தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதே மனதில் சொல்ல முடியாத பாரம்..
அந்த பாரத்தைக் கொடுத்தது சற்று முன் கனவில் வந்த சுகுணாவின் நினைவுதான்...
அந்த பாரத்தைக் கொடுத்தது சற்று முன் கனவில் வந்த சுகுணாவின் நினைவுதான்...
கனவு முடிந்து விழித்து இருந்தால் இந்த பாரம் இருந்திருக்காதோ எனத் தோன்றியது..
சுகுணா என் பள்ளி வகுப்புத் தோழி.. பள்ளியில் ஒன்றாக படித்தவர்களில் நினைவில் இருக்கும் சிலரில் ஒருத்தி.. என் கூச்ச சுபாவத்தால் பள்ளி நாட்களில் எனக்கு என்று நட்பு வட்டம் மிக குறைவு.. அந்த குறுகிய நட்பு வட்டத்தில் இவளும் ஒருத்தி..
ஆறாம் வகுப்பில் இருந்து சேர்ந்து படித்தோம்.. 8-ம் வகுப்பு வரை மட்டுமே நெருங்கிய பழக்கம் இருந்தது.. பின்வந்த இரு ஆண்டுகளும் வகுப்பில் இடம் மாறி உட்கார வைக்கப்பட்டதால் அந்த நெருக்கம் கொஞ்சம் தளர்ந்தது..
அதுவரை என் வீட்டுக்கு வரும் 3 தோழியருள் நிச்சயம் அவள் இருப்பாள்.. அவள் வீட்டுக்கும் சிலமுறை சென்றிருக்கிறேன்.. அவள் அப்பா அம்மா தங்களின் செல்லத்தை மொத்தமாக அவளுக்கே கொடுக்குமாறு வீட்டுக்கு ஒரே பெண்ணாயிருந்தாள்..
கடைசியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வாங்க சென்றபோது நேரில் பார்த்து பேசியதுதான்..
பின் சில வருடங்களுக்கு முன் மாலை நேரத்தில் உறவினர்களுடன் சாலையைக் கடந்து கொண்டிருந்த அவளை பேருந்துக்குள் இருந்து பார்க்க நேர்ந்தது.. இறங்கி சென்று பேசும் ஆசை இருந்தாலும் ,பேருந்தில் நிரம்பியிருந்த கூட்டமும், இந்த பேருந்தை விட்டால் இனி அடுத்த பேருந்துக்கு மணிக்கணக்காக காத்திருக்க வேண்டுமே என்ற நினைப்பும் என்னை இறங்க விடவில்லை..
அதற்கு முன்னமே தொடர்பில் இருந்த சில தோழிகளின் வழியாக அவள் படித்துக் கொண்டிருந்த படிப்பை அறிந்திருந்தேன்.. பின் அதே தோழி மூலமும் மற்றும் பத்தாம் வகுப்பில் அவளுக்கு நெருக்கமாகியிருந்த இன்னொரு பெண்ணின் மூலமும் அவளின் காதல் திருமணத்தையும், வேலையையும் , குழந்தையை பற்றியும் அறிந்து கொண்டேன்..
அவளின் தொலைபேசி எண்ணை கேட்டும் அவர்களிடம் இல்லாததால் பெற இயலவில்லை..
மதிய உணவு இடைவேளைகளில் சேர்ந்து சென்று வாங்கும் வேக வைத்த மரவள்ளி கிழங்கு ,உப்பு மிளகாய்த்தூள் தூவிய மாங்காய் , அவள் வீட்டிலும் பள்ளியிலும் கரைந்த சில நிமிடங்கள், பள்ளியில் பேசிய சில வார்த்தைகள் இவற்றை தவிர்த்து வேறு எதுவும் நினைவில்லை..
அவளைப் பற்றிய நினைவை அவ்வப்போது கிளறுவது அவள் தோன்றும் கனவுகள்தான்.. அத்தனை கனவிலும் பள்ளி தேர்வுகளில்தான் இருவரும் சந்தித்து உரையாடி இருப்போம்.. இது என்ன மாயமென புரியவில்லை..
கனவில் அவள் வருகின்ற நாளெல்லாம் அவளை இனி நேரில் சந்திக்க முடியாதோ என்ற எண்ணம் மனதை கலங்க வைத்து கண்களையும் கொஞ்சம் கலங்க வைக்கும்..
இத்தனைக்கும் அவளை விட என்னிடம் நெருங்கிப் பழகிய தோழிகளும் பிரிந்துதான் உள்ளனர்.. ஆனால் எங்களின் இருப்பை, நலத்தை பரஸ்பரம் தொலைபேசி மூலமாவது பேசித் தெரிந்திருந்தோம்.. சுகுணாவிடம் பேசக் கூட இயலவில்லையே என்ற நினைப்பு கூட பார்த்து பேச வேண்டும் என்ற தவிப்புக்கு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது..
சுகுணா மட்டுமல்ல ,தற்போதுள்ள நிலை எதுவுமே அறியாத இன்னும் இரண்டு மூன்று பள்ளி, கல்லூரி தோழிகளின் நினைவும் கனவுகளின் மூலம் கிளப்பிவிடப்பட்டு மனதை பரிதவிக்க வைக்கும்.. பின் இயல்பு வாழ்க்கை அந்த பரிதவிப்பை சில நிமிடங்களிலேயே நிறுத்தி வைக்கும்..
முகநூல் வந்ததற்கு பின்னர் அவளையும் , மற்ற தோழிகளையும் அதன் மூலம் தேட ஆரம்பித்தேன்..
ஆண்களென்றால் தங்கள் பெயர் அல்லது அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்திருப்பர்.. அவர்களின் அப்பாவின் பெயரை தெரிந்து வைத்திருந்தால் தேடுவது கடினமில்லை.. ஆனால் பெண்களை தேடுவதில்தான் சிரமம் உண்டு.. அதுவும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு விட்டு போன பெண்களை தேடுவது மிக சிரமம், காரணம் நமக்கு தெரியாத அவர்களின் கணவரின் பெயரை பின்னால் இணைத்திருப்பதுதான்..
இருந்தும் கடைசியாக சந்தித்த தோழி அவளின் பணியிடத்தை கூறியதை நினைவில் வைத்து தேடினேன்.. நான்காவது முறையோ, ஐந்தாவது முறையோ தேடும்போது அவள் கிட்டினாள்.. அந்த நிமிட சந்தோஷம் சொல்ல இயலும் சொல்லில் அடங்காது..
உடனே நட்பு அழைப்பை அனுப்பி , இன்பாக்ஸ்-ல் நலம் விசாரிக்கவும் செய்தேன்.. அவளும் பார்த்தவுடம் பதிலளித்தாள்.. அவளுக்கு தங்களின் புகைப்படங்கள் எதுவும் அவள் சுவற்றில் போடும் வழக்கமில்லை.. இன்பாக்ஸ்-க்கு அனுப்பினாள்.. இப்படி அவளின் குடும்பத்தையும் , என் குடும்பத்தையும் புகைப்படங்களில் பார்த்துக் கொண்டோம்.. தொலைபேசி எண்கள் பரிமாற்றப்பட்டு , தொலைபேசியிலும் பேசினோம்...
இரு நாட்கள் இருந்த அந்த குதூகல உணர்வு பின் மறைந்து போனது.. ஆரம்பத்தில் ஏதாவது பண்டிகையின் போதோ , பிறந்த நாட்களின் போதோ அனுப்பும் வாழ்த்துக்களின்போது மட்டுமே தொடர்பில் இருந்தோம்... இப்போது முகநூல் காண்பிக்கும் அவள் பிறந்தநாளில் ஒரு வாழ்த்தை போடுவதுடன் தொடர்பு ஒரு எல்லையில் நிற்கின்றது..
அவளை பார்த்ததும் நிறைய பேச வேண்டும் என தேக்கி வைத்திருந்த வார்த்தைகள் எதுவும் என்னால் வெளியிடப்படவே இல்லை.. பேச தோன்றவே இல்லை.. அந்த துடிப்பு அவளை கண்டதும் திருப்தியில் மறைந்தனவோ என்னவோ...
கனவுகளின் மூலம் என்னை பல நாட்கள் கலங்கடித்த தோழி, இன்று எல்லோரையும் போலவே என் நட்பு பட்டியலில் சாதரணமாக இருக்கிறாள்..
இப்போதெல்லாம் அவள் என் கனவில் வருவதேயில்லை..
இப்போது கனவில் எப்போதாவது தோன்றி ஏக்கத்தை கிளப்பும் இன்னொரு தோழியை தேடிக்கொண்டே இருக்கிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.