருந்தால்  செய்திகளின் முதன்மை செய்தியாக ஆக்க கண் மூக்கு காது என வைத்து  அமோகமாக வியாபாரம் செய்திருப்பர்.. தெரியாமல் சிக்கிகொண்ட பேரறிவாளனின் உண்மை நிலை வெளிப்படையாகத் தெரிந்தும் எவ்வளவு ஊடகங்கள் அதை வெளிச்சமிட்டன? காசும், பதவியும் இருப்பவனுக்குத்தான் அரசாங்கமும், ஊடகமுமே தவிர சாதாரண மக்களுக்காக இல்லை..

அதனால் நாட்டு நடப்பை அறியாத மக்களை  குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..

ஆகையால் நல்ல ஆட்சிக்கான மாற்றத்தை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புபவர்கள் இனியாவது நாட்டு நடப்புகளை தன் குடும்ப உறுப்பினர்கள் அறிந்து கொள்ள பாதுகாப்பான வழியை திறந்து கொடுங்கள்.. நல்ல மாற்றத்துக்கான சாவி அதில்தான் ஒளிந்து இருக்கிறது.. அதை கொண்டுதான் திறக்க முடியும் நம் தமிழகத்துக்கான நிரந்தர விடியலை..


- 20-5-2016

புதன், 18 மே, 2016

அரசியல் தெளிவு

வாழ்க்கையில் இன்று கற்றுக் கொண்ட  விஷயம், இனி இந்த அதிமுக,திமுக உடன்பிறப்புகளிடம் மட்டும் அரசியல்  பற்றி  பேசவே கூடாது என்பதுதான்..

கட்டாயமாக எல்லோரும்  ஒட்டு போட வேண்டும் மற்றும் இதுவரை ஆண்ட கட்சிகளைத் தவிர ஆளாத கட்சிக்கு(எதுவாகினும்-சுயேட்சைகள் உட்பட) வாக்கு அளித்து ஒரு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்,  அப்படி நீங்கள்  ஒட்டு போடுகிற கட்சி ஜெயிக்கிறதோ, இல்லையோ அது பெரிய விஷயமில்லை.. ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகள் திரும்பவும் வந்து,முன்பு செய்த அராஜகங்களை, ஊழலை , துரோகத்தை இனியும் செய்தால் அதில் நம் பங்கு  குற்ற உணர்ச்சி இல்லை என்று திருப்தியாவது பட்டுக்கொள்ளலாம்-  இரண்டு நாட்களுக்கு முன்பே  இப்படி எல்லாம் போட்டு பதிவொன்றை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்..

ஆனால் பாருங்கள், நாம் கருத்தோ அறிவுரையோ சொல்வதற்கு முன் நாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற நியதி புரிந்திருந்ததால் , நான் பதிவு செய்யவில்லை.. ஏனெனில்  எங்கள் இருவருக்கும் ஓட்டு ஸ்லிப் ஏதும் கொடுக்கப்படவில்லை  (கடந்த தேர்தலின்போதும் எங்களின்  பெயர் விட்டு போயிருந்தது) என்ற தகவல் , இப்போது அங்கு ஓட்டு போடுவதற்காக செல்ல இயலாத சூழ்நிலை  , வசதி வாய்ப்பு என   எல்லாம் சேர்ந்து ஓட்டு போட செல்லவில்லை..

நான் ஓட்டு போடாம எப்படி மற்றவர்களை ஓட்டு போடுங்க என்று சொல்வதென விட்டு விட்டேன்..

இரு நாட்களுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக எழுதி  இருந்த ஒரு நண்பருக்கு,என்னை போலவே ஒரு திமுக அதிமுக ஆட்சி திரும்ப அமைய வேண்டாம் என நினைக்கும் ஒரு நண்பர் "திமுக செஞ்சது மறந்துட்டீங்களா" எனக் கேட்டார்..  அதிமுக இப்படி செஞ்சாங்களே நீங்க அங்க கேள்வி கேட்க முடியுமா என்ற ரீதியில்தான் இருந்ததே தவிர திமுக செய்ததை ஒத்துக்கொள்ளும் மனநிலை அவரிலிருந்து  எட்டிப்பார்க்கவே இல்லை.. பதில் சொல்ல இயலாமல் போகவே நீங்க அதிமுக தான் , அதான் இப்படி பேசறீங்க என கேள்வியை மாற்றி போட்டு அதிலேயே இருந்தார்.. இப்படி ஒருசிலர்தான்  இருப்பார்கள் என நினைத்திருந்தேன்..

Exit Poll கருத்துக்கணிப்பை பார்த்ததும் கொஞ்சம், இல்லையில்லை நிறையவே ஏமாற்றம் இருந்தது.

ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவு வட்டத்தில் நெருங்கியவர்களிடம் அவர்கள் ஓட்டு போட்ட கட்சிகளை பற்றி நானே சிறு கருத்துக்கணிப்பு நடத்த துவங்கினேன்.. ,மநகூ , நாம் தமிழர், திமுக,அதிமுக, பிஜேபி, பாமக என சரிசமமாகத்தான் இருக்கிறது.. நிறைய இடங்களில் இழுபறி இருக்கும் என்றும் தெரிகிறது..

அதிமுக,திமுக இரு கட்சிகளை தவிர்த்து ஓட்டு போட்டதாக சொன்னவர்களிடம் ஒரு ஸ்மைலியை அனுப்பி விட்டு கடந்திருக்கிறேன்.. ஆனால் இரு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டவர்களிடம் (அரசியலில் தீவிர நாட்டம் இல்லாதவர்கள்) கேட்கப்போன போது கிடைத்த சில பதில்களோ, எங்க ஏரியா-ல  அதிமுக எல்லோருக்கும் பணம் கொடுத்துருக்காங்க..அதனால் திமுக-க்கு போட்டேன் , வீட்ல போட சொன்னாங்க அதனால் போட்டேன் என்பது போல அற்ப காரணங்களே...

நாமும் இப்போதுதானே அரசியலை உள்வாங்கி இருக்கிறோம், கடந்த தேர்தல்களின்  போது ஆழ யோசிக்காமல் பெற்றோர் சொன்னதற்காகவும், இருக்கிற ஆட்சி போக வேண்டும் என்ற இது போல அற்ப காரணங்களுக்காகத்தானே போட்டிருக்கிறோம் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன்..

கட்சியில் தீவிரமாக இருப்பவர்களிடம் கேட்கப்போனபோதுதான் வெறுத்துப்போனது..  அதிமுக நண்பரிடம் ஒரு தப்பை  சொல்லி கேட்கப்போனால் திமுக இதை செய்ததே என இன்னொன்றை எடுத்து நீட்டுகிறார்கள்.. திமுகவிடம் அவர்கள் செய்த தப்பை கேட்கப்போனால் அதிமுகவின் தப்பை வாயிலேயே முன்னெச்சரிக்கையாக  வைத்து இருக்கிறார்கள்.. இப்படி , மது விலக்கிலிருந்து ஆரம்பித்து 2G , சொத்துக்குவிப்பு, 570 கோடி , சாதிக் பாஷா என வந்து  நிற்கிறது அவர்களின் குற்றச்சாட்டு பட்டியல்.. ஆக மொத்தம் ஒன்றுதான் தெளிவாக புரிந்தது, அவரவர் கட்சி தலைமை செய்த தவறை இருவருமே ஒத்துக் கொள்வதில்லை.. அந்த கட்சிகளைத் தீவிரமாக ஆதரிக்கும் எல்லோருமே இப்படிதான் இருக்கிறார்கள் என புரிந்தது..

இரண்டு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கற அளவுக்கு சம்பாதிச்சு இருக்காங்களே ,  நாம வருஷம் முழுவதும் மாடு மாதிரி உழைச்சா கூட அதுல ஒரு பங்கை சம்பாதிக்க முடியுமா "என்ற எண்ணம்  ஏன் இவர்களுக்கு எழவே மாட்டேன் என்கிறதென்று  இதுவரை எனக்கு புரியவில்லை.. எந்த அளவுக்கு அவர்கள் கொள்ளை அடித்திருந்தால் இந்த அளவுக்கு ஒட்டுக்கென்று பணத்தை அள்ளித் தெளிக்க முடியும் என்றும் யோசித்து பார்ப்பதில்லை.. இதெல்லாம் யார் பணம்?, நமக்கு அடிப்படை வசதிகளாக மாறி வந்து இருக்க வேண்டிய பணம்தானே? திரும்பவும் ஓட்டு போட்டு கொள்ளை அடிக்க விடுகிறவர்களை என்ன சொல்வது? அரசியலில் இருப்பவர்கள் ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஆதாயம் உண்டு என்று சொல்லலாம்.. அரசியல் சாராத அல்லது தொண்டர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களும் இப்படி செய்தால் நாடு எங்கு தாங்கும்?

இதில் என் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமோ , இந்த இரு கட்சிகளையும் குறிப்பிடத்தகுந்த  நல்ல காரணங்களை குறிப்பிடாமல் ஆதரிக்கிறவர்களைப் பார்க்கும்போது , நீங்க இன்னும் வளரணுமே என்று சொல்லத் தூண்டுமளவுக்கு  வந்திருக்கிறது..  அமாம் அவர்கள் இன்னும் புத்தி அளவில் வளரத்தான்  வேண்டியிருக்கிறது..

(குறிப்பு : நான் எந்த குறிப்பிட்ட கட்சியையும் ஆதரிப்பவளில்லை.. மாற்றாக வேறு எந்த கட்சிக்காவது ஓட்டு போட்டிருக்கலாமே என்று நான் சொன்னதிலிருந்தே இதை புரிந்திருப்பவர்கள் மிக மிக புத்திசாலிகள் :) )

-18-5-2016

திங்கள், 11 ஏப்ரல், 2016

மறுக்கப்படும் நீதியும் ஒரு தாயின் தொடரும் போராட்டமும்

உத்தரபிரதேசத்தில் தன் வாழ்வாதாரத்துக்காக  சாலையோரம் இருந்து  தட்டச்சு செய்து கொடுத்து வந்த ஒரு வயதானவரின் தட்டச்சு இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து ஒரு காவலர் உடைத்தது  இணையத்தில் பலத்த எதிர்ப்பையும், அம்முதியவரின் மீது பரிதாபமும் ஏற்பட வைத்தது.. காவலரின் செயலை அறிந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக வாங்கி கொடுக்க உத்தரவு பிறப்பித்து வாங்கியும் கொடுக்கப்பட்டது..

வாங்கிய கடனுக்கு தவணை கட்டாததால் விவசாயியை தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகளைக் கண்டித்தும் கிளம்பிய எதிர்ப்பு, அதற்கு பின்னான நாட்களில்  வேறு இடத்தில் தவணை செலுத்ததால் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளை மக்களே சிறை பிடிக்கும் அளவுக்கும் சென்றது.. சில நடிகர்களின் உதவியால் அவரின் டிராக்டரும் மீட்கப்பட்டது..

இவர்களின் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாலும் அவர்களின் மீது குற்றம் சொல்ல எதிர்த்தரப்புக்கு ஒரு காரணமும் இருந்தது.. ஆனாலும் பார்வைக்கு தெரிந்த இது போன்ற தாக்குதல்களில் உடனியாகப் பரிதாபப்பட்டு எதிர்க்கும் நமக்கு, பார்வைக்கு தெரிந்தும் தெரியாமலும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக குற்றமே செய்யாமல் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இரு முதியவர்களைப் பற்றி அச்செய்தி வரும்போது பரிதாபப்பட்டு (மேற்சொன்ன சம்பவங்களில் எழுந்த எதிர்ப்பில் பாதி கூட இதற்கு இருக்காது என்பது வேறு விஷயம்) வேறு செய்தி வந்தவுடம் இதை  மறக்கவும் வைக்கப்படுகிறோம் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் ...

சக மனிதர்களோ ,வேறு உயிரினங்களோ  தங்கள் உடலின் தாக்குதலை எதிர்கொள்வதை பார்க்கும்போது மட்டும்தான் எல்லோருக்கும்  கண்ணீரும் பரிதாபமும் வருமோ என்ற சந்தேகம் இவர்களைப் பற்றி பார்க்கவோ, படிக்கவோ நேரும்போதெல்லாம் என்னுள் எழுவதுண்டு..

கடந்த சில மாதங்களாக  பேரறிவாளன் பற்றிய செய்திகளைப் பார்த்தாலோ , தொலைக்காட்சியில் கேட்க நேர்ந்தாலோ  மேற்கொண்டு படிக்காமலும், பார்க்காமலும்  ஒரு வருத்தத்தோடு கடந்து விடுவேன்.. ஏனெனில்அவரை சுற்றி அரசியல்வாதிகளாலும் மற்றும் சிலராலும் பின்னிவைக்கப்பட்டு இருக்கும் சதிகார வலை பின்னலில் இருந்து அவரை எடுப்பது போல் கை நீள்வதும் பின் எடுக்காமல் விடுவதுமென வேடிக்கை காட்டி பிழைக்கும் அரசியல்வாதிகளின் செயல் உண்டாக்கும்  வெறுப்பை தாண்டியும் பேரறிவாளன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் நிலை என்னை சில மணித்துளிகள் வேதனையில் போட்டு வாட்டி எடுக்கும்.. இன்னொன்று இதை படித்து வேதனை மட்டுமே படக்கூடிய நிலையில்தானே நாம் இருக்கிறோம் என்ற தவிப்பும்...

இன்று பேரறிவாளின் தாய் அற்புதம்மாளைப் பற்றி ஒரு பதிவை எதேச்சையாகப் படிக்க நேர்ந்தது.. திரும்ப அந்த பாரம் நெஞ்சில் அடைந்திருக்கிறது.. இது எழுதியும் தீராத பாரம்..

குற்றமே செய்யாதபோதும் ,அதை அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியே பல வருடங்களுக்குப் பின் ஒப்புக்கொண்டபோதும் அவரின் விடுதலை என்பது அரசியல்வாதிகளை பிழைக்க வைக்கும் ஒரு வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது..  தெரியாமல் பாட்டரி(Battery ) வாங்கிக் கொடுத்தது என்றாலும் அது தவறுதான் என கூறினால்,25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்ததை கணக்கில் கொண்டாவது தீர்வு எடுக்கலாமே என்று நமக்கு இருக்கும் பரிதவிப்பு அரசியல்வாதிகளுக்கு வரவேயில்லை..

இந்த நேரத்தில் சஞ்சய் தத் வேறு நினைவில் வந்து நீதியை நினைக்க வைத்து  எரிச்சலை கிளப்பி விட்டுப் போகிறார்.. மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் சரப்ஜித் சிங்கின் நினைவு கூட வந்து வாட்டுகிறது..

25 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கு , ஒரு மனிதனுக்கு கிடைத்திருக்க வேண்டிய சந்தோஷம் , மனதிருப்தி , நெகிழ்ச்சி, ஆனந்தக்கண்ணீர், குடும்ப வாழ்வு, குழந்தைகள் எல்லாவற்றையும் பறித்து விட்டு போராட்டத்தையும் , வேதனையையும் , கண்ணீரையும் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் ஆள்பவர்களை கொண்ட நாட்டில் நாமும்தான் வேறு என்ன செய்ய இயலும், சிறிது நேரத்தில் இதை மறந்து வேறு சொந்த வேலையிலோ, பொது செய்தியிலோ மனதை செலுத்துவதைத்தவிர...

பேரறிவாளனுக்கும், அவரின் பெற்றோருக்கும் ஒவ்வொருமுறையும் விடுதலை என ஆசை காட்டி எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகத்தை செய்து கொண்டு வருகின்றனர்.. இப்போது கூட இத்தேர்தலுக்கு முன்னர் மகன் விடுதலை செய்யப்படுவார் என்று அந்தத்தாய் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டதே....இருந்தும் இன்னும் கூட  நம்பிக்கையை  மனதிலும் கண்ணீரை விழியிலும் ஏந்தி அந்தத்தாய் போராடிக்கொண்டே இருக்கிறார்.. அந்தத்தாயின் இத்தனை வருட கண்ணீர் போராட்டத்திற்காகவாவது  பேரறிவாளனின் விடுதலை சாத்தியப்படவேண்டும் என்று ஆசை..

பரிதாபப்பட்டாலும் கோபப்பட்டாலும்  கடவுளிடம் வேண்டுவதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ள பலரில் ஒருத்தியாக ஒரு தாயின் போராட்டம் அந்த தாய் எதிர்பார்க்கும் நல்ல முடிவுடன் முடிய பிரார்த்திக்கிறேன்..

சனி, 9 ஏப்ரல், 2016

பயணத்துளி - 1

இம்முறை இந்தியா சென்று இரு நாட்களில் திரும்ப வேண்டிய சூழல்.. தனியாகவே சென்றிருந்தேன்.. தனிமையில் செல்லும் பயணங்கள் ஆரம்பத்தில் இருந்த மனிதர்களின் மீதான பயத்தை இப்போதெல்லாம் கொடுப்பதில்லை.. மனதில் இருந்த அச்சமும், கூச்சமும் கொஞ்சம் விலகி எதுவென்றாலும் எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்று மாறி இருக்கும் மனநிலை கூட காரணமாக இருக்கக்கூடும்..
இன்னொன்று, எவரிடமும் எளிதாகப்பேசி பழகி விடும் குணமும் கூட காரணியாக இருக்கலாம்.. சில வருடங்களுக்கு முன் கோவையிலிருந்து தனியாக நாகர்கோவில் சென்ற பயணத்தின்போது ஒரு பெரியவர் அறிமுகமானார்..இப்போது எங்கள் குடும்பத்துடனும் நட்பில் இருக்கும் அந்த பெரியவரின் அறிமுகத்தையும், அந்தப் பயணத்தை பற்றியும் எழுத வேண்டுமென்றால் தனியாகப் பதிவு போட வேண்டி வரும்.. போட வேண்டிய நாள் வரும்போது பதிவிடுகிறேன்..
இப்போது தனியாக செல்லும்போது பக்கத்து இருக்கையில் ஒரு பெண் இருக்க வேண்டுமே என்ற சின்ன வேண்டுதல் மட்டுமே இருந்தது.. கொஞ்சம் அசவுகரியமாக உணர மாட்டோமே என்றுதான்.. ஆனால் போகும்போதும் வரும்போதும் அது வாய்க்கவில்லை.. தன் ஜன்னல் ஒர இருக்கையை எனக்குத்தந்து அறிமுகமான ஒரு தம்பியின் இயல்பான பேச்சு இந்தியா செல்லும்போது அசவுகரியத்தை உணர வைக்கவில்லை..
வரும்போது எனக்குக் கொடுக்கப்பட்ட இருக்கையை பார்த்ததும், "ஜன்னல் ஒர இருக்கைதான் , கொஞ்சம் தலையை அந்தப்பக்கம் சாய்த்துக் கூட தூங்கலாம்"என நினைத்துக் கொண்டே உள்ளே வர அந்த இருக்கையில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்தார்.. அதற்கு அடுத்து அப்பெண்ணின் கணவர்.. நான் மூன்றாம் இருக்கையில் அமர்ந்தேன்..
கைக்குழந்தையுடன் ஒரு பெண் நடுவிலோ ,கடைசி இருக்கையிலோ உட்கார்ந்து இருப்பது சங்கோஜம் கொடுக்கும் என உணர்ந்து இருந்தும், என்னிடம் கேட்டு உட்கார்ந்து இருக்கலாமே என்ற வறட்டு எண்ணம் எட்டிப் பார்க்க அந்த ஆணிடம் என் பயணச்சீட்டை காண்பித்து "இது அந்த இருக்கைதானே" என்றேன்.. அவர் "இல்லை, உங்களுக்கு இந்த இருக்கைதாங்க" என்றார்.. குழப்பத்துடன் மேலே போட்டிருந்த இருக்கைகளின் வரிசையை பார்த்ததும் நான் நினைத்தது தவறெனப் புரிந்தது..
அந்த ஆண் அடிக்கடி தன் கைபேசியை எடுத்து குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டும், தன் மனைவியிடம் காட்டிக்கொண்டும் இருந்தார்.. இன்னொருவர் புகைப்படங்களை அனுமதியின்றி பார்ப்பது அநாகரீகம் என்பதால் பார்க்காமல் திரும்பி இருந்தாலும்,அப்படி திரும்பும்போது என் கண்ணில் பட்ட புகைப்படங்களை வைத்து சொல்கிறேன்..
இதற்கு இடைப்பட்ட சமயங்களில் ,குழந்தைக்கு பசி எடுக்கும்போதெல்லாம் அந்த பெண் குழந்தைக்குப் பாலூட்ட , இவர் தன் மனைவியை கொஞ்சம் மறைத்தவாறே முன்புறம் குனிந்து அமர்ந்திருப்பார்.. பின் குழந்தை குடித்து முடித்ததும் , குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்து பின் தன் மடியில் கிடத்துவார்.. சிறு குழந்தை ஆதலால் அடிக்கொருமுறை முறை பசிக்கு அழும்போதும் தன் மனைவியிடம் குழந்தையை கொடுப்பார்.. தான் முன்புறம் குனிந்து மனைவியை மறைத்திருப்பார்..
அந்தப்பெண்ணின் முகம் தூக்கம் இல்லாததும் சேர்த்து சோர்வாக இருந்தாலும் பிள்ளைக்கு பசிக்கும்போதெல்லாம் எவ்வித சலிப்பும் இல்லாமல் குழந்தையை வாங்கிக் கொள்வதெல்லாம் பார்த்தபோது ஒரு பரிபூரண தாய் தந்தையை கண்ட திருப்தி இருந்தது.. குறிப்பாக மனைவியின் நிலை அறிந்த நல்ல கணவனை...
இதற்கு முன் என் மகன் கைக்குழந்தையாக இருந்தபோது விமானத்தில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன்.. அவனை மடியில் கிடத்திக் கொண்டே இருக்க வேண்டும், நானாகக் கொடுத்தால்தான் அவனை மடியில் வாங்கி படுக்க வைத்துக் கொள்வார்..அவனுக்கு பசிக்கும்போது எதிரில் யாராவது பார்க்கிறார்களா என அச்சத்துடனேயே அந்த சந்தர்ப்பங்களைக் கழிக்க வைத்தவாறு நிம்மதியாக சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் நினைவு வந்தது.. காரணங்களையும் , இந்தக் காட்சிகளையும் அவரை திட்டுவதற்கு ஏற்ப மனதில் அடுக்கி வைத்துக் கொண்டேன்..
இறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது , அக்குழந்தை முழித்து இருந்தது.. அதற்கு வேறு துணி உடுத்தி அந்தப்பெண் குழந்தையை தன் கணவரிடம் கொடுக்க , அவர் மடியில் நிற்க வைத்தவாறு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்.. அழகான அக்குழந்தை என்னைப் பார்த்து அடிக்கொருமுறை அழகாக சிரிக்கவும் செய்தது.. குழந்தைக்கு மை எதுவும் போடாமல் விட்டிருந்தனர்..
அந்த ஆணிடம் "குழந்தை பேர் என்னங்க " எனக் கேட்டேன். அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.. "குழந்தைக்கு நெற்றி ஓரத்துலயாவது சின்ன கருப்பு பொட்டு வைங்க" எனக்கூறினேன். சரி எனத் தலையாட்டினார்.. பின், "சாரி, என் சீட் அதுவாவே இருந்தாலும் கூட நான் இங்க உட்கார்ந்து, உங்க மனைவியை அங்க உட்கார வச்சு இருக்கறதுதான் உங்க மனைவிக்கு கன்வீனியன்ட்டா இருந்து இருக்கும்.. நான் அப்போ கேட்டதுக்கு சாரி" எனக் கேட்டுக்கொண்டேன்.. உடனே அவர் பரவாயில்லை என தலையாட்டினார்.. (உண்மையில் நான் பேசியது அவருக்கு கேட்டதா எனத்தெரியவில்லை , ஏனெனில் நான் பேசியது எனக்கே கேட்காதது போல் காது சிறிது நேரத்திற்கு அடைத்திருந்தது..)
பின் அவர்கள் குழந்தையை ஜன்னல் ஓரம் பார்க்க விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.. எனக்கு சலிப்பாக இருந்தது.. சின்ன பிள்ளையை எவ்வளவுதான் புகைப்படம் எடுப்பார்கள்..
இதே போல்தான் முந்தின நாள் டவுன் ஹால் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது.. சென்று திரும்பும்போது பேருந்தில் எனக்கு இரு புறமும் இருந்த பெண்கள் மொபைல்களுடனேயே வாழ்ந்து கொண்டு இருந்தனர்.. ஒருவர் மெல்லிய சத்தத்தில் பேசிக்கொண்டே வந்தார்.. இந்தப்பக்கம் அமர்ந்திருந்த பெண் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்.. அரை மணி நேரம் கடந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும் வரை அவர்கள் தங்கள் பக்கத்தில் உள்ளவர்களை உணரவில்லை.. அதன் பின்னும் அவர்கள் இறங்கும் வரையே தன்னை சுற்றி உயிர்களும் , சூழலும் உள்ளதை அறிய மாட்டார்கள் எனப் புரிந்தது..
"சே, என்ன பெண்கள் , இந்த மொபைல் எப்படியெல்லாம் சீரழிக்குது" என அப்போது நினைத்த நினைப்பு இங்கு குழந்தையை வைத்து அவர் புகைப்படங்களாக எடுக்குக்கொண்டிருக்கும்போது திரும்பவும் தோன்றியது...
ஏனோ, நான் இது போல அலப்பரைகள் பண்ணிக்கொண்டிருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்களும் இது போல் நினைத்து இருப்பார்களோ என்ற எண்ணம் இதை எழுதும்போது கூட பெரிய குற்ற உணர்ச்சியாகத் தோன்றவே இல்லை.. நாமும் இது போல்தானே இருந்தோம் என்று கொஞ்சம் சகித்துக் கொள்ள மட்டுமே முடிகிறது..
வயது மாற மாற எண்ணங்களும் மாறும் போல..

பணத்தைத்தேடி (வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம்)

நாங்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கு அடுத்து இருக்கிறது ஒரு சிறிய குடியிருப்பு.. ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட ஹாலோ ப்ளாக் கட்டிடம் அது ..சின்னச்சின்ன அறைகளே ஒரு வீடாக பிரிக்கப்பட்டிருப்பதை திறந்த பாதை வழியின் வழியே பார்த்தால் தெளிவாக தெரியும்.. அந்த சிமென்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மேல் பழைய தலையணைகள் சிலவும், சோபா குஷன்களும், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலியின் பகுதிகளும் சிதறிக்கிடக்கும்..
வெளிநாட்டிலிருந்து தனியே இங்கு வந்து வேலை பார்க்கும் ஆண்களை கொண்ட குடியிருப்பு அது என போகப் போக தெரிந்தது.. என் பார்வையில் பட்டவரை இந்தியர்களும் பாதியளவு இக்குடியிருப்பில் உள்ளனர்.. அவர்கள் அனைவரும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என அந்தக்குடியிருப்பின் இத்தோற்றமே காட்டிக் கொடுக்கும்..
சில நாட்களுக்கு முன் அந்த பாதையின் ஒரு பக்கத்தில் பழுதடைந்த குளிர்சாதனப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.. ஜன்னலின் வழி பார்க்க நேரும்போது இதை ஏன் இங்கு வைத்துள்ளார்கள் எனத் தோன்றியிருக்கிறது.. ஒருநாள் ஒரு இளைஞன் அதை திறந்து அதில் ஏதோ ஒன்றை வைத்து விட்டு எடுக்கும்போதுதான் , இதை வெளியில் வைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தும் அலமாரியாக பயன்படுத்துகிறார்கள் எனத் தோன்றியது.. இப்போது அது அங்கு இல்லை..
அந்த பாதையின் வெயில் படாத ஒரு மூலையில், யாராலோ பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட.கூடிய விலைக்கு சொந்தமான, அழகை பாதிக்கு மேல் இழந்து , கம்பீரத்தை மட்டும் தக்க வைத்திருக்கும் இரு நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும்..
இதுவரை சொன்னது எந்த பின்புலத்தில் அவர்கள் வசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை விவரிக்கவே..
இந்த வெள்ளிக்கிழமை அந்த நாற்காலிகளில் இருந்த இருவருக்கு அவருடன் தங்கி இருந்த இன்னொருவர் முடி வெட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்..
அன்றொரு நாள், இங்குள்ள பெரிய மாலுக்கு சென்றபோது பிள்ளைகளின் விளையாட்டுப்பகுதிக்கு செல்ல முயன்றோம்.. அப்போது அங்கு தரையை கூட்டிக் கொண்டிருந்த நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு தொழிலாளி , எங்களைக் கூப்பிட்டு (எங்களைப்பார்த்ததும் தமிழ் ஆட்கள் எனப் புரிந்ததோ என்னவோ) "இங்கு எல்லா விளையாட்டுக்கும் பணம் அதிகம், இங்க கொடுக்கற காசுக்கு பிள்ளைகளுக்கு நல்லதா சாப்பிட வாங்கிக் கொடுங்க" எனக் கூறினார்..
பிள்ளைகள் சந்தோஷமாக அங்கு விளையாடட்டும் என அங்கு கூட்டி சென்றிருந்தாலும், எங்களை விட வயதில் மூத்தவர் கூப்பிட்டு சொன்னதால் , அவர் வார்த்தைகளை நிராகரித்ததாக இருக்க வேண்டாமே என நான் " சரிங்க " என்ற வார்த்தையின் மூலமும், என் கணவரும், அவர் நண்பரும் அவருக்கு கை கொடுத்து விடை பெற்றதின் மூலமும் அவரின் வார்த்தைகளை ஏற்று விட்டோம் என சொல்லி, அங்கு செல்லாமல் திரும்பினோம்.. அவருக்கு கூப்பிட்டு சொல்லத் தோன்றியதே என அன்று முழுவதும் அவரைப் பற்றிய பெருமை எங்கள் பேச்சில் இருந்தது..
இங்கு உணவை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஆட்களிலிருந்து, ஓட்டல்களில் டேபிள் துடைக்கும் பணியாளர்கள் வரை அவர்களின் சிறு சிறு செயல்கள் மூலம் அவர்களின் "சேமித்தாக வேண்டும்" என்ற மனோநிலையை கவனித்திருக்கிறேன்... நான் கவனிக்க முடியா தூரத்தில் இன்னும் லட்சம் பேர் இருப்பார்கள் இவர்களைப் போல..
இப்படி ஏதேனும் ஒரு தேவைக்காகவோ, வாழ்க்கை வசதிக்காகவோ, குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டு, வெளிநாட்டில் தனியாக வேலைக்கு வந்து , அத்தியாவசிய செலவு கூட செய்யாமல், குறைந்த வாடகையில் பங்கு போட்டு தங்கி , தங்கள் குடும்பத்தினரின் வேறு ஏதாவது செலவுக்கு பயன்படட்டும் என சேமித்து அனுப்பும் இவர்களை போன்றவர்களுக்குத்தான் பணத்தின் மதிப்பு நன்கு தெரியும்...
ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டாலே, நிறைய வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை போல நினைத்துக் கொண்டும், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் நமக்கு ஏதும் கொண்டு வரவில்லையே என குறை கூறும், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும், காதும், வாயும் வைத்திருக்கும் உறவுகளும், நட்புகளும் அறிவார்களா,
இப்படிப்பட்ட சின்னச்சின்ன தியாகங்களும், உறவுகளற்ற தனிமையின் வலியும் சேர்ந்துதான் அவர்களின் உறவுகளை சொகுசாக வாழ வைக்கிறதென....
ஏன்,சொகுசை அனுபவிக்கும் குடும்பத்தினர்கள் கூட புரிந்து கொள்வதில்லை.. குடும்பத்தினரிடம் கஷ்டங்களை வெளிக்காட்ட இவர்களும் விரும்புவதில்லை..
இப்போது கூட நான் மேற்கூறிய சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரின் உறவோ , நட்போ இப்படி பேசிக் கொண்டிருக்கக்கூடும், "அவனுக்கென்ன , அவன் வெளிநாட்டுல இருக்கான்"......

தேடல்

தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதே மனதில் சொல்ல முடியாத பாரம்..
அந்த பாரத்தைக் கொடுத்தது சற்று முன் கனவில் வந்த சுகுணாவின் நினைவுதான்...
கனவு முடிந்து விழித்து இருந்தால் இந்த பாரம் இருந்திருக்காதோ எனத் தோன்றியது..
சுகுணா என் பள்ளி வகுப்புத் தோழி.. பள்ளியில் ஒன்றாக படித்தவர்களில் நினைவில் இருக்கும் சிலரில் ஒருத்தி.. என் கூச்ச சுபாவத்தால் பள்ளி நாட்களில் எனக்கு என்று நட்பு வட்டம் மிக குறைவு.. அந்த குறுகிய நட்பு வட்டத்தில் இவளும் ஒருத்தி..
ஆறாம் வகுப்பில் இருந்து சேர்ந்து படித்தோம்.. 8-ம் வகுப்பு வரை மட்டுமே நெருங்கிய பழக்கம் இருந்தது.. பின்வந்த இரு ஆண்டுகளும் வகுப்பில் இடம் மாறி உட்கார வைக்கப்பட்டதால் அந்த நெருக்கம் கொஞ்சம் தளர்ந்தது..
அதுவரை என் வீட்டுக்கு வரும் 3 தோழியருள் நிச்சயம் அவள் இருப்பாள்.. அவள் வீட்டுக்கும் சிலமுறை சென்றிருக்கிறேன்.. அவள் அப்பா அம்மா தங்களின் செல்லத்தை மொத்தமாக அவளுக்கே கொடுக்குமாறு வீட்டுக்கு ஒரே பெண்ணாயிருந்தாள்..
கடைசியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வாங்க சென்றபோது நேரில் பார்த்து பேசியதுதான்..
பின் சில வருடங்களுக்கு முன் மாலை நேரத்தில் உறவினர்களுடன் சாலையைக் கடந்து கொண்டிருந்த அவளை பேருந்துக்குள் இருந்து பார்க்க நேர்ந்தது.. இறங்கி சென்று பேசும் ஆசை இருந்தாலும் ,பேருந்தில் நிரம்பியிருந்த கூட்டமும், இந்த பேருந்தை விட்டால் இனி அடுத்த பேருந்துக்கு மணிக்கணக்காக காத்திருக்க வேண்டுமே என்ற நினைப்பும் என்னை இறங்க விடவில்லை..
அதற்கு முன்னமே தொடர்பில் இருந்த சில தோழிகளின் வழியாக அவள் படித்துக் கொண்டிருந்த படிப்பை அறிந்திருந்தேன்.. பின் அதே தோழி மூலமும் மற்றும் பத்தாம் வகுப்பில் அவளுக்கு நெருக்கமாகியிருந்த இன்னொரு பெண்ணின் மூலமும் அவளின் காதல் திருமணத்தையும், வேலையையும் , குழந்தையை பற்றியும் அறிந்து கொண்டேன்..
அவளின் தொலைபேசி எண்ணை கேட்டும் அவர்களிடம் இல்லாததால் பெற இயலவில்லை..
மதிய உணவு இடைவேளைகளில் சேர்ந்து சென்று வாங்கும் வேக வைத்த மரவள்ளி கிழங்கு ,உப்பு மிளகாய்த்தூள் தூவிய மாங்காய் , அவள் வீட்டிலும் பள்ளியிலும் கரைந்த சில நிமிடங்கள், பள்ளியில் பேசிய சில வார்த்தைகள் இவற்றை தவிர்த்து வேறு எதுவும் நினைவில்லை..
அவளைப் பற்றிய நினைவை அவ்வப்போது கிளறுவது அவள் தோன்றும் கனவுகள்தான்.. அத்தனை கனவிலும் பள்ளி தேர்வுகளில்தான் இருவரும் சந்தித்து உரையாடி இருப்போம்.. இது என்ன மாயமென புரியவில்லை..
கனவில் அவள் வருகின்ற நாளெல்லாம் அவளை இனி நேரில் சந்திக்க முடியாதோ என்ற எண்ணம் மனதை கலங்க வைத்து கண்களையும் கொஞ்சம் கலங்க வைக்கும்..
இத்தனைக்கும் அவளை விட என்னிடம் நெருங்கிப் பழகிய தோழிகளும் பிரிந்துதான் உள்ளனர்.. ஆனால் எங்களின் இருப்பை, நலத்தை பரஸ்பரம் தொலைபேசி மூலமாவது பேசித் தெரிந்திருந்தோம்.. சுகுணாவிடம் பேசக் கூட இயலவில்லையே என்ற நினைப்பு கூட பார்த்து பேச வேண்டும் என்ற தவிப்புக்கு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது..
சுகுணா மட்டுமல்ல ,தற்போதுள்ள நிலை எதுவுமே அறியாத இன்னும் இரண்டு மூன்று பள்ளி, கல்லூரி தோழிகளின் நினைவும் கனவுகளின் மூலம் கிளப்பிவிடப்பட்டு மனதை பரிதவிக்க வைக்கும்.. பின் இயல்பு வாழ்க்கை அந்த பரிதவிப்பை சில நிமிடங்களிலேயே நிறுத்தி வைக்கும்..
முகநூல் வந்ததற்கு பின்னர் அவளையும் , மற்ற தோழிகளையும் அதன் மூலம் தேட ஆரம்பித்தேன்..
ஆண்களென்றால் தங்கள் பெயர் அல்லது அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்திருப்பர்.. அவர்களின் அப்பாவின் பெயரை தெரிந்து வைத்திருந்தால் தேடுவது கடினமில்லை.. ஆனால் பெண்களை தேடுவதில்தான் சிரமம் உண்டு.. அதுவும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு விட்டு போன பெண்களை தேடுவது மிக சிரமம், காரணம் நமக்கு தெரியாத அவர்களின் கணவரின் பெயரை பின்னால் இணைத்திருப்பதுதான்..
இருந்தும் கடைசியாக சந்தித்த தோழி அவளின் பணியிடத்தை கூறியதை நினைவில் வைத்து தேடினேன்.. நான்காவது முறையோ, ஐந்தாவது முறையோ தேடும்போது அவள் கிட்டினாள்.. அந்த நிமிட சந்தோஷம் சொல்ல இயலும் சொல்லில் அடங்காது..
உடனே நட்பு அழைப்பை அனுப்பி , இன்பாக்ஸ்-ல் நலம் விசாரிக்கவும் செய்தேன்.. அவளும் பார்த்தவுடம் பதிலளித்தாள்.. அவளுக்கு தங்களின் புகைப்படங்கள் எதுவும் அவள் சுவற்றில் போடும் வழக்கமில்லை.. இன்பாக்ஸ்-க்கு அனுப்பினாள்.. இப்படி அவளின் குடும்பத்தையும் , என் குடும்பத்தையும் புகைப்படங்களில் பார்த்துக் கொண்டோம்.. தொலைபேசி எண்கள் பரிமாற்றப்பட்டு , தொலைபேசியிலும் பேசினோம்...
இரு நாட்கள் இருந்த அந்த குதூகல உணர்வு பின் மறைந்து போனது.. ஆரம்பத்தில் ஏதாவது பண்டிகையின் போதோ , பிறந்த நாட்களின் போதோ அனுப்பும் வாழ்த்துக்களின்போது மட்டுமே தொடர்பில் இருந்தோம்... இப்போது முகநூல் காண்பிக்கும் அவள் பிறந்தநாளில் ஒரு வாழ்த்தை போடுவதுடன் தொடர்பு ஒரு எல்லையில் நிற்கின்றது..
அவளை பார்த்ததும் நிறைய பேச வேண்டும் என தேக்கி வைத்திருந்த வார்த்தைகள் எதுவும் என்னால் வெளியிடப்படவே இல்லை.. பேச தோன்றவே இல்லை.. அந்த துடிப்பு அவளை கண்டதும் திருப்தியில் மறைந்தனவோ என்னவோ...
கனவுகளின் மூலம் என்னை பல நாட்கள் கலங்கடித்த தோழி, இன்று எல்லோரையும் போலவே என் நட்பு பட்டியலில் சாதரணமாக இருக்கிறாள்..
இப்போதெல்லாம் அவள் என் கனவில் வருவதேயில்லை..
இப்போது கனவில் எப்போதாவது தோன்றி ஏக்கத்தை கிளப்பும் இன்னொரு தோழியை தேடிக்கொண்டே இருக்கிறேன்..

திங்கள், 28 மார்ச், 2016

10

பல நேரங்களில் ரோஹித்தின் பேச்சும் , புத்தி கூர்மையும், நியாபக சக்தியும் வியப்பில் ஆழ்த்தும்..ஒரு நாள் ஏதோ அசர அடிக்கும்படி அவன் பேசியதற்கு, "இந்த வாய் எங்க இருந்து வந்ததோ" என சொல்லி சலித்துக் கொண்டேன்.. "உன்கிட்ட இருந்துதான்" என உடனடி பதில் கிடைத்தது..
அவனின் சேட்டைகள் , பள்ளியில் அவனின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன்.. சில குறும்புத்தனமான பேச்சுகளை , குறை போல என் அம்மாவிடம் சொன்னாலும் கூட என் மனதுக்குள் ஒரு குதூகலம் இருக்கும்.. "என்கிட்டே இருந்துதான் இந்த வாய் வந்ததுன்னு சொல்றான்மா" என்றதும் , "பின்ன, நீ எப்படியெல்லாம் பேசின" என சொல்லி மடக்கினார்..
ஆனால் உண்மையில் நான் இவன் அளவுக்கு புத்தி சாதுர்யத்தோடு பேசிக்கொண்டிருந்தேனா என யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவில் வரவில்லை.. சில நேரம் வாக்குவாதம் செய்து அதில் எப்படியும் வேறு யாரும் திரும்ப ஒரு வார்த்தை வைக்காதவாறு திணறடித்து இருக்கிறேன்.. "நீ வக்கீலுக்கு படி, நல்லா வருவா" என்ற வீட்டில் யாரோ சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு , வக்கீலாக ஆவது போல கனவும் கூட கண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு தெரிந்து இது எல்லாம் 10, 11 வயதுக்கு மேல்தான்..
ஒரு நாள், உள்ளே ஸ்போக்ஸ் இல்லாத சக்கரத்தின் படத்தில் 17 எண்ணிக்கையில் ஸ்போக்ஸ் போட்டு வருமாறு அவனின் வொர்க் ஷீட்டில் இருந்தது.. உடனே "ஸ்கேல் எடுத்து வா , போடலாம்" என்றேன்.. பள்ளிக்கு ஸ்கேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் அதை டேபிள் டிராயரில் வைத்து இருந்தேன்..
அவன் அங்கு செல்லால் அவனின் பேகில் இருந்து இன்னொரு பென்சிலை எடுத்தான்.. புரியவில்லை போல என நினைத்து , "டேய், ஸ்கேல் எடு" என்றேன்.. "இரும்மா", என்றவன் நோட்டை வாங்கி பென்சிலை ஸ்கேலாக பயன்படுத்தி இன்னொரு பென்சிலின் மூலம் ஸ்போக்ஸ் போட்டான்.. இது எனக்கு தோன்றாத அளவுக்கு எவ்வளவு .......யா இருக்கேன்னு தோனுச்சு...நான் எந்த அளவுக்கு சமயோசித புத்தியில கீழ இருக்கேன்னு சொல்ல இந்த இன்சிடெண்டெ போதும்..
மட்டுமல்ல , யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் சொல்லும் குறைக்கோ , கிண்டலுக்கோ இப்படி பதில் சொல்லி இருக்கலாமோ என சிறிது நேரம் கழித்துதான் சிலருக்கு தோன்றும்.. அந்த சிலரில் நானும் ஒருத்தி.. அதனாலேயும் கூட அவனின் உடனடி பதில்களில் ஆச்சரியத்தில் மூழ்கி போகிறேன்...
அன்று ஒரு நாள், முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் இளையவள் தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தராததால் என்னிடம் "அம்மா , அண்ணாகிட்ட எனக்கு தர சொல்லுங்க " என சிணுங்கினாள்.. "நீ கேட்க கூடாது தங்கம், அண்ணா குடுத்துதான் நீ சாப்பிடணுமா , நீ எடுத்து சாப்பிடு , ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரே மாதிரிதான" என அவளிடம் கூறிவிட்டு "கவரை ரெண்டு பேருக்கும் நடுவுல வச்சு சாப்பிடு" என ரோஹித்திடம் கூறினேன்..
"நோ, அவ என்னை "மங்கி அண்ணா"-ன்னு அப்பவே கூப்பிட்டா, அதுக்கு சாரி சொன்னாதான் நான் கொடுப்பேன்" என அவன் கூறிய உடனேயே நிகிதாவும் "சாரி அண்ணா" எனக் கூறினாள்..
"சாரி, சாரி ன்னு சொல்லிட்டே எடுத்து சாப்பிடு , என் காதுல சாரி கேட்டுட்டே இருக்கணும்" என அவளிடம் கூறினான்.. நான் அவனிடம் கோபமாக, "அவதான் ஒரு டைம் சாரி கேட்டுட்டா இல்ல, அப்புறமும் ஏன் சாரி சாரி ன்னு சொல்லிட்டு இருக்கணும் , நீ சாரி சொல்லாத" , என சாரி-யை சொல்லத் தொடங்கியிருந்த நிகிதாவை நிறுத்தினேன்..
உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் , "அம்மா மட்டும் அன்னைக்கு 1,2,3 சொல்லிட்டே இரு , என் காதுல நீ சொல்றது கேட்டுட்டே இருக்கணும்னு சொன்னே இல்ல, நான் மட்டும் சொல்லக்கூடாதுன்னு சொல்ற" என சொன்னதும் ஆடிப் போய் விட்டேன்..
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் நடந்தது அது.. KG 1 வகுப்பு தொடங்கி முதல் நான்கு மாதங்கள் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமிருந்தது... அதன் பின் இங்கு வரும்போது இரண்டு மாத கோடை விடுமுறை பாதி நாட்களைத் தாண்டி இருந்தது.. இருந்த ஒரு மாதத்துக்குள் 3 மாத சிலபஸ்-ஐ அவனுக்குள் ஏற்றியாக வேண்டுமே என்ற நிலை.. அதில் ஆரம்பத்தில் அவனின் மறதியை பற்றி அப்போதைய நேர பதிவில் கூட கூறி இருப்பேன்..
எனவே அவனை ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என சொல்லி அடுக்களையில் மற்ற வேலைகளில் இருப்பேன்.. இப்போது இது யோசித்து பார்த்தால் ஒழிய நினைவுக்கு வராத நிலையில் இருக்கிறது எனக்கு.. ஆனால் அவனின் நொடி தாமதிக்காத இந்த நியாப சக்தி என்னை ஆச்சரியப்படத்தான் வைத்தது..
"அது அப்படி இல்ல தங்கம்" என என் வழக்கமான சமாளிப்பு கலந்த புரிய வைக்கும் வார்த்தைகளை அவனிடம் கொட்ட தொடங்கி இருந்தேன்....
-ஷார்ஜா
  23-3-2016

9

"எலிபெண்ட் மில்க்"
----------------------------
ரோஹித்-க்கு அவன் வயதுக்கு தகுந்த உயரம் இல்லை.. வளர வளர உயரம் வந்து விடும் என்ற என் நினைப்பு அதை கவலை படும் விஷயமாக எனக்கு சுட்டியதில்லை.. ஆனால் அவனுக்கு தன் நண்பர்கள் அளவுக்கு தான் உயரம் இல்லை என்ற எண்ணம் உண்டு.. ஆதலாம் டிவியில் உயரம் வரும் என்று எந்த ஊட்டச்சத்து பானத்தை காமித்தாலும் வாங்க சொல்லி கேட்பான்..
இங்கு ஒரு மாலுக்கு சென்ற போது சிறிய கார் ஓட்டிப் பார்க்க வேண்டும் என மிகவும் ஆசைபட்டான்..ஆனால் அது ஓட்டுவதற்கு என அவர்கள் குறிப்பிட்டிருந்த உயரத்தை விட சில இன்ச் உயரம் குறைவாக இருந்ததால் இவனை அவர்கள் ஓட்ட விடவில்லை.. அதிலிருந்து ஏதாவது நல்லதை , இதை சாப்பிட்டா வளருவே என சாப்பிடக் கொடுத்தால் , சாப்பிட்டு முடித்ததும் "இனி கார் ஓட்டற அளவுக்கு நான் வளர்ந்துட்டேனா , பாரு" என உடனே தன் உயரத்தை அளக்க சொல்வான்..
அவன் போர்ன்விடா மட்டும்தான் குடிப்பான்.. அவன் தங்கைக்கு போர்ன்விட்டா (சாக்லேட் ப்ளேவர் )கொடுத்தால் ஒரு மணி நேரம் ஆனாலும், அடித்து குடிக்க வைத்தால் ஒழிய கப்பில் உள்ள போர்ன்விடாவின் அளவு குறையவே குறையாது... இதனால் இருவருக்கும் தனித்தனியாகக் கலந்து குடிக்க வைக்க வேண்டி இருந்தது..
இன்றும் வழக்கம்போல் இருவரிடமும் யாருக்கு பீடியாசுயூர் வேண்டும் எனக் கேட்டவுடன் , எனக்கு போர்ன்விட்டாதான் வேணும் என சொல்லியவாறே சமையலறையில் என்அருகில் வந்து நின்று கொண்டான்.. "ஒன்னே சாப்டுட்டு இருக்கக்கூடாது தங்கம், பீடியாசுயூர், பால், பூஸ்ட், போர்ன்விட்டான்னு மாறி மாறி குடிக்கணும், இப்ப பீடியாசுயூர் கலக்கறேன் , குடி" என்றேன்..
உடனே "இதை குடிச்சா வளருவாங்களா" என்றான் , "ஆமா தங்கம் வளருவே" என்றேன்.. உடனே , "அம்மா , எனக்கு எலிபெண்ட் பால் வாங்கி கொடும்மா , நான் வளர்வேன்" என சொன்னான்.. வந்த சிரிப்பை அடக்கியவாறே , "அதை குடிச்சா வளருவேன்னு யார் சொன்னாங்க" என கேட்டேன்..
"ம்ம்,டிவி-ல சொன்னாங்க, உனக்கு தெரியாதா , எலிபெண்ட் எவ்வளவு பெருசா இருக்கும், சோ எலிபெண்ட் பால் குடிச்சா நானும் நல்லா வளருவேன், பெனிட்டும் (வகுப்புத் தோழன்) அதுதான் குடிப்பான் , அதான் அவன் பெருசா இருக்கான், நானும் பெனிட் மாதிரி வளரனும், எனக்கு வாங்கிக் கொடு "என்றான்..
எங்க கிடைக்கும் எனக்கேட்டதும் , "லுலு(LuLu)-ல இருக்கும் , போய் வாங்கி தா" என்றான்.. "எனக்கு இருக்குமான்னு தெரியல , அப்பாகிட்ட சொல்லு, அப்பா வாங்கித் தருவார் , கிடைக்கலேன்னா , அப்பாவ எலிபெண்ட வாங்கிட்டு வந்து வீட்ல கட்டி வைக்க சொல்லு, நாம கறந்துக்கலாம்" என சொன்னதும் "சரிம்மா, ஆனா அது ரொம்ப பெருசா இருக்குமே , வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாதே" என சொல்லியவாறே யோசனையுடன் நகர்ந்தவன், அவன் அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கிறான்..

-ஷார்ஜா 
  21-3-2016


இதுதான் அந்த "எலிபெண்ட் மில்க்"காம்"
------------------------------------------------------------------------
2 நாட்களுக்கு முன் திடீரென "அம்மா, எலிபெண்ட் மில்க் ,இங்க வா இங்க வா" என ஹாலிலிருந்து கத்தினான்.. வந்து பார்ப்பதற்குள் வேறு விளம்பரம் மாறி விட்டிருந்தது.. அப்போதுதான் எலிபெண்ட் மில்க் என அவன் சொன்னது நான் நினைத்ததல்ல எனப் புரிந்தது.. "ஏன் லேட்டா வந்த" எனக் கோபப்பட்டவனை சமாதானப்படுத்தி "அடுத்தமுறை வந்தா காமி" என்றதற்கு "சுட்டி டிவியில்தான் வரும், நீ என்கூட பார்த்துட்டே இரு" என்று சொல்லி இருந்தான்..

இன்று அந்த விளம்பரம் வந்ததும் இந்த " "ப்ளூ எலிபெண்ட் மில்க்"-தான் வேணும்" என காண்பித்து நான் அறியாத எலிபெண்ட் மில்க்கின் புதிரை விடுவித்தான் ...

-ஷார்ஜா 
26-3-2016