செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கனக்கும் சுமை

உயிரற்ற மர மேசைகளுக்கும்
உயிரிருந்தும் நம்மிருவரின்
அந்நொடி உயிரறியாத
இரண்டு ஆத்மாக்களும் நடுவே
உன்னால் கசக்கி எறியப்பட்ட 
நினைவுகளை இன்றுவரை
பத்திரப்படுத்தி வருகிறேன்....
சமய சந்தர்ப்பம் பார்த்து வரும்
உன் நினைவுகளின் போது
அவற்றை எடுத்து திரும்ப
புரட்டிப் பார்ப்பேன்...
சிறு ஏக்கத்தையும் உன்னிடம்
கேட்கத் துடித்த கேள்விகளையும்
மூச்சுக்காற்றின் வழி தென்றலாய்
அதில் வருடவிட்டு மூடிவிடுவேன்..
மனம் இந்த உலக வாழ்வியலுக்குள்
பொருந்தும் கணமெல்லாம்
இந்த விலை போகாத
வெற்று நினைவுகள் எதற்கு
பாரமாக என கேட்டுப் பார்க்கும்....
கசக்கி எறிந்த நினைவுகளின்
சில துகள்களாவது அவள்
முந்தானை விளிம்பில்
தொங்கிக் கொண்டிருந்த
நூலின் வழி சென்று
அவள் மனதில் கலந்திருக்கும்..
அந்நினைவுத்துகள்கள்
அவள் மனதை அரிப்பதை
அறியப்போகும் கணம்
நான் சுமக்கும் அவள் நினைவுகளின்
கனத்தை இறக்கி வைப்பேன் என
அதற்கு உறுதிமொழி
கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.