செவ்வாய், 16 அக்டோபர், 2018

1

பேருந்துக்கு காத்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் குரலின் சத்தம் என்னை திரும்பி பார்க்க வைத்தது.. என் அருகில்தான் நின்று கொண்டிருந்தார்கள்..அம்மாவும் பெண்ணும் போல..

"அங்க போய் வாங்கிட்டு வரணும், பஸ் போயிடும், வேணும்னா சொல்லு, தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றேன், பஸ் போனாலும் போய்டும் .. போகணுமா , இல்லேன்னா பேசாம இருங்க" எனும் அர்த்தத்தில் அப்பெண் உடனிருந்த அம்மாவிடம் காட்டமாக கூறிக்கொண்டு போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்..

தண்ணீருக்கான  தவிப்பு  அந்த அம்மாவின்  முகத்தில் தெரிந்தது..  நானாக இருந்தால் ஓடி சென்று வாங்கி வந்திருப்பேனே என ஒரு எண்ணம் தோன்றினாலும் ,எனக்கு வீட்டில் பெரிதாக எந்த வேலையும் இருக்காது, ஆனால் அவர்களுக்கு  அப்படி அல்லவே என தோன்ற, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்..

என் தண்ணி பாட்டிலில் பாதியளவு தண்ணீர் இருந்தது.. எடுத்துக் கொடுக்கலாம் என  நினைத்தாலும் , ஏதாவது நினைப்பார்களோ என்று , நான் குடிப்பதற்கு எடுப்பது  போல் எடுக்கலாம்   , அவர்கள் கேட்டால் கொடுக்கலாம் என பாட்டிலை வெளியே எடுத்து நான் ஒரு மிடறு குடித்துக் கொண்டே அந்த அம்மாவை பார்த்தேன்.. அவரோ பேருந்து வருகிறதா என அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.. பின் தவிப்புடன் உள்ளே வைத்தேன்..

மனமோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. தாகத்தின் தவிப்பை உணர்ந்திருக்கிறேன்..  என் தயக்கம் நீண்டு, அவருக்கு பேருந்து வந்து சென்று விட்டாரானால் என மனசாட்சி கொடுத்திருக்கலாமே என பின் இந்த நினைவு எட்டும்போதெல்லாம் என்னை வதைக்கும்.. ஆகவே  , பின் நானே பாட்டிலை வெளியே எடுத்து , "தண்ணி வேணும்களா. பேசிட்டு இருந்ததை கேட்டேன் " என கூறியதும் அவரின் முகத்தில் பிரகாசம், உடனே சிரித்துக்கொண்டே அந்தப்புறம் திரும்பி போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம்,  "பாரு", எனக் கூறிக்கொண்டே குடித்து விட்டு பாட்டிலை தந்தார்..

"ரோடு கிராஸ் பண்ணிட்டு போய் தண்ணி வாங்கறதுக்குள்ள பஸ் போயிடும்,அதான் "என கூறினார்.. நானும் "எனக்கு புரியுதுங்க" எனக் கூறினேன்..

எங்கள் நிறுத்தத்தில் ரொம்ப நேரம் ஒருவர் காத்திருந்தால்  அது எங்கள் பகுதி வழியாக செல்லும் பேரூந்துக்காகத்தான்  இருக்கும் என யூகிக்கலாம் .. இங்குதான் பேருந்தில் பயணிக்கும் நேரத்தை விட காத்திருக்கும் நேரம் அதிகம்.. என் வாழ்வின் பல நேரங்களை பேருந்து நிறுத்தங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.. ஆதலால் ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்த பேருந்து வரும்வரை காத்திருப்பதும் கடினம்தான்..
இதனால் முன்பே அவர்களின் நிலையை நான் யூகித்து இருந்தேன்..

அதன்பின்னும் அங்கு கால் மணிநேரம் போல் நின்று கொண்டிருந்தோம்.. ஆனால் அவரின் முகம் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தேன்.. காரணம் , நான் ஒருவருக்கு ஏதாவது வகையில் உதவியோ, ஆலேசனையோ கூறினால் அவர்கள் பின்னாட்களில் ஏதேனும் ஒரு முறையாவது மனம் வருந்தும்படி நடந்து கொள்கின்றனர்  என என் மனதில் ஆழமாக பதிந்து போன எண்ணம்தான்.. அதற்காக தண்ணீர் கொடுத்ததெல்லாம் உதவியா எனக் கேட்கலாம் , இல்லைதான், ஆனால் நாம் ஒருவருக்கு ஒரு பொருளை இங்கிருந்து அங்கு எடுத்துக் கொடுத்து உதவியிருந்தாலும் பின்னாளில் அவர் பேசாமல் தவிர்த்து விட்டு சென்றால் கூட அவருக்கு செய்தது பெரிய உதவியாக மனம் முன்னே தோன்றி சில நொடிகளாவது நம் மனதை வருத்தும் .. மற்றவர்க்கு எப்படியோ ....! என் மனம் அப்படிதான்..

இடையில் ஒரு கான்ட்ராக்டர் ரோட்டின் அந்தப்புறம்  இருந்து கிராஸ் செய்து வந்து கொண்டிருந்தார்.. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் அவரை பார்க்கிறேன்.. யாரிடமோ பேசிக்கொண்டே கிராஸ் செய்தவர் என்னை கவனிக்கவில்லை என எண்ணிக்கொண்டிருந்தேன்..  ஆனால் என்னை கடந்து செல்லும்போது திடீரென திரும்பி , "என்னம்மா , இப்ப எங்க வேலை பார்த்துட்டு இருக்கே" எனக் கேட்டார்.. அவர் என்னை கவனித்திருந்தது எனக்கே ஆச்சரியம்.. ஏனெனில் அவர் சாலையை கடந்து வரும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் என்னை அப்போது பார்க்கவே இல்லை.. ஒரு வேளை அதற்கும் முன் நான் பார்க்காதபோது பார்த்திருக்கலாம்..

உடனே எனக்கு முன்னிருந்த பெண்களை  கடந்து வந்து ,வேலையை விட்டதையும், தற்போதைய நிலையையும் கூறினேன்.. அவருக்கு நான் சொல்லியது கேட்டதோ என்னவோ, ஏனெனில் பொது வெளியில் என் சத்தம் மிகவும் குறைவுதான். "நல்லா இருக்கே இல்லையாம்மா, அது போதும் " என கூறி  சென்றார்..

நாம் பொதுவாக , நம் மேல் பொறாமைப்படுவர்கள், நம் வளர்ச்சியை பிடிக்காதர்வர்கள் , அவமானப்படுத்தியவர்கள், துரோகிகள் என  பலர் மட்டுமே  நம்மை சுற்றி இருப்பதாக எண்ணிக் கொண்டு , நம் மேல் உண்மை அக்கறையும், நம் வளர்ச்சியில் உண்மை மகிழ்ச்சியும் கொண்டிருக்கும் சிலரை  கருத்திலேயே கொள்ள மாட்டோம்.. ஆனால் அந்த சிலரின் மேல் மட்டுமே எண்ணத்தை செலுத்துவோமானால் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாகத் தெரியும்..

அந்த சிலரில் இவரும் ஒருவர்.. நான் பார்த்த ஆரம்ப நாட்களில் இருந்து இன்று  பார்த்தது வரை என் மேலுள்ள அக்கறை அவருக்கு அப்படியேதான் இருக்கிறது.. மாநகராட்சியில் 8  வருடங்கள் இருந்ததால் நிறைய மனிதர்கள்  பழக்கம்.. என் மேல் அக்கறையும் அன்பும் உள்ளவர்களும் அங்கு அதிகம்தான்..

பேருந்து வந்ததும் நான் ஏறிய பேருந்தில்தான் அந்த பெண்ணும் அம்மாவும் ஏறினர்.. அச்சோ, இதே பஸ்ஸா என அனாசயமாக இருந்தது.. அந்த அம்மா என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார்.. அவர்களின் முகத்தை சிந்தைக்கு கொண்டு செல்லக்கூடாது என நினைக்கையில் பக்கத்திலேயே அமர்கிறார், பேசாமல் இருக்க முடியுமா என தோன்றியது..அப்பெண் பக்கத்திலும் இடம் இருந்ததால் , அப்பெண் கூப்பிட திரும்ப ஆண்டு சென்று அமர்ந்தார்..

ஆனால் அடிக்கொரு முறை என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.. ஆனால் நான் அவரின் முகம் பார்க்கவில்லையே தவிர அவரின் செய்கைகளை கவனித்துக்   கொன்டுதான் இருந்தேன்.. வெள்ளந்தி மனுஷி .. கிராமத்து ஆட்கள் பெரும்பாலும் அப்படிதான் இருக்கின்றனர்..

அவரை மிகவும்  பிடித்து விட்டது.. நான் மட்டும் தண்ணீர் கொடுத்திருக்கவில்லையென்றால் , இப்படிப்பட்டவங்க நட்பை விரும்பி போய் ஏற்றுக்கொண்டிருப்பேன் ..

தண்ணீர் கொடுத்ததற்காக ,புன்னகை சிந்தவோ, பேச்சு கொடுக்கவோ என் முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தார்.. என்னாலும் என் மனதை அவரிடமிருந்து திருப்ப படாத பாடு படவேண்டியிருந்தது.. பேசலாம், சிரிக்கலாம் என வெளிமனம் தள்ளுகிறது..  ஆனால் தண்ணீர் கொடுத்து விட்டேன் .அதனாலேயே  நான் மேற்கூறிய காரணத்தின் படி உள்மனம் அடக்கி வைக்கிறது..

நான் இறங்கும்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.. நான் கவனிக்காதது போல் இறங்கினேன் .. என்னை பற்றிய அவரின் எண்ணம் மாறியிருக்கலாம்..

அவர் பார்த்தும் நான் கவனிக்காதது போல் இருந்தது அவரை சங்கடப் படுத்தியிருக்குமோ என்னவோ .. தெரியவில்லை  .. அதற்கும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..

 இறங்கியதும் அந்த இருவரின் முகத்தை நினைவில் நிறுத்த முயற்சிக்கிறேன்.. நல்ல வேளை, மறந்திருக்கிறது....

- 16 -10 -2018
    கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.