புதன், 18 மே, 2016

அரசியல் தெளிவு

வாழ்க்கையில் இன்று கற்றுக் கொண்ட  விஷயம், இனி இந்த அதிமுக,திமுக உடன்பிறப்புகளிடம் மட்டும் அரசியல்  பற்றி  பேசவே கூடாது என்பதுதான்..

கட்டாயமாக எல்லோரும்  ஒட்டு போட வேண்டும் மற்றும் இதுவரை ஆண்ட கட்சிகளைத் தவிர ஆளாத கட்சிக்கு(எதுவாகினும்-சுயேட்சைகள் உட்பட) வாக்கு அளித்து ஒரு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்,  அப்படி நீங்கள்  ஒட்டு போடுகிற கட்சி ஜெயிக்கிறதோ, இல்லையோ அது பெரிய விஷயமில்லை.. ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகள் திரும்பவும் வந்து,முன்பு செய்த அராஜகங்களை, ஊழலை , துரோகத்தை இனியும் செய்தால் அதில் நம் பங்கு  குற்ற உணர்ச்சி இல்லை என்று திருப்தியாவது பட்டுக்கொள்ளலாம்-  இரண்டு நாட்களுக்கு முன்பே  இப்படி எல்லாம் போட்டு பதிவொன்றை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்..

ஆனால் பாருங்கள், நாம் கருத்தோ அறிவுரையோ சொல்வதற்கு முன் நாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற நியதி புரிந்திருந்ததால் , நான் பதிவு செய்யவில்லை.. ஏனெனில்  எங்கள் இருவருக்கும் ஓட்டு ஸ்லிப் ஏதும் கொடுக்கப்படவில்லை  (கடந்த தேர்தலின்போதும் எங்களின்  பெயர் விட்டு போயிருந்தது) என்ற தகவல் , இப்போது அங்கு ஓட்டு போடுவதற்காக செல்ல இயலாத சூழ்நிலை  , வசதி வாய்ப்பு என   எல்லாம் சேர்ந்து ஓட்டு போட செல்லவில்லை..

நான் ஓட்டு போடாம எப்படி மற்றவர்களை ஓட்டு போடுங்க என்று சொல்வதென விட்டு விட்டேன்..

இரு நாட்களுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக எழுதி  இருந்த ஒரு நண்பருக்கு,என்னை போலவே ஒரு திமுக அதிமுக ஆட்சி திரும்ப அமைய வேண்டாம் என நினைக்கும் ஒரு நண்பர் "திமுக செஞ்சது மறந்துட்டீங்களா" எனக் கேட்டார்..  அதிமுக இப்படி செஞ்சாங்களே நீங்க அங்க கேள்வி கேட்க முடியுமா என்ற ரீதியில்தான் இருந்ததே தவிர திமுக செய்ததை ஒத்துக்கொள்ளும் மனநிலை அவரிலிருந்து  எட்டிப்பார்க்கவே இல்லை.. பதில் சொல்ல இயலாமல் போகவே நீங்க அதிமுக தான் , அதான் இப்படி பேசறீங்க என கேள்வியை மாற்றி போட்டு அதிலேயே இருந்தார்.. இப்படி ஒருசிலர்தான்  இருப்பார்கள் என நினைத்திருந்தேன்..

Exit Poll கருத்துக்கணிப்பை பார்த்ததும் கொஞ்சம், இல்லையில்லை நிறையவே ஏமாற்றம் இருந்தது.

ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவு வட்டத்தில் நெருங்கியவர்களிடம் அவர்கள் ஓட்டு போட்ட கட்சிகளை பற்றி நானே சிறு கருத்துக்கணிப்பு நடத்த துவங்கினேன்.. ,மநகூ , நாம் தமிழர், திமுக,அதிமுக, பிஜேபி, பாமக என சரிசமமாகத்தான் இருக்கிறது.. நிறைய இடங்களில் இழுபறி இருக்கும் என்றும் தெரிகிறது..

அதிமுக,திமுக இரு கட்சிகளை தவிர்த்து ஓட்டு போட்டதாக சொன்னவர்களிடம் ஒரு ஸ்மைலியை அனுப்பி விட்டு கடந்திருக்கிறேன்.. ஆனால் இரு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டவர்களிடம் (அரசியலில் தீவிர நாட்டம் இல்லாதவர்கள்) கேட்கப்போன போது கிடைத்த சில பதில்களோ, எங்க ஏரியா-ல  அதிமுக எல்லோருக்கும் பணம் கொடுத்துருக்காங்க..அதனால் திமுக-க்கு போட்டேன் , வீட்ல போட சொன்னாங்க அதனால் போட்டேன் என்பது போல அற்ப காரணங்களே...

நாமும் இப்போதுதானே அரசியலை உள்வாங்கி இருக்கிறோம், கடந்த தேர்தல்களின்  போது ஆழ யோசிக்காமல் பெற்றோர் சொன்னதற்காகவும், இருக்கிற ஆட்சி போக வேண்டும் என்ற இது போல அற்ப காரணங்களுக்காகத்தானே போட்டிருக்கிறோம் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன்..

கட்சியில் தீவிரமாக இருப்பவர்களிடம் கேட்கப்போனபோதுதான் வெறுத்துப்போனது..  அதிமுக நண்பரிடம் ஒரு தப்பை  சொல்லி கேட்கப்போனால் திமுக இதை செய்ததே என இன்னொன்றை எடுத்து நீட்டுகிறார்கள்.. திமுகவிடம் அவர்கள் செய்த தப்பை கேட்கப்போனால் அதிமுகவின் தப்பை வாயிலேயே முன்னெச்சரிக்கையாக  வைத்து இருக்கிறார்கள்.. இப்படி , மது விலக்கிலிருந்து ஆரம்பித்து 2G , சொத்துக்குவிப்பு, 570 கோடி , சாதிக் பாஷா என வந்து  நிற்கிறது அவர்களின் குற்றச்சாட்டு பட்டியல்.. ஆக மொத்தம் ஒன்றுதான் தெளிவாக புரிந்தது, அவரவர் கட்சி தலைமை செய்த தவறை இருவருமே ஒத்துக் கொள்வதில்லை.. அந்த கட்சிகளைத் தீவிரமாக ஆதரிக்கும் எல்லோருமே இப்படிதான் இருக்கிறார்கள் என புரிந்தது..

இரண்டு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கற அளவுக்கு சம்பாதிச்சு இருக்காங்களே ,  நாம வருஷம் முழுவதும் மாடு மாதிரி உழைச்சா கூட அதுல ஒரு பங்கை சம்பாதிக்க முடியுமா "என்ற எண்ணம்  ஏன் இவர்களுக்கு எழவே மாட்டேன் என்கிறதென்று  இதுவரை எனக்கு புரியவில்லை.. எந்த அளவுக்கு அவர்கள் கொள்ளை அடித்திருந்தால் இந்த அளவுக்கு ஒட்டுக்கென்று பணத்தை அள்ளித் தெளிக்க முடியும் என்றும் யோசித்து பார்ப்பதில்லை.. இதெல்லாம் யார் பணம்?, நமக்கு அடிப்படை வசதிகளாக மாறி வந்து இருக்க வேண்டிய பணம்தானே? திரும்பவும் ஓட்டு போட்டு கொள்ளை அடிக்க விடுகிறவர்களை என்ன சொல்வது? அரசியலில் இருப்பவர்கள் ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஆதாயம் உண்டு என்று சொல்லலாம்.. அரசியல் சாராத அல்லது தொண்டர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களும் இப்படி செய்தால் நாடு எங்கு தாங்கும்?

இதில் என் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமோ , இந்த இரு கட்சிகளையும் குறிப்பிடத்தகுந்த  நல்ல காரணங்களை குறிப்பிடாமல் ஆதரிக்கிறவர்களைப் பார்க்கும்போது , நீங்க இன்னும் வளரணுமே என்று சொல்லத் தூண்டுமளவுக்கு  வந்திருக்கிறது..  அமாம் அவர்கள் இன்னும் புத்தி அளவில் வளரத்தான்  வேண்டியிருக்கிறது..

(குறிப்பு : நான் எந்த குறிப்பிட்ட கட்சியையும் ஆதரிப்பவளில்லை.. மாற்றாக வேறு எந்த கட்சிக்காவது ஓட்டு போட்டிருக்கலாமே என்று நான் சொன்னதிலிருந்தே இதை புரிந்திருப்பவர்கள் மிக மிக புத்திசாலிகள் :) )

-18-5-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.