சனி, 9 ஏப்ரல், 2016

பயணத்துளி - 1

இம்முறை இந்தியா சென்று இரு நாட்களில் திரும்ப வேண்டிய சூழல்.. தனியாகவே சென்றிருந்தேன்.. தனிமையில் செல்லும் பயணங்கள் ஆரம்பத்தில் இருந்த மனிதர்களின் மீதான பயத்தை இப்போதெல்லாம் கொடுப்பதில்லை.. மனதில் இருந்த அச்சமும், கூச்சமும் கொஞ்சம் விலகி எதுவென்றாலும் எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்று மாறி இருக்கும் மனநிலை கூட காரணமாக இருக்கக்கூடும்..
இன்னொன்று, எவரிடமும் எளிதாகப்பேசி பழகி விடும் குணமும் கூட காரணியாக இருக்கலாம்.. சில வருடங்களுக்கு முன் கோவையிலிருந்து தனியாக நாகர்கோவில் சென்ற பயணத்தின்போது ஒரு பெரியவர் அறிமுகமானார்..இப்போது எங்கள் குடும்பத்துடனும் நட்பில் இருக்கும் அந்த பெரியவரின் அறிமுகத்தையும், அந்தப் பயணத்தை பற்றியும் எழுத வேண்டுமென்றால் தனியாகப் பதிவு போட வேண்டி வரும்.. போட வேண்டிய நாள் வரும்போது பதிவிடுகிறேன்..
இப்போது தனியாக செல்லும்போது பக்கத்து இருக்கையில் ஒரு பெண் இருக்க வேண்டுமே என்ற சின்ன வேண்டுதல் மட்டுமே இருந்தது.. கொஞ்சம் அசவுகரியமாக உணர மாட்டோமே என்றுதான்.. ஆனால் போகும்போதும் வரும்போதும் அது வாய்க்கவில்லை.. தன் ஜன்னல் ஒர இருக்கையை எனக்குத்தந்து அறிமுகமான ஒரு தம்பியின் இயல்பான பேச்சு இந்தியா செல்லும்போது அசவுகரியத்தை உணர வைக்கவில்லை..
வரும்போது எனக்குக் கொடுக்கப்பட்ட இருக்கையை பார்த்ததும், "ஜன்னல் ஒர இருக்கைதான் , கொஞ்சம் தலையை அந்தப்பக்கம் சாய்த்துக் கூட தூங்கலாம்"என நினைத்துக் கொண்டே உள்ளே வர அந்த இருக்கையில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்தார்.. அதற்கு அடுத்து அப்பெண்ணின் கணவர்.. நான் மூன்றாம் இருக்கையில் அமர்ந்தேன்..
கைக்குழந்தையுடன் ஒரு பெண் நடுவிலோ ,கடைசி இருக்கையிலோ உட்கார்ந்து இருப்பது சங்கோஜம் கொடுக்கும் என உணர்ந்து இருந்தும், என்னிடம் கேட்டு உட்கார்ந்து இருக்கலாமே என்ற வறட்டு எண்ணம் எட்டிப் பார்க்க அந்த ஆணிடம் என் பயணச்சீட்டை காண்பித்து "இது அந்த இருக்கைதானே" என்றேன்.. அவர் "இல்லை, உங்களுக்கு இந்த இருக்கைதாங்க" என்றார்.. குழப்பத்துடன் மேலே போட்டிருந்த இருக்கைகளின் வரிசையை பார்த்ததும் நான் நினைத்தது தவறெனப் புரிந்தது..
அந்த ஆண் அடிக்கடி தன் கைபேசியை எடுத்து குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டும், தன் மனைவியிடம் காட்டிக்கொண்டும் இருந்தார்.. இன்னொருவர் புகைப்படங்களை அனுமதியின்றி பார்ப்பது அநாகரீகம் என்பதால் பார்க்காமல் திரும்பி இருந்தாலும்,அப்படி திரும்பும்போது என் கண்ணில் பட்ட புகைப்படங்களை வைத்து சொல்கிறேன்..
இதற்கு இடைப்பட்ட சமயங்களில் ,குழந்தைக்கு பசி எடுக்கும்போதெல்லாம் அந்த பெண் குழந்தைக்குப் பாலூட்ட , இவர் தன் மனைவியை கொஞ்சம் மறைத்தவாறே முன்புறம் குனிந்து அமர்ந்திருப்பார்.. பின் குழந்தை குடித்து முடித்ததும் , குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்து பின் தன் மடியில் கிடத்துவார்.. சிறு குழந்தை ஆதலால் அடிக்கொருமுறை முறை பசிக்கு அழும்போதும் தன் மனைவியிடம் குழந்தையை கொடுப்பார்.. தான் முன்புறம் குனிந்து மனைவியை மறைத்திருப்பார்..
அந்தப்பெண்ணின் முகம் தூக்கம் இல்லாததும் சேர்த்து சோர்வாக இருந்தாலும் பிள்ளைக்கு பசிக்கும்போதெல்லாம் எவ்வித சலிப்பும் இல்லாமல் குழந்தையை வாங்கிக் கொள்வதெல்லாம் பார்த்தபோது ஒரு பரிபூரண தாய் தந்தையை கண்ட திருப்தி இருந்தது.. குறிப்பாக மனைவியின் நிலை அறிந்த நல்ல கணவனை...
இதற்கு முன் என் மகன் கைக்குழந்தையாக இருந்தபோது விமானத்தில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன்.. அவனை மடியில் கிடத்திக் கொண்டே இருக்க வேண்டும், நானாகக் கொடுத்தால்தான் அவனை மடியில் வாங்கி படுக்க வைத்துக் கொள்வார்..அவனுக்கு பசிக்கும்போது எதிரில் யாராவது பார்க்கிறார்களா என அச்சத்துடனேயே அந்த சந்தர்ப்பங்களைக் கழிக்க வைத்தவாறு நிம்மதியாக சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் நினைவு வந்தது.. காரணங்களையும் , இந்தக் காட்சிகளையும் அவரை திட்டுவதற்கு ஏற்ப மனதில் அடுக்கி வைத்துக் கொண்டேன்..
இறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது , அக்குழந்தை முழித்து இருந்தது.. அதற்கு வேறு துணி உடுத்தி அந்தப்பெண் குழந்தையை தன் கணவரிடம் கொடுக்க , அவர் மடியில் நிற்க வைத்தவாறு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்.. அழகான அக்குழந்தை என்னைப் பார்த்து அடிக்கொருமுறை அழகாக சிரிக்கவும் செய்தது.. குழந்தைக்கு மை எதுவும் போடாமல் விட்டிருந்தனர்..
அந்த ஆணிடம் "குழந்தை பேர் என்னங்க " எனக் கேட்டேன். அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.. "குழந்தைக்கு நெற்றி ஓரத்துலயாவது சின்ன கருப்பு பொட்டு வைங்க" எனக்கூறினேன். சரி எனத் தலையாட்டினார்.. பின், "சாரி, என் சீட் அதுவாவே இருந்தாலும் கூட நான் இங்க உட்கார்ந்து, உங்க மனைவியை அங்க உட்கார வச்சு இருக்கறதுதான் உங்க மனைவிக்கு கன்வீனியன்ட்டா இருந்து இருக்கும்.. நான் அப்போ கேட்டதுக்கு சாரி" எனக் கேட்டுக்கொண்டேன்.. உடனே அவர் பரவாயில்லை என தலையாட்டினார்.. (உண்மையில் நான் பேசியது அவருக்கு கேட்டதா எனத்தெரியவில்லை , ஏனெனில் நான் பேசியது எனக்கே கேட்காதது போல் காது சிறிது நேரத்திற்கு அடைத்திருந்தது..)
பின் அவர்கள் குழந்தையை ஜன்னல் ஓரம் பார்க்க விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.. எனக்கு சலிப்பாக இருந்தது.. சின்ன பிள்ளையை எவ்வளவுதான் புகைப்படம் எடுப்பார்கள்..
இதே போல்தான் முந்தின நாள் டவுன் ஹால் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது.. சென்று திரும்பும்போது பேருந்தில் எனக்கு இரு புறமும் இருந்த பெண்கள் மொபைல்களுடனேயே வாழ்ந்து கொண்டு இருந்தனர்.. ஒருவர் மெல்லிய சத்தத்தில் பேசிக்கொண்டே வந்தார்.. இந்தப்பக்கம் அமர்ந்திருந்த பெண் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்.. அரை மணி நேரம் கடந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும் வரை அவர்கள் தங்கள் பக்கத்தில் உள்ளவர்களை உணரவில்லை.. அதன் பின்னும் அவர்கள் இறங்கும் வரையே தன்னை சுற்றி உயிர்களும் , சூழலும் உள்ளதை அறிய மாட்டார்கள் எனப் புரிந்தது..
"சே, என்ன பெண்கள் , இந்த மொபைல் எப்படியெல்லாம் சீரழிக்குது" என அப்போது நினைத்த நினைப்பு இங்கு குழந்தையை வைத்து அவர் புகைப்படங்களாக எடுக்குக்கொண்டிருக்கும்போது திரும்பவும் தோன்றியது...
ஏனோ, நான் இது போல அலப்பரைகள் பண்ணிக்கொண்டிருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்களும் இது போல் நினைத்து இருப்பார்களோ என்ற எண்ணம் இதை எழுதும்போது கூட பெரிய குற்ற உணர்ச்சியாகத் தோன்றவே இல்லை.. நாமும் இது போல்தானே இருந்தோம் என்று கொஞ்சம் சகித்துக் கொள்ள மட்டுமே முடிகிறது..
வயது மாற மாற எண்ணங்களும் மாறும் போல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.