சனி, 18 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பும், போராட்டத்தின் கூடிய நாடகமும்

சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருதலுக்கு முன்பே , கூவத்தூர் விஷயத்தை பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதும்,   ரகசிய  வாக்கெடுப்பை நடத்தக்கோரிய திமுகவினர் மற்றும் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை ஏற்க மறுத்தபோதே சபாநாயகர் ஒரு பக்கம் சார்ந்திருக்கிறார் என்பது  புலப்பட்டு விட்டது..
பின் சிறிது நேரத்தில் திமுகவினர் ரகளை எனும் செய்தியை அறிந்து அந்த காட்சிகளை பார்த்தபோது  அவர்களின் வழக்கமான வெளிநடப்பும் நினைவில் வந்து  எதற்கு இப்போது தேவை இல்லாமல் இந்த ரகளை என தோன்றியது..
ஆனால் உடனேயே அந்த எண்ணம் மாறாத தொடங்கியது.. ஏனெனில் கட்டுக்கோப்பாக சசி ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளே அழைத்து வரப்பட்டனர் எனும் செய்தியை ஸ்டாலின் கூறியதாகக் கேட்டதும், அவர்கள் அனைவரும் ஆதரித்துதான் வாக்களிக்கப் போகின்றனர் என உறுதியாகி விட்டது..  ரகசிய வாக்கெடுப்பும்  நிராகரிக்கப்பட்ட நிலையில் (அதே நேரம்தான் கூவத்தூர் விடுதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட செய்தியும் வெளிவந்தது)இவர்களின் ரகளை  இன்னொரு நாளுக்கு வாக்கெடுப்பை ஒத்தி வைக்குமே என்ற எண்ணம்தான் காரணம்..
இன்னொரு விஷயம் , தற்போதைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமில்லாத எதற்காகவும்  போராட மாட்டார்கள்.. வாக்கெடுப்புக்கு முந்தின நாளே எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவு இல்லை என திமுக கூறியது.. ஆனால்  முன்பு கூறியது போல ஓபிஎஸ்-க்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பதை முந்தின நாள் கூறவில்லை.. ஏனெனில் இப்படி சொன்னால் சசி ஆதரவு எம்எல்ஏக்களில் சிலர்(எல்லோரும் வர மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்ததால் )  சற்று குழம்பி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வரலாம். அப்போது இரு பக்கமும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கலைக்கப்படலாம் என்பது திமுகவின் எண்ணமாக இருந்திருக்கும்.. எல்லா அரசியவாதிகளும் எந்தவொரு விஷயத்திலும் அரசியல் பண்ணத்தான் பார்க்கிறார்கள் என்பதால் திமுகவின் இந்த  எண்ணத்தில் பெரிதாக தவறு இருப்பதாய் தெரியவில்லை..
ஓபிஎஸ்-ஐ கட்சி சாராத மக்கள் கூட  திடீரென ஆதரித்ததன் பின்னணி இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சி அதிமுக-தான் ஆள வேண்டும் எனும் பட்சத்தில் சசி க்ரூப்-க்கு ஓபிஎஸ் எவ்வளவோ பரவாயில்லை, அடுத்த தேர்தல் வந்தால் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதால்தான்.. ஆனால் ஓபிஎஸ்-ன் கடந்த அரசுமுறை செயல்பாடுகள், சசி எதிர்ப்பு (தாமதமானாலும் கூட), ஜெ மரணம் குறித்த விசாரணை பலருக்கு பொதுமக்கள் பலருக்கு அவர் மீதுள்ள மதிப்பை இப்போது உயர்த்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
 ரகசிய வாக்கெடுப்பும், வாக்கெடுப்பு ஒத்திவைப்பும் மறுக்கப்பட்டதால் , எப்படியேனும் ஆட்சி கலைக்கப்பட்டு வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.. மக்களின் எண்ணமும் அதே எனும் பட்சத்தில் , மக்களில் பலரிடம்  அவரின் செயல் வரவேற்பைத்தான் பெற்றுத்தந்தது..
ஆனால் திமுகவின் இவ்வளவு ரகளைகளின் போதும் அதிமுகவினர் பொம்மை போல உட்கார வைக்கப்பட்டதில்தான் அவர்களின் அரசியல் சாணக்கியம் வெளிப்பட்டது.. அரசியல் மதிநுட்பம் அறிந்த யாரோ ஒருவரால் நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டு அழைத்து  வரப்பட்டிருக்கின்றனர்.. மேலும் சபாநாயகரும் ஒருதலைபட்சமாக இருந்ததால்  திமுகவின் எண்ணம்  பலிக்கவில்லை..
அதன்பின் இருமுறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு , வலுக்கட்டாயமாக திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.. கடைசியாக ஸ்டாலின் வெளிவரும்போது , அவரின்  சட்டை கசங்கி,  சட்டையின் மேல் பட்டன்கள் அவிழ்க்கப்பட்டு எல்லோரும் அவரின் கோலத்தை உற்றுநோக்கும்படி காட்சி அளித்தார்.. பொதுமக்கள் பலரின் மத்தியில் அவரின் மதிப்பு சடாரென உயர்ந்தது.. சட்டசபைக்குள்ளும் ஓபிஎஸ்-க்காக ஸ்டாலின் போராடினாரே என விவரம் புரிந்து கொள்ளாதவர்களின் ஆதரவும் பெருகி இருந்தது..
அதன்பின் ஆளுநர் மாளிகை செல்லப் போகிறேன் எனக்கூறிவிட்டு கிளம்பினார்.. பின் ஆளுநர் மாளிகை அருகே எல்லா பட்டன்களும்  அவிழ்க்கப்பட்டு  வண்டியிலிருந்து அவர் இறங்கிய கோலத்தைப் பார்த்ததும் , முன்பு அவர் கோலத்தை பார்த்திருந்த பலரும் ஏமாற்றத்தை உணர்ந்தனர்.. சட்டை பாக்கெட்டின் ரகசியமும் ஊடகங்களின்  வாயிலாக வெளிப்பட்டதும் அவரின் மதிப்பு சடாரென இறங்கிப்போனது..
பின் மெரினாவில் தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் உட்கார்ந்தார்.. உடனே நிறைய தொண்டர்களும் கூடி விட்டனர்.. சான் டிவி-யில் வேறு ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர் எனும் செய்தியை போட்டனர்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல பொதுமக்கள் கூடினால் இது கட்சி சார்ந்த கூட்டமாகத்தானே எடுத்துக் கொள்ளப்படும் என்ற கவலை வேறு எழுந்தது. அந்த எண்ணத்தை பிரதிபலிப்பது போல் சற்று நேரத்திலேயே சன் டிவியில் ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான திமுகவினர் கூடி இருக்கிறார்கள் என்ற செய்தியும் வாசிக்கப்பட்டது.. சிறிது நேரத்திலே கைது நடவடிக்கைகளால் அனைத்தும் மறைந்து போனது..
 2009 -ல் திமுக மீது எழுந்த ஒட்டுமொத்த வெறுப்பை சமீப காலங்களாக ஸ்டாலின் தன்  நடவடிக்கைகளால் மறக்க வைத்து நல்லபடி வளர்ந்து வந்தார்.. நேற்றும் சட்டசபை வளாகத்திற்குள் திமுகவினரின் வாகனங்கள் அனுமதிக்கப்படாதது , சட்டசம்பையில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் என தன் மதிப்பை கூட்டி இருந்தார்..
ஆனால் ஊடகக் கண்கள் நிறைந்த இவ்வுலகில் எதை செய்தாலும் மறைவாக,சரியாக செய்ய வேண்டுமென தளபதிக்கு புரியவில்லை.. தன்னை உற்று நோக்கும் கண்களை பற்றிய சமயோசித புத்தி இல்லாத காரணத்தால் உண்மைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய மக்களின் மனதில் தன்னை பற்றிய எண்ணத்தில் கொஞ்சம் அதிகமாகவே சறுக்கியிருக்கிறார் தளபதி...

-19-2-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.