திங்கள், 28 மார்ச், 2016

8

சின்ன வயசுல நீ என்னவா ஆக விரும்பறன்னு யார் கேட்டாலும் என் பதில் டீச்சர் என்பதாகத்தான் இருக்கும்.. உண்மையில் அப்போது அது மன விருப்பமாக இருந்ததில்லை. எல்லோரும் அவரவர் குறிக்கோளை சொல்லும்போது இதை என் குறிக்கோளாக வெறும் வாய் மட்டும் சொல்லும் வார்த்தையாகவே வைத்து இருந்தேன்..
ஆனால் நான் பணிபுரிந்த காலங்களிலும், இப்போது வீட்டில் இருக்கும் நேரங்களிலும் ஆசிரியர் துறையை தேர்ந்தேடுத்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றும்.. அதற்கு காரணம் விடுமுறை, குறிப்பிட்ட நேர பணி என்பதையும் தாண்டி மனதிற்கு திருப்தியளிக்கும் பணியாக இருந்திருக்குமே என்ற நிதர்சனம்தான்..
காலையில் ஆறரை மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்ற காரணத்தால் பகல் நேரங்களில் மகனை தூங்க விடுவதில்லை.. ஆதலால் இரவு 9 மணிக்கு படுத்து 6 மணிக்கு எழுந்து விடுவான்.. பள்ளியிலிருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருப்பான்.. இல்லையென்றால் டிவி பார்ப்பான்.. மாலையில் ஹோம் வொர்க் முடித்து விட்டு சாப்பிட்டு தூங்கி விடுவான்..
அன்று டிவி பழுதாகி இருந்தது.. சிறிது நேரம் பொம்மைகளை வைத்து தங்கையுடன் விளையாடி விட்டு சலித்ததும் என் போனை வாங்கி கேம் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.. நாலு சுவற்றுக்குள் பொழுதை கழித்தாக வேண்டும் என்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் டிவியும் அன்று துணைக்கு இல்லாததால் அவன் மனநிலை புரிந்து அவனை எழுப்பவில்லை..
மதியம் தூங்கியதால் இரவு 10.30 ஆகியும் தூங்க வராமல் ஸ்கெட்ச் எடுத்து கலர் பண்ணிக்கொண்டிருந்தான்.. காலைல ஸ்கூலுக்கு போகணும், இன்னும் தூங்காம இருந்தா காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியாது எனக் கூறினோம்..
"நாளைக்கு ஸ்கூல் போகல" என்றவனிடம் "இன்னும் ஒரு வாரம்தான் ஸ்கூல் , அப்புறம் 10 டேஸ் லீவ், அதுக்கு அப்புறம் kg -2 போய்டுவ, அப்போ இந்த டீச்சர் இல்லடா, வேற டீச்சர் தான் உனக்கு , சோ இப்போ லீவ் போடாம இந்த டீச்சர் நடத்தற கிளாஸ்ல நல்லா படிக்கவும் செய், என்ஜாய் பண்ணவும் செய்"என்று சொன்னதும், வந்து படுத்தவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் திரண்டு வழிய ஆரம்பித்து இருந்தது..
எந்த காரணத்துக்காக அழுகிறான் என புரியாமல் பதட்டத்துடன் , "ஏன் தங்கம் அழறே" என கேட்டதும், "எனக்கு இந்த மிஸ்தான் வேணும், வேற மிஸ் வேண்டாம் , இந்த மிஸ்கிட்டவே படிக்கறேன்மா" என அழுது கொண்டே கூறினான்..
"இந்த மிஸ் kg 1 மட்டும்தான் எடுப்பாங்க, நீ kg 2 போகறே இல்ல தங்கம்" எனக்கூறியதும் "இல்ல, நான் kg 2 போக மாட்டேன் , அப்போ வீட்லதான் இருப்பேன்" எனக் கூறிவிட்டு அழுதான்..
"இனி மேல மேல நிறைய டீச்சர்ஸ் மாறுவாங்க, அம்மாக்கும் நிறைய டீச்சர்ஸ் மாறினாங்க , இப்ப யாரும் எங்க இருக்காங்கன்னே தெரியாது.., பட் நீ இந்த ஸ்கூல் ல படிக்கற வரை kg 1 மிஸ்ஸ பார்க்கலாம், அம்மாகிட்ட அவங்க நம்பர் இருக்கு , நீ பெரியவனானதுக்கு அப்புறம் கூட நாமளோ அவங்களோ எங்க போனாலும் டச்-ல இருக்கலாம்"என சொல்லியதற்கு பதில் ஏதும் கூறாமல் அழுது கொண்டே தூங்கிப் போனான்..
சொல்லாம விட்டு இருக்கலாமோ , அவன் அந்த இயல்புக்கு தக்க மனதை மாற்றியிருக்கத்தானே போகிறான் என தோன்றியது.. இருந்தும் எங்களுக்கு அடுத்து வெளியில் ஒருவரின் பிரிவை நினைத்து (அதுவும் முதன் முதலில் ஆசிரியரை ) அவன் அழுதது அந்த ஆசிரியரின் மதிப்பை எங்களுக்குள் இன்னும் உயர்த்தியது..அப்படியே, ஆசிரியர் ஆகி இருக்கலாமோ என்ற என் எண்ணத்தையும் கூட....

-ஷார்ஜா 
 13-3-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.