வெள்ளி, 20 ஏப்ரல், 2018

22



சித்திரை மாத வெப்பம் இரவிலும் தாக்க, இயற்கை காற்றாட தூங்குவதற்காக நேற்று  இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றோம்.. அங்கு சென்றவுடன் வீசிய காற்று மேனியோடு மனதையும் வருட "இன்று நல்ல தூக்கம் இருக்கப்போகிறது" என்று பேசியவாறே பாயை விரித்து படுக்க ஆரம்பித்தோம்..
இதுவரை இரவு வானம் பார்த்து தூங்கி எனக்கும் பழக்கமில்லை, பிள்ளைகளுக்கும் இல்லை.. ஆக ஒரு அனுபவத்தை பிள்ளைகள் பெறுகிறார்கள் என்பதே எனக்கு கூடுதல் உற்சாகத்தை தந்தது.. படுத்தவாறே பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்க , "இங்க பாருங்க ,வானத்துல எவ்வளவு ஸ்டார்ஸ் இருக்கு பார்த்தீங்களா, உங்களால கவுன்ட் பண்ண முடியுமா " என பிள்ளைகளிடம் கேட்டேன்..
ஓ,முடியுமே என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்க இருக்க புதிது புதிதாய் சில நட்சத்திரங்கள் மின்னி மின்னி அவர்கள் உற்சாகத்தை குறைத்துக் கொண்டே வந்தன.. இதற்கிடையில் தாங்கள் சுதந்திரமாக உலவும் இடத்தில் நான்கு மனித ஜீவன்கள் படுத்துள்ளதை தாங்காத கொசுக்களோ எங்கள் காதுகளில் ரீங்காரத்தை கொடுத்து போராட்டத்தை ஆரம்பித்து இருந்தன..
அவைகளின் ரீங்காரத்தை உதாசீனப்படுத்தியவாறே (பின்னே, கொசு இருக்கிறது என நான் சொன்னால் வீட்டுக்குள் படுத்துக்கொள்ளலாம் என என்னவர் சொன்னால் பிள்ளைகளோடு எனக்கும் சேர்ந்து கிடைக்கும் ஒரு புது அனுபவத்தை இழந்து விடுவேனே ) "பார்த்தீங்களா , இப்படித்தான் ஸ்டார்ஸ்-ஐ எல்லாம் எண்ணவே முடியாது.. இங்க உள்ளதே எண்ண முடியல , நாம எங்க எல்லாம் ட்ராவல் செஞ்சு இருக்கோம், அங்கேயும் உள்ள ஸ்டார்ஸ் எல்லாம் கவுன்ட் பண்ண முடியுமா நினச்சு பாருங்களேன் , அது போல வேறு எது எதை கவுன்ட் பண்ண முடியாதுன்னு தெரியுமா, மரங்கள், அப்புறம் நம்ம தலைல உள்ள முடி , அப்பாவோட மீசைல உள்ள முடி இதெல்லாம் கவுன்ட் பண்ணவே முடியாது.. வேணும்னா கவுன்ட் பண்ணி பாருங்க "என சொன்னேன்..
உடனே மகன் " அம்மா தலைல ஹண்ட்ரட் முடி, அப்பா மீசைல ஹண்ட்ரட் முடி " என்றான்.. நான் எழுந்த ஆத்திரத்துடன் "கவுன்ட் பண்ணி பார்த்து பண்ணமுடியுதா-ன்னு சொல்லு" என்க, அவர்களின் அப்பாவோ, "வேணும்னா நீங்களே சரியான்னு கவுன்ட் பண்ணி பார்த்துக்கோங்கன்னு சொல்லுடா " என்க , "பிள்ளைகளுக்கு இதை வேற சொல்லி தரியாப்பா"என எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டே கேட்டேன் .. மனதிற்குள் பேச தெரியாத பிள்ளைகளா இவர்கள், வகுப்பெடுத்து கொடுத்து என்னை மேலும் லந்து செய்வதற்கு " என எண்ணிக்கொண்டேன்..
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது மகளோ, "ஆனா மூனை ஈஸியா கவுன்ட் பண்ணிடலாம்" என்க 3 - ஆ என குழம்பி ஓ,"moon " -ஆ என தெளிவு பெற்று நான் சிரிப்பதற்கு முன் அவர்களின் அப்பா சிரித்துக் கொண்டிருந்தார் .. ஒரே நிலா ,இதை எண்ணிக்கையாக்கும் வகையில் சொல்கிறாளென்ற எண்ணம்தான் எங்களை சிரிப்பிற்குள் தள்ளியிருந்தது..
இன்று அம்மாவிடம் பேசும்போது, இந்நிகழ்வை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அதை தானும் சிரித்தவாறே கேட்டுக் கொண்டிருந்தவள் , என் அம்மா :உனக்கு நிலாவை கவுன்ட் பண்றது ரொம்ப ஈஸியா " என கேட்க "ஆமாம் , ஈசிதான் மூணு மூன் " என்றாள்..
தெளிவாக புரியவில்லையே என , நான் திரும்ப "மூணு மூனா " எனக் கேட்க , ஆமாம், துபாய்ல ஒன்னு, அம்மம்மா வீட்டுக்கிட்ட ஒன்னு, மரியம்மா பாட்டி வீட்டுக்கிட்ட ஒன்னு " என்று சிரிப்பை அள்ளிக் கொடுத்து விட்டு வெளியில் ஓடி விட்டாள்..
எந்த ஒரு விஷயத்தையும் அணு அணுவாக சொல்லி புரிய வைக்கும் நான் இதை அவளுக்கு புரிய வைக்க விரும்பவில்லை.. இன்னும் அவள் நினைவில் கூடுதலாகப்போகும் எல்லா நிலாக்களும், ஒரே நிலாவாக மாறும் வயது அவளுக்கு வரும் வரை காத்திருக்கப் போகிறேன்..
ஏதோ அனுபவம், அனுபவம் என மேலே சொல்லிக் கொண்டிருந்தேனே, அது எங்களுக்கு கிட்டியதா என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் என் பதில் தலையை இடமும் வலமும் ஆட்டுவதுதான்.. ஆம், கொசுக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று சிறிது நேரத்திலேயே எங்களை வீட்டுக்குள் புறமுதுகு காட்டி ஓட வைத்திருந்தன..

20-4-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.