ஞாயிறு, 29 மார்ச், 2020

கவிதைக்கீற்றுகள்



பதிவேற்றம் செய்த புகைப்படங்களை
திரும்பத்திரும்ப பார்க்கிறேன்
மற்றவர்களின் பார்வையில்...
---xxx---

அவள் சிரிப்பு பிடித்திருக்கிறது
என அவன் சொன்னதிலிருந்து
கண்ணாடியும்
அடிக்கொருமுறை
பார்த்துக் கொண்டிருக்கிறது
அவள் சிரிப்பை.. ❤️❤️❤️

---xxx---

பிறருக்கு கொடுக்கும்போது
சலிப்பதில்லை..
நமக்காக
உபயோகிக்க
முற்படும்போதுதான்
திணறுகிறது...

---xxx---

உன் நினைவில்
தேய்கிறேன்
நான்...
என்னுள்
வளர்கிறாய்
நீ...

---xxx---

கண்ணுறங்கும் நேரத்தில்
தாயைத் தேடி ஓடும்
கன்றைப் போல
உன் நினைவைத் தேடி
ஓடுகிறது மனம்...

---xxx---

உன் மீதான என் ஈர்ப்பு
தீர்ந்து போவதற்காவது
உன் அருகாமை
வேண்டும் எனக்கு....

---xxx---

கத்தியை விட கூரானது
ஒரு கடுஞ்சொல்
சுலபமாக நெஞ்சில் இறங்கி
உடல் முழுவதும் பரவி
காயத்தின் அடையாளத்திற்கு
குருதியாக கண்ணீர்....

---xxx---


நான் உன்னால்
காதலிக்கப்படுகிறேன்
என நண்பன் சொன்னபோது
நம்பவில்லை

நான் உன்னை
காதலிக்கவில்லை
என நீ சொன்னபோதும்
நம்பவில்லை

நான் இப்போது
இடம் மாறி இருக்கிறேன்
என காதல் சொன்னதை
மட்டும் நம்பிக்கொண்டேன்...

---xxx---

நினைவுத் தூண்டிலில்
 எவை சிக்கினாலும்
இரை ஆவதென்னவோ
நேரம் மட்டுமே....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.