விபத்து என்பது எதிர்பாரா நேரத்தில் கண்ணிமைக்கும் நொடிக்குள் கோபத்தினாலோ, ஆத்திர அவசரத்தினாலோ, கவனமின்மையாலோ நடந்து வழக்கமான சூழ்நிலையை கொஞ்சம் மாற்றிப்போடும் .. கொஞ்சம் மாற்றிப்போடுமா அல்லது முழு மாற்றம் கொடுக்குமா என்பது அந்த விபத்தின் வீரியத்தை பொறுத்தது...
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்பது நடந்தபின் யோசித்து ஒரு பலனும் இல்லை.. வாழ்க்கை முழுவதுமே கோபத்தை (முக்கியமாக கோபம்: ஏனெனில் இந்த கண நேர கோபம் பலரை கொலையாளியாக்கி பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது..) கட்டுக்குள் வைத்திருந்தும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் கவனமாக மற்றும் பொறுமையாக இருப்பதுமே இவற்றை தவிர்க்க வழி..
இப்போது நான் சொல்லப்போகும் சிறு விபத்து என்பது "எதிர்பாராத" என்ற வகையில் சேரும்..
பெண்ணுக்கு கொஞ்சம் போரடித்தால் "அம்மா நான் யோகா செய்றேன் பாருங்க " என, நான் சொல்லிக் கொடுத்திருக்கும் யோகா-க்களையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து காட்டுவாள்.. அவள் செய்யட்டும் என்று நாம் அங்கு இங்கு திரும்ப முடியாது.. ஒவ்வொன்றையும் நான் பார்த்து ,குட் என சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அவளுக்கு திருப்தி..
நேற்று மாலையும் வழக்கம் போல் அவளுக்கு போரடிக்கவே யோகாவை கையிலெடுத்தாள்.. அதே வழக்கம் போலவே டிவி பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க விடாமல் அவளை பார்க்க வேண்டும் என சிணுங்கி வற்புறுத்தவே வேறு வழியின்றி பார்த்தேன்.. ஒவ்வொன்றை முடித்த பிறகும் "இனி என்ன செய்யறது " என கேட்பாள்.. அதற்குள் அவளுக்கு நியாபகம் வந்தால் அதை செய்து விட்டு அடுத்து செய்வதற்கான யோகா பொசிஷனை கேட்டாள்..
உடனே நான் பண்ணிப்பார்த்தும் என் உடல் எடை ஒத்துழைக்காத "அதோ முக சுவானாசனா மற்றும் சிரசாசனா கலந்த ஒரு யோகாசனத்தை செய்ய சொல்லவே அவளின் சிறு உடல் ஒத்துழைப்பு தர சிரமமே இல்லாமல் இலகுவாக செய்தாள்.. உடனே "அம்மாவுக்கு இதை செய்யவே முடியலே, அம்மா கொஞ்சம் வெயிட் இல்லையா ,சோ தலை கீழ வைக்க முடியல, பட் நீ செஞ்சுட்ட , குட் " என்றேன்..சொன்னதோடு இல்லாமால் (விதி யாரை விட்டது ) அவள் செய்த அழகை பார்த்து "பாரேன் நான் செய்றேன்" என கீழே விரித்திருந்த துணியின் மேல் செய்ய ஆரம்பித்தேன்.. செய்ததும் உடனே நன்றாக அந்த ஆசனம் வந்ததும் , என் மகள் "அம்மா , அப்படிதான் , குட் , குட் "என உற்சாகத்துடன் கூறவே, நம்ம உடல் எடைக்கு திடீர்னு இதை இவ்வளவு நேரம் செய்தால் ஒத்து வருமா என யோசிக்கவே தோன்றாமல் இன்னும் 10 நொடி இருக்கலாம் என எண்ணி அதே பொசிடிஷனில் நான் இருக்க , கீழே விரித்திருந்த துணியோ மார்பில்ஸ்-க்கு நன்றாக வழுக்கவும் உடனே சமாளிக்க என் உடல் எடையை கைக்கு கொடுக்கவும் ...... திடீர் என வலி , "அம்மா, அம்மா என நான் அவர்களை அழைக்க அடுத்த அறையில் இருந்த அம்மாவும் அப்பாவும் பதறிக் கொண்டு வர , மகளோ பயந்த முகத்துடன் அழுகையை துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள்..
எனக்கு உடனே இடது கை இறங்கி விட்டதென புரிந்து போனது.. ஏறக்குறைய 18 வருடங்களுக்கு முன் ஒரு சகோதர சண்டையில் என் தம்பி இதே கையை இறக்கி விட்டிருந்தான்.. பதறிக் கொண்டு வந்த அம்மாவிடம் "அம்மா, அன்னைக்கு போல ஷோல்டர் -ல இருந்து கை இறங்கிடுச்சு , உடனே ஆட்டோ கூப்பிடுங்க" என வலியினூடே சொன்னேன்.. அப்பாதான் மிகவும் பயந்து போயிருந்தார்..
முன்பொருமுறை இப்படி நடந்தபோதும் ஆட்டோவில் பயணித்தபோது ஆட்டோவின் குலுக்களில் வலி உயிரை தின்றது வேறு நியாபகத்தில் வந்து இம்சை படுத்தியது.. டாக்ஸி சொல்ல சொல்லலாமென்றாலும் அவ்வளவு நேரம் வலி பொறுக்க மனதிலும் உடலிலும் தெம்பில்லை.. அதனால் அடுத்த தெருவில் இருந்த ஆட்டோவை வரவழைக்க அம்மா போன் செய்யும்போதே , எந்த ,மருத்துவமனைக்கு செல்லலாம் என அம்மாவும் அப்பாவும் டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர்..
அல்லோபதி மருத்துவமனை என்றால் ஸ்கேன் எடுத்து அதன்பின்தான் சிகிச்சை , மற்றும் மருத்துவர்கள் இருப்பார்களோ (அப்போதே நேரம் 7.30 -ஐ தாண்டி இருந்தது ) என்ற சந்தேகம் என அனைத்தும் நினைக்கும்போதே , அவ்வளவு நேரம் வலி பொறுக்க முடியாது என தோன்ற " வைத்தியசாலைக்கு செல்லலாம் "எனக் கூறினேன்.. சரி, ஆட்டோ ட்ரைவரிடமே கேட்கலாம் என முடிவெடுத்து அம்மா ஆட்டோவுக்கு காத்திருந்தார்கள்..
என் நிலையோ ஆரம்பத்தில் பயத்துடன் பதட்டமும் சேர மூச்சுக்கே திணறினேன்.. உடல் வேறு வேர்த்துக் கொட்டியது ..அம்மா தண்ணீர் கொண்டு வர ,ஆசுவாசப்படுத்திக் கொண்டு , பயந்து அழுது கொண்டிருந்த பிள்ளைகளை நினைத்தவாறே, முதலில் மனதுக்கு தைரியத்தைக் கொடுத்தேன்.. உடனே படபடப்பு போய் சீரான சுவாசம் வந்தது.. ஆனால் தோள்பட்டைக்கு கொஞ்சம் அசைவு கொடுத்தாலும் உயிர் போகும் வலி என்பார்களே, அப்படி வலி.. எழுந்திருக்க முடியாவிட்டாலும் எப்படியோ எழுந்து ஆட்டோவில் போய் உட்கார்ந்ததற்கு காரணம் மன தைரியம் என்பதில் சந்தேகம் இல்லை..
ஆட்டோ குலுக்கலில், கத்திக் கொண்டே ஒரு வழியாக வைத்திய சாலைக்கு வர , அங்கிருந்தவர் கை இறங்கித்தான் இருக்கிறது என உறுதி செய்து கொண்ட பின் சுவரோரமாக சாய்ந்து உட்கார சொல்லவே , அப்படியே உட்கார்ந்தேன்..அந்த கையை அப்படியே மேலே தூக்க, வலி saththamaana காத்தலை கொடுத்தது... இரு நொடிகள் கூட ஆகவில்லை," "இப்ப சரி ஆகிடுச்சு , இனி வலி இருக்காது "எனக்கூறி எண்ணெய் விட்டு கட்டும் கட்டி விட்டார்..
"ஒரு வாரத்துக்கு பின் வாங்க, 3 வாரம் கட்டு போட்டா சரி ஆகிடும்" எனக்கூறவே , இரு நாட்களில் நாகர்கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்திருந்ததை கூறினேன்.. சனிக்கிழமை பார்ப்போம் .. சரி ஆச்சுன்னா போங்க" என வைத்தியர் கூறினார்..
வீட்டுக்கு வரும்போதோ , மகன் அழுது கொண்டே இருந்ததையும் , பெண் கல் போல இருந்த இடத்தை விட்டு நகராததையும் அப்பா சொல்ல, இருவரையும் சமாதனப் படுத்தினேன்.. என்னவருக்கு சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம்.. பிசினஸ் விசிட்டில் இந்தியா வந்திருக்கும் அவர் அன்று காலைதான் கோவையிலிருந்து திருச்சி கிளம்பினார்.. இனி இந்த 20 நாட்களும் பெங்களூர் , நார்த் இந்தியாவில் சில ஊர்கள் என சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. அதனால் அவர் பேசும்போது சொல்லலாம் என விட்டு விட்டேன்..
ஆனால் அவர் ரியாக்சன் எப்படி இருக்கும் எனும் காணும் ஆவல் தலை தூக்க, (இப்ப யோகா தேவையா என திட்டினாலும், கூடவே பழியில் சேர்த்துக் கொள்ள மகளும் இருக்கிறாளே , எந்த தகப்பனும், அதுவும் இந்த தகப்பன் மகளை விட்டே கொடுக்க மாட்டார் , அவளும் அப்பனை விட்டே கொடுக்க மாட்டாள் ... இப்படி நிலைமை இருக்கையில் சமாளித்துக் கொள்ளலாம் என கட்டு போட்ட கையை பாதி முகம் தெரியுமாறு போட்டோ எடுத்து அனுப்பினேன்..
அவரின் ரிப்ளைக்காக அரை மணி நேரம் காத்திருந்தேன்.. அவரின் வேலை அலைச்சல் தெரியுமாதலால் பார்க்கும்போது பார்க்கட்டும் என நினைத்து அப்படியே தூங்கி விட்டேன்.. இன்று காலை மொபைலை எடுத்துக் பார்த்தபோது, பதிலுக்கு "தம்ஸ் அப்" கொடுத்திருந்தார்.. கோபத்தோடு அழுகையும் சேர்ந்து வர ஆரம்பித்த உடனேயே , இல்லையில்லை சரியாக கவனித்திருக்க மாட்டார் என சமாதானப் படுத்திக்கொண்டேன்..
சிறிது நேரம் கழித்து "இது மகள்கள் வாரம்" என்ற பார்வேர்ட் மெசஜை அனுப்பி இருந்தார் .. அதில் மகள் அமைதியாக இருந்தால் உறவுகள் ஒவ்வொருவரும் எப்படி அவளை கேட்பர் என்பது போல் இருந்தது.. நல்ல சான்ஸ் கிடைத்திருக்கிறது , விடக்கூடாது, இப்போதாவது என் உடல்நிலையை அவருக்கு மறைமுகமாக தெரிவித்து விட வேண்டும் என் எண்ணி .பதிலுக்கு "உங்கள் பெண் அமைதியாகத்தான் இருக்கிறாள், குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் , அவளை பார்க்க பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது" என அனுப்பி வைத்தேன்.. அதையும் எப்படி பார்த்தார் என தெரியவில்லை , பதில் "ஓ" என வந்தது..
சலித்து, உடைந்து போனேன்.. அந்த உணர்ச்சியில் "அக்கறையான ஒரு பார்வை , நம்பிக்கை ஏற்றும் ஒரு வார்த்தை, சிகையை கோதும் ஒரு வருடல் , நெற்றியை சூடாக்கும் ஒரு முத்தம் "என நான் அவரிடம் எதிர்பார்ப்பது கவிதை (????) போல வர ,உடனே, இதை பேஸ்புக்கிலும் போடலாமா, இல்லை அவருக்கு மட்டும் அனுப்பினால் போதுமா என்ற பட்டிமன்றம் வேறு மனதினுள் நடந்து கொண்டிருந்தது.. எப்படியோ ஆறுதலுக்கு ஒரு கவிதையாவது (திரும்பவும் ????)என் சிந்தையில் இருந்து வருகிறதே என சாந்தப்பட்டுக் கொண்டேன்...
அவர் அனுப்பிய மெசேஜ்களை பையனிடம் வாசித்துக் காட்டினேன்.. உன் அப்பாவுக்கு என் மேல இவ்வளவுதான் அக்கறை பார்த்தியா " என ....
அதே நேரம் அவரின் கால் அழைப்பு வரவே மகன் எடுத்து , "அம்மாவுக்கு புண் இருக்குன்னு காட்டினா ,அப்பா தம்ஸ் அப் போட்டுருக்கீங்க" என கூற , அவரோ அம்மாட்ட போனை கொடு எனக்கூறி, "அவன் என்ன சொல்றான்" எனக் கேட்க " நான் அனுப்பின போட்டோ-வை பார்த்தா தெரிஞ்சு இருக்குமே , எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்க போன ஜென்மத்துல ரொம்ப புண்ணியம் செஞ்சுருக்கணும் "என கிண்டலுடன் கூறவே , சரி நான் பார்க்கறேன் , நீ பாலிமர் நியூஸ்-ல சவூதி பத்தி ஏதோ சொன்னார்களாம், கேட்டு டீடெயில்ஸ் அனுப்பு, நான் ட்ராவெலிங்-ல இருக்கேன் " என போன் வைத்தார்..
அதே நேரம் அவரின் கால் அழைப்பு வரவே மகன் எடுத்து , "அம்மாவுக்கு புண் இருக்குன்னு காட்டினா ,அப்பா தம்ஸ் அப் போட்டுருக்கீங்க" என கூற , அவரோ அம்மாட்ட போனை கொடு எனக்கூறி, "அவன் என்ன சொல்றான்" எனக் கேட்க " நான் அனுப்பின போட்டோ-வை பார்த்தா தெரிஞ்சு இருக்குமே , எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்க போன ஜென்மத்துல ரொம்ப புண்ணியம் செஞ்சுருக்கணும் "என கிண்டலுடன் கூறவே , சரி நான் பார்க்கறேன் , நீ பாலிமர் நியூஸ்-ல சவூதி பத்தி ஏதோ சொன்னார்களாம், கேட்டு டீடெயில்ஸ் அனுப்பு, நான் ட்ராவெலிங்-ல இருக்கேன் " என போன் வைத்தார்..
இன்னுமா பார்த்திருக்க மாட்டார் ,அரை மணி நேரமாகியும் கால் வரவில்லை என்ற ஏக்கம் என்னை படுத்த, திரும்பவும் நானே அந்த நியூஸ் விவரத்தை அவருக்கு தெரிவிக்க போன் செய்த போது ," உன் விரல்ல ஏதோ அடி பட்டிருக்குன்னு சொன்னான், அதுல பார்த்த தெரியலியே "என குழப்பத்துடன் கேட்க, தானாக அவருக்கு புரிய போவதில்லை என புரிந்து கொண்டு நானே , நேற்று நடந்த சம்பவத்தை விளக்கினேன்... "ஐயோ, கை இறங்கிடுச்சா" என பதட்டப்பட்டவரிடம் , திரும்ப சவூதி பற்றிய செய்தியை VIDEO-வாக அனுப்புகிறேன் எனக் கூறி போனை வைத்தேன்..
இருந்தாலும் , கணவராகிய அவரே பதறி ,"அச்சோ , இப்படி ஆச்சே, வலி-ல துடிச்சுருப்பியே -ன்னு வருத்தப்பட்டாதானே மனைவியான எனக்கு மனசு ஆறும் .. சோ, திரும்ப அவரின் வருத்தம் தோய்ந்த அழைப்புக்கு காத்திருந்தேன் , காத்திருந்தேன், காத்திருந்தேன்...
2 மணி நேரங்கள் கடந்துதான் மிச்சம்.. "சே, நமக்கு அப்போ தோணின கவிதைதான் மிச்சம் போல " அந்த கவிதையை மெருகேற்ற வழி பார்க்கணும்" என நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அவரின் அழைப்பு.... எடுத்ததும், " சாரிப்பா, நான் சரியா கவனிக்கல, அந்த கட்டுக்கு கீழ ஷால் போட்டு இருந்ததால ஒரு டிரஸ் போலவேதான் தோணுச்சு, அதான் நான் கவனிக்கல, சாரி, உடனே போன் பண்ணலாம்னா , கூட ஆட்கள் இருந்தாங்க, இப்பதான் ஏர்போர்ட்க்கு வந்தேன்.. கொஞ்சம் பிரீ-ஆனதும் உடனே உன்னை கூப்பிட்டேன் " என சொல்ல என் வருத்தம் எங்கோ போய் விட்டிருந்தது ...
ஆனால் கூடவே ஒரு வேறொரு வருத்தம் சேர்ந்து கொண்டது " என் கவிதை போச்சே "
- 22-4-2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.