பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டு இருந்தது. யாரிடமிருந்தும் எந்த இடையூறும் இல்லை.. இருந்தும் மகனுக்கு பெயர் தேர்ந்தெடுக்க ஆரம்பத்தில் மிக சிரமப்பட்டேன்..
பெயரை தேர்ந்தெடுப்பதற்குள் நட்சத்திரத்திற்கு பொருத்தமான எழுத்து, எண் கணிதம் என பல உள்ளே புகுந்து நாட்களை கடத்தின.. பாஸ்போர்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் என் கணவர் சொல்லிக்கொண்டே வந்த பெயர்களில் ஒன்றை, எதுவும் பார்க்காமல் 5 நிமிடத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விட்டது.. அது "ரோஹித்"..
பெண்ணுக்கு பெயர் தேர்ந்தெடுத்ததும் ஒரு பெரிய கதை.. இப்போதைக்கு அது இந்த பதிவை ஆக்கிரமிக்காது..
இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் எழும். மேலும் மகனின் இந்த பெயரும் தீர்க்கமாக அமையவில்லையே என்ற வருத்தமும் உண்டு..
இனி புதிதாக வேறு பெயர் வைப்பதற்கு பதில் பழகிய இந்த பெயரின் பின்னால் ஒரு தீர்க்கமான பெயர் இணைத்தால் நன்றாக இருக்கும் என்பது எனக்குள் அடிக்கடி தோன்றும் எண்ணம்..அதனால் துணை பெயர்களாக "ராய் (Roy ) , குமார், தாஸ் , பால்(paul)" எல்லாம் போட்டு பார்த்ததில் ரோஹித் பால் நன்றாக இருக்கும் என தோன்றியது..
இப்படி தோன்றியவுடனே "உனக்கு ரோஹித் பால்-னு பேர் வைக்கலாம்னு இருக்கேன் தங்கம்" என கூறினேன்.. "எனக்கு ஒன்னும் வைக்க வேண்டாம், நிகிதாவுக்கு வேணும்னா நிகிதா பால்-னு வச்சுக்கோ" என கோபத்துடன் கூறினான்..
பிறகு இன்றும் அதை அவனிடம் கூறினேன்.. உடனே "எப்ப பார்த்தாலும் ரோஹித் பால் , ரோஹித் பால் தானா" எனக்கு ரோஹித் போன்விட்டா ன்னு பேர் வை" என கூறினான். அப்போதுதான் அவன் அகராதியில் பாலுக்கு ஒரு அர்த்தம்தான் உள்ளது என புரிந்தது. சிரித்து விட்டேன்..
"ஏம்மா சிரிக்கிற" என்று வெட்கத்துடன் அவன் கேட்டதற்கு "போன்விட்டான்னு வைக்க சொன்னே இல்ல, அதுக்குதான் சிரிச்சேன்" என சொன்னேன்..
"ஏன், எனக்குதான் பால் பிடிக்காதுல்ல, நிகிதாவுக்குத்தான் பால் பிடிக்கும், அதான் நிகிதா பால்-னு வைக்க சொன்னேன், எனக்கு ரோஹித் போன்விட்டா-ன்னு வைக்க சொல்றேன் " என சத்தத்துடன் கூறினான்..
இதை இனி விளக்கினாலும் புரிய வைக்க முடியாது என்று தெரிந்ததால் சிரித்து மட்டும் வைத்தேன்..
-ஷார்ஜா
18-2-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.