திங்கள், 13 ஜூலை, 2015

மனிதாபிமானம்

கடந்த வாரம் ஒரு இடத்திற்கு செல்வதற்காக டாக்ஸி-யில் பயணித்தோம்.. டாக்ஸி ஓட்டுனர் ஒரு அரேபியர். சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் ஒரு காரை ஒட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் காரை ஒட்டியபடியே இவரிடம் அரேபிய மொழியில் ஒரு இடத்திற்கு வழி கேட்டார்.. இவரும் டாக்ஸி-யை ஒட்டியபடியே அவருக்கு அவ்விடத்திற்கு போகும் வழியை இரு முறை கூறினார். அவரும் நன்றி கூறி விட்டு திரும்பிக் கொண்டார். அடுத்த சிக்னலில் நாங்கள் சென்ற டாக்ஸி-யும் , அதற்கு பின்னால் அவரது காரும் நின்றன. உடனே டாக்ஸி-யில் இருந்துஇறங்கிய ஓட்டுனர் பின்னால் இருந்த காருக்கு அருகில் சென்று அவருக்கு அவ்விடத்துக்கு போகும் வழியை தெளிவாக கூறினார். பின் சிக்னல் போடும் நேரம் வேகமாக வந்து டாக்ஸி-யில் அமர்ந்து ஓட்டத் தொடங்கினார்..இச்செயலுக்கு பின் அவர் மேல் எனக்கு மரியாதை கூடியது.. அதே நேரம் என் தந்தையின் நினைவும் எட்டிப் பார்த்தது.
என் அப்பாவும் இப்படித்தான்.. எங்கள் வீட்டில் நாங்கள் இருக்கும்போது யாராவது வழி கேட்டு வந்தால் அவருக்கு அவ்வீட்டிற்கு போகும் வழியை தெளிவாக கூறி அனுப்புவார்..அவ்வீட்டை அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாது என தோன்றினால் உடனே வழி கேட்டு வந்தவரை நிற்க சொல்லி, சட்டையை போட்டுக் கொண்டு, வழி கேட்டு வந்தவர் , நானே போய்க் கொள்கிறேன் சார் எனக் கூறினாலும், இல்லை அதே எண்ணில் எக்ஸ்டென்சனிலும் வீடு உள்ளது, உங்களால் கண்டுபிடிக்க சிரமம், நான் வந்து காட்டுகிறேன் என அவரது வண்டியிலோ அல்லது அவர் நடந்து வந்திருந்தால் அவருடன் நடந்து சென்றோ வீட்டை காண்பித்து விட்டு திரும்பி வருவார்.. என் அப்பாவின் இது போன்ற பல செயல்கள் எங்களுக்கு பெருமையாக இருந்தாலும், வழி கேட்டு வந்தவர், நானே போய் கொள்கிறேன் சார் என இரு முறைக்கு மேல் கூறியும் என் அப்பா தானாக செல்லும்போது அப்பாவின் மேல் கொஞ்சம் கோபம் பிறக்கும்.. ஏனெனில் அப்பாவை, வழி கேட்டவர் தாழ்வாக எடை போட்டுவிடக் கூடாதே என்ற எண்ணம்தான் காரணம்.....அப்பா திரும்பி வந்தவுடன், அவர் மறுத்தும் நீங்கள் ஏன் கூட சென்றீர்கள் என்று அப்பாவிடம் கோபித்துக் கொள்வேன்.. ஆனால் இச்சம்பவத்துக்கு பின் அப்பாவின் மேல் எனக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு கூடிவிட்டது..சம்பத்தப்பட்டவருக்கு (வழி கேட்டு வந்தவர்களுக்கும், அப்பாவுக்கு சம்பந்தமுடைய எங்களுக்கும்) சில நேரம், இது போன்ற செயல்கள் அவசியமில்லாததாக தோன்றினாலும், மூன்றாம் மனிதர் இடத்தில் இருந்து பார்க்கும்போது மிக உயர்வானதாகவே தோன்றுகிறது...
Sorryppa, I love you Appa..

கோழைகளின் ஆயுதம்

அவள் என் சிறு வயது தோழி... வீடும் அருகருகே இருந்தது.... படிப்பும் ஒரே பள்ளியில்... எப்போதும் துரு துருவென இருப்பாள்.. துணிச்சல் நிறைந்தவள்... கூச்சம் என்பதே அவளிடம் நான் பார்த்தறியாதது.... விழாக்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதாகட்டும், பள்ளியில் ஆசிரியர்களிடம் எதிர் கேள்வி கேட்கும் துணிச்சலாகட்டும், அவளின் அம்மாவின் அலுவலகத்துக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ எங்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆணை போல எங்களை வழிநடத்தி செல்லும் அக்கறையாகட்டும், இவை அனைத்திலும் அவளின் தனித்தன்மை பளிச்சிடும்.. என் அம்மா, அவளை போல் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என எனக்கு அறிவுறுத்தும் அளவுக்கு அவளின் நடவடிக்கைகள் இருக்கும்..
ஒரு முறை அவளின் தாயின் அலுவலகத்துக்கு துணைக்கு என்னை அழைத்துக் கொண்டு போனாள்.. திரும்பி வரும் வழியில் உள்ள டெலிபோன் பூத்தில் , சென்று போன் செய்ய வேண்டும் என கூறினாள். போனில் பேசி கொண்டு இருந்தவள் திடீரென என் கையில் கொடுத்தாள். அவள் யாரிடம் பேசிக் கொண்டிருந்தால் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது.. நான் மறுத்தும், என் கையில் கொடுத்தாள்.. நான் வாங்கி பேசிய பொழுது ஒரு ஆண்குரல்.. கொஞ்சம் தயங்கி, தடுமாறி பேச ஆரம்பித்தது..நல விசாரிப்புக்கு பின் அவளிடம் கொடுத்து விட்டேன்.. அடுத்து பேசிய அவளிடம் அந்த முனையிலுருந்தவர் ஏதோ சொல்ல, நீங்க என்னை ஏமாத்திட்டீங்கன்னா என்ன செய்றது, அதான் என் ப்ரெண்ட்-கும் தெரியட்டும்னு கொடுத்து பேச சொன்னேன் என்றவள், பேசி முடித்த பிறகு தான் அவரை விரும்புவதாகவும், தன் உறவினர் வீட்டுக்கு அருகில் அவர் இருப்பதாகவும் கூறினாள்.. பின் சில மாதங்களில் நாங்கள் வேறு இடத்துக்கு குடிமாறி வந்து விட்டோம்.. எங்களிடையே தொடர்பும் விட்டு போனது.. எப்போதாவது பேருந்தில் பார்த்தால் பேசிக் கொள்வோம்.. ஒரு முறை பேருந்தில் பார்த்த போது அவள் நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமமும், புது மஞ்சள் தாலி கொடியும் அவளுக்கு சமீபத்தில் திருமணமானதை உறுதி செய்தன.. ஏற்கனவே அழகான அவள் திருமண பூரிப்பில் இன்னும் அழகாக இருந்தாள்.. பேருந்தில் அதிக கூட்டமிருந்ததால் அவளால் என்னிடம் வந்து பேச முடியவில்லை.. இறங்கும்போது சிரித்தவாறே கையசைத்து விட்டு போனாள்.
அதற்கடுத்த சில மாதங்களில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்து அதிர்ந்தேன்.... பின் ஒரு நாள் அவள் வீட்டுக்கு சென்ற போது, அவள் காதலித்தவரையே திருமணம் செய்து வைத்ததாகவும், அவள் மாமியார் திட்டி விட்டதற்காக தாய் வீட்டில் வந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்கள். நாங்கள் பழகிய நாட்களில் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அவள், மாமியாரின் வார்த்தைகளில் மனொமொடிந்து தற்கொலை செய்து கொண்டதாக அறிந்த போது என்னுள் வந்த வியப்பு இன்னும் அகலவில்லை.. ..அங்கு வாழ விருப்பம் இல்லை என்றாலும், என் வீட்டிலாவது நான் அவளை வைத்து பார்த்திருப்பேன்.. இப்படி செய்து விட்டாலே என அந்த தாய் அழுதது இன்னும் என் கண்களில் இருக்கிறது.. அவள் தன் கண்ணீர் தீர மரணத்தை தழுவிக் கொண்டு, அந்த கண்ணீரை அவள் தாய்க்கு கொடுத்து விட்டு போய் விட்டாள்....
தற்கொலை கோழைகளின் ஆயுதம் என்பார்கள்..உண்மையில் தற்கொலை செய்து கொள்ளவும் துணிவு வேண்டும்.. ஆனால் அந்த துணிவை வாழ பயன்படுத்திக் கொள்ள அந்த நேரத்தில் மறந்து விடுகின்றனர்..எவருக்கும் தம் உயிரை இழக்க விருப்பம் இருக்காது.. தற்கொலை அளவுக்கு ஒருவர் செல்வாரானால் , பிரச்சனைகளின் பளுவை தாங்க முடியாததே காரணம்...சாக வேண்டும் என முடிவு எடுக்க ஒரு நொடி போதும்..அதற்கு தயாராகும் நிமிடங்களில் மனம் மாறி முயற்சியை கைவிடுபவர்களும் உண்டு.. ஆனால் அந்த நிமிடங்களிலும் மனம் மாறாமல் , தன் மரணம்தான் பிரச்னைக்கு தீர்வு என்று முடிவெடுப்பவர்களே, இறுதியில் தன்னை மாய்த்துக் கொள்கிறார்கள்.. ஆனால் உண்மையில் அவர்களின் தற்கொலை அவர்களின் வாழ்விற்குதான் முடிவே தவிர, பிரச்சனைகளுக்கு அல்ல.. பிரச்சனைகளை மறக்க வைக்குமே தவிர, பிரச்சனைகளை முடித்து வைக்காது.... மேலும் அவர்கள் துயரை வேறு வடிவில் அவர்களை சார்ந்தவர்களின் மேல் இறக்கி வைத்து விட்டு செல்கிறார்கள்...நேற்று நாம் கண்ட துன்பம் இன்று இல்லை என்பதை மனதில் வைத்தாலே, இன்று மலை போல் தெரியும் பிரச்சனைகளுக்காக தன் வாழ்வை முடிக்க துணிய மாட்டார்கள்..
தற்கொலை எண்ணம் வருபவர்கள் "எல்லாம் கடந்து போகும்".... என்ற மந்திரத்தை நினைவில் அதிகம் சுழல விட்டாலே அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விடலாம்...
இப்போது அவள் வாழ வேண்டிய வாழ்க்கை இன்னொரு பெண்ணுக்கு போய், அவள் கணவன் தன் புது மனைவியுடனும், குழந்தையுடனும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.... அன்று சாக வேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது " இந்த துன்பமும் கடந்து போகும் என்ற எண்ணம் அவளுக்குள் வந்திருந்தால் இன்று இவ்வுலகில் ஒரு மலராக வலம் வந்திருப்பாள்..

என் முதல் பிரசவம்

ஒரு பெண்ணுக்கு பல அறிவுரைகளும், சில அச்சுறுத்தல்களும், சில தெம்பளிக்கும் வார்த்தைகளும் மாறி மாறி வழங்கப்படுவது அவர்கள் ஒரு (முதல்)கருவை தாங்குவதற்கும் , அதை இந்த பூமியில் இறக்கி வைப்பதற்குமான இடைப்பட்ட காலமாகவே இருக்கும்.. இது என் முதல் குழந்தையை சுமந்து கொண்டிருந்தபோது நான் சந்தித்த சில நிகழ்வுகள்....
கருவுண்டாகியிருக்கிறேன் என தெரிந்தவுடன் ஒரு புது பரவசம் என்னுள் பிரவாகிக்க ஆரம்பித்திருந்தது, கூடவே கருவுருதலின் முடிவான பிரசவ நிகழ்வை நினைத்து உதறலும் எடுக்க ஆரம்பித்திருந்தது... ஏனெனில் சினிமாவில் காட்டப்படும் பிரசவ காட்சிகளாலும், ஒரு பெண் தன் பிரசவ நேரத்தில் 57 டெல் (அளவு) வரை வலியை தாங்குகிறாள், இது ஒரு சேர 20 எலும்புகள் ஒன்று சேர உடையும்போது ஏற்படும் வலிக்கு சமம் என நான் படித்ததுமே காரணம்.... இது போக ஏற்கனவே பிள்ளைகளை பெற்றிருந்த சிலர் அவர்களது அனுபவங்களாக கூறியிருந்த வார்த்தைகள்.. இரு தொடைகளில் ஏற்படும் வலியும் , இடுப்பு வலியும் சேர்ந்து வாட்டி எடுக்கும் என ஒரு தோழி கூறிய அவளின் அனுபவம்… பிரசவ வலியை பற்றி எங்கேனும் படிக்க நேர்கிற போதும் என் உடலின் உள்ள சக்தி அனைத்தும் வடிந்து விடுவது போல் உணர்ந்திருக்கிறேன், அப்போது உடலில் ஒரு வித சொல்ல இயலாத உணர்வு (வெறுமை) ஆக்கிரமித்தது போல் இருக்கும்..... அது மட்டுமல்லாமல் எனக்கு சிறு வயதில் இருந்தே ஊசி போட்டுக் கொள்வதென்றால் ரொம்ப அலர்ஜி.. ஒரு முறை காய்ச்சலுக்காக ஒரு பெண் மருத்துவரிடம் சென்றபோது ஊசி போட்டால் உடனே குணமாகி விடும் என்று கூற அடம் பிடித்து மாத்திரையே கொடுங்கள் என கேட்டு வாங்கி வந்தேன்.. அப்போது அவர் என் தாயிடம், இந்த ஊசிக்கே இவ்வளவு பயப்படறா, இனி கல்யாணம் ஆகி பிரசவ வலியெல்லாம் வந்தா எப்படி பொறுத்துக்குவாளோ தெரியலையே என கூறியபோது எனக்குள் இருந்த பிரசவ வலியை பற்றிய பயம் அடர்த்தியாகி இருந்தது..
ஆயினும் இவை அனைத்தையும் விட ஒரு உயிர் என்னுள் வளர போகும் சந்தோசம் மேலாக இருந்ததால் அந்த எண்ணம்(பயம்) பிரசவ நாள் தென்படும் வரை அதிகமாக தென்படவில்லை.. அதுவும் அந்த உயிர் பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னை போலவே என் கணவரிடமும், அவர் குடும்பத்தாரிடமும் அதிகமிருந்தது.. ஏனெனில் அவர் அம்மா குடும்பத்திலும், அப்பா குடும்பத்திலும் யாருக்கும் பெண் குழந்தை இல்லை.. அவர்களுக்கு இருந்த பெண் குழந்தையும் (என் கணவரின் தங்கை) சிறு வயதிலேயே தவறி விட்டதால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்ற ஆசை அதிகமிருந்தது....
இந்நாட்களில் மற்றவர்களை போல வாந்தி, தலை சுற்றல் எல்லாம் வந்து என்னை வாட்டியதில்லை..
கரு வளர வளர என்னை சுற்றியிருப்பவர்களின் அறிவுரைகளின் எண்ணிக்கையும் , அனுபவங்களின் எண்ணிக்கையும் , என்ன குழந்தை என அவர்களின் யூகங்களின் எண்ணிக்கையும் சேர்ந்தே வளர ஆரம்பித்தன.. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பை போக்கும் விதமாகவே அவர்களின் யூகங்கள் இருந்தன..முகம் டல்லா இருக்கு, அதனால பையன்தான்.. வலது கை ஊன்றி எந்திரிக்கற, அதனால பையன்தான்... இடப்பக்கம் துடிப்பிருந்தால் பையன்தான்.., இப்படி இன்னும் பல....இப்படி சொல்லும்போதெல்லாம் சோர்ந்து போய் விடுவேன்.. ஆகையால் அதற்கு நேர்மாறாக எழும்போது கவனமுடன் இடது கையை ஊன்றி எழுந்திருப்பேன்..ஒரு முறை பக்கத்து வீட்டில் பேச போயிருக்கையில் உட்கார்ந்து விட்டு எழும் போது வலது கையை என்னை அறியாமலேயே ஊன்றி எழுந்திருக்கிறேன்.. உடனே அவர் , பையன்தான்னு சொல்ல தயங்கி (ஏனெனில் எனக்கு பெண் குழந்தை மீதுதான் விருப்பம் என அவர் அறிந்திருந்தார்..) சவி , உனக்கு என்ன குழந்தை பிறக்க போகுதுன்னு எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு சொன்னாங்க.. உடனே நான் கீழே உட்கார்ந்து விட்டு திரும்ப இடது கையை ஊன்றி எழுந்து , அக்கா இப்போ சொல்லுங்க பொண்ணுதானே அப்படின்னதும் சிரிச்சுட்டு அவங்க ஒன்னும் சொல்லல..அந்த அளவுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.. ஒரு முறை பிரதான அலுவலக வாயிலின் அருகில் சென்ற போது ஒருவர் எதிர்ப்பட்டு (என் அலுவலக நண்பருக்கு அவர்தான் பெண் பார்த்துக் கொடுக்க ஜாதகங்களை எடுத்துக் கொண்டு வருவார்.. அப்போது அவரை நான் பார்த்ததுண்டு..)உனக்கு பையன்தான், மேற்கொண்டு ஜோசியம் பார்க்கனுமான்னு கேட்டார்.. வேண்டாங்கன்னு சொல்லி கடந்து உள்ள போயிட்டேன்.. ஏதேனும் தவறாக சொன்னால், அதை எளிதாக கடந்து போகும் மனம் என்னிடம் இல்லை என்பதும் ஒரு காரணம்..அதே போல் என்னுடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் என்னை பார்த்ததும், அம்மா பையனை பெத்துட்டு நல்லா இரும்மா என சொல்லவும் ஏன் பாய், நான் பொண்ணு வேணும்னு ஆசை படறேன், நீங்க பையன் பிறக்கட்டும்னு சொல்றீங்களேன்னு சொன்னதும், சிரிச்சுட்டே உனக்கு பையன்தான் பிறக்கும் என கூறி விட்டு சென்றார்..
இப்படிப்பட்ட யூகங்களுக்கு மேலாக அறிவுரைகளும் வந்து கொண்டே இருந்தன.. காலை நீட்டித்தான் உட்காரணும், சூடா எதுவும் சாப்பிட கூடாது, ஒருக்களிச்சுதான் படுக்கணும், சுகப்பிரசவம் ஆக குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கணும், நடைபயிற்சி மேற்கொள்ளணும்... இப்படி பல.. இதுவரை என் வாழ்நாளில் அதிகமாக நடந்தது என் முதல் குழந்தையை சுமந்த போதுதான்..ஏனென்றால் அப்போது எனக்கு சைட் வொர்க்தான்..இரு சக்கர வாகனமும் ஓட்டி பழகாததால் பக்கம் பக்கம் உள்ள சைட்களுக்கு நடராஜா சர்வீஸ்தான்... வ ஊ சி பார்க் நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து வேலை நடக்கும் இடங்களுக்கு சென்ற பார்க்க நடந்தால் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் கடந்து பட்டேல் சாலையையும் கடந்து வட கோவை மேம்பாலம் வரை செல்ல வேண்டியிருக்கும்.. அதற்குள் அதற்கு இடைப்பட்ட தூரத்தில் கான்கிரீட் போட போகிறோம் என தகவல் வந்தால் திரும்ப கடந்து வந்த இடத்துக்கே செல்ல வேண்டியிருக்கும்.. அதே போல் ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டில் இறங்கினால் ஒரு நாளைக்கு 3 முறையாவது ஹவுசிங் யூனிட் முழுவதும் சுற்ற வேண்டி இருக்கும்.. இடையில் மதிய உணவு முடிப்பதற்காக ராமர் கோவிலின் அருகிலுள்ள ஆரம்ப பள்ளிக்கு செல்வேன்.. ரேஸ்கோர்ஸ் என்றால் அங்கு இருக்கும் ஒரு வீட்டுக்கு செல்வேன்..இதனால் அப்பள்ளியின் வாட்ச் மேன் தாத்தா முதல் மற்ற ஊழியர்கள் , அப்பள்ளியின் ஆசிரியர்கள், சில குழந்தைகள், ரேஸ்கோர்சில் ஒரு குடும்பம் என நல்ல பரிச்சயமான பழக்கம் கிடைத்தது.. குழந்தை பிறந்த பிறகு அவர்களை சென்று ஒரு முறை பார்த்து விட்டு வர வேண்டும் என எண்ணி இருந்தேன்.. ஆனால் என்னை சுற்றி பல பணிகளும், கடமைகளும் இருந்ததால் இதுவரை நடக்கவில்லை.. ட்ராக் மாறுது இல்லையா? சரி விஷயத்துக்கு வர்றேன்..இதுவே எனக்கு மிகப்பெரிய நடை பயிற்சியாகவும் இருந்தது.. 8 மாதங்கள் வரை இது தொடரவும் செய்தது..
ஒவ்வொரு வார முடிவிலும், கருவின் வாரத்தை ஒப்பிட்டு இணையத்தில் தேடி, கரு வளர்ச்சியினை பார்த்து சந்தோஷப்படுவேன்.. பிரசவத்திற்கு அவர்கள் குறித்து கொடுத்த தேதியை கணக்கில் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பேன்..
நல்ல இசை குழந்தைக்கு நல்லது என கேள்வி பட்டதிலிருந்து பேருந்து பயணங்களின் போதும் , இரவு உறங்க ஆரம்பிக்கும் பொழுதும் MP 3 பிளேயர் என் வசமானது...அதிலும் பெரும்பாலாக கிருஷ்ண கானம் மட்டுமே அதில் இசைத்துக் கொண்டிருந்தது.. கணவரின் சொல்லுக்கிணங்க என் அறை முழுவதும் குழந்தை படங்கள் வாங்கி மாட்டிக் கொண்டேன்.. காலையில் கண் விழிக்கும்போது ஒவ்வொரு குழந்தையின் (!!!!) முகத்தில் விழித்துக் கொள்வேன்..
ஆரம்பத்தில் ரசித்த குழந்தையின் அசைவுகள் சில தினங்களில் தூங்குவதற்கு கூட சிரமம் கொடுக்க, அது ஒரு அசவுகரியம் போல் உணர ஆரம்பித்தேன்.. ஆனால் ஒரு நாள் எந்த அசைவையும் உணராததால் பயந்து போன போது, என் தந்தை இதற்காக தனியாகவும் கடவுளிடம் நேர்ந்து கொண்ட சம்பவமும் நடந்தது..
எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த கிளைமாக்ஸ் நாளும் வந்தது.. மருத்துவர் கொடுத்திருந்த தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக செக்-அப் செய்வதற்காக மருத்துவமனை சென்றோம்.. வீட்டிலிருந்து செல்ல குறைந்தது அரை மணி நேரம் ஆகும்.. டிராபிக்-காக இருந்தால் கூடுதல் நேரம் எடுக்கும்.. அதற்கு முன்பு இன்னொரு விஷயத்தை சொல்ல வேண்டி இருக்கிறது..
முதலில் நான் கருத்தரித்த போது ஒரு மருத்துவரிடம் காண்பிக்க ஆரம்பித்து இருந்தோம்.. நல்ல சிகிச்சை, தேவையான அறிவுரை அனைத்தையும் சிறப்பாக கொடுத்தார்.. ஆனால் எங்களுக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்பிருந்தும், அனாவசியமாக அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுத்ததாகவும், எல்லோருக்கும் அவ்வாறே செய்வதாகவும் கூறியதால் (இது உண்மையல்ல என்பதனை பின்புதான் தெரிந்து கொண்டோம்..) நாங்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தபோது (இன்னும் இருவரும் இதே கருத்து கூறி இருந்ததால்)பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்னொரு மருத்துவமனையை கூறி அங்கு நடந்த 5, 6 பிரசவங்களை கூறி (அதில் ஒன்று மட்டுமே அறுவை சிகிச்சை) தேவை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்வார்கள் என கூறி அங்கு போக தூண்டினார்கள்..(இந்நிலை பெரும்பாலானவர்களுக்கு நடந்திருக்கும் என நினைக்கிறேன்..நாம் ஒன்று தேர்வு செய்தால் அதில் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்க கூடாது என பாடம் கிடைத்ததும் அப்போதுதான்..)என் அலுவலகத்துக்கும் மிக அருகில் என்பதால் பரிசோதனைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் என எண்ணி நான்கு மாதங்களுக்கு பிறகு அங்கு சிகிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.... ஆனால் அங்கு செல்வது என் தந்தைக்கு பிடிக்கவில்லை.. காரணம் அவர் நண்பரின் மருமகளை அங்கு அனுமதித்திருந்த போது பிரசவ நேரத்தில் கொஞ்சம் சிக்கல் இருந்ததாகவும், கடைசி நேரத்தில் ஸ்கானிங் மிஷின் அங்கு இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னதாகவும், அங்கு போய் பரிசோதித்து பார்த்த போது குழந்தை இறந்திருந்தது தெரிந்ததாகவும் கூறினார்...(அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு வரை குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என இந்த மருத்துவமனை மருத்துவர் கூறி இருந்தாராம்..) ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க அங்கு கருவிகள் இல்லை என கூறி மறுத்தார்.. எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கே (எனக்கு கடைசியில் பிரசவம் ஆன மருத்துவமனை) செல்லலாம் என கூறினார்.. ஆனால் அதற்குள் நாங்கள் அங்கு சிகிச்சை எடுக்க ஆரம்பித்து இரு வாரங்கள் ஆகி இருந்தது.. அதற்குள் இரு மருத்துவர்களிடம் காண்பித்தாகி விட்டது.. இனி மாற்ற வேண்டாம் (ஏனெனில் ஒரு மருத்துவமனைக்கு புதிதாக செல்லும்போது ஆரம்பத்தில் இருந்து எல்லா பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும் என்ற அலுப்பும் ஒரு காரணம்..) என நினைத்து அங்கே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தோம்..
மருத்துவர் கொடுத்திருந்த தேதிக்கு(9) 3 நாட்கள் முன்னதாக பரிசோதனைக்கு சென்றிருந்தோம்.. டிராபிக்கில் மாட்டிக் கொண்டதால் அங்கு செல்லும்போது பனிரெண்டே கால் மணி ஆகி விட்டது…. 10-லிருந்து பனிரெண்டு வரைதான் வெளிப்புற நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்களாம்..பின்பு மாலை நான்கு மணிக்குதான் திரும்ப பார்வை நேரம்.. இது அந்த நாளில்தான் எங்களுக்கே தெரிந்தது..ஏனெனில் முதலில் நாங்கள் செக் அப் செல்லும்போது 10 மணிக்கு வர சொல்லி இருக்கிறார்கள்.. இது வரைதான் பார்வை நேரம் என சொல்லியது இல்லை.. அது போல் அங்கு எந்த அறிவிப்பு பலகையும் வைத்ததில்லை.. நாங்களும் 10 மணி என்ற போது பத்தரைக்குள் அதுவரை சென்றிருக்கிறோம்..ஆனால் அன்று கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறோம் என கூறி, மறுத்தவர் அங்கு இருந்தும் , டோக்கன் கொடுக்கும் பெண் எங்களை மருத்துவரை பார்க்க அனுமதிக்கவில்லை.. குறித்த நாளுக்கு மூன்று நாட்கள்தான் இருக்கின்றன, இனி எப்போது வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என கூறியும், மறுத்தவர் , அன்று மாலை நான்கு மணிக்கு திரும்ப பார்வை நேரம், அப்போது வாருங்கள் , இல்லை எனில் 8-ம் தேதி (கடந்த முறை பரிசோதனைக்கு போன போது மருத்தவர் 8-ம் தேதி அட்மிட் ஆகி விடுங்கள், அதற்கு முன் 6-ம் தேதி பரிசோதனைக்கு வந்து விடுங்கள் என கூறி இருந்தார்.. அதையும் அந்த பெண்ணிடம் கூறி இருந்தோம்..) இங்கு வந்து அட்மிட் ஆகி விடுங்கள் என கூறினார்.. ஆனால் அன்று காலையில் இருந்தே எனக்கு நடப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்ததாலும், திரும்ப வெயிலில் வீட்டுக்கு சென்று வருவது (இப்போது தூரம் எனக்கு கடினமாக தெரிந்தது)கடினம் என எடுத்துக் கூறியும் எங்களை மருத்துவரை காண அனுமதிக்கவில்லை.. இதனால் என் தந்தை மிக கடுப்பில் இருந்தார்.
என்னை வீட்டில் விட்டு விட்டு , அவர் கூறி இருந்த எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள மருத்துவ மனையில் கடைசி நேரம் ஏற்றுக்கொள்வார்களா என விசாரித்து வருவதற்கு என் பெற்றோர் சென்றனர்.. வீட்டில் இருந்த போது , நடக்க மிகவும் சிரமப்படும் நிலைக்கு வந்துவிட்டேன்.. என் உடலில் சில மாறுதல்களையும் உணர்ந்தேன்.. அந்த நேரம் என் அம்மா எனக்கு போன் செய்து 6 மணிக்கு பரிசோதனைக்கு வர சொல்லி இருக்காங்க, உனக்கு அப்போ வந்தா போதுமா, இப்ப முடியலேன்னா இப்பவே வண்டி கூட்டிட்டு வரவா என கேட்டார்கள்.. வலி எதுவும் இல்லாததால் 6 மணிக்கே போகலாம் என கூறினேன்.. என் அப்பாவுக்கு வேறு வேலை இருந்ததால் 6 மணிக்கு வண்டி கூட்டிட்டு வர்றேன் என என் அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.. அப்போதே மணி 4 ஆகி இருந்தது.. நேரம் ஆக ஆக எனக்கு உள்மனது ஏதோ சொல்ல, நேரா போய் அட்மிட் ஆகிடுவோம், இனி என்னால் அலைய முடியாது என என் அம்மாவிடம் கூறினேன்.. உடனே என் அம்மாவும் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.. வெளிநாட்டில் இருந்த என் கணவரிடமும், ஊரில் இருந்த என் மாமியாரிடமும் அட்மிட் ஆக போவதை போனில் சொல்லும்போதே ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. பயப்படாதே என என் கணவர் கூறிய வார்த்தையோடும், சுக பிரசவம் மூலம் குழந்தை பிறந்தாதான் பெண்ண்களுக்கு நல்லது, அறுவை சிகிச்சை-னா பின்னாடி கொஞ்சம் பிரச்சனைகள் தொடர்ந்துட்டே இருக்கும்.. அதனால சுக பிரசவம் ஆகணும்னு கடவுளை வேண்டிக்கோ, வலி வந்துதுன்னா மூச்சை கீழே இறக்கி விடு, அப்போதான் குழந்தை சீக்கிரம் வெளிய வரும், ஒரு நாள் வலி பொறுத்துட்டா ஆயுசு வரை நல்லா இருக்கலாம் என என் மாமியார் கூறிய வார்த்தைகளோடும் கிளம்புவதற்கு தயாரானேன்.. 6 மணி நெருங்கும் வேளையில் அடி வயிற்றில் சுருக்கி பிடித்தது போல் வலி..சில நொடிகள் மட்டுமே.. என் அம்மாவிடம் கூறியபோது உடனே சீரக தண்ணீர் தயார் செய்ய சென்றார்கள்.. அது தயாராகி கொண்டிருக்கும் போது அடுத்த வலி.. பொய் வலி என்றால் சீரக தண்ணீர் குடித்தால் நிற்கும் என கூறுவார்கள்..ஆனால் எனக்கு அதன் பின்னும் ஒரு வலி.. இந்த வேளையில் வண்டியை கூட்டி கொண்டு வருகிறேன் என சென்ற அப்பாவுக்கு . அந்த நேரம் டாக்ஸி கிடைக்காததால், செக்-அப் தானே என்று கிடைத்த ஆட்டோவுடன் வந்து நின்றார்கள்.. எனக்கு வலி என்றதும் அப்பா பயந்து விட்டார்.. அம்மாவும் பயமாக இருக்கிறதென்று பக்கத்து வீட்டிலுள்ளவரை துணைக்கு அழைத்தார்..
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்திருந்த நேரம் , அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஆட்டோவை சூழ்ந்து தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..ஆட்டோ கிளம்புவதற்கு முன் ஒரு வலி.. கண்ணீர் கோர்த்துக் கொண்டு நின்றதை பார்த்த பின் வீட்டில் உள்ள ஒரு அக்கா, பிரசவத்தை நினச்சு பயந்துட்டா போல என கூறிக் கொண்டு இருந்தார்.. அவர்களுக்கு வலி ஆரம்பித்து இருக்கிறதென தெரியாது.. ஏன், நானே அது பிரசவ வலி என அறியவில்லை.. 5 நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்று விடலாம்.. ஆட்டோவில் செல்லும்போது ஒரு முறை வலி.. வலி ஏற்படும்போது கெட்டியாக பிடித்துக் கொண்ட பக்கத்து வீட்டு அக்காவின் கைதான் மருத்துவமனை பிரசவ அறைக்குள் செல்லும் வரை வலி பொறுத்துக் கொள்ள கை கொடுத்தது..ஆட்டோ விட்டு இறங்கியதும் ஒரு முறை வலி.. வழக்கமாக அந்த தொலைவுக்கு மற்ற ஆட்டோக்காரர்கள் கேட்பது ரூபாய் 40 மட்டுமே.. ஆனால் இந்த ஆட்டோக்காரர் 85 ரூபாய் கேட்ட போது, பிரசவத்துக்க ஆட்டோ இலவசம் என்ற வரிதான் என் நினைவுக்கு வந்தது.. சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.. என் நிலை இப்படி இருந்ததால் என் தாயும் எதுவும் சொல்லாமல் கொடுத்து அனுப்பினார்..
மருத்துவமனை வராண்டாவில் உள்ள இருக்கையில் என்னை அமர்த்தி விட்டு ரிசெப்சனில் என் விவரங்களை கூறி கொண்டு இருந்தார் என் அம்மா.... டாக்டரிடம் அனுப்புகிறோம் காத்திருங்கள் என கூறினார்.. ஆனால் அப்போது என் முகத்தில் தெரிந்த வலியின் ரேகையால், என்னை கடந்து சென்ற நர்ஸ் ஒருவர் உடனே என்னை அறைக்கு அழைத்து பிரசவ அறைக்குள் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை செய்தார்.. பிரசவ அறையில் நுழைந்ததும் உடனே மருத்துவரும் வந்து விட்டார்..அப்போது வலியின் இடைவெளி மிகவும் குறுக ஆரம்பித்து இருந்தது.. குழந்தையின் நிலையை அறிய மருத்துவர் பரிசோதனை செய்யும்போது, உடனே என்னம்மா இது , முதல்லையே வந்து இருக்கணும் இல்லையா என கூறினார்.. உடனே பயந்து போன நான் என்ன டாக்டர் என கேட்கவும், என்னிடம் கூறினால் பயப்பட்டுவிடுவேன் என கருதி வெளியில் நின்ற என் தாயிடம் , இது பிரசவ வலிதான்.. ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பேதி போய் விட்டது, (Meconium Stained Baby) வலி இருப்பதால் முடிந்த அளவு நார்மல் டெலிவரி பண்ண பார்க்கிறோம்.. ஆனால் ரொம்ப நேரம் பொறுத்தால் இது சிக்கலாகும் என கூறி விட, என் தாய்க்கு ஏற்கனவே இருந்த பயமும், பதட்டமும் அதிகரித்து இருக்கிறது.. இங்கு நான் பொறுக்க முடியாத வலியில் கத்திக் கொண்டிருந்தேன்.. வலி வரும்போதெல்லாம் என் அத்தை கூறியது போல் மூச்சை கீழே விட்டுக் கொண்டிருந்தேன்.. கத்தினால் குழந்தை வெளி வருவதில் சிக்கல் இருக்கும் என டாக்டர் அடிக்கடி கூறவே கட்டுப்படுத்த பார்த்தேன்.. ஆனால் முடியவில்லை.. ஆபரேசன் செய்ய சொல்லலாமா என அக்கணம் சிந்தித்தேன்.. ஆனால் நான் ஒரு வேளை அப்படி சொல்லியது என் அத்தைக்கு தெரிந்தால் பின்னால் ஏதேனும் ஒரு அசவுகரியம் எனும் போது, அவர்கள் குறை கூற ஒரு வாய்ப்பாகி விடுமோ என அஞ்சினேன்.. (ஏனெனில் என் அம்மா எப்படியும் அதை மாமியாரிடம் கூறி விடுவார்கள், எந்த விஷயத்தை மறைப்பது என்று அவருக்கு தெரியாது frown emoticon .....) ஒரு மணி நேரம் போல ஆனதும் அம்மாவை உள்ளே அனுப்பினார்கள்.. எப்படியாவது நார்மல் டெலிவரிக்கு முயற்சி பண்ணுங்க டாக்டர் என கேட்டுக் கொண்டிருந்தார்..அம்மாவை பார்த்தது தெரியும்.. கொஞ்சம் வலி விட்ட நொடி.. அடுத்த வலிக்கு அழும்போது அம்மா அங்கு இல்லை.. என் பல்ஸ் லெவலும் சீராக இல்லை.. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பொறுத்துப்பார்த்த மருத்துவர் பல்ஸ் லெவல் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாகி விட்டது..
அறுவை சிகிச்சையின் போது குழந்தை வெளியே எடுக்கப்பட்டவுடன் அது ஆண் குழந்தை என, மருத்துவர் அதன் எடை, பிறந்த நேரம் இதை குறிக்க சொல்லும்போது தெரிந்து ரொம்ப சோர்ந்து போனேன்.. பெண் குழந்தை வேண்டுமென எதிர்பார்த்த எனக்கு இது ஒரு ஏமாற்றம்தான்.. (கடவுள் அருளால்அடுத்து பெண் குழந்தை கிடைத்தது வேறு விஷயம்..) பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் என் பெற்றோரிடம் காண்பித்து இருக்கிறார்கள்..அவன் தாடை வரை பேதி பரவி இருந்தது என என் பெற்றோர் கூறுவர்... கடைசி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு சென்றதால் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் திரும்பி வந்தோம் என இன்றளவும் என் பெற்றோர் கூறிக் கொண்டு இருப்பர்..
(வயிற்றில் இருக்கும்போது கிருஷ்ண கானத்தை அதிகமாக கேட்டுக் கொண்டிருந்ததால் என்னவோ , இவனும் அதே அஷ்டமி திதியில் பிறந்தான்.. குறும்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை..)
இந்த பிரசவத்தின் மூலம் நான் அறிந்து கொண்டது இரண்டு... ஒன்று இப்போது எந்த நிறை மாத கர்ப்பிணியை பார்த்தாலும் அவர்களின் வயிறின் அமைப்பை வைத்தே என்ன குழந்தை என துல்லியமாக கூற முடியும்..
மற்றொன்று முக்கியமானது..அதாவது பிரசவ வலி இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என சிலர் வரையறுத்து சொல்வதெல்லாம் பொய்..... ஏனெனில் பிரசவத்தின் போது நாம் அனுபவிக்கும் வலி அதன் பிறகு நினைவில் இருந்தும் மறந்து போய் விடுகிறது.. அப்போது நடந்த சம்பவங்கள் வேண்டுமானால் நம் நினைவில் இருக்கலாம், ஆனால் வலி நம் நினைவில் இருக்காது..பிரசவ வலி கஷ்டம்தான்.. ஆனால் பொறுத்துக் கொள்ள கூடியதுதான்.............................
உண்மையில் இது, பயம் கொள்ளாமல், பதட்டம் இல்லாமல் ஆரோக்கிய உணவையும், அழகிய சூழலையும் அமைத்து புது உயிரை வரவேற்க சந்தோஷமாக காத்திருக்க வேண்டிய காலகட்டம் ...
இப்படியாக என் முதல் குழந்தையை கருவறையில் சுமந்து கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வந்தது……

குழந்தை தொழிலாளர்

கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை...
மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்த நேரம்.... பார்வைக்கு 8 அல்லது 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கேட்டை தட்டி . எங்கள் வரவுக்காக காத்திருந்தான்.. அம்மாவும், அப்பாவும் எனக்கு முன்னே வெளியில் சென்றனர்.. வீட்டுக்கு முன் வளர்ந்திருந்த வேண்டாத புல்லையும், செடிகளையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமா என கேட்டான்.. "நீ ரொம்ப சின்ன பையனா இருக்கியேப்பா, உன்னால் இதை சுத்தம் செய்ய முடியுமா" என அம்மா கேட்டதும், செய்ய முடியும் அக்கா என அவன் கூறினான்.. உடனே அப்பாவும் "இதன் மூலம் அவனுக்கு ஒரு வருமானமும் கிடைக்கும்" என கூறினார்.. ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கியா என அம்மா கேட்க 9-ம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை தினங்களில் மட்டும் இப்படி வெளியில் வேலை தேடி வருவதாகவும் கூறவே , சரி முன்பக்கம் மட்டும் சுத்தம் செய்தால் போதும் , வீட்டுக்கு தென்புறம் உள்ள பகுதியில் மிகுதியாக வளர்ந்திருந்த புதர்களை சுத்தம் செய்ய வேண்டாம் என அம்மா கூறினார்.. அவன் வேலை செய்ய தொடங்கினான்...
.
முழு நேர குழந்தை தொழிலாளர்களை எதிர்க்கும் மனம் படித்துக் கொண்டிருக்கும் பகுதி நேர குழந்தை தொழிலாளிகளை எதிர்க்க முன் வருவதில்லை...
இடை இடையே அவனிடம் தம்பி வேலை செய்ய முடியுதா என நான் கேட்க , சிரித்தவாறு முடியுதுக்கா, இதுல ஒன்னும் இல்லை என சொல்லியவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்..
15 நிமிடங்களுக்குள் வேலையை முடித்து விட்டு வந்து நின்றவனுக்கு அம்மா டீ போட்டு வைத்து வீட்டினுள் கூப்பிட, வீட்டினுள் வர சங்கோஜப்பட்டு நின்றவனை அப்பாவும் அழைக்க உள்ளே வந்தான்.. சேரில் உட்காரவும் கூச்சப்பட்டு நின்றவனை உட்காருப்பா என இரு முறை சொன்னதும் உட்கார்ந்து டீ குடிக்க ஆரம்பித்தான்.. அம்மா சமையலை கவனிக்க உள்ளே செல்ல, அப்பாவும் வெளியில் வேலையில் இருக்க அவனிடம் பேச்சு கொடுத்து அவன் குடும்ப நிலையை கேட்க தொடங்கினேன்...
அவன் வீட்டுக்கு ஐந்தாவது பிள்ளை என்றும் அவனுக்கு மேல் இரு அக்காக்கள், இரு அண்ணன்கள் மற்றும் ஒரு ஒரு தம்பி உள்ளதாகவும் கூறினான்..
அப்பா முன்பு கட்டிட வேலையில் மேஸ்திரியாக இருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட விபத்தில் காலில் பட்ட காயத்தால் பக்கத்தில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினான்.. மேலும்
அவனின் அம்மாவும் வீட்டு வேலைக்கும் , அண்ணன்களும், ஒரு அக்காவும் கம்பெனியில் வேலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினான்.. ஒரு அக்காவுக்கு திருமணம் முடிந்து விட்டதாம்..
தம்பி 6-வது படிப்பதாகவும், 8-வது வரை உடுமலைபேட்டையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி இருவரும் படித்ததாகவும், எட்டாவது வரைதான் அங்கு உள்ளதால் இவன் மட்டும் இங்கு ஆரம்பத்தில் படிக்க வந்ததாகவும் கூறினான்..பின்னர் இவனின் தம்பி மட்டும் அங்கே இருப்பதை அம்மா விரும்பாததால் அவனும் இங்கு உள்ள பள்ளியில் படிப்பதாகவும் கூறினான்..
பள்ளி விடுமுறை தினங்களில் இருவரும் வேறு சில சிறுவர்களுடன் ஒன்றாக வந்து, வேலை தேடுவதற்காக ஒவ்வொரு திசையில் செல்வதாகவும் கூறினான்.. இப்போது தம்பி அடுத்த தெருவுக்கு சென்றுள்ளதாக கூறினான்...
இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே இவனை தேடி இவன் தம்பியும் வந்து கேட் பக்கம் நின்றிருந்தான்.. உள்ளே அழைத்ததும், வந்தவன் சோபாவில் அமர சொன்னதும் பரவா இல்லைங்க என மறுதலித்து, பிறகு வற்புறுத்தல் காரணமாக சோபா இருக்கையில் முன்புறம் தள்ளி ஒரு நெளிதலோடு அமர்ந்தான்.. அம்மா அவனிடம் டீ சாப்பிடறியா என கேட்க, இல்லக்கா வேண்டாம் என கூறினான்..
நாங்கள் பேசுவதை ஏற்கனவே உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அம்மா, பெரியவனிடம் நன்றாக படிப்பாயா என கேட்கவும், நான்தான் முதல் ரேங்க் என கூறினான்.. உடனே சிறியவனும் நானும் முதல் ராங்க்தான், உடுமலை-ல படிக்கிற வரைதான் 2-வது ராங் எடுத்துட்டு இருந்தேன் என குதூகலத்துடன் கூறினான்..
வசதி வாய்ப்பு இருந்தும் படிப்பதற்கு சோம்பல் படும் பல பிள்ளைகளுக்கு (நானும் படிக்கும்போது அப்படிதான் இருந்தேன்) மத்தியில் இவர்களை பார்க்கும்போது ஒரு வித சந்தோசமும், ஏக்கமும் கலந்த உணர்ச்சி வெளியானது...
பிறகு இருவரும் கிளபுவதற்கு தயாராக, அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சமையல் முடுஞ்சுடும், சாப்பிட்டுட்டு போங்க என கூறவே, இல்லை, அம்மா சமைச்சு வச்சு காத்துட்டு இருப்பாங்க என கூறினர்..
இனி இந்த பக்கம் வரும்போது வீட்டுக்கு வாங்கப்பா என அம்மா கூறியதும் சந்தோசமாக தலையசைத்து எங்கள் ஒவ்வொருவரிடமும் கிளம்புகிறோம் என சொல்லி விட்டு கிளம்பினர்...
இரண்டு மூன்று முறை பேருந்து வேறு இடங்களிலும் 20 வயதுற்குள்ளான பையன்கள் வந்து , அக்கா எப்படி இருக்கீங்க, என்னை அடையாளம் தெரியுதா என கேட்டுள்ளனர்.. நலத்தை சொல்லிவிட்டு அவர்கள் யார் என்று நியாபகத்தில் இல்லை என கூறி இருக்கிறேன்.. நாங்க மலை-ல இருக்கோம்.. என சின்ன வயசுல உங்க வீட்டுக்கு கொய்யாக்கா பறிக்க வருவோம் என கூறி நியாபகத்தில் வைத்து என்னிடம் வந்து பேசி இருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு அது சுத்தமாக நினைவில் இருந்தது இல்லை.. ஆனாலும் அவர்கள் வந்து பேசும்போது மனம் மிக சந்தோஷத்தில் இருக்கும்.. பின் அப்பா, அம்மாவை பற்றி விசாரித்து விட்டுப் சென்றிருக்கிறார்கள்.
நம் வாழ்வின் சில கட்டங்களில் கடந்து போகும் சிலரை கடந்த காலத்தை போலவே பின்னோக்கி அனுப்பி விடுகிறோம்.. அதன் பின் அவர்கள் நம் நினைவிலும் இருப்பதில்லை.. சில சமயம் அவர்கள் தொடர்புடைய சம்பவங்களும் நம் நினைவில் இருப்பதில்லை.. ஆனால் அப்படிப்பட்ட சிலர் நம்மை நினைவில் நிறுத்தி வைத்திருப்பது ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும்..
அதுபோலவே இனி வருகிறேன் என கூறி சென்ற இச்சிறுவர்களை நினைக்கும்போதும் எனக்கு அதுதான் தோன்றியது.. இனி நான் இங்கு இருக்கும் நாட்களிலும் திரும்ப வரலாம் அல்லது நான் சென்றதும் இங்கு வரலாம், இல்லையெனில் இனி வீட்டுக்கு வராமல் கூட இருக்கலாம்.. ஒரு வேளை மற்ற சிறுவர்களை போல் வெளியில் எங்கேனும் என்னை பார்த்து , வந்து பேசலாம்.. அப்போது காலங்கள் அவர்களுக்கு கொடுத்த உருவ வளர்ச்சியில் நான் அவர்களை அடையாளம் காணுவது கடினமாக கூட இருக்கலாம்.. ஆனால் அவர்களை பற்றி நான் சேகரித்து வைத்துள்ள நினைவுகள் அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டதுமே வெளிப்படும்.....

ஏமாற்று உலகம்

நாகர்கோவில் செல்வதற்காக பேருந்து ஏற கோவை ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கு சென்றிருந்தேன் .. பேருந்து பயணத்தின் போது அருந்துவதற்கு மாசா (Maaza )வாங்க குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு அருகே இருந்த ஒரு சிறிய கடைக்கு சென்று 50 ரூபாய் கொடுத்து அக்குளிர்பானத்தையும், அவர் மீதி கொடுத்த 10 ரூபாவையும் பெறுக் கொண்டு பேருந்து ஏறினேன் ... இருக்கையில் அமர்ந்தவுடன் ஏதோ நியாபகம் வந்தவளாக அக்குளிர்பானத்தின் விலையை பார்த்தபோது 35 ரூபாய் என்றிருந்தது .. ஏனெனில் எப்போது வெளியூர் செல்வதாக இருந்தாலும் இதை வாங்கி செல்லும் பழக்கமிருந்தது.. 5 ரூபாய்தானே என்று விட மனமில்லை... 100 ரூபாயை எங்கேனும் தவறவிட்டால் கூட சில நொடி பதட்டம்தானிருக்கும் .. ஆனால் ஒரு ரூபாய் கூட ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்தால் அந்த சம்பவம் நம் நினைவுள்ளவரை நம்முடன் தொடர்ந்து வந்து இம்சிக்கும் ....
எனவே உடனே பேருந்திலிருந்து இறங்கி சென்று அக்கடைகாரரிடம் விலைக்கு அதிகமாக காசு எடுத்துக்கொண்டதாக கேட்டதும் , மறுபேச்சில்லாமல் 5 ரூபாயை சிரித்தவாறு திரும்ப தந்தார் .. உருவத்தை கொண்டு ஒருவரது குணத்தை மதிப்பிடக் கூடாது என நான் திரும்பவும் இவ்விஷயத்தில் கற்றுக்கொண்டேன்... ஏனெனில் அந்த அளவுக்கு ஒரு குழந்தை முகம் கொண்டவராக இருந்தார்...
பின் அடுத்த ஒரு மாதத்தில் திரும்ப நாகர்கோவில் செல்ல நேர்ந்தபோது அதே கடையில் 100 ரூபாயை கொடுத்து அக்குளிர்பானம் கேட்டபோது அதையும் , மீதம் 60 ரூபாயும் கொடுத்தார். ஒருவேளை சுரிதாரில் சென்றதால் என்னை அடையாளம் தெரியவில்லையோ என்னவோ ... நான் இது 35 ரூபாய்தானே என்றதும் 5 ரூபாயை கொடுத்தார்.
இம்முறை ஆரம்பத்திலேயே என் பணத்தை பெற்றுக் கொண்ட திருப்தியில் பேருந்து ஏறினேன்... ஆனால் அத்திருப்தி மறுநாள் மதியம் வரைதான் இருந்தது...
மறுநாள் வேலை விஷயமாக கருங்கல் வரை செல்ல வேண்டி இருந்ததால் , அண்ணன் மகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினேன்... பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க தேவையான பணத்தை பர்சிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.. உடனே என் அண்ணன் மகள் உள்ளே இருந்த ஒரு 10 ரூபாய் தாளை சுட்டிக்காட்டி, இது செல்லுமா? காந்தி இருந்த நோட்டு மட்டும்தானே செல்லும் என கூற நான் குழப்பமடைந்தேன் .. அந்த நோட்டு முந்தின நாள் அந்த கடையில் இருந்து பெற்றது.. வீட்டுக்கு வந்தவுடன் என் அண்ணனிடம் கேட்டபோது இது பழைய நோட்டு, இப்போது செல்லாது, வேண்டுமானால் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என கூறினார் .. இதற்காக மெனக்கெட்டு வங்கிக்கு செல்ல வேண்டுமா என விட்டு விட்டேன்... ஆக இரு முறைக்கு 5 ரூபாயாக 10 ரூபாயை ஏமாறாமல் விட்டு விட்டேன் என்ற என் எண்ணம் தவிடு பொடியானது.
இதேபோல் வெட்டுவென்னியில் உள்ள சர்ச்சுக்கு செல்லும்போது தெருமுனையில் 45 ரூபாய்க்கு 3 மெழுகுவர்த்தி பாக்கெட்கள் வாங்கினோம். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அட்டைக்கும் மெழுகுவர்த்திக்கும் சம்மந்தம் இல்லாதது போல் சிறியதாகவும், 5 மெழுகுவர்த்திகள் மட்டுமே ஒரு பாக்கெட்டில் இருந்தன.. அட்டையில் 6 எண்ணிக்கை என போட்டிருந்தது. அட்டையை பிரித்து சிறிய மெழுகுவர்த்திகளை வைத்திருப்பது அப்பட்டமாக தெரிந்தது.திரும்பும்போது கேட்கவேண்டும் என பேசிக்கொண்டோம். ஆனால் அக்கடையில் வேறு ஒரு பெண்மணிதான் இருந்தார். அதனால் பேசாமல் வந்துவிட்டோம்.
ஒருமுறை பட்டணத்தில் ஒரு கடையில் ஆப்பிள் வாங்கி சென்றோம். வீட்டுக்கு சென்று பொட்டலத்தை பிரித்தபோது, நாங்கள் எடுத்துகொடுத்த பழங்கள் இல்லாமல் முக்கால்வாசி அழுகிய பழங்கள் இருந்தன. உடனே திரும்ப சென்று கேட்டபோது பொட்டலம் மாறிவிட்டது எனக்கூறி திரும்ப நல்ல ஆப்பிள்களை எடுத்து பொட்டலம் கட்டித் தந்தார்.
இப்படி நான் இம்முறை அங்கு பார்த்த சில சிறுவியாபாரிகள் ஏமாற்றி பணம் ஈட்டும் எண்ணம் கொண்டே இருந்தனர். ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை பற்றிய குற்றவுணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை.... எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய அளவுக்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் மாறி இருக்கிறார்கள்....

நிறம்

நான் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துகொண்டிருந்த சமயம்.. சுதந்திரதினம் அன்று பள்ளிகளுக்கு இடையேயான குழு நடனத்துக்காக எங்கள் பள்ளியும் கலந்து கொள்வதாக இருந்தது..
ஒரு நாள் காலை வழிபாடு முடிந்ததும், எங்கள் பள்ளி தமையாசிரியை பிளஸ் ஒன் மாணவிகளை மட்டும் உட்கார வைத்து விட்டு பிளஸ் டூ மாணவிகளை வகுப்பறைகளுக்கு போக சொல்லி உத்தரவிட்டார்..(பிளஸ் டூ மாணவிகளை அரசு தேர்வு என்பதால் இதில் வாய்ப்பளிக்கவில்லை..) எங்களை மைதானத்தில் உட்கார வைத்து விட்டு அதில் சிவப்பாக இருந்த மாணவிகளை மட்டும் நடனப் போட்டிக்காக தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தார்...அப்போது, நான் எல்லாம் கருப்புதான, என்னை எங்க கூப்பிட போறாங்க என்று என் அருகில் உட்கார்ந்திருந்த தோழி சொன்ன வார்த்தை இன்னும் என் நினைவில் உள்ளது.. சிவப்பான மாணவிகளை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவர்களை வகுப்புகளுக்கு அனுப்பி விட்டார்.... எவ்விஷயத்திலும் பாகுபாடு பார்க்க கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்து கொண்டது இன்னும் என் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது..( அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நடனம் நன்கு தெரிந்த இரு மாணவிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.. அதில் நடனம் நன்கு வராதவர்கள் ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டார்கள்.. தினமும் குறிப்பிட்ட நேரம் மற்றவர்களுக்கு வெயிலில் பயிற்சி அளிக்கப்பட்டதால் சுதந்திர தினத்தன்று அந்த மாணவிகளும் நன்றாக நிறம் குறைந்தே காணப்பட்டார்கள் என்பது கொசுறு செய்தி)

அமானுஷ்யம்- 5

படித்து கொண்டிருக்கும்போது திடீரென என் பின்னால் யாரோ ஜன்னலை கடந்து போவதை போல் இருந்ததால் திடீரென திரும்பி பார்த்தேன்..அதை எப்படி விவரிப்பது என தெரியவில்லை.. சினிமாவில் பேய் படங்களில் பின் பக்கம் பேய் நின்று கொண்டிருக்கும், ஆனால் திரும்பி பார்த்தால் எதுவும் இருக்காதல்லவா, அதே போல்தான்..யாரோ ஒரு உருவம் அழுத்தமாக என்னை கடந்து போவதை போல் உணர்ந்து திரும்பி பார்த்தேன்.. வெறும் இருட்டு மை போல இருந்ததைதான் பார்த்தேன்.. என் கணவரோ அல்லது அவரது சகோதரரோ அந்த பக்கம் வந்திருப்பாரோ என எண்ணி , கட்டிலுக்கு பின் புறம் உள்ள சிறிய இடத்தில் (ஜன்னல் பக்கத்தில் இருந்து யார் பார்த்தாலும் தெரியாத வண்ணம் ) அமர்ந்து புத்தகத்தை வாசிப்பதை தொடர்ந்தேன்..ஏனெனில் அப்போது இரவில் தூங்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் என் கணவருக்கு பிடிக்காது,அதனால்தான்.. கீழே உட்கார்ந்து கொண்டு படித்து கொண்டிருந்தேன்..அபோது ஒரு புதிய கர கரவென்ற சத்தம் கேட்டது.. முதலில் நான் அதை சரியாக கவனிக்கவில்லை.. சிறுது நேரம் கழித்து அந்த சத்தத்தை உணர்ந்தேன்.. திரும்ப அந்த ஒலி வந்தவுடன், என் கணவர் என்னை பயப்படுத்த விளையாடுகிறார் என நினைத்து அதை அலட்சியம் செய்தேன். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அந்த சத்தம் கேட்டதால் மின் விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் அது எழுப்பும் ஒலி என நினைத்து திரும்ப வாசிப்பை தொடர்ந்தேன்.. ஆனால் அந்த ஒலி சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தது.. அது மின்விசிறியின் சத்தம் இல்லை என தெளிவு படுத்திக் கொண்ட பின் மெல்ல பயம் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.. அந்த சத்தம் கேட்கும் நேரங்களுக்கு உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.. முழுவதுமாக பயம் என்னை பற்றிக் கொள்ள உடனே ஜன்னலை பார்க்கவும் பயந்து கதவை திறந்து சிட்-அவுட்-ல் படுத்துக் கொண்டிருந்த என் கணவரை தேடி ஓடி, அவரை எழுப்பினேன்.. உடனே அவர் வந்து ஜன்னல் பக்கம் பார்த்து கொஞ்சம் சத்தமாக திட்டி விட்டு ஜன்னல் கதவை படாரென சாத்திக் கொண்டார்.. அதன் பிறகு சத்தம் கேட்கவில்லை..பிறகு எல்லாவற்றையும் கேட்ட பின் இப்படி சத்தம் கேட்டு பயந்த நிறைய பேருக்கு காய்ச்சலே வந்திருக்கிறது என சொன்னார் என் கணவர்.. அதன் பின் வந்த இரவுகளில் என் குறுகுறுப்பு புத்தி காரணமாக ஜன்னலை லேசாக திறந்து வைத்து திரும்ப பரீட்சித்து பார்க்க ஆரம்பித்து சிறிது நொடிகளிலேயே , பழைய அனுபவத்தால் பயந்து போய் மூடி இருக்கிறேன்.. 

இச்சம்பவத்தின் ஆரம்பத்தில் யாரோ பின்னால் கடந்து போனதை போல் உணரும்போதும், அந்த சத்தம் கேட்க தொடங்கும்போதும் ஆவி, பேய் என்ற எண்ணமெல்லாம் என் மனதில் துளியும் இல்லை.. 

இதில் இருந்து கண்டிப்பாக மறைந்த சில ஆன்மாக்கள் இவ்வுலகத்தில் உலவுகின்றன என்பதை தெளிவு படுத்திக் கொண்டேன்.. (ஆவியா வந்து பழி வாங்குமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது..ஏனெனில் பழி எல்லாம் வாங்காது என சொல்லமாட்டேன்..எதுவும் அனுபவத்தில் தெரியாத போது தெரியாது என சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்....

இதில் உங்களில் பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.. ஆனால் எதுவும் அனுபவத்தில் வரும்போது குழப்பம், எதிர்வாதம் எல்லாம் நீங்கி போகும்..

(ரொம்ப த்ரில்லிங் ஆன சம்பவங்கள் எல்லாம் இருக்கும் என இந்த பதிவை எழுத சொன்ன நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.. ஆனால் உண்மையில் நடந்ததை எழுதியதால் த்ரில்லிங் உங்களுக்கு கம்மிதான்.. சரி, போட்டோ மூலமாவது சின்னதா பயப்படுத்தலாம்னு பார்த்தா, பயப்படுத்தறதை போல,ஆனால் இந்த பதிவுக்கு பொருத்தமான ஒரு போட்டோவும் அமையல, என்னத்த செய்ய......!!!!!)


இத்துடன் இப்பதிவு முற்றும்....

அமானுஷ்யம்- 4

அதிகாலை 4.45 மணி.. அலாரம் என்னை சரியாக எழுப்பியது... கதவு தள்ளப்படும் சத்தத்தை கேட்க படபடப்புடன் காத்திருந்தேன்....

அந்த நேரத்தில் கடிகார முட்கள் நகரும் ஓசை மட்டும் தொடர்ந்து என் பயத்துடன் பயணம் செய்து வந்தது.. அடிக்கடி அலை பேசியை எடுத்து மணி சரிபார்த்து கொண்டிருந்தேன்..மணி 5 ஆகி விட்டது.. கதவு தள்ளப்படும் சத்தம் கேட்கவில்லை.. 5.30, 6.00 அப்படியே மெல்ல கண்ணயர்ந்தும் விட்டேன்.. திடீரென என் நினைவு பழைய கதவு தள்ளப்படும் ஓசைக்காக காத்திருந்ததை நினைவு படுத்த எழுந்தேன்.. நன்கு விடிந்திருந்தது.. காலையில் முதலில் பின்புறம் உள்ள கதவின் வழியாக வெளியே வருவதுதான் என் தாயின் வழக்கம்..வெளியில் வீடு கூட்டிக் கொண்டிருந்த அவர்களிடம் சொல்ல போனேன்.. அப்போது முன் வாசல் கதவை எதேச்சையாக பார்த்தால் அதன் தாழ்ப்பாளில் அருவாள் தொங்க விடப்பட்டிருந்தது..எங்கள் ஊரில் இரவில் வெளியில் செல்பவர்கள் கையில் இரும்பு எடுத்து செல்வர்.. அதனால் இப்படி கதவு தட்டப்படும் சத்தமும் தொடர்ந்து கேட்டதால் என் தந்தை இப்படி செய்திருக்கிறார் என அறிந்தேன்.. ஆனால் அவரிடம் அடுத்த வாரம் வைத்திருக்கலாம், நான் கடந்த ஒரு வாரமாக அந்த சத்தத்தை கேட்க காத்திருந்தேன் என கூறி சிறிய சண்டையும் போட்டு ஏத்து வாங்கியது தனி கதை..

இந்த சம்பவத்து பின்னும் ஆவி இருக்கிறதா , இல்லையா என விளங்காத நிலையிதான் இருந்தேன்.. ஆவி , பேய் ஆகியவைகள் உள்ளன , இல்லை என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த என்னை, ஒன்றை முழுவதுமாக நம்ப வைக்கும் (நான் ஏற்கனவே கூறிய அந்த நாள்) நாளும் வந்தது...

நான் என் கணவர் வீட்டில் இருந்த நேரம்..என் மகனுக்கு 7 மாதங்கள்.. அப்போது மின் வெட்டு அதிகமாக இருந்த நேரம்..(இடையில் மின்வெட்டு நேரம் குறைந்து இருந்தது.. அதை வைத்து இப்படி சொல்கிறேன்).. இரவு 11 மணிக்கு கரண்ட் போனது..அதுவரை அவரின் சகோதரர்கள், அவர், நான் எல்லோரும் டிவி பார்த்து கொண்டிருந்தோம்.. என் கணவர் அறையில் படுத்தால் புழுக்கம் தாங்காது என சிட்-அவுட்-ல் படுத்துக் கொள்ள கிளம்பினார்.... அவர் கிளம்பியவுடன் நான் ஜன்னலை நன்கு திறந்து வைத்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.. ஜன்னல் இருக்கும் பக்கம்தான் தலை வைப்போம்..அவர் இருக்கும்போது இரவு நேரங்கள் ஜன்னலை திறக்க விட மாட்டார். அந்த பக்கம் வாழை மரங்கள் நட்டு இருந்தோம்.. என் கணவர் வீட்டுக்கு எதிரே இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் இருந்தது.. என் தாய் வழி பாட்டி, தாத்தா எல்லோரையும் மற்றும் அவர்கள் குடும்பத்தாரையும் அங்குதான் அடக்கம் செய்து இருக்கின்றனர்.. அவர் வீட்டின் பின்புறம் அவரின் மாமா, அத்தை (தூரத்து உறவு) இருவரும் சமீபமாக இறந்திருந்தனர்..அந்த அத்தை தற்கொலை செய்து கொண்டார் என கூறுவார்கள்..அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அந்த வீடு காலியாக இருக்கும்.. அந்த வீட்டுக்கு பின்புறம் பெரிய பாறைகள்தான்.. என் கணவர் வீட்டுக்கு அருகில் நெருங்க வீடுகள் இல்லை.. 
12 மணி வரை தூக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்தேன்.. 12 மணிக்கு கரண்ட் வந்தது..ஆனால் ஜன்னல் சாத்த விரும்பவில்லை.. ஏனெனில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் திரும்ப கரண்ட் போகும்.. அப்போது நன்றாக தூங்கி கொண்டிருந்தால் புழுக்கம் தாங்காது எழும்ப வேண்டுமே என்ற நினைப்புதான்.. ஆனால் தூக்கமும் வரவில்லை.. என் மகனும் சிணுங்கி கொண்டிருந்ததால் அவனை மடியில் போட்டுக் கொண்டு புத்தகம் படித்து கொண்டிருந்தேன்.. சில நிமிடங்கள் கடந்த பின் என் பின்னால் யாரோ போவது போல் (ஜன்னலை கடந்து) நான் உணரவே திடீரென திரும்பி பார்த்தேன்.. பார்த்ததும் திடீரென அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து இறங்கினேன்...

மர்மம் தொடரும்....

அமானுஷ்யம்- 3

ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் (கோவையில்) நடந்த சம்பவம்...
அது ஒரு வெள்ளிக்கிழமை... என் அப்பா ஊருக்கு சென்று இருந்தார்.. என் தம்பி உள்அறையில் படுத்திருந்தான்.. நானும், என் அம்மாவும் என் மகனுடன் ஹாலில் படுத்திருந்தோம்.. அதிகாலை 5 மணி இருக்கும்...
விழிப்பு வந்ததும் சும்மா கண்ணயர்ந்து படுத்திருந்தேன்... அப்போது கதவின் தாழ்ப்பாளை பிடித்து யாரோ கதவை வேகமாக தள்ளுவது போன்ற சத்தம்.. உடனே என் அம்மாவும் திடுக்கிட்டு எழுந்தார்.. நான் என் அம்மாவிடம் மெதுவாக, அம்மா இப்ப சத்தம் கேட்டீங்களா என்றேன்.. அவரும் ஆம் என்று கதவை திறக்க செல்ல, உடனே நான் மறுத்து , படுத்திருந்த என் தம்பியை எழுப்பினேன்.... யாரோ கதவை இப்போ தள்ளினாங்கடா என்று.. உடனே அவன் கதவை திறக்க செல்ல, நான் மறுத்து திருடர்கள் வந்திருக்கலாம், ஒருவேளை அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கலாம், நீ இப்போ வெளியில் செல்லாதே என்று தடுத்து நிறுத்தினேன்.. .அவனோ உடனே ஒரு அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு என் பேச்சையும் மீறி கதவை திறந்தான்.. அங்கு யாரும் இல்லை.. சிட்-அவுட் கேட்-உம் தாழ்ப்பாள் போட்டே இருந்தது..அவன் எல்லா இடமும் பார்த்து விட்டு, மாடிக்கும் சென்று பார்த்து விட்டு வந்தான்.. யாரும் இல்லை.. வேலைக்கு சென்றிருந்த என் இன்னொரு சகோதரன் வரவும் இரு மணி நேரம் இருந்தது.. ஊருக்கு சென்றிருந்த என் அப்பாவும் முந்தின நாள் இரவு 9 மணிக்குதான் அங்கிருந்து கிளம்பினார்.. இந்த நேரத்துக்குள் இங்கு வர முடியாது..கதவை தள்ளியது யார் என்ற யோசனையுடன் வீட்டில் வந்து படுத்து கொண்டோம்..
பின் இரு மணி நேரம் கழித்து வேலை விட்டு வந்த என் இன்னொரு சகோதரனிடம் சொன்னோம்.. அவனும் தான் இப்போதுதான் வருவதாக கூறினான்..
பின் என் தந்தை ஊரிலிருந்து 10 மணியளவில் வீட்டுக்கு வந்தார்..... யாரோ வந்து இன்று காலை கதவை தட்டினார்கள் என்று அவரிடம் கூறினேன்.. உடனே அவர் கதவின் பின் பக்கம் போய் கதவை சாத்தி கதவை தள்ளுவது போல் செய்து காட்டினார், இப்படிதானே என்று.. எனக்கு ஆச்சரியம்.. நான் என் அப்பாவிடம் கதவை தட்டினார்கள் என்றுதான் கூறினேன்.. ஆனால் அவரோ கதவை தள்ளியதை சரியாக சொல்கிறாரே என்று.. உடனே அவர் சொன்னார், நான்கைந்து வாரங்களாக வெள்ளி கிழமைகளில் இப்படி 5, 5.30 மணியளவில் யாரோ கதவை தள்ளுவதும், வெளியில் போய் பார்த்தால் யாரும் இருப்பதில்லை என்றும் கூறினார்.. உடனே வேலைக்கு சென்றிருந்த என் சகோதரனும், தன்னிடம் அப்பா இது பற்றி ஏற்கனவே சொல்லியிருப்பதாக ஆமோதித்தான்.. எனக்கு திரும்ப இதை பரீட்சித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது.. அடுத்த வெள்ளி கிழமைக்காக காத்திருந்தேன்..
வெள்ளிக் கிழமை இரவே 4..45-க்கு அலாரம் வைத்துக் கொண்டு ஹாலிலேயே உறங்கினேன்..
அதிகாலை 4.45 மணி.. அலாரம் என்னை சரியாக எழுப்பியது... கதவு தள்ளப்படும் சத்தத்தை கேட்க படபடப்புடன் காத்திருந்தேன்....

அமானுஷ்யம்- 2

என் அனுபவத்திற்கு முன் இந்த பகுதியில் என் தந்தையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்... 

என் தந்தையின் சிறுவயதில், அவரும் , அவர் நண்பரும் அக்கானி (பதனி) வாங்க சென்று நீண்ட நேரமாக திரும்பி வராத அவர் அண்ணனை (என் பெரியப்பா) தேடி மாலை 6.45 மணி அளவில் சென்றுள்ளனர்.. அது குறுக்கு வழி.. மழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது...கொஞ்சம் தள்ளி தள்ளி மரங்கள் உள்ள பகுதி.. அப்போது ஒரு பனை மரத்தின் கீழ் ஒருவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை , வெள்ளை தலை பாகை அணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார்.. கொஞ்சம் இருட்டிய நேரமாதலால் முகம் சரியாக தெரியவில்லை.. என் அப்பாவுடன் வந்த நண்பர் யார் என்று டார்ச் அடித்து பார்க்கலாமா என்று கேட்க, என் அப்பாவோ, வயதில் பெரியவரை போல் தெரிகிறார், அதனால் நாம் டார்ச் அடித்து பார்ப்பது அநாகரீகம் என்று மறுத்திருக்கிறார்.. அவர்கள் அந்த ஆள் நின்ற பனை மரத்தை கடந்து இரு அடி வைப்பதற்கு உள்ளாக, என் அப்பாவின் அண்ணன் வருவது தெரிய அங்கேயே நின்று பின்னால் திரும்பியிருக்கிரார்கள்.. அந்த ஆள் அங்கு இல்லை..அவர் உண்மையில் மனிதராக இருந்திருந்தால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தால் கூட கண்ணுக்கு தென் பட்டிருப்பார்..
பின் என் அப்பா, அவரின் நண்பர் , அவரின் அண்ணன் மூவரும் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர்..வீட்டின் பின் வாசல் வழியாக வீட்டிற்குள் வந்து, வீட்டின் முன் முற்றத்தில் பேசி கொண்டு இருக்கும்போது , பின் வாசல் முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு மூன்று முறை மரண குரல் எழுப்பியிருக்கிறது.. பாட்டியும் , இவர்களும் சென்று பார்த்த பொழுது, குட்டி ஈன நிறைய நாட்கள் இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அந்த ஆடு நான்கைந்து ஆட்டு குட்டிகளை ஈன்று விட்டு இறந்திருந்தது.. அந்த ஆட்டு குட்டிகளும் இறந்தே பிறந்திருந்தன..

மர்மம் என்று நினைப்பவர்களுக்கு மர்மம் தொடரும்..
கதை என்று நினைப்பவர்களுக்கு கதை தொடரும்......

அமானுஷ்யம்- 1

எல்லோரும் வாழ்நாள்-ல ஒரு தடவையாவது ஆவிகள், பேய்கள் பற்றி சொல்லப்பட்டதை கேட்டு இருப்பீங்க..நானும் ஸ்கூல்-ல படிக்கிற காலங்கள்ல பேய் கதைகளை பத்தி நிறைய கேட்டு இருக்கேன்.. இன்னென்ன காரணங்களினால் பேய் பிடிக்கும் அப்படீன்னு சொல்லப்பட்ட காரணங்களும் பல..மஞ்சள் பூசி, மல்லிகைப்பூ வச்சுட்டு போனா பேய் புடுச்சுடும்.. அதுவும் மதியம் 1 மணி வாக்குல தனியா வெளிய போனா ஆவிகளும் நம்மை பின் தொடர்ந்து வரும் இப்படீன்னு அந்த காரணங்களை அடுக்கிட்டே போகலாம்.. அதனால தேர்வுகளினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மதியம் பள்ளி விடும் சமயங்களில் நானும் , என்னுடன் வரும் சில தோழிகளும் மிக வேகமாக ஒரு குறிப்பிட்ட காலியிடத்தை (இன்று நிறைய கட்டிடங்கள் அதை ஆக்கிரமித்து உள்ளன..) கடக்க ஓடும் ஓட்டம் குடியிருப்புகள் நிறைந்த இடத்திற்கு வந்தவுடன்தான் நிற்கும்.. சில சமயங்களில் தனியே அவ்விடத்தை கடக்கும் நிலை வரும்போது யாரோ பின்னால் வருவது போன்ற பிரம்மையும் என்னுடனே சேர்ந்து வரும்.. அந்த இடத்தை கடந்து வரும்வரை மனதுக்குள் அடிக்கும் படபடப்புக்கும் குறைவிருக்காது.. அந்த பேய் பிடிக்காமல் இருக்க கையில் கருப்பு வளையலோ அல்லது கருப்பு கயிறோ கட்டிக்கிட்டா அது நெருங்க பயப்படும் என்ற தகவலும் எங்களின் மேல் திணிக்கப்பட்டு இருந்தது..
அப்புறம் யாராவது இறந்தவர் உடலை கொண்டு செல்லும் காட்சியை பார்த்தாலோ, அல்லது யாராவது இறந்ததை பற்றி கேள்வி பட்டாலோ அந்த நினைவுகளின் அலைக்கழிப்பு அந்த நாள் முழுவதும் இருக்கும்.. எங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டதாக பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அறிவித்து , அந்த மாணவிக்காக மௌன அஞ்சலியும் செலுத்த வைத்து , பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள்... உடனே வீட்டுக்கு சென்ற நான், தனியாக வீட்டில் இருக்க பயப்பட்டு, மாலை என் சகோதரர் வரும் வரை வீட்டு வாசலிலேயே கதவை கூட திறக்காமல் உட்கார்ந்திருந்தேன்.. என் சகோதரர் வந்ததும் அவனை முன் விட்டு கதவை திறந்த பின்தான் உள்ளே சென்றேன்.. ஆனால் டிவி-களில் பேய் சம்பத்தப்பட்ட காட்சிகளையோ, சினிமாவையோ பார்க்க பயம் வருவதே இல்லை (ஒருவரை துணைக்கு இருக்க வைத்துதான்)....
கொஞ்சம் வளர வளர இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று மற்றவர்களின் சொல் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறிக்கொண்டு வரும்பொழுது, எங்கள் ஊரில் (நாகர்கோவில்) ஆவி அடித்து சிலர் இறந்ததாகவும், ஒருவருக்கு பேச்சு நின்று போனதாகவும் உள்ள செய்திகளும் என்னை வந்தடைய தவறவில்லை.. என் தந்தையும் அவர் பார்த்த ஆவிகளின் கதையையும், என் தாய் மாமன் மகன், என் கணவரின் வீட்டில் மாடியில் இருக்கும்போது பார்த்த ஆவியின் காட்சியையும் சொல்லும் போது அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மெல்ல துளிர் விடவும் ஆரம்பித்தது. அப்படி அவர்கள் கூறும் கதையை கேட்கும் ஆர்வம் ஆவலாகவும் மாறியது... இப்படி ஆவி , பேய் ஆகியவைகள் உள்ளன , இல்லை என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த என்னை, ஒன்றை முழுவதுமாக நம்ப வைக்கும் நாளும் வந்தது...