திங்கள், 28 டிசம்பர், 2015

பசங்க 2 (ஹைக்கூ)

பசங்க 2 - படம் நல்லா இருக்கு, பாருங்க என் சில நண்பர்கள் கூறி இருந்தனர்.. குழந்தைகள் படம்தானே , டிவி-யில் போடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம், "வந்த இரு படங்களில், இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, போய் பார்ப்போம்" என்ற கணவரின் சொல்லில் காணாமல் போயிருந்தது..

தமிழ் நாடனின்(சூர்யா) சிறு வயது அறிமுகத்திற்கு பின் , இரு குழந்தைகள்  கருவாக  உருவாவதிலிருந்து அக்குழந்தைகளை, அவர்களின் குடும்பம், சூழ்நிலையை சுற்றி  படம் நகர்த்தப்படுகிறது.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் கடைசியில் வரும் காட்சிகளும்  கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்...

பின் அந்த இரு குழந்தைகளின் சேட்டைகள் ஆரம்பிக்கும்பொழுது என் பிள்ளைகள் முன் இருக்கையை பிடித்து நின்றுகொண்டு ஆர்வமாக படம் பார்க்க துவங்கி விட்டனர்.. அதுவும் நயனா  சொல்லும் கதையில் வரும்  ஸ்பைடர் மேன், டோரா வந்த பிறகு , தன்   ஆதர்ச கதாபாத்திரங்கள் பெரிய திரையிலும் வந்த மகிழ்ச்சியை  பின்புறம் என்னை பார்த்து சிரித்து பகிர்ந்து கொண்டான் மகன்..

அதீத திறமையுள்ள   இரு  குழந்தைகள் இப்போதுள்ள கல்விமுறைக்கும், பள்ளி முறைக்கும் இணங்க முடியாமல் செய்யும் சேட்டைகளும் , அதனால் அவர்கள் பெறும் தண்டனைகளும், பெற்றோர்களின் திணறலும்  என காட்சிகள் ரசிக்கவே வைக்கின்றன..  விருந்தினர்கள் முன் தம்  பிள்ளைகளின் திறமையை வெளிச்சம் போட்டு காண்பிக்க துடிக்கும் இன்றைய பெற்றோர்களின்  எண்ணத்தையும் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் பிள்ளைகளின் சேட்டைகளை சகிக்க முடியாமல் , அவர்களை விடுதியில் சேர்க்கும் காட்சியின்போது என்னை அறியாமலேயே கண்கள் துளிர்த்தது..

சூர்யா-அமலாபால் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும், தித்திப்பையும், ஏதோ ஒரு ஏக்கத்தையும் கொடுத்து விட்டுப் போகிறது..

வசனங்களை கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.. படம் வருவதற்கு முன்னரே பரிச்சயமாகி விட்ட இப்படத்தின், "குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க , கேட்ட  வார்த்தையைத்தான் பேசுவாங்க" என்ற வசனமும் சரி, "மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” என்பது போன்ற பல வசனங்களும் படத்துக்கு கூடுதல் பிளஸ்.. அதிலும் "ஒரு 70 கிலோ உருவம் ஒரு 17 கிலோ உருவத்த போட்டு அடிக்கிறது எவ்வளவு பெரிய வன்முறை இல்ல" என்ற வசனம் ஒரு குற்ற உணர்ச்சியை என்னிலிருந்து கிளப்பி விட்டது..

கடைசியில் பிள்ளைகள் மேடையில் தங்கள் திறமையை காட்டி விட்டு வந்ததும், அவர்களை வெளியில் அழைத்து வந்து , உங்களுக்குத்தான் பரிசு கிடைச்சு இருக்கு.. உங்கள் பரிசுகளை ஜட்ஜ்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன் என சூர்யா சொல்வதும், மற்ற பிள்ளைகளும் நல்லா பண்ணினாங்க , உங்களுக்கு கிடைச்சு அவங்களுக்கு கிடைக்கலன்னா அவங்க மனசும், அவங்க பெற்றோர் மனசும்  கஷ்டப்படும் இல்லையா அதுதான் என சமாதாம் கூறுவதும்தான்    கொஞ்சம் என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை..

பரிசு என்பதே அவர்களின் மற்றும் மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் என்றிருக்கும்போது, அதை மறைமுகமாக பெற்றுக்கொள்ளலாம் என்று காட்டி இருப்பதை விட, தோல்வியையும் சுலபமாக எடுத்து , வெற்றியை நோக்கி மீண்டும் முன்னேற உத்வேகம் காட்டுவது போலான காட்சிகளை இணைத்திருந்தால், இந்த நல்ல படத்தில் இதுவும் ஒரு கருத்தாக இருந்திருக்கும்..

எனினும் மொத்தமாக பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளனர்...  படம் முடிந்து வெளியில் வரும்போது , ஒரு படம் பார்த்த திருப்தியை விட , ஒரு  பாடம் படித்த திருப்திதான் எழுந்தது..

எந்த படமாக இருந்தாலும் பார்த்து விட்டு வெளியில் வரும்போது , பிள்ளைகளிடம் "படம் பிடிச்சு இருந்துதா" என கேட்பது வழக்கம்.. இந்த முறை மகனாகவே முன்வந்து , "படம் நல்லா இருக்கும்மா" எனக் கூறினான்..

"உனக்கு அதுல யாரை பிடித்தது"எனக் கேட்டேன், "டாக்டர்" என கூறினான்....

பிரிவு

நேசித்தலும் 
நேசிக்கப்படுதலும் 
சாகாவரம் 
பெற்றவை அல்ல....

உள்ளப்பிணைப்பு
உடைபடும்போது
நேசித்த தடயங்கள்
கூட மறைந்து போகின்றன....

மிஞ்சி நிற்பது
முன் நடந்த
இறுதி யுத்தத்தின்
காட்சிகள் மட்டுமே.....

புதன், 23 டிசம்பர், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (11)


  1. முன்பிருந்ததை விட வாழ்க்கை(நிலை)யில் சரிந்தவர்களும், சரிந்ததாக நினைத்துக்  
        கொண்டிருப்பவர்களும் பழைய தொலைந்த நட்புகளை தேடுவதில்லை..
  2. அன்பை விதைத்தால் அன்பேதான் முளைக்கும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் தவறு. பெரும்பாலும் துரோகமும், அலட்சியமும், அவமதிப்புமே முளை விடுகின்றன...
    இதற்கு தீர்வு....
    தகுந்த இடம் பார்த்து அன்பை விதைக்கும் தெளிவு வேண்டும்
    அல்லது
    முளைப்பது எதுவாக இருந்தாலும் அதை அன்பாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும்.
  3. வாய்ப்புகளை சூழ்நிலைகளுக்காக தவிர்த்து விடாதீர்கள். விட்டால், பின் வாய்ப்புக்கான சூழ்நிலைக்காக காக்க வேண்டி இருக்கும்.
  4. நிராகரிப்பு என்பது மிகுந்த வலி கொண்டது. அதுவும் காரணமறியா நிராகரிப்பு என்பது வலியோடு அவஸ்தையும் கூடியது....
  5. (பல)செயல்களை பொறுத்தவரை வாழ்க்கையும் ஒரு வட்டம்தான். வாழ்க்கை நம்மை எப்படி தள்ளிக்கொண்டு போனாலும் திரும்ப அதே செயல்களில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. என்ன, இப்போது அந்த செயல்கள் வேறு ஒருவரால் செய்யப்பட்டிருக்கும், அவ்வளவுதான்........
  6. நேர்மையானவர்கள் யாரிடமும் விலை போவதில்லை.. துரதிர்ஷ்டம், நேர்மையும் இங்கு எங்கும் விலை போவதில்லை...
  7. வலியை விட கொடியது அந்நேரம் உடனிருப்பவர்கள் அதை அலட்சியம் செய்வது
  8. ஒரு பாராட்டிலோ அல்லது வெற்றியிலோ திருப்தியடைந்து விட்டால், அதுதான் கடைசி பாராட்டாகவோ, வெற்றியாகவோ இருக்கும்...
  9. சுயம் மறைத்து பழகும் எந்த உறவும் நீடித்து செல்வதில்லை....
  10. சிலரிடம் ஆறுதலைத் தேடி நாம் சொல்லும் விஷயங்களே, நமக்கான சாட்டைகளாக மாறி விடுகின்றன.....

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கண்ணீர் எனும் மருந்து

"கண்ணீர் விடுவது ஆணுக்கு அழகல்ல" , "கண்ணீர் விட்டே பெண்கள் காரியத்தை சாதிச்சுடுவாங்க" அழுகையைப் பற்றி இப்போதும் கூட நம் காதுகளில் சில சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்தான் இது... ஆனால் என்னைப் பொருத்தவரை "அழுகை ஒரு மருந்து".. அது கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து....

இங்கு தன் கண்ணீரால் தலையணையை ஈரப்படுத்தாத ஒருவருமே இருக்க முடியாது....

நான் பிறந்ததிலிருந்து தேவைகளுக்காக அழுத அழுகை இப்போது ஆறுதலுக்காக தேவைப்படுகிறது...எனக்கு அழுகையை பரிசாகக் கொடுத்து ரசிக்க காத்திருந்தவர்களும் உண்டு , தங்களை அறியாமல் என்னை அழ வைத்தவர்களும் உண்டு....

பொது இடங்களில் வரம்பு மீறி காயப்படும்போது பீறிட்டு வரும் அழுகையை அடக்கி வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட அழுகையை வெளிக்கொணர யாருமில்லாத இடம் தேடி இருக்கிறேன்.. இருந்தும் பொதுவான இடங்களில் நாம் மறைந்திருந்து அழுதாலும் பின்னர் நம் முகம் காட்டிக் கொடுத்து விடுமே என அதை என் வீடு வரை கொண்டு செல்வேன்... சில நேரம் என் தாய் மடியில் படுத்து ஆறுதல் தேடுவேன்.. அவர் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அச்சமயம் தேற்றினாலும் இரவில் படுக்கும்போது யாருமறியாமல் கண்ணீர் விட்டு அழுவது மட்டுமே மனசை லேசாக்கும்... சில சந்தர்ப்பங்களில் என் அழுகை எனக்கு தரும் ஆறுதலை நான் உணர்வதற்குள்ளேயே, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த அமைதியான உறக்கத்தைக் அழுகை கொடுத்து விடும்... இந்த உலகில் உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கும் வளர்ந்த மனிதர்கள் யார்? சந்தோஷமாக இருக்கும் நிமிடங்களிலும் கவலை என்னும் பாரம் எடை குறைந்தாவது முதுகில் தொற்றிக்கொண்டுதானே உள்ளது...

சில நேரங்களில் சில சம்பவங்களால் கட்டுப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வரப்படும் அழுகை வீட்டில் உள்ள குதூகல சூழலால் என்னை அறியாமல் என்னை விட்டு போயிருக்கும்.. போயிருக்கும் என்றவுடனே நிரந்தரமாக அச்சம்பவங்களை பற்றிய வலி தரும் அழுகை போயிருக்கும் என்று அர்த்தமல்ல.... மற்றொரு நாள் மனம் பாரமாக இருக்கும்போது இந்த சம்பவமும் அதே போல் முன்பு காயப்பட்ட சம்பவங்களும் வரிசையாக வந்து கண்ணீரைக் கொடுத்து என் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்....

வீட்டினுள் நான் நினைத்து நினைத்து அழும் அளவுக்கான சம்பவங்கள் இதுவரையில் நடந்ததில்லை . ஏதோ அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்... இப்படி ஆழ வைத்த சிறு சிறு சம்பவங்கள் கூட காலப்போக்கில் மறக்கக்கூடியவையாகவே இருந்தன... இப்போது இந்த சிறு சிறு சம்பவங்களுக்கு அழுததை நினைத்தால் சிரிப்பாக இருக்கும்... ஆகையால் இவை அதிக காலத்துக்கு கண்ணீரை இழுத்துக்கொண்டு வந்ததில்லை...

ஆரம்பத்தில் கண்ணீர் துயரப்படும்போது வரும் வேதனை ஊற்றாக தெரிய ஆரம்பித்தது மாறி நாளடைவில் மன அழுத்தம் போக்கும் மருந்தாகத் தெரிய ஆரம்பித்தது.. என் பெற்றோரோ, கணவரோ தரும் தேற்றுதலை விட ஆழ்ந்த ஆறுதலை அது தருகிறது... ஆனால் அதுவே தினசரி அழுவதற்காக காரணம் தேடும் வகையில் முற்றிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன்.....

நான் யாருக்கும் தொந்திரவு தராத மௌனமான அழுகையை நேசிக்கிறேன், எனக்கு அழுகையை தரும் மனிதர்களை அதை விட நேசிக்கிறேன்....

ஆடு பகை , குட்டி உறவா?

"ஆடு பகை , குட்டி உறவா?"இது வெறும் வாக்கியமாக மட்டும் இல்லாமல் நம்மில் பலரின் செயலாகவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது..

சின்ன குழாயடி சண்டை முதல் பெரிய சொத்து பிரச்சனை வரை என பெரியவர்களுக்குள் வரும் பிரச்சனைகளால் அந்த இல்லங்களில் உள்ள விவரம் புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களும் முன்பிருந்த உறவுகளிலிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர்...

இது போல பெரியவர்களுக்குள் எழுந்த மனப் பிரச்சனைகளால் ஒரு குடும்பம் போல உறவாடிய, நாங்கள் தூக்கி வளர்த்த சிறுவர்கள் (5 வயது முதல் ) நாம் ஆசையாக கூப்பிட்டு நலம் விசாரிக்கும்போது எடுத்தெறிந்து பேசி சென்றதை கேட்டு, இவனுக்கு நடந்தது என்னன்னு தெரியுமா, நாம என்ன தப்பு செஞ்சோம்னு இந்த பையன் இப்படி பேசிட்டு போரான்மா என என் அம்மாவிடம் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த குழந்தைகள் எங்கள் வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு செல்லும்போது மனம் வலிக்கும்... அவங்க வீட்ல பேச கூடாது, போக கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க, பிள்ளைக என்ன செய்யும் என சமாதானப் படுத்துவார்......

இப்போது என் பெற்றோர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கும்போது அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. (என் பெற்றோர்
என்பதற்காக நான் இதை கூறவில்லை) அவர்கள் மனவருத்தம் அடைந்து பேசாமல் இருந்த சிலரிடமும் , இவர்களை சில காரணங்களினாலும் , காரணமே இல்லாமலும் ஒதுக்கி வைத்திருக்கும் சிலரிடமும் நாங்கள் பழகக் கூடாது என தடை போட்டதில்லை.. இதன் பலன் என்னவெனில் , இப்படி பேசாமல் இருந்த உறவுகள், நண்பர்கள் எல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பழையது மறந்து அழைத்துக் கொள்வர். அதே போல் துக்க காரியங்களுக்கு முன்னால் வந்து நிற்பர்...

புகைப்படங்களை பிள்ளைகளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்போது எனக்கு மனவருத்தம் உண்டாக்கியவர்களோ , உதாசீனப்படுத்தியவர்களோ அதில் ஏதேனும் இடத்தில் தென்படும்போது (அவர்களை முடிந்தவரை நேரில் பார்ப்பதை தவிர்ப்பேன்..நேரில் பார்க்க நேரும்போது குறைந்தது சிரித்து விட்டாவது செல்வேன், சிலரை பார்க்காதது போல் சென்றிருந்தால் அவர்கள் அதற்கு முன் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களாக இருப்பர், இம்முறை நாம் பார்த்து திரும்பவும் அவர் அவ்வாறு செய்தால் மன சஞ்சலம் உண்டாகுமே என தவிர்த்திருப்பேன்.. ) உடனே என் பிள்ளை (அவன் அறிந்தவர்களை)சந்தோஷமாக அவர்களை சுட்டிக்காட்டி குதூகலப்படுவான்.. அப்போது நம்மை வெறுத்தவர்கள் மேல் நம் மகன் இவ்வளவு பாசமாக இருக்கிறானே என்று மனம் சஞ்சலப்படும்தான்... ஆனால் நம்மை பிடிக்காதவர்களுக்கு நம் பிள்ளைகளையும் பிடிக்காது என எவ்வாறு நினைக்க முடியும் என்று சஞ்சலத்தை மாற்றிக் கொள்வேன்... என் பிள்ளைகள், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்த கெட்டவர்களிடம் மட்டும் அவர்கள் பேசாமல் இருக்கட்டும் என்ற மனப்பக்குவத்தை வரவழைத்துக்கொண்டேன்... (இதுவே தீய நடத்தை உள்ளவர்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலக்கியே வைப்பேன்)

பிள்ளைகளுக்கும் நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களாகவே அறிந்து கொள்வர்... அந்த அனுபவம்தான் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என கற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும்.. அதை விடுத்து, நமக்கு ஆகாதவர்கள் தீயவர்கள் என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது, பிறரை வெறுத்தல் எனும் நஞ்சை ஊற்றி வளர்ப்பதற்கு சமம்...

பிள்ளைகளின் கனவு

"அண்ணா குத் பாய்" என்ற மகனின் சத்தத்தை கேட்டு அருகில் படுத்திருந்த அவன் முகத்தை பார்த்தேன்.. அவன் ஆழ்ந்த உறக்கத்தில் உளறி விட்டு சலனமேதும் இல்லாமல் உறங்கிக் கொடிருந்தான்.. கனவில் தன்னை பற்றி குறை கூறும் யாரோ ஒருவருக்கு (நானோ, அவன் தந்தையோ அல்லது மற்றவரோ ) கூறும் பதிலாகவோ அல்லது தன்னை அடையாளப்படுத்தி பிறரிடம் அறிமுகம் செய்து வைக்கவோ அந்த வார்த்தையை அவன் கனவில் கூறிக் கொண்டிருந்திருக்கலாம்...

னால் எனக்கு இது புதியதாக இருந்தது.. பேசத் தெரியாத குழந்தை பருவத்தில் அவன் இருந்த போதும், அவன் தங்கை இருந்தபோதும் உறக்கத்தின் போது அவர்கள் சிரித்தும் அழுது சிணுங்கியும் கண்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம் அதை மற்றவர்களிடமும், பெற்றவர்களிடமும் கூறும்போது, கடவுள் வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பார், பூனை வந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும், முன் ஜென்மத்து மனிதர்களை சந்தித்த நினைவோ அல்லது அந்த சம்பவங்களின் நினைவோ எட்டி பார்த்திருக்கலாம் என கூறப்பட்ட காரணங்களால், அதற்கு மேல் அவற்றை தாண்டி நான் சிந்தித்ததில்லை..

பிள்ளைகளுக்கு நமக்கு வருவதை போல் உறக்கத்தில் கனவுகள் வரும் என எனக்கு தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்வின் போதுதான் அதை உணர்ந்தேன்... அவனுக்கும் ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என இது உணர வைத்தது.. அவன் என் மூலம் வருகை தந்து வாழ வந்தவன் என்ற உண்மை விளங்கியது.. இதை உணர்ந்தபோது அவன் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கத் தோன்றியது... உறக்கத்தில் வருகிற கனவுகளுக்கு மட்டுமல்ல, அவன் வளர வளர அவனை உறங்க விடாமல் செய்கிற அவனின் லட்சிய கனவுகளுக்கும் மதிப்பளித்து, வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க மனம் முழுமையாக இசைந்து வருவதை உணர்ந்தேன்.....

கடந்து போன காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத என் ஆசைகளையும் வரும்காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என் லட்சியகளையும் என் பிள்ளைகளின் முதுகின் மேல் இறக்கி வைக்க நினைத்திருந்த என் எண்ணமும் மெல்ல மாறியது... என்னால் முடிந்தால் என் கனவுகளை லட்சியங்களை நிறைவேற்றி கொள்ள பார்க்கிறேன்.. இவற்றை என் பிள்ளைகளின் முதுகில் இறக்கி வைத்தால் அவர்களின் கனவுகளை லட்சியங்களை இறக்கி வைக்க அவர்கள் அவர்களின் பிள்ளைகளை தேடுவர்...

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் லட்சியங்களை பிள்ளைகளின் மேல் திணித்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால் ஒவ்வொருவரின் லட்சியங்களும் ஒரு தலைமுறை தாண்டிதான் (சிலருக்கு மட்டுமே ) பலிதம் ஆகும் என்பது மட்டுமல்ல நாம் வாழ வந்த நம் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் முடிந்து போகும் என தோன்றியது..

என் கண்முன் என்னால் உருவாக்கப்பட்டிருந்த அறியாமை என்னும் திரையை இச்சம்பவம் அகற்றியது....

" அண்ணா குத் பாய் " என உறக்கத்தில் உளறி முடித்திருந்த மகனின் கன்னத்தை "நீ குட் பாய்தான் செல்லம்" என மெல்ல வருடி விட்டேன்.. அந்த வருடலின் உணர்வு கூட அறியாதவனாக ஆழ்ந்த உறக்கத்தின் கனவுகளுக்குள் அவன் சிக்கிக் கொண்டிருந்தான்.....

5

எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் என் பிறந்த வீட்டிலும் , புகுந்த வீட்டிலும் இருக்கும் திருமண ஆல்பங்களை ஒரு முறை புரட்டுவது என் வழக்கம்.. என்னதான் வீடியோ கவரேஜ் பண்ணி எடுத்து இருந்தாலும் , புகைப்படத்துல பார்க்கிற ஒரு திருப்தி வரவே வராது... அதுவும் இல்லாம, சிடி எடுத்து போட்டு பார்த்து முடிக்கறதுக்குள்ள வர்ற இடையூறுகள் திருப்திக்கு பதிலா அலுப்பையே தரும்கிறதால என் சாய்ஸ் ஆல்பம்தான்....

இப்போதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்பில் அடுக்கி வைத்திருந்த ஆல்பங்கள், அங்கு இங்கு நகரும்போது கண்ணை உறுத்தவே பார்ப்பதற்காக எடுத்தேன்..கூடவே பிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன்... அது தவறு என்று, எடுத்து இரு பக்கங்களை திருப்புவதற்குள் உணர்ந்து கொண்டேன்.. வரிசையாக பார்க்கலாம் என்று எடுத்தால் பசங்க நான்கைந்து பக்கங்களை ஒன்றாக சேர்த்து எடுத்தும், முன்னால் உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதற்கு திரும்ப திருப்பியும் என அலம்பல் செய்ததோடு அல்லாமல் இருவரும் ஆல்பத்தை புரட்டிப் பார்க்க சண்டையும் போட்டுக் கொள்ளவே திருமண ஆல்பத்தை பெண்ணிடமும், திருமண வரவேற்பு ஆல்பத்தை எடுத்து மகனிடமும் கொடுத்து விட்டு அவர்கள் பார்த்து வைத்து விட்டால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என உள் அறையில் வேறு வேலை பார்க்கத் திரும்பினேன்.

அதே நேரம் பக்கத்து வீட்டிலிருக்கும் ஒருவர் பிள்ளைகளை பார்க்க வர இவர்கள் ஆல்பம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் தானும் அருகில் அமர்ந்து கொண்டு மாமா எந்த போட்டோல இருக்கேன்னு கண்டுபிடி என மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. இடையில் அவர் நீ எங்கடா, போட்டோவுல காணுமே எனக் கேட்க, நானும் அனிசிதாவும் (அனிஸ்ரீயா) துபாய்ல இருந்தோம் என்ற அவன் பதிலும் என் காதில் விழுந்தது..

இடையில் அங்கிருந்த என் கவனம் திசை மாறி நான் செய்து கொண்டிருந்த வேலையின் மீது விழுந்த சில நிமிடங்களுக்குள் "சவிதா இங்க வா" என கோபத்துடன் அவன் அழைக்கும் குரல் கேட்கவே ஹாலுக்கு வந்து என்னவென கேட்க "ஏன் முதித்துக்க" எனக் கேட்க நான் புரியாமல் முழிக்க , பக்கத்து வீட்டுக்காரரோ , நீ பின்னாடி தலைமுடி அலங்காரம் முத்து எல்லாம் வச்சு பண்ணி இருந்தே இல்லையா, அந்த போட்டோவ பார்த்துட்டு கூப்பிட்டான் எனக் கூறவே சிரித்தவாறும், முத்து வைத்தா சிகையலங்காரம் செய்து இருந்தாங்க என்ற யோசனையுடனும் சரி என்று சொல்லி விட்டு உள்ளே திரும்ப எத்தனிக்கையில் திரும்பவும்" சவிதா இங்க பாரு, முதித்து இருக்க" என என் சிகையலங்காரம் தெரியுமாறு எடுத்திருந்த, ஆல்பத்தில் நான்கைந்து பக்கங்களுக்கு முன்னிருந்த போட்டோவை திரும்ப எடுத்து என்னிடம் காண்பித்தான்.. நான் புரியாமல் விழிக்க , இந்த போட்டோல நல்லா இருக்க, இந்த போட்டோல ஏன் முத்தித்து இருக்க என கோபமாக அருகிலிருந்த மற்றொரு போட்டோவுடன் ஒப்பிட்டுக் காண்பிக்கும்போதுதான் அவன் சொல்லிக் கொண்டிருந்தது புரிந்து அடக்க முடியாத சிரிப்பும் தொற்றிக் கொண்டது...

அதாவது நான் சுவற்றை பார்த்தவாறு நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு , நான் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கோபப்படுகிறான் என புரிந்தது.. அதை பக்கத்து வீட்டுக்காரரிடமும் நான் தெளிவாக சொல்ல அவரும் அடக்க முடியாத சிரிப்பில் கலந்து கொண்டார்.. மேலும் அவன் "இப்படி முத்திது இருந்தா செத்து போயிடுவே" என சொல்ல என் அம்மாவும் வந்து எங்களுடன் சிரிப்பில் கலந்துக் கொண்டார்....

"தங்கம், அம்மாவோட ஹேர் ஸ்டைல் போட்டோல தெரியறதுக்காக அம்மா திரும்பி நின்னு இருக்கேன்டா" எனக் கூறவும் உடனே அந்த குறிப்பிட்ட போட்டோ உள்ள பக்கத்தின் பின் பக்கத்தை பார்ப்பதற்காக திருப்பினான்.. பின்னர் முன்னும் பின்னும் பார்த்தவாறு என்னிடம் , "பின்னாடி அம்மா மூஞ்சி தெரியல, அப்போ முத்தித்துதான இருக்கே" என திரும்ப அவன் கோபமாகக் கேட்க எங்களின் சிரிப்பு மேலும் தொடர்ந்தது....

அவன் கேட்ட கேள்விகள் எனக்கும் எதுவும் அறியாத சிறு வயதில் மனதில் தோன்றியவைகள்தான்.. ஆனால் மனதில் எழும் கேள்விகளை எல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கி அனுபவத்தின் வாயிலாகவே தெளிவு பெற்றவள் நான்.. அதற்கு பதில் தர காலமும் அவகாசம் கூட எடுத்தது.. ஆனால் இப்போதுள்ள குழந்தைகளின் நுண்ணிய அறிவும் , கேட்டு பதில் வாங்கும் சூட்டிப்பும் என்னை உண்மையிலேயே மலைக்க செய்கின்றன.. நாமும் உண்மையையும், எதார்த்தத்தையும் தெளிவாக எடுத்துக் கூறப்பழகினால் இப்போதுள்ள இப்படிப்பட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்ப்பதும் சுலபம் என்றே தோன்றுகிறது..

கூடவே கேள்வி கேட்கும் நிலைக்கு வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்காக, .. இனி அவர்கள் கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான பதில்களை உடைய கேள்விகளுக்கு பொறுப்பான, அறிவார்ந்த பதிலை அளிக்க நானும் என் அறிவை வளர்க்க வேண்டுமே என்ற சிறு பயமும் தோன்றியது...
(படத்தில் இருப்பது மாடலே.......)

4

சப்பாத்திக்கு மாவு பிசஞ்சுட்டு இருக்கும்போதே பையன் பக்கத்துல வந்து , "அம்மம்மா வீட்லயும்,அம்மம்மா இதை பால்(Ball ) மாதிரி செஞ்சு போடுமா , நான் அதை எடுத்து சாப்பிடுவேன்"எனக் கொஞ்சி சொல்லிக்கொண்டே அதில் கையை விட போனான்.. உடனே அவனை தடுத்து , "இதை இப்படியே சாப்பிட்டா வயிறு வலிக்கும், அம்மா சப்பாத்தி போட்டு தர்றேன் , அப்போ சாப்பிடு" என சொல்லியும் அங்கேயே சுற்றி கொண்டு இருந்தான்..
பாத்திரத்துக்குள் கையை விட போவதும் , நான் திட்டியதும் எடுப்பதுமென செய்கை தொடர்ந்து கொண்டே இருந்தது..
சீக்கிரம் பால்(Ball ) மாதிரி பிடிம்மா, என்று சொல்லிக்கொண்டே இருந்தவன் நான் உருண்டை பிடித்து வைத்து , தேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் கவனிக்காத நேரத்தில் சிறு பகுதியை எடுத்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு "அனிஸ்ரீயா, நான் எடுத்துட்டேன்" என சிரித்துக் கொண்டே ஹாலுக்கு ஓடினான்.. "இனி இங்க வந்து பாரு"என திட்டி விட்டு வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
உடனே அடுத்தவள் நானே அறியாதவாறு ஆட்டத்துக்குள் நுழைந்தாள்.. அம்மா தண்ணி வேணும் என அருகில் வந்தவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க நான் எழுந்த போது, அவளும் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு "அண்ணா நானும் எடுத்துட்டேன்" என ஓடினாள்.. குரலில் அவ்வளவு துள்ளல்....
"இனி 2 பேரும் இங்க வந்து பாருங்க, மாவை அப்படியே தின்னக்கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா" என சத்தம் போட்டுக்கொண்டே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
திரும்ப மெல்ல பயந்து கொண்டே மாவை எடுப்பதற்காக நான் கவனிக்கிறேனா என நோட்டம் விட்டு மெல்ல வந்து கொண்டிருந்தான்..
இப்போது திடீரென ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது..
நானும், என் தங்கச்சியும் ரொம்ப சின்ன பசங்களா இருக்கும்போது என் அம்மா சப்பாத்திக்கு மாவு தேய்ச்சுட்டு இருப்பாங்க.. மாவை அப்படியே சாப்பிடக்கூடாதுன்னு அம்மா மாவுக்கு காவல் இருந்துட்டே , சப்பாத்தியும் தேய்ச்சுட்டு , எங்களையும் கவனிச்சுட்டே இருப்பாங்க.. அப்போ , அம்மா கவனிக்காத நேரம் பார்த்து , நானும் என் தங்கையும் போட்டி போட்டுட்டு, மாவை கொஞ்சம் பிச்சுட்டு வந்து சாப்பிடுவோம் பாருங்க...... ப்ச்.... அது ஒரு பசுமையான காலம்ங்க... அது இனியெல்லாம் வராது.....
-
-
-
-
-
-
-
-
-
இப்படி ஒரு பதிவு பின்னாளில் ரோஹித் ரெஜிகுமாரால் முகநூலில் போடப்படலாம்..
அதனால் அவங்களை சும்மா மிரட்டற மாதிரி மிரட்டிட்டு மாவு எடுக்க போகும் போது கவனிக்காத மாதிரி விட்டுட்டு இருந்தேன்..
முகநூலில் பின்னால் வரப்போற ஒரு பதிவை கெடுத்த பாவம் நமக்கெதுக்குங்க tongue emoticon grin emoticon grin emoticon grin emoticon .....

3

அடுப்பில் சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும்போது நிகிதா(மகள்) அங்கு வந்து , "அம்மா அங்க வாம்மா " என டிவி-யில் எதையோ காட்ட நொடிக்கொருதரம் அழைத்துக் கொண்டிருந்தாள்..
"இதோ, இந்த சப்பாத்தியை பாத்திரத்துல வச்சுருக்கேன்ல , அதை மூடி வச்சுட்டு வர்றேன்" என தட்டை எடுத்து மூடி வைப்பதை பார்த்தவள் , " அம்மா அது மூடி இல்லம்மா, தட்டு" எனக்கூறினாள்... புரிந்ததும் மெல்ல வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு " தட்டுதான், ஆனால் இதை மூடி வைக்கிறோம்ல, அதான் சொன்னேன்" என புரிய வைக்க போராட, "போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல" என சொன்னவளிடம், திரும்ப விளக்க முயற்சிக்க, திரும்பவும் அவள் அதையே கூறிவிட்டு, என் மறுவிளக்கத்தை எதிர்பார்க்காமல் "அங்க வா " எனக்கூறிக்கொண்டே ஹாலுக்கு திரும்பினாள்.. "நான் சரியாதானே பேசறேன்" என சங்கிலி முருகன் அவர்கள் ஒரு படத்தில் கூறும் குழப்ப மனநிலையுடன் பின்தொடர்ந்தேன்..
இதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு, டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒளிபரப்பப்பட்ட ஹேர் ஆயில் விளம்பரத்தை பார்த்து விட்டு, "பார்த்தியா , அமம்மாவுக்கும் நிறைய முடி கொட்டிட்டே இருக்கு , இனி அம்மாவும் இததான் வாங்கி பார்க்கணும்" என பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
"ஆமாம்மா, அம்மாவுக்கு நிறைய முடி விழுந்துருச்சு" என என் முடியை தடவிக்கொண்டே ரோஹித் சொல்ல , உடனே நிகிதா, "அம்மா , எனக்கும் நிறைய முடி விழுகுதும்மா" என்று சொல்ல அவள் விழுவதாக கூறிய முடியை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் ஆனது..
அதாவது தன் நெற்றியில் புரண்டு விழும் முடியை முன்புறம் குனிந்தவாறே தொட்டு காண்பித்து, "இதோ எனக்கும் முடி விழுது" என சோகத்துடன் கூறிக்கொண்டிருந்தாள் grin emoticon grin emoticon grin emoticon grin emoticon ....
சின்ன பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி அடிக்கொருதரம் ரசிக்க வைக்கும் நிகழ்வுகள்.. ரசித்துக்கொண்டே , சேமித்துக்கொண்டும் இருக்கிறேன் அந்த நினைவுகளை smile emoticon ....

பகல் கனவு

நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது விழிப்பு வந்து விட்டது..ஆனால் கண்களை திறக்க முடியவில்லை.. திறக்க முயற்சித்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.. அலாரம் அடித்ததாக நினைவு.. அதனால் எழுந்தே ஆக வேண்டிய கட்டாயம்..ஆனால் கண்களை திறக்கவே முடியவில்லை..
பக்கத்தில் படுத்திருந்த என் பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி மட்டும் கண்கள் திறக்க முயற்சித்து பாதி வெற்றி பெற்று மீண்டும் தோல்வியுறும் தருணங்களில் தெரிகிறது.. எப்படியோ எழுந்து நின்று விடுகிறேன்.. இப்போது அவளை நான் தூக்கி வைத்திருக்கவில்லை.. ஆனால் என் பார்வைக்கு அருகிலேயே யாரோ அவள் படுத்தவாக்கிலேயே தூக்கி வைத்திருப்பதாக தெரிகிறது..
யார் தூக்கி வச்சுருக்காங்க என அதிர்ந்து கேட்டதும், "நான்தான் , இன்னைக்கு வெளில போயிட்டு லேட்-லாதான் வேலைக்கு வருவேன்னு சொல்லி இருந்தேன்ல" என வேலைக்காரப் பெண்ணின் குரல் மட்டும் தெளிவாக கேட்கிறது.. ஆனால் கண் திறந்து பார்க்க முடியவில்லை..
சாவி எப்படி கிடைத்திருக்கும் என நினைவு வர அவளிடம் இருந்த சாவியால் திறந்திருப்பாள் என்று ஊகித்துக் கொள்கிறேன்..
உடனே"கொஞ்சம் முன்னதான் அம்மாவுக்கு போன் பண்ணினேன்" என நான் சொன்னவுடன் "ஏன் பண்ணிணே" எனக் கோபித்துக் கொள்ளும் குரலில் கேட்கிறாள்.. " இல்லை சும்மாதான் , தம்பியும் இப்ப வந்துட்டே இருக்கேன்னு சொன்னான் " என எங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டோடு பொய் சொல்கிறேன்.. ஏனெனில் வந்த உருவம் யாரென்று இன்னும் என் கண்ணில் தெளிவாக படவில்லை.. இப்போதும் இமைகளை நன்றாக திறக்கும் முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..
ஒருவேளை முகம் கழுவினால் கண்களை திறக்க முடியுமோ என்ற எண்ணம் வர மெதுவாக அவளை கையைப் பிடிக்க சொல்லி குளியலறைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.. நுழைந்ததும் அது அவள்தானா என்ற என் உறுத்தும் சந்தேகத்தால் திரும்ப அவளை பார்க்க முயன்றவாறே கதவை சாத்துவதற்கு தயாராகிறேன்..
இப்போதும் ஏதோ தெளிவில்லாத உருவம் மட்டும் அங்கே தெரிகிறது..
முட்டி மோதி, கஷ்டப்பட்டு இமைகளுக்கு உந்துதல் கொடுத்து திறந்தபோதுதான் அது கனவு என்றே புலப்பட்டது..
ஒருவேளை உண்மையிலேயே அலாரம் அடித்து இருக்குமோ என , பக்கத்தில் கைபேசியை வைக்காததால் வரவேற்பறையில் கடிகாரத்தை பார்க்க எழுந்து போனேன்.. ஏற்கனவே முழித்து விட்டிருந்த பெண்ணும் என்னுடனேயே எழுந்து வந்தாள்..
மணி 11.25 AM என்றிருந்தது.. பள்ளி சென்றிருக்கும் மகனை அழைத்து வருவதற்காக 12 மணிக்குதான் அலாரம் வைத்திருந்தேன்..
அசதியால் தூங்கி 1 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு கனவா? பகல் கனவும், காணும் நேரத்தை பொறுத்து பலிக்கும் என்று படித்த நினைவு, திடீரென எழுந்ததால் வந்த தலைவலியின் கூடவே வந்தது..
இருந்தும்,நினைவிலிருக்கும் கனவுகளை குறித்து வைக்கும் பழக்கமிருப்பதால் அந்த வலியுடனேயே டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன்.. (ஏனெனில் கனவில் மறந்துவிட்ட நினைவுகளை மீட்டெடுப்பது சிரமம்) இப்போது இதிலும்....

2

"நாளைக்கே எனக்கு பர்த்டே வைக்கணும்" ஜெகனுக்கும் , பெனிட்டுக்கும் சாக்லேட் கொடுக்க மாட்டேன், மேம்-க்கும், மத்த பிரெண்ட்ஸ்க்கும்தான் கொடுப்பேன்" என பள்ளிப்பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபத்துடன் கூறினான்..
"ஏன் தங்கம்" என கேட்டதும் "இன்னைக்கு கிளாஸ்-ல ஒரு ப்ரெண்ட்-க்கு பர்த்டே.. எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தான்.. நான் பேக்-ல வச்சுருந்தேன், பஸ்-ல வரும்போது, ஜெகன் என் பேக்-ல இருந்து என் சாக்லட்டை எடுத்து தின்னுட்டான், சோ அவனுக்கும் , பெனிட்டுக்கும் (இதற்கு முன் சண்டையிட்ட காரணத்தால் பெனிட்டும் அந்த லிஸ்டில் சேர்ந்திருந்தான்..) கொடுக்க மாட்டேன்" என நான் எழுதியது போல் அல்லாமல் வரிசை மாறி மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சொல்லி முடித்தான்..
"சரி,உன் பர்த்டே-க்கு இன்னும் 8 மந்த்ஸ் இருக்கு.. அப்போ பார்த்துக்கலாம்" என கூறினேன்.. அதெல்லாம் தெரியாது, எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும், அவ்ளோதான் என ஸ்ட்ரிக்ட்-ஆக சொல்லி விட்டு போகோ-வில் சோட்டா பீமுடம் ஐக்கியமாக சென்று விட்டான்..
மறுநாள் எழுந்ததும், இதை ஆரம்பிப்பானோ என்று பயந்திருந்தேன்.. ஆனால் அதை மறந்து விட்டிருந்தது அந்த காலை நேர பரபரப்பை கொஞ்சம் குறைவாக்கி இருந்தது..
ஒரு வாரம் கடந்த நிலையில், இன்று காலை, அவனுக்கு ஷூ போட்டு விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் "பர்த்டே" என்னும் வார்த்தை எவ்வாறோ எங்கள் பேச்சில் உள்நுழைந்து விட்டது.. (இப்போது யோசித்துப் பார்த்தால் நினைவுக்கு வரவில்லை.. ) உடனே அதை பிடித்து விட்டான்..
"எனக்கு பர்த்டே கொண்டாடனும், நான் ஸ்கூலுக்கு கொண்டு போய், கிளாஸ்-ல எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கணும் என்று கூறினான்..(இந்த ஒரு வாரத்தில் ஜெகன் மற்றும் பெனிட் மீதுள்ள கோபம் அவன் இன்னும் குழந்தை என்ற காரணத்தால் காணாமல் போய்விட்டிருந்தது..)
அவன் வகுப்பில் இருந்து "பிரெண்டுக்கு பர்த்டே" என அடிக்கடி சாக்லேட் கொண்டு வருவது வழக்கம். ஒரு முறை டீச்சர்-க்கு பிறந்தநாள் என்று கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட், சாக்லேட் என கொண்டு வந்தான்.. நேற்றும் சாக்லேட் கொண்டு வந்திருந்தான்..
"உனக்கு ஆகஸ்ட்-லதான் பர்த்டே வரும், அப்போ உங்க ஸ்கூல்-ல சம்மர் ஹாலிடேஸ் விட்டுருப்பாங்க.. சோ நீ உன் பிரெண்ட்ஸ்-க்கு சாக்லேட் கொடுக்க முடியாது" என சொன்னதும் அழ ஆரம்பித்து விட்டான்..
"இல்லை, நான் சாக்லேட் கொடுக்கணும், எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும்" என சிணுங்கவே, "சரி, அனிஸ்ரீயா பர்த்டே-க்கு நீ உன் கிளாஸ்-ல போய் சாக்லேட் கொடு" என்று சொன்னாலும், "நோ, எனக்கு எல்லோரும் ஹாப்பி பர்த்டே சொல்லணும்,என் பர்த்டே க்குத்தான் சாக்லேட் கொடுப்பேன்" என அழ ஆரம்பித்தான்.. அவனால், பிறந்தநாள் எப்போது வரும் என்று புரிந்து கொள்ளவும் முடியவில்லை..
"சரி, நாம இந்தியால ஸ்கூல்ல சேர்ந்ததும் அங்க கொடுப்போம்" எனவும் , "சும்மா வேணா சாக்லேட் கொண்டு போய் கொடுக்கறியா" எனவும் என் சமாதானங்கள் நீண்டு கொண்டு சென்றும் , அவை எதுவுமே அவனை சமாதானமாக்கவில்லை..
"என்னப்பா, கஷ்டமா இருக்கு , இப்படி ஏங்கறான்" என என்னவரிடம் சொன்னபோது "நாம என்ன பண்ண முடியும்" என அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டார்..
பள்ளி கிளம்பும்போது , "எனக்கு பர்த்டே வைக்க மாட்டே இல்ல", என சொல்லிக்கொண்டே, கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க கிளம்பினான்.. கஷ்டமாக இருந்தது..
வரும்போது அவன் அதை மறந்திருந்தாலும் , ஆசை மனதின் உள்ளே இருந்து கொண்டேதானே இருக்கும்.. வரப்போகும் நாட்களில் சக மாணவர்களில் யாரேனும் பிறந்தநாள் கொண்டாடும்போது அது மீண்டும் எட்டிப் பார்க்கத்தானே செய்யும்..வகுப்பில் ஒரு பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடும்போது, மற்ற எல்லா பிள்ளைகளுக்கும் தனக்கும் இப்படி எல்லோரும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும்...
பிள்ளைகளின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்து பார்க்கவேண்டும் என்ற என் ஆசை , இந்த விஷயத்தில், அது எப்படி என்ற யோசனையிலேயே உள்ளது....

வார்த்தை ஆயுதம்

நீ தாக்கிய வார்த்தை
ஆயுதத்தை திரும்ப
உனக்கே திருப்புகிறேன்....
உன்னை காயப்படுத்த
வேண்டும் என்பதற்காக அல்ல
அதன் கூர் எவ்வளவு
காயப்படுத்தும் என்பதை
உணர வைப்பதற்காக....


---------------------------



கத்தியை விட கூரானது
ஒரு கடுஞ்சொல்
சுலபமாக நெஞ்சில் இறங்கி
உடல் முழுவதும் பரவி
காயத்தின் அடையாளத்திற்கு
குருதியாக கண்ணீர்....







கருத்து சுதந்திரம் மீறப்படுகிறதா?


வலைதளங்களில் பத்திரிக்கைகள் மூலம் பதிவிடும் பதிவுகளுக்கு வரும் விமர்சனங்களை எல்லாம் படித்திருக்கிறீர்களா? சிலர் இன்டர்நெட்/மொபைல் ரீசார்ஜ் என விளம்பரம் செய்திருப்பர்.. சிலர் ஊடகங்களுக்கு இதுதான் முக்கிய செய்தியோ என குறை கூறி அலுப்பை காண்பித்திருப்பர்.. ஆனால் அந்த விமர்சனங்களில் முக்கால்வாசி குதர்க்கமான, கிண்டலான, நேரில் சொல்ல தயங்குகிற விமர்சனமாகத்தான் இருக்கும்..
அதுவும் அது சினிமா/அரசியல் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய பதிவாக இருந்தால் வரும் விமர்சனங்கள் கண் கொண்டு படிக்க முடியாதவையாக இருக்கும்..பதிவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆணாக இருந்தால் அவர்களின் கடந்த/இப்போதைய பொது வாழ்க்கை, ஜாடைமாடையாக சொல்வது போல சில தனி வாழ்க்கை பிரச்சனைகளை பற்றி மேலோட்டமாக விளாசி தீர்த்திருப்பர்.. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெண்களாக இருந்தால் அவ்வளவுதான்.. ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களைப்பற்றி பேசுவதற்கென்றே கற்பு என்ற வார்த்தையை கையிலெடுத்து வக்கிரமான, ஆபாசமான வார்த்தைகளால் கருத்துப் பக்கத்தை அசிங்கம் செய்திருப்பர்..
இவர்கள் அந்த பெண்களை யாரிடம் எல்லாம் இணைத்துப் பேசுகிறார்களோ, அந்த ஆண்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.. ஏனென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரிய சொத்துதானே இங்கு..
சில நடிகைகள் ட்விட்டரில் பதியும் தனிப்பட்ட/குடும்ப புகைப்படங்களை முகநூலில் சிலர் அதற்கென பக்கம் ஆரம்பித்து அவர்கள் பெயரில் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் போடப்படும் படங்களுக்கு வரும் விமர்சனங்களில் அவர்களின் குடும்பப் பெண்களை கூட விட்டு வைக்காமல் கிண்டல் என்ற பெயரில் தன் வக்கிர புத்தியை காண்பித்திருப்பர்... அரசியலைச் சார்ந்த சில பெண்களை அவர்களின் உருவத்தை வைத்து விமர்சிப்பது எனவும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.. அப்படி விமர்சித்து இருப்பவர்களின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால் சிலர் நல்ல நல்ல செய்திகளின் ஷேர்களும் , சிலர் சிறந்த மனிதர் என்பதை காண்பிக்கும் விதமாக பதிவுகளும் இட்டிருப்பர்...
இது பத்திரிக்கைகள் பதிவிடும் பதிவு என்று மட்டும் அல்லாது தனி நபர்கள் சில அரசியல்/சினிமா பிரபலங்களைப் பற்றி பதியும் பதிவுகளுக்கும் விமர்சனங்களாக இருக்கும்.. இதை எதிர்த்து விமர்சிக்கும் ஒரு சிலருக்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லா விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.. அப்படியெனில் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களின் பொது வாழ்க்கையை மட்டும் விமர்சியுங்களேன்..அதற்காக ஆபாசமாக, அந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை/நடத்தையை விமர்சிக்க வேண்டாமே... அதையே அவர்களுடன் இணைத்து பேசப்பட்ட அரசியல்வாதி/ நடிகர்களின் மீது அவர்கள் தெளிப்பதில்லை...
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் எல்லா விமர்சனங்களையும் தாங்க வேண்டுமெனில், அப்படி கூறுபவர்கள் தங்கள் குடும்பப்பெண்களை பின்னர் ஏன் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறார்கள் என தெரியவில்லை.. வேலைக்கு வெளியில் வரும் பெண்ணும் குடும்பத்திலிருந்து சமூகத்துக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்.. அந்த பெண்களின் மீது வேறொருவர் ஆதாரமில்லாத குற்றத்தைக் கூறி இப்படி இழிவாக பேசினால் இவர்கள் அதை ஆமோதித்து எளிதாக கடந்து விடுவார்களா? .
இப்போது சிம்பு-அனிருத் கூட்டணி பெண்களை கொச்சைப்படுத்தி இசையமைத்து பாடியுள்ள பாடலுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோருமே எதிர்ப்பு கிளப்பியுள்ளோம்.. ஆனால் அரசியல்/சினிமா துறை சம்பந்தப்பட்ட பெண்களைப் பற்றி தனித்து கூறப்படும் ஆபாசமான கருத்துக்களுக்கு ஒட்டுமொத்தமாக எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.. ஓரிருவர் அதன் பின்னாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் வாயை அடைக்குமளவுக்கு சம்மந்தப்பட்ட/சம்பந்தமே இல்லாத காரணங்களை வக்கிர முறையில் தெரிவித்து வாயடைப்பர்.. அவர்கள்தான் இப்போது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பின் மேல் வியப்பு..
பெண்களை மொத்தமாக ஆபாசமாக பேசினால்தான் இங்கு தப்பா? தனியொரு பெண்ணை பற்றி இழிவாக விமர்சிப்பது குற்றமில்லையா?இப்படி சொல்வதால், அந்த பாடலை ஆமோதிக்கிறேன் என்ற அர்த்தமில்லை.. மிகவும் கண்டிக்கக்கூடியதுதான்..தண்டிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அதையும் அரங்கேற்றியே ஆக வேண்டும்..
நான் சொல்ல வருவது , ஒட்டுமொத்த பெண்களின் மீது வரும் விமர்சனத்தை எதிர்க்கும் நாம் தனிப்பட்ட பெண்களைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களையும் எதிர்க்க ஆரம்பிக்க வேண்டும்.. இன்று அந்த பெண்கள் , நாளை நம் குடும்பப் பெண்களாகக் கூட இருக்கலாமல்லவா?
கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.. ஆனால் அந்த கருத்தை ஆபாசமில்லாமல்/இழி சொற்களை பயன்படுத்தாவண்ணம் நாகரீகமாக தெரிவிப்போமே.. அதே போல் தனிப்பட்டவர்களின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாமே..நீங்கள் விமர்சிக்கும் பெண்களுக்கும் குடும்பம் இருக்குமே, உங்களைப் போன்றே ஒரு உறவும் அதை படிப்பாரே?
அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவுவதை தடுக்கவென கூறி , அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதென தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் கடந்த காங்கிரஸ் அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.. பின் கடந்த மார்ச்சில் சுப்ரீம் கோர்ட் அந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்..
நாம் மேலும் தரம் தாழ்ந்து, வக்கிரமான எல்லை மீறிய விமர்சனங்களைக் கொடுத்து நமக்கு கிடைத்துள்ள இந்த கருத்து சுதந்திரம் என்ற வாய்ப்பை இழக்க வேண்டுமா?

இரவு

இரவின் நிசப்தத்துக்கு 
எதிராக சீரான ஒலியைக் 
கொடுத்து சுழன்று 
கொண்டிருக்கிறது 
மின்விசிறி....!!!!

அறை முழுவதும் பரவி
மேனியை சில்லென
வருடுகிறது அது தரும்
குளிர் காற்று....!!!!

மின்விசிறியின் சத்தத்துக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
தோற்றுக் கொண்டிருக்கிறது
எங்களின் மெல்லிய
மூச்சொலி....!!!!

சாளரத்தின்
திரைச்சீலையையும் மீறி
ஒளியை உள் அனுப்பிக்
கொண்டிருக்கிறது
அம்புலி....!!!!

என்னைத்தவிர அனைவரும்
கனவில் வாழ்ந்து கொண்டிருக்க
அறையில் தெரியும்
ஒவ்வொன்றுடனும் உறவாடிக் கொண்டிருக்கிறது
என் நினைவு....!!!!

இவை எல்லாவற்றையும்
மௌனமாக
தன் பார்வையால்
விழுங்கிக் கொண்டிருக்கிறது
இரவு....!!!!

கறை



எல்லோருக்குமே
உதறினாலும் உதிராத
சில காயங்கள்
மன ஓரத்தில் ஒட்டி
பல நேரங்களில் 
உறுத்திக் கொண்டே இருக்கும்....!!!!
மனதை அழ வைத்த
அந்த உறுத்தல்கள்
நாளாக நாளாக
உதறவும் நீக்கவும் முடியாத
கறையாக படிந்து விடும்....!!!!
படிந்திருக்கும் அந்த கறை
வெறுமனே கரைய வைக்கும்
காரணியாக மட்டுமல்லாமல்
வாழ்வில் உயர வைக்கும்
ஊக்கியாகவும் இருக்கும்....!!!!
அதை அழ வைக்கும்
கண்ணீர் பெருக்கியாக
எடுக்கிறோமா
அல்லது
வாழ வைக்கும்
உந்து சக்தியாக
எடுக்கிறோமா
என்பதில்தான் இருக்கிறது
ஒவ்வொருவரின் எதிர்காலமும்....!!!!

மனம்




உங்களால் 
முட்டாள்தனமாகபார்க்கப்படும்
என் செய்கைக்காக
பரிதாபத்தையும் ஆதங்கத்தையும்
கலந்த வார்த்தைகளை
என் மீது வீசாதீர்கள்...!!!!


அந்த செய்கையின்
நினைவுகள்
எழுப்பப்படும் போதெல்லாம்
உங்களை விட 
மிக சிறப்பாகவே
அதை செய்து கொண்டிருக்கிறது
என் மனம் ....!!!!!


--------xxxxxx-----------



வழக்கமான புன்னகை
தவிர்க்கப்படும்போதோ
பழக்கமான பார்வை
திசைமாறும்போதோ
காரணம் தேடி
வரையறுக்க இயலா
பல காரணங்களுக்குள்
சிக்கித் தவிக்கிறது மனது...

--------xxxxxxx-------------

நிஐங்களோடு தர்க்கம் செய்து ஓய்ந்த மனம் பின் அதன் நினைவுகளோடு கூட தர்க்கம் செய்ய முனைவதில்லை.


-------xxxxxxxx-------

நடுசாமத்தில் கேட்கும் கூர்க்காவின் விசில் சத்தம் தூக்கத்தில் இல்லாதோர்க்கு தம் பணி குறித்து நினைவூட்டும் அலாரம் ஒலியா திருடர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒலியா குழப்பத்திலேயே மனது...!!!

--------------xxxxxxxxxxxxxxxx---------

ஆழ்மனம்

துயில போகும் நேரத்தில் 
மின்னலிடும் பல வர்ண 
நினைவுகளின் சாயங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துக் கொண்டிருக்கிறது அது...!!!

அதனூடே வேறு சில
தான் விரும்பிய
நிறங்களையும் சேர்த்து
அவையனத்தின்
சேர்க்கையை திட்டமிட்டு
உறக்கத்துக்காக காத்திருக்கிறது...!!!

உறக்கம் உள்நுழைந்ததும்
அதன் துணையுடன்
எவரிடமும் உள்ளது உள்ளபடி
காட்ட இயலாத
"கனவு" என்னும்
அற்புத ஓவியத்தை
படைக்க ஆரம்பிக்கிறது...!!!!

உறக்கம் உறங்க போகும்
சூழல் தெரியும் போது
ஓவியத்தின் சில நிறத்திட்டுக்களை
மட்டும் உதிர்த்து விட்டு
உறக்கத்துடனேயே
சலனமில்லாமல் நகர்கிறது
அது என்ற

"ஆழ்மனம்"....!!!!

செவ்வாய், 3 நவம்பர், 2015

பூங்கா

வார இறுதியில் எங்காவது செல்ல வேண்டும் என்று தோன்றினாலே என் முதல் தேர்வு பூங்காவாகத்தான் இருக்கும். வேறு இடங்களுக்கு சென்று வருவதை விட அங்கிருக்கும் பசுமையான சூழ்நிலையும், குழந்தைகளும் ஆசை தீர விளையாடுவதை கண்ட காரணமும் கூட ஆசைக்கு காரணியாக இருக்கலாம்..
ஆனால் சிறிது நேரம் கூட அங்கு செலவழிக்க முடியாத அவசர மனோநிலை என்னவருக்கு.. சிறிது நேரம் பிள்ளைகளை விளையாடவிட்டு உட்கார்ந்திருந்தாலோ, சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாலோ கூட கிளம்புவோமா, கிளம்புவோமா என வார்த்தையில் அவசரத்தை சுமந்து கொண்டே இருப்பார்.. கிளம்பும்போது ஒரு முழு மனதிருப்தி இல்லாத நிலையே எஞ்சி இருக்கும்..

அவருடன் செல்லாமல் பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கிருந்த பொழுதை அழகாக , நிறைவாகக் கழிக்க வேண்டும் என்ற என் ஆசையும் , நடந்து செல்லும் தொலைவில் எந்த பூங்காவும் இல்லாததால் தள்ளிக் கொண்டே போனது.. டாக்ஸி பிடித்து போய் வரலாமென்றாலும் இரு பிள்ளைகளை சமாளிக்க முடியுமா என்ற எண்ணமே தடை போட்டுக்கொண்டிருந்தது..

ஆனால் அந்த ஆசைக்கு , தோழி ஒருவர் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு லேடீஸ் பார்க் போய் வரலாமா எனக் கேட்டு திரும்ப பிள்ளையார் சுழி போட்டார்.. உடனே ஒப்புக்கொண்டேன்.. அதன்படி வீட்டை கணவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, இல்லையில்லை வீட்டில் கணவரை இருக்க வைத்து விட்டு smile emoticon (ஏனெனில் பிள்ளைகளையும் சேர்த்து பார்த்துக்கொள்ளும் போதுதான் "ஒப்படைத்து விட்டு" என்ற வார்த்தை பொருந்தும், இங்கு நாங்கள்தானே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு செல்கிறோம்) மாலை தொடங்கும் வேளையில் கிளம்பி விட்டோம்..
உள்ளே நுழைந்ததும் கொண்டு வந்திருந்த விரிப்பை போட்டு அந்த இரு தோழிகளும் அமர்ந்து கொள்ள, பிள்ளைகள் அங்கிருந்த விளையாட்டு தளவாடங்களில் விளையாட சென்று விட்டார்கள்.. என் சின்ன பெண் விளையாடும்போது எங்கேனும் தவறி விழுந்து விடுவாளோ என்ற பயம் அவள் பின்னாலேயே என்னை அழைத்து சென்றது...

படிகளின் வழி மேலேறி, பிள்ளைகளின் வயது மற்றும் உடற்தகுதிக்கு பொருத்தமான இரண்டு மூன்று வித விதமான வழிகளில் சறுக்கி வருமாறு அமைக்கப்பட்டிருக்கும் அந்த தளவாடம்.. என்னை தவிர்த்து எந்த குழந்தையின் தாயும் அங்கு இல்லை.. இடையிடையே ஒரு வயது சமீபத்தில்தான் கடந்தது போலிருந்த ஒரு குழந்தையுடன் ஒரு தாயும், மற்றொரு தாயும் வந்து தத்தம் குழந்தைகளை விளையாட விட்டுக் கொண்டிருந்தனர்... ஒன்றரை வயதிலிருந்து ஆரம்பித்த குழந்தைகள் 20 க்கும் மேற்பட்டோர் அதில் ஏறி, சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.. சில சிறு குழந்தைகளுக்கு அரணாக அக்குழந்தைகளின் அண்ணனோ அக்காவோ அவர்களை பின்தொடர்ந்து பார்த்துக்கொண்டே , விளையாடிக்கொண்டும் இருந்தனர்.

அவ்வப்போது அங்கு போய் தோழிகளுடன் பேசுவதும், எல்லோரும் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை சாப்பிடுவதும் என நேரம் வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் நகர்த்திக்கொண்டிருந்தது.. இடையிடையே அரபு தவிர்த்து வேறு மொழி அறியாத , செண்டும் புர்காவும் விற்க வந்த பெண்களிடம் விலையை புரிய வைக்க போராடிய முயற்சியும் அரங்கேறி இருந்தது..
என் பெண்ணின் தலை விளையாடும் இடத்தில் தென்படாதபோதேல்லாம் பயந்து கொண்டே அங்கு ஓட்டம் பிடிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது.. விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு அரபு சிறுவன் மேலிருந்து கீழே விழுந்து கதறுவதை பார்த்து ஓடி போய் பார்த்தால், யாராவது தூக்கி விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், ரத்த சிராய்ப்புடன் அழுது கொண்டே சுற்றி இருந்த குழந்தைகள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் அழுகையை பக்கத்தில் இருந்த வேறு ஒரு தாய் உட்பட சுற்றி இருந்த எவருமே பொருட்படுத்தியதாக தெரியவில்லை.. நான் தூக்கி விட்டதும், அவனும் , சுற்றி நின்ற அவனை அறிந்த குழந்தைகளும் ஆச்சரியமாக என்னைப்பர்த்ததை உணர முடிந்தது..

இங்கு ஒரு விஷயத்தைக் கூற வேண்டும், இங்கு ஏதேனும் சிறு குழந்தை ஓடும்போதோ, நடக்கும்போதோ தவறி விழுந்தாலும் நம்மை போல பதறி சென்று தூக்குவதில்லை . பிள்ளைகளே எழுந்து நடக்க விட்டு விடுவர்.. இதை நிறைய முறை நேரில் கண்டிருக்கிறேன்..இது நல்ல பழக்கமென்று தெரிந்தபோதும் அந்த பழக்கமென்னவோ எனக்கு கைகூடி வருவதேயில்லை...
கிளம்பலாம் என்ற நேரத்தில் , பெண் ஊஞ்சலில் உட்கார வைக்க வேண்டும் என்று சொல்ல ஒரு ஊஞ்சலை சுற்றி அடுத்த முறைக்காக காத்திருந்த கூட்டத்துடன் கலந்து கொண்டேன்.. இந்த கூட்டத்தை பார்த்துதான் வந்ததிலிருந்து அங்கு செல்லாமலேயே இருந்தேன்.. அங்கு இருந்த மற்றொரு ஊஞ்சலோ ஒரு கை துணை கொடுக்காததால் சரிந்தவாறு நின்று கொண்டிருந்தது.. அப்படியும் ஒன்றிரண்டு வாண்டுகள் அதில் தொங்க பார்த்தும் கூட தோல்வியில் திரும்பிக் கொண்டிருந்தனர்..
எனக்கு முன்பு வந்த பிலிப்பினோ சிறுமி அடுத்து நான், பெண்ணை உட்கார வைத்து விடுவேனோ என்று ஓரக்கண்ணில் பார்த்தவாறே முன்பு ஆடிக்கொண்டிருந்த சிறுமி எப்போது இறங்குவாள் என பார்த்துக்கொண்டிருந்தாள்..

அச்சிறுமி இறங்கியதும் தன் தம்பியை உட்கார வைத்து தள்ளிக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சிறுமியை சிறிது நேரத்திலேயே அங்கு வந்த இரு பாகிஸ்தான் சிறுவர்கள் (அண்ணன் தம்பி ) இறக்கி விட சொல்லிக்கொண்டே இருந்தனர் . அதிலும் சின்னவன் அவள் தம்பியை இறக்கி விட முயற்சித்துக் கொண்டே இருந்தான்.. அவளோ அழுகைக்கு முன்பான முகத்தை வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அவள் தம்பியை தள்ளி விட்டுக்கொண்டிருந்தாள்...

இதை பார்த்துக் கொண்டிருந்த நானோ, நேரம் கடந்து கொண்டே போவதையும் கருத்தில் கொண்டு , பெண்ணிடம் போகலாமா என்றால், அவள் சினுங்கியத்தை பதிலாக தந்ததும் அங்கேயே நின்று விட்டேன்..அந்த தம்பி சிறுவனோ தன் அண்ணனின் சமாதானத்தையும் மீறி அச்சிறுவனை இறக்கி விட முயற்சித்துக் கொண்டிருந்ததை பொறுக்க முடியாமல், சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அவள் சகோதரியிடம் ஊஞ்சல் தள்ளி விடும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் தாயை அவள் துணைக்கு அழைத்து வந்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்...

தங்கள் தாயின் பாதுகாப்புடன் அந்த 3 குழந்தைகளும் ஊஞ்சல் ஆடி இறங்கியவுடன் பெண்ணை உட்கார வைத்து தள்ளுவதை இரண்டு நிமிடத்திற்கு உள்ளதாக முடித்து விட்டு திரும்பினேன்..
இதற்கிடையே விளையாண்டு அலுத்த என் மகன் வேறு , இங்க பிடிக்கல , வீட்டுக்கு போகலாம் என அவன் தந்தையின் பொறுப்பை ஏற்று சொல்லிக்கொண்டே இருந்தான்.. உள்ளே நுழையும்போதே அங்கிருந்த கடையை பார்த்து அவன் கேட்ட ஸ்பைடர் மேன் பொம்மை நினைவுக்கு வந்திருக்கும் போல என எண்ணிக்கொண்டேன்..

வாயிலருகே வரும்போது அங்கிருந்த கடையிலிருந்த ஸ்பைடர் மேன் பொம்மையை சுட்டிக்காட்டி கேட்கவும் , ஒரு மாதத்துக்கு முன்பாக வாங்கிக்கொடுத்த விலை உயர்ந்த துப்பாக்கி பொம்மையை இரு நாட்களிலேயே துவம்சம் செய்ததை சுட்டிக்காட்டி மறுத்தேன்...
பின் தோழி ஒரு துணி எடுக்க வேண்டும் என்று சொன்னதுக்கு இணங்க அருகில் உள்ள துணிக்கடைக்குள் நுழைந்தோம்.. உடனே , நான்தான் துணி எடுக்க கடைக்குள் நுழைந்ததாக எண்ணிய என் மகன் , எங்க வந்தாலும் துணி துணி, உன்னை இனிமே எங்கேயும் கூட்டிட்டு வர மாட்டேன் என நான் அவனிடம் கூறும் டயலாக்கை, ஏதோ அவன்தான் என்னை கை பிடித்து அழைத்து வந்தது போல் பேசி , ஸ்பைடர் மேன் பொம்மை வாங்கி தராத பழியை தீர்த்துக் கொண்டான்..
ஒன்று மட்டும் புரிந்தது, நம் சமூக அமைப்பில் ஆதி காலத்திலிருந்தே விதைக்கப்பட்டதின்படி, சொல்லிக் கொடுக்காமலேயே ஆண் குழந்தைகளுக்கு அந்த ஆளுமை வந்து விடுகிறது மட்டுமல்ல ஒரு ஆண் சிறுவயதிலிருந்தே, தான் ஒரு ஆண் என்பதை சிறுசிறு விஷயங்களிலும் கூட காட்டிக்கொள்ளவே விரும்புகிறான்..

1

திருமணத்திற்கு முன் அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ இருக்கும் சிறு குழந்தைகளை கொஞ்சுவதும், அதன் சேட்டைகளையும் , சிரிப்பையும் ரசிப்பது என்றாலும் அப்படி பிடிக்கும்.. நாள் முழுவதும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டால் அதிலேயே முழு நாளும் நிறைவாய் கழியுமே என்ற ஆசையும் இருக்கும்.. ஒவ்வொரு நிமிடமும் குழந்தைகளின் சேட்டையை ரசித்துக் கொண்டிருக்கும் தாய் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று தோன்றும்..
இதை என் அம்மாவிடம் கூறும்போது, குழந்தை பிறந்ததும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வேலையும் வீட்டு வேலைகளுடன் சேரும்போது , யாராவது குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டாங்களா என்ற எண்ணம்தான் தோன்றும், நாள் முழுவதும் குழந்தையை ரசிக்க சூழல் இடம் தராது என சொல்வார்.. என்னால் அதை அப்போது ஏற்றுக் கொள்ள முடியாது..

எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரும் அதனுடைய பூ போன்ற உடலை வருடி, நாளெல்லாம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண் குளிர கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் பிறந்ததும் அவர்களுடைய முதல் இரண்டு வருடங்களுக்குண்டான வாழ்வில், அவர்களின் அத்தனை அழகிய குறும்புகளையும் இரசித்தேனா என்றால் பாதி கிணறு கூட தாண்டவில்லை என்ற அர்த்தம்தான் சொல்ல வேண்டி இருக்கும்.. எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் நிலைதான்.. வீட்டு வேலைகள் , மற்ற வேலைகள் என சூழ்ந்து இருக்கும்போது குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது சிரமம்தான்.. அதிலும் நவீன தொலை தொடர்பு சாதனங்களுக்கு நம் நேரத்தை பங்கு கொடுக்கும் நிலைக்கு அதன் ஆளுமை வேறு இழுத்து வைத்துள்ளது.. என் அம்மாவின் வார்த்தைக்கு நானே உதாரணமாகியும் போனேன்..
இரு குழந்தைகளுக்கும் வயது இடைவெளி குறைவு என்பதால் இரண்டாவது குழந்தையின் வளர்ச்சியையும் அணு அணுவாக ரசிக்க முடியவில்லை.. அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது..
சரி இப்போதும் சிறு குழந்தைகள்தானே என்ற என் நினைப்பும் உங்கள் நினைப்பும் அவர்களின் பேச்சை கேட்டால் தன் வாயை மூடிக் கொள்ளும்..

எடுத்துக்காட்டு இதோ - கேஜி 1 படிக்கும் மகனிடம் "ஸ்கூல்-க்கு இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வைக்கிறது" என கேட்க , அதை நான் சொல்ல மாட்டேன் , நீதான் வைக்கணும்" என கூறவே , "நான் வைக்கிறேன் , இன்னைக்கும் பாக்ஸ்-ல மீதம் வச்சுட்டு வந்தேன்னா பார்த்துக்கறேன்" என நான் கோபத்துடன் கூறினேன்.. அடுத்த நொடியே அவன் , நான் திரும்ப கொண்டு வராத மாதிரி நீ வைக்கணும்" என சொல்கிறான்.. "சரி, அப்போ என்ன வைக்க" என முதல் கேள்விக்கே திரும்ப போனால் அந்த முதல் பதிலையேதான் அவன் வாயில் வைத்திருக்கிறான்....இப்படி பேசினா, என்னதான் பண்ண முடியும்!!!!!

இளையவளோ அவனின் வாயை விட இரு மடங்கு நீளம் கூட்டி வாங்கி வந்திருக்கிறாள்.. என்ன சொன்னாலும் நாமே எதிர்பார்க்காத பதில்கள் வந்து நம்மை வந்து தாக்கும்... அவளுக்கு அப்பா என்றால் உயிர்.. என்னிடம் சில நேரம் காட்டும் கோபத்தையும், பிடிவாதத்தையும் மருந்துக்கும் கூட அவள் அப்பாவிடம் காட்ட மாட்டாள்.. சில நேரம் கையில் உள்ளதை கோபத்தில் என் மீது வீசி எறிவாள்.. இது போல அப்பாகிட்ட நடப்பியா, என கோபமாக கேட்டால் உடனே "அப்பாவுக்கு வலிக்கும்" என பதில் வரும்.. "அம்மாவுக்கு வலிக்காதா" என கேட்டால் "வலிக்கட்டும்" என ஒற்றை சொல்லை அலட்சியமாக வீசி விட்டு நிற்பாள்.. இது போல் அல்லாது பல அழகிய மலைக்க வைக்கும் பேச்சுகளும் அவளிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்..

இப்போதே குழந்தைத்தனம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பருவமோ என யோசிக்கும் அதே வேளையில் இந்த காலத்தில் இதுதான் குழந்தைத்தனம் என என் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அவர்களின் குறு(கரு)ம்பான பேச்சுகளை என்னை மறந்து ரசித்து வருகிறேன்...

பிரம்மாக்கள்

வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு....!!!!
...
தங்களை ரசிப்பவர்களின்
சூழ்நிலையை
வரமாக்குவதில்
இவை இரண்டுமே
பிரம்மாக்கள்....!!!!

பொக்கிஷம்

நினைவுகளை
சுமந்து நிற்கும்
எதுவுமே
பொக்கிஷம்தான் ...!!!!
...
மட்டுமல்ல
கால ஓட்டத்தில்
நி(இ)ல்லாமல் போன
அவை
விட்டு சென்ற
நினைவுகள் கூட
பொக்கிஷமே...!!!!!

வெள்ளி, 23 அக்டோபர், 2015

முதுமையில் பாதுகாப்பு

நம் பிள்ளைகள் கடைசி வரை நம் பிள்ளைகளாகவே இருப்பர் என்று நினைக்கும், நாளைக்கு முதியவர்களாக ஆகப்போகும் இன்றைய பெற்றோர்களுக்காக இந்த பதிவு...
இப்போது பல சேமிப்புத்திட்டங்கள் உள்ளன.. செல்வ மகள் சேமிப்பு திட்டத்திலிருந்து பல திட்டங்கள், குழந்தைகளின் படிப்பு, திருமணம் உள்ளிட்ட எதிர்கால நலனுக்கான சேமிப்புத் திட்டங்களே.. இங்கு பெரும்பாலும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை கூட ஒரு சேமிப்புத் திட்டமாகவே கருதும் மனோநிலை நமக்கு உண்டு.. ஏனெனில் நமக்கு எதுவும் ஆகாது என்று எல்லா மனிதர்களின் உள்மனதில் இருக்கும் எண்ணம்தான் இந்த மனநிலைக்கு காரணம்..
இப்படி பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பல வழிகளில் சேமிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு மட்டும் என தனியாக சேமிக்க மறந்து விடுகின்றனர்.. தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகள் பின்னாளில் தங்களை பார்த்துக் கொள்வார்கள் என்ற அதிக நம்பிக்கைதான் காரணம்.. (இப்போது நடக்கும் சில விஷயங்களை பார்த்ததும் அந்த நம்பிக்கை இப்போது பல பெற்றோர்களிடம் ஆரம்ப நிலையிலேயே தடுமாற்றம் கண்டிருப்பது வேறு விஷயம்.. ) இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் பெற்றோர்கள் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் காலத்திலேயே பிள்ளைகளுக்கு மட்டும் பங்குகளாக பிரித்து கொடுத்தும், ஓய்வூதியத்தையும் அதே போல் அவர்களுக்கு பிரித்து கொடுத்தும் விடுகின்றனர்..
அப்படி பங்கு கொடுத்த பின் ஏதேனும் ஒரு மகனிடமோ, மகளிடமோ தங்கி எஞ்சி இருந்த நாட்களை கழிக்க போகும்போது அவர்கள் மனதளவில் படும் இன்னல்கள் அதிகம்.. பிள்ளைகளுக்கு பாசம் இருந்தாலும் , இப்போது அவருக்கு பிரித்துக் கொடுத்த சொத்தில், அதாவது அவர்களின் சொத்தில் இருக்கிறீர்களென்ற எண்ணம் எழும்.. இந்த எண்ணம் அவர்களுக்குள் எழ காரணம் , சமமாக பிரித்துக் கொடுத்தார்கள், ஆனால் நாம் மட்டும்தானே பார்த்துக் கொள்கிறோம் என்ற ஒப்பீடே.... சில இடங்களில் மகன்கள் அவ்வாறு எண்ணாவிட்டாலும் மருமகள்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவின் குறைந்த அடர்த்தி அவர்களின் மூலம் உங்கள் மகன்களை பேச வைக்கும்..
பெற்றோர் ஒவ்வொரு பிள்ளகைளின் இருப்பிடத்துக்கும் பந்தாடப்படுவதற்கும் பிள்ளைகளின் "அவன் இருக்கிறான், நான் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டுமா"என்ற இந்த மன ஓட்டமே காரணமாக இருக்கும்.. எவ்வளவு கொடுமையான வாழ்க்கை நம் பெற்றோர்களுக்கு கொடுக்கிறோம் என்ற எண்ணம் அப்போது அவர்களுக்கு எழாது.. சொத்தின் பங்கீடு மட்டுமே அவர்களின் மூளையை ஆக்கிரமித்து இருக்கும்..
வசதியானவர்கள் எனில் இப்படி வைக்க முடியாத பட்சத்தில் முதியோர் இல்லங்களில் விடுகின்றனர்.. சிலரோ நிராதரவாய் பெற்றவரை/ பெற்றவளை வேறு ஊர்களில் நடுத்தெருவில் இறக்கி விட்டு விட்டு எவ்வளவு பெரிய பாவ மூட்டையை தூக்கி கொண்டு வருகிறோம் என்பதை அறியாமலேயே திரும்பி விடுகின்றனர்.. சொத்து சேர்த்து வைக்காத பெற்றோர்கள் சிலருக்கும் இக்கொடுமை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எல்லா பிள்ளைகளும் இப்படிப்பட்டவர்கள் என கூறவில்லை..ஆனால் இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறேன்..
சிறு வயதில் இருந்து பாசம், அரவணைப்பு என அனைத்தையும் ஊட்டி வளர்த்த பெற்றோரை கடைசியில் எப்படி இப்படி விட்டு விட தோனுகிறது என புரியவில்லை..
ஒரே குழந்தையை பெற்றவர்கள் பலரின் பாடும் இதுவே.. அதுவே அதுவே அது மகளாக இருப்பின் இது கொஞ்சம் குறைகிறது..
இதற்கெல்லாம் தீர்வு இதுதான்.....
பணியிலிருப்பவர்கள் தங்கள் ஓய்வூதியம் முழுவதை பற்றியும் உங்கள் வாழ்க்கைத்துணை தவிர பிள்ளைகளிடமோ/ உறவினரிடமோ பகிர்ந்து கொள்ளாதீர்கள்.. ஏனெனில் முழுத் தொகையையும் கூறினால் அது தீரும் வரை பிள்ளைகளோ/உறவுகளோ அவர்களின் அவசரத் தேவைகளுக்கெல்லாம் உங்களிடம் வந்து நிற்பார்கள்.. அந்த பணத்துக்காகவே உங்களை சுற்றி வரும் மனிதர்களையும், அதைக் கொடுக்காத போது காயப்படுத்தும் பிள்ளைகளையும் காண நேரும்.. ஒரு குறிப்பிட்ட தொகையை கூறி , அதில் கடன்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு எஞ்சிய பணத்தில் , பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் சேர்த்து பங்கு பிரித்து வைத்திருப்பாத கூறிக்கொள்ளுங்கள்.. அந்த பங்கை மட்டும் பிள்ளைகளுக்கு அப்போது கொடுங்கள்.. பின்னர் உங்கள் கையிலிருக்கும் பணத்தை உங்கள் காலத்துக்கு பின் பிள்ளைகளுக்கு செல்லுமாறு வழி வகை செய்து விடுங்கள்...
பிள்ளைகளுக்கு என்று சேமிக்கும் பழக்கம் இருப்பவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு என்றும் தனியாக சேமிக்கத் தொடங்குங்கள்... உங்கள் காலத்துக்கு பின் சொத்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு போகுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.. இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்வை தொடங்க போகும் நேரத்தில் அவர்களுக்கு பிரித்து கொடுக்கும் சொத்துக்கு/பணத்துக்கு இணையாக உங்களுக்கும் ஒரு பங்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த பணம், பின்னாளில் பிள்ளைகள் பார்க்காவிடிலும் உங்கள் உடம்பு உங்களுக்கு ஒத்துழைக்காத கடைசி காலங்களில் , உங்கள் இல்லத்திலோ / ஏதும் நல்ல முதியோர் இல்லத்திலோ எஞ்சிய நாட்களை நிம்மதியாக கழிக்க உதவும்.. ஏனெனில் பொருளாதாரம் மட்டுமே பின்னாட்களில் முதியோர் கஷ்டப்படுவதில் பெரும்பங்கு வகிக்கிறது...
எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.. ஓய்வு பெற்ற பின் தன் இரு மகள்களுக்கும் சரி விகிதத்தில் செய்தும் அவரின் பென்சன் பணத்திற்காகவும், அவர் தனக்கென வைத்திருக்கும் சிறு தொகைக்காகவும் சண்டையிட்டு இருவரும் அவரை வந்து பார்ப்பது கூட இல்லை.. பிள்ளைகளும் பெற்றோரை எந்நாளும் பணம் காய்க்கும் மரமாக எண்ணக்கூடாது..
இவற்றையெல்லாம் காணும்போது எனக்கு இக்காலத்திற்கு பொருந்தக்கூடிய இந்த வரிகள்தான் நியாபகத்திற்கு வரும்..
Your Parents are not emergency fund..
Your Children are not your retirement fund....
Build your own wealth.

பாடல்

கடந்து வந்த காலத்துக்குள்
தள்ளி
அன்றிருந்த மனநிலையில்
நனைத்து
வெளிப்படுத்த இயலா ...
ஒருவித உணர்ச்சி கலந்த
ஏக்கத்துடன் அச்சூழலை
கடக்க வைக்கிறது
தனிமையில் கேட்கும்
ஏதோ ஒரு பாடல்....!!!

வரம்

ஊடலில் கசிந்துருகும்
அக்கறையும்
அரவணைப்பில் வழிந்தோடும்
ஆளுமையுமே
இனி வரும் பிறவிகளிலும் ...
உன் கரம் பற்றும்
வரம் கேட்க
போதுமானதாக இருக்கிறது.......

வார்த்தைகள்

சில வார்த்தைகளை
மனம் அவ்வளவு எளிதில்
கடந்துவிடுவதில்லை......
எளிதில் கடந்து விடக்கூடிய ...
வார்த்தைகளோ
வார்த்தைகளாகவே
தெரிவதில்லை.....

நாளைய நிஜங்கள்

எண்ணங்களின் வீரியத்துக்கு
சாட்சிகளாக சில சம்பவங்களை ...
கண்ட பின் பல ஆசைகளை
எண்ணங்களாக மாற்றினேன்.....!!!

மாற்றிய எண்ணங்களை மூளை
என்னும் சேமிப்பு கிடங்கில்
வேறு சலன எண்ணங்கள் நெருங்காதவாறு
பாதுகாத்து வருகிறேன்.....!!!!
நிகழ்காலத்துக்கு மனம் செல்லாத
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதெல்லாம்
ஆசையாக எடுத்துப்பார்த்து வருகிறேன்
அந்த நாளைய நிஜங்களை......!!!!

நினைவலை

கடல் அலை போல்தான்
நினைவலைகளும்
ஒருநாளும்
உன்னை  தீண்டாமல்
திரும்பியதில்லை....!!!!

தீபாவளி - 2013

இந்த தீபாவளி, என் தாய் வீட்டில் கொண்டாட முடியலையே என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்து, நல்ல படியாக கடந்தது... தீபாவளிக்கு முன்னாடி நாள் (அவருக்கும் லீவ்) பலகாரம் சுட ஆரம்பிச்சன்.. அச்சு முறுக்கு சுடத்தான் ரொம்ப நேரம் (சுமார் 6 மணி நேரம்) எடுத்தது... அப்புறம் தேங்காய் பர்பி, ரவா லட்டு-ன்னு சீக்கிரம் வேலை முடிஞ்சது... அடுத்த நாள் என் கணவரின் விருப்பத்திற்காக போளி.... (பலகார லிஸ்ட் முடிஞ்சது...முதன் முதலா ...தீபாவளிக்கு என்று நான் பலகாரம் செய்தது இந்த தீபாவளிதான்..- ஆனால் காரமா எதுவும் செய்ய நேரம் இல்லாததால மிக்சர் மட்டும் கடையில் வாங்கிட்டோம்..) ரொம்ப தாமதமா (10 மணி)எழுந்த குழந்தைகளை (முந்தின நாள் பலகாரம் செய்யும்போது கூட இருந்ததால்) எண்ணெய் வைத்து குளிப்பாட்டி , புது துணி உடுத்தி நண்பர்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்கவும் அனுப்பி வைத்து..அடடா ஒரு தீபாவளி எபெக்ட் வந்துருச்சு.. (முக்கியமா அடுத்த நாள் நான் பலகாரம் கொடுத்தனுப்பிய நண்பர்கள் வீட்டிலிருந்து போன் செய்து எல்லாம் நன்றாக இருந்தது என்று சொன்னது அதிக நேரம் எடுத்து செய்த போது இருந்த களைப்பை எல்லாம் மறைக்க வைப்பதாக இருந்தது...)எங்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்க குடும்பத்துடம் வந்த நண்பர்கள் மூலம் அந்த நாள் மேலும் அழகாகியது... வீட்டில் கட்டி விடுவதற்காக அவர் வாங்கிய இரு பெரிய பலூன்களில் ஒன்று அவர் ஊத ஊத வெடித்ததில்(என்னா சத்தம் தெரியுமா) பட்டாசு வெடித்த திருப்தியும் கிடைத்தது... grin emoticon ஹஹாஹா.. மதியம் நண்பர்களுடன் இங்குள்ள சிவஸ்டார் உணவகத்தில் உணவு..... இரவு நண்பர்களுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பார்க்க (படம் கொஞ்சம் மொக்கைதான், இருந்தாலும் வெளியே சென்று பார்த்த திருப்தி ) சென்றிருந்தோம்.. ஆக இந்த தீபாவளி என் கடந்த தீபாவளிகளுக்கு சிறிதும் குறைவிலாமல் கொண்டாட்டத்துடன் இனிமையாக முடிந்தது...

அண்ணன்

இது 2014 பிப்ரவரியில்  எடுத்த புகைப்படம். என் மனதிற்கு நெருக்கமான சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று... ஒரு அண்ணாவோ, அக்காவோ நமக்கு உடன்பிறந்தவர்களாக இல்லையே என்ற ஏக்கம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு,, ஒருவேளை இல்லாததின் மேலும் கிடைக்காததின் மேலும்தான் நமக்கு ஆசை இருக்கும் என்ற உண்மையும் காரணமாக இருக்கலாம்..

சில நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும், மனக்காயம் பட்ட பொழுதுகளிலும் அண்ணன் இருந்திருந்த...ால் தட்டிக் கேட்டிருப்பானே என்ற எண்ணம் தலை தூக்கும்... அதே போல் பள்ளி நாட்களுக்கு பிறகு தூய நட்பை கொண்ட தோழிகள் கிடைக்காததாலோ என்னவோ, நம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளவும் , ஒரு தோழியாக நம்முடன் சேர்ந்து பயணிக்கவும் ஒரு சகோதரி இல்லை என்ற ஏக்கமும் இருந்ததுண்டு.... அப்படி உள்ளோரை பார்க்கும்பொழுது ஆசைப்பட்டும் இருக்கிறேன்.. நான் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரை நான் அண்ணா என்றுதான் அழைத்ததுண்டு, மனதிலும் ஒரு அண்ணன் என்ற ஸ்தானத்தில் வைத்ததுண்டு.. ஆனால் அலுவலக கேட் தாண்டிய பிறகு நாம் எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேக கண் கொண்டு பார்க்கும் சமுதாயத்தால் , அலுவலகத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காவோ, சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவோ அவர்களை அழைக்க முடியாத அளவிற்கு தடை போடப்பட்டிருந்தேன்.. இப்போது திருமணத்திற்கு பின் , நான் என் எண்ணங்களை , ஆசைகளை, வலிகளை பகிர்ந்து கொண்டு தோள் சாய ஒரு நல்ல கணவன் கிடைத்ததால், இப்போது அந்த ஏக்கத்திற்கு வழியே இல்லை.. ஆனால் திருமணத்திற்கு முந்தைய பருவத்தில்அந்த வெறுமையை உணர்ந்திருக்கிறேன் .

நான் இழந்ததை என் மகள் இந்த சிறுவயதிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறாள் அவளின் அண்ணனின் மூலமாக... சிறுசிறு சண்டைகள் போட்டாலும் தங்கையை அவன் யாருக்காகவும் , எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. எங்கேனும் செல்லும்போது அவளையும் உடன்கூட்டி வர அடம்பிடிப்பதாகட்டும், அவளை நடக்கவிடாமல் எங்களை தூக்க சொல்லும் அக்கறையிலாகட்டும், நாங்கள் அவளை கண்டிக்கும்போதோ அடிக்கும்போதோ எங்களிடம் காட்டும் கோபத்திலாகட்டும் ஒரு பாசமுள்ள அக்கறையுள்ள அண்ணன் வளர்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

டைரி

ஒவ்வொரு வருட ஆரம்பத்தின்போதும் கிடைக்கும் டைரிகளில் அந்த வருட நிகழ்வுகளையெல்லாம் எழுதி விட வேண்டும் என எழுத தொடங்குவேன்.. மிஞ்சி போனால் ஒரு வார நிகழ்வுகள் மட்டுமே அதில் குடி கொண்டிருக்கும்.. மற்ற நாள் தாள்கள் எல்லாம் வெறுமையாகதானிருக்கும்..  ஒரு சில டைரிகளில் மட்டும் அதன்  பிறகு ஓரிரு பக்கங்களில் ஏதுனும் வரவு செலவு கணக்கோ அல்லது முக்கிய விழாக்கள் குறிப்போடோ டைரி முடிக்கப்பட்டிருக்கும்..

டைரி எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவோடு கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் முக்கிய சம்பவங்கள், நினைவு கொள்ள வேண்டிய தருணங்கள் நிகழும்போதெல்லாம் அவற்றை  என் டைரியில் எழுத்துக்களாக நிரப்பிக் கொண்டிருக்கிறேன்...

ஒவ்வொரு நாளிலும் நடந்த சம்பவங்களை எழுதியே ஆக வேண்டும் என்ற இந்த கட்டாயத்திற்கு காரணம் என் நியாபக மறதிதான்.. பல மனிதர்கள் தந்த  ஏமாற்றங்களை , துரோகங்களை, அவமானங்களை எல்லாம் மறந்து விடுவேன், எப்போது தெரியுமா, அவர்கள் திரும்ப என்னிடம் பேச வரும்பொழுது.. அவர்கள் என்னிடம் சிரித்து பேசி விட்டால் அவேர்கள் முன் செய்த எல்லா கெட்டவைகளையும் மறந்து விடுவதில் எனக்கு நன்மையுமுண்டு, தீமையுமுண்டு..

நன்மை, அவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்கள் தரும் வலி அதன் பிறகு தெரிவதில்லை, அவை மனதிலிருந்து மறைந்து விடுவதால் நிம்மதியான மனசிலை சாத்தியமாகிறது..

தீமை, திரும்ப அவர்களிடம் இருந்தே அவற்றையே பெற நேரும்போது "எவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையே" , என என்னை நானே நொந்து கொள்ள வேண்டியும் உள்ளது..

மனக்காயங்களை தந்தவர்களை மன்னித்து மறந்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் ஏற்படுத்திய காயங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டைரி எழுதும் பழக்கம்..


இன்னொன்று கடந்த காலங்களில் நடந்த சில நல்ல சம்பவங்கள், சந்தோஷ நிகழ்வுகள் கூட  யோசித்தால் மட்டுமே நினைவில் வருவதே..

நான் இதுவரை எழுதிய டைரிகளில் பாதியளவாவது சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்தது 2001-ம் வருட டைரியில்தான்.. எனவே அவற்றை திரும்ப படித்து பார்ப்பதால் அந்த  வருடத்திய பல சம்பவங்கள் எல்லாம் மனதிற்கு அத்துப்படி.. கவலை, சந்தோஷம், நெகிழ்ச்சி என பல உணர்ச்சிகளை அந்தந்த நிகழ்வுகள் அந்த காலகட்டத்திற்க்கே நம்மை அழைத்து சென்று  ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் அப்படியே  அந்த உணர்ச்சிகளோடு நம் மனதை சேர்த்திருக்கும்.. அப்படி திரும்ப படிக்க நேரும்போது  அந்த காலகட்டத்தில் இருந்த மன ஓட்டதிற்க்கே மனம்  செல்வது ஒருவித சுகம்.. படித்து முடித்து வைக்கும்போது அந்த காலத்திலிருந்து இன்றைய காலகட்டத்திற்கு திடீரென அடி எடுத்து வைத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்..

பல முந்தைய நாட்கள், இந்நாட்களை ஒப்பிடும்போது ஏக்கத்தை கொடுப்பவையாகவே இருக்கக் கூடும்...

கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க ஒரு ஞாபகமூட்டி தேவை..

சில சினிமா பாடல்களும், சில இடங்களும், சில மனிதர்களும், சில நிகழ்வுகளும் ஞாபகமூட்டியாக இருந்து  பல சம்பவங்களை  நினைவூட்டினாலும், நம் வாழ்வை அலசி பார்க்க வைக்குமளவுக்கு ஒரு ஞாபகமூட்டி அவசியம் தேவைதான்....

"டைரி" அப்படி ஒரு சிறந்த ஞாபகமூட்டியாகவே எனக்கு படுகிறது...