நினைவுகளும் செயல்களும்
நெருக்கமான சமயத்தில்
கடக்கும் உன் நினைவு
ஒரு தும்பியின் வேகம் போல்
மிக துரிதமாக கடந்து விடுகிறது..
நினைவுகள் மட்டும் அணிவகுக்கும்
நித்திரைக்கு முன்னான நேரங்களில்
மிளிரும் உன் நினைவோ
இறக்கி வைக்காத பாரத்தை
நினைவூட்டி வதைக்கிறது...
பாரத்தை இறக்க அந்த வார்த்தையை
எடுத்து கனவினுள் வருவாயா என
அக்கணங்களில் வேண்டுதலோடு
உறக்கத்தினுள் நுழைகிறேன்...
என் உயிர் நிரப்பும்
ஒரு ஒற்றை சொல்லுக்காக
நீ நினைவை நிரப்பும்
நாளெல்லாம் யாசிக்கிறேன்..
அப்போது கேட்க தவறியதை
இப்போது கேட்க
காலமும் இடம் தரவில்லை
காலனும் இடம் தரவில்லை...
காலத்தில் கேட்கா மன்னிப்பு
காலம் முழுவதும் அழ வைக்கும்
என்று காலம் கடந்துணர்ந்து
என்ன பயன்..
புரிகிறது...
இருந்தும் நீ நினைவில் வந்தால்
சூழ்நிலை இழுப்பது
கனவில் வந்தால்
நீயாய் வருவது
என்ற என் எண்ணம்
பொய்த்து போகா வண்ணம்
கனவில் வந்து தந்து விட்டு போ
என் உயிர் தேடும் அந்த வார்த்தையை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.