பல நேரங்களில் ரோஹித்தின் பேச்சும் , புத்தி கூர்மையும், நியாபக சக்தியும் வியப்பில் ஆழ்த்தும்..ஒரு நாள் ஏதோ அசர அடிக்கும்படி அவன் பேசியதற்கு, "இந்த வாய் எங்க இருந்து வந்ததோ" என சொல்லி சலித்துக் கொண்டேன்.. "உன்கிட்ட இருந்துதான்" என உடனடி பதில் கிடைத்தது..
அவனின் சேட்டைகள் , பள்ளியில் அவனின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன்.. சில குறும்புத்தனமான பேச்சுகளை , குறை போல என் அம்மாவிடம் சொன்னாலும் கூட என் மனதுக்குள் ஒரு குதூகலம் இருக்கும்.. "என்கிட்டே இருந்துதான் இந்த வாய் வந்ததுன்னு சொல்றான்மா" என்றதும் , "பின்ன, நீ எப்படியெல்லாம் பேசின" என சொல்லி மடக்கினார்..
ஆனால் உண்மையில் நான் இவன் அளவுக்கு புத்தி சாதுர்யத்தோடு பேசிக்கொண்டிருந்தேனா என யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவில் வரவில்லை.. சில நேரம் வாக்குவாதம் செய்து அதில் எப்படியும் வேறு யாரும் திரும்ப ஒரு வார்த்தை வைக்காதவாறு திணறடித்து இருக்கிறேன்.. "நீ வக்கீலுக்கு படி, நல்லா வருவா" என்ற வீட்டில் யாரோ சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு , வக்கீலாக ஆவது போல கனவும் கூட கண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு தெரிந்து இது எல்லாம் 10, 11 வயதுக்கு மேல்தான்..
ஒரு நாள், உள்ளே ஸ்போக்ஸ் இல்லாத சக்கரத்தின் படத்தில் 17 எண்ணிக்கையில் ஸ்போக்ஸ் போட்டு வருமாறு அவனின் வொர்க் ஷீட்டில் இருந்தது.. உடனே "ஸ்கேல் எடுத்து வா , போடலாம்" என்றேன்.. பள்ளிக்கு ஸ்கேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் அதை டேபிள் டிராயரில் வைத்து இருந்தேன்..
அவன் அங்கு செல்லால் அவனின் பேகில் இருந்து இன்னொரு பென்சிலை எடுத்தான்.. புரியவில்லை போல என நினைத்து , "டேய், ஸ்கேல் எடு" என்றேன்.. "இரும்மா", என்றவன் நோட்டை வாங்கி பென்சிலை ஸ்கேலாக பயன்படுத்தி இன்னொரு பென்சிலின் மூலம் ஸ்போக்ஸ் போட்டான்.. இது எனக்கு தோன்றாத அளவுக்கு எவ்வளவு .......யா இருக்கேன்னு தோனுச்சு...நான் எந்த அளவுக்கு சமயோசித புத்தியில கீழ இருக்கேன்னு சொல்ல இந்த இன்சிடெண்டெ போதும்..
மட்டுமல்ல , யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் சொல்லும் குறைக்கோ , கிண்டலுக்கோ இப்படி பதில் சொல்லி இருக்கலாமோ என சிறிது நேரம் கழித்துதான் சிலருக்கு தோன்றும்.. அந்த சிலரில் நானும் ஒருத்தி.. அதனாலேயும் கூட அவனின் உடனடி பதில்களில் ஆச்சரியத்தில் மூழ்கி போகிறேன்...
அன்று ஒரு நாள், முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் இளையவள் தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தராததால் என்னிடம் "அம்மா , அண்ணாகிட்ட எனக்கு தர சொல்லுங்க " என சிணுங்கினாள்.. "நீ கேட்க கூடாது தங்கம், அண்ணா குடுத்துதான் நீ சாப்பிடணுமா , நீ எடுத்து சாப்பிடு , ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரே மாதிரிதான" என அவளிடம் கூறிவிட்டு "கவரை ரெண்டு பேருக்கும் நடுவுல வச்சு சாப்பிடு" என ரோஹித்திடம் கூறினேன்..
"நோ, அவ என்னை "மங்கி அண்ணா"-ன்னு அப்பவே கூப்பிட்டா, அதுக்கு சாரி சொன்னாதான் நான் கொடுப்பேன்" என அவன் கூறிய உடனேயே நிகிதாவும் "சாரி அண்ணா" எனக் கூறினாள்..
"சாரி, சாரி ன்னு சொல்லிட்டே எடுத்து சாப்பிடு , என் காதுல சாரி கேட்டுட்டே இருக்கணும்" என அவளிடம் கூறினான்.. நான் அவனிடம் கோபமாக, "அவதான் ஒரு டைம் சாரி கேட்டுட்டா இல்ல, அப்புறமும் ஏன் சாரி சாரி ன்னு சொல்லிட்டு இருக்கணும் , நீ சாரி சொல்லாத" , என சாரி-யை சொல்லத் தொடங்கியிருந்த நிகிதாவை நிறுத்தினேன்..
உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் , "அம்மா மட்டும் அன்னைக்கு 1,2,3 சொல்லிட்டே இரு , என் காதுல நீ சொல்றது கேட்டுட்டே இருக்கணும்னு சொன்னே இல்ல, நான் மட்டும் சொல்லக்கூடாதுன்னு சொல்ற" என சொன்னதும் ஆடிப் போய் விட்டேன்..
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் நடந்தது அது.. KG 1 வகுப்பு தொடங்கி முதல் நான்கு மாதங்கள் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமிருந்தது... அதன் பின் இங்கு வரும்போது இரண்டு மாத கோடை விடுமுறை பாதி நாட்களைத் தாண்டி இருந்தது.. இருந்த ஒரு மாதத்துக்குள் 3 மாத சிலபஸ்-ஐ அவனுக்குள் ஏற்றியாக வேண்டுமே என்ற நிலை.. அதில் ஆரம்பத்தில் அவனின் மறதியை பற்றி அப்போதைய நேர பதிவில் கூட கூறி இருப்பேன்..
எனவே அவனை ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என சொல்லி அடுக்களையில் மற்ற வேலைகளில் இருப்பேன்.. இப்போது இது யோசித்து பார்த்தால் ஒழிய நினைவுக்கு வராத நிலையில் இருக்கிறது எனக்கு.. ஆனால் அவனின் நொடி தாமதிக்காத இந்த நியாப சக்தி என்னை ஆச்சரியப்படத்தான் வைத்தது..
"அது அப்படி இல்ல தங்கம்" என என் வழக்கமான சமாளிப்பு கலந்த புரிய வைக்கும் வார்த்தைகளை அவனிடம் கொட்ட தொடங்கி இருந்தேன்....
-ஷார்ஜா
23-3-2016
23-3-2016