விடுமுறையில் உறவுகள்
கூடும் நாட்களில்
எங்களின் பாதி பொழுதுகளை
குத்தகைக்கு எடுத்துக்கொள்வது
அப்புளியமரம்தான்....
கண்ணாமூச்சி ஊஞ்சல்
பல்லாங்குழி என அனைத்தையும்
களைப்பின்றி விளையாட
நிழல் பரப்பி காவல் இருக்கும்....
எங்களின் சிறுவயது
சமையல் ஆசையை
இலை காய் கொட்டை சுள்ளி
தந்து பூர்த்தி செய்ததும்
அம்மரம்தான்....
அந்த விளையாட்டுக்களை
தவறவிட வேண்டிய
வயது வந்த பின்
அங்கு செல்லும் நாளெல்லாம்
அதன் குதூகலத்தைத் தேடி
தோற்றுப் போவேன்....
இப்போதுள்ள பிள்ளைகளின்
வாசத்தைக் கூட அம்மரம்
நுகராததை அதன் கீழ்
குவிந்திருக்கும் சருகுகளே
நிரூபணமாக்கின....
எதுவும் மாற்றம் செய்ய இயலா
சூழல் உணர்ந்து
நினைவுகளாகி விட்ட
பழைய நிகழ்வுகளை
அசைபோட்டபடி
நின்றிருக்கும் அம்மரத்திடம்
நானும் சிறிது கேட்டு வாங்கி
இளைப்பாறி விட்டு
திரும்புவேன் ஏக்கத்துடன்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.