உறக்கத்தைத் தேடி
மூடிய கண்ணிமைகளுக்குள் நுழைந்து
அடர் இருள் பாதாள குகைக்குள்
பயணிக்கிறேன் ....
பயணம் ஆரம்பித்த சில நொடிகளில்
சில நினைவுகள் விளக்கென
மின்னத் தொடங்குகின்றன....
மின்னியதிலேயே அடர் மிகுந்த ஒளிக்குள்
மூழ்கி அதன் மெல்லிய வெம்மையும்
வண்ணக் கீற்றுகளுமான ஆடைக்குள்
என்னை இறக்குகிறேன்....
தரித்த ஆடையுடன் உறக்கத்திற்குள்
சீக்கிரமே நுழைவது
சில நேரங்களில் சாத்தியமாவதுண்டு....
அல்லாத நேரங்களில்
வெம்மையின் நிழலோ
வண்ணக்கீற்றுகளின் ஒட்டிவிடும் சாயமோ
தன் வழி வேறு ஒரு ஒளிக்குள் கடத்தி
பயணத்தை நீட்டித்து விடுகிறது...
நீட்டித்த பயணம் தரும் களைப்பில்
நினைவொளியில் மூழ்காமலேயே
உறக்கத்தை போர்த்தும் நாளுக்காக
ஏங்க ஆரம்பிக்கிறது மனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.