செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

பயணத்துளி - 2

போக்குவரத்து பயணங்களில் அறிமுகமாகும் சிலர் , அந்த பயணம் முடிவடையும் நேரத்தில் நம்மை விட்டு , நம் நினைவை விட்டு மறைந்திருப்பர்.. ஒரு சிலரின் நினைவுகளோ அல்லது அரிதாக அவர்களோ நம் வாழ்க்கை பயணம் வரையும் கூடவே வர செய்யும்படி அவர்களின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடும்..
திருவனந்தபுரத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வந்த பயணம் அது ... பெண்ணுக்கும் இரண்டு வயது கடந்துவிட்டதால் விமானத்தில் தனி இருக்கை... அதனால் ஒரு பக்கம் இருந்த மூன்று இருக்கைகளில் நானும் பிள்ளைகளும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு பக்கவாட்டில் இருந்த வரிசையில் கடைசி இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார்.. பொதுவாக ஆண்களுக்கு ஒரு வித அசவுகரியங்களிலிருந்து ஒரு தப்புவிப்புத்தனம் எப்போதுமே இருக்கும்..
எப்போதுமே பெரும்பாலான கணவர்கள் ,மனைவி உடன் இருக்கும்போது , இது போலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தன்பக்கம் உட்காரவைத்துக் கொண்டு, அவர்களின் சில தொந்தரவுகளை சகித்துக் கொள்ள முடியாமல் கொஞ்சம் ஓரமாகவோ, வாய்ப்பு அமைந்தால் தனியாக ஒதுங்கி கொள்வர்.. அப்படிதான் அவரும்.. பிள்ளைகளை என் பொறுப்பில் விட்டு விட்டு தனியாக ஒரு சீட்டில் ஒதுங்கிக்கொண்ட நேரத்தில் கூட இந்த எண்ணம் எனக்குத் தோன்றவில்லை.. சில மணித்துளிகளில் இருவரும் ஜன்னலோர சீட்டுக்கு அடி போட ஆரம்பித்ததும் லேசான கடுப்புடன் இந்த எண்ணமும் தலை காட்ட ஆரம்பித்தது..
ஜன்னலோர பயணம் என்பதும் பலரை போல எனக்கும் அலாதி விருப்பமானது.. ஆனால் பிள்ளைகள் வந்த பிறகு அவர்களின் தேவைக்கு முக்கியத்துவமும், முதன்மைத்துவமும் கொடுக்க ஆரம்பிக்கும் மனம் வந்து விடுவதால் நம் பல ஆசைகளை ஒருவித விருப்ப/விருப்பமற்ற மனத்தோடு பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம்.. அதற்கேற்ற வகையில் அந்த இருக்கைகளின் கடைசி இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன்..
சிறிது நேரத்திலேயே சில சமாளிப்புகள் மூலம் பெண்ணை நடுவில் (அவளின் விட்டுக்கொடுத்து விடும் (சில சமயம் மட்டும்)குணத்தால் ) உட்காரவைத்து அவர்களின் இடப்பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டேன்.. சிறிது நேரத்திற்குப் பிறகு பின்பக்கம் பெற்றோருடன் உட்கார்ந்திருந்த 3 வயது போல இருக்கும் சிறுமி அவளின் செல்ல சேட்டைகளை சீட்டின் இடைவெளியில் கையை விட்டு தட்டி விடுவதில் இருந்து ஆரம்பித்தாள்..
அவற்றை என் பிள்ளைகளும் கொஞ்சம் வெட்கம் கலந்தவாறே பின்பக்கம் திரும்பியும் , என்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைத்து ஏற்றுக்கொண்டனர்..பின் எங்களின் இருக்கைக்கு மேல் தலை வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த துணியை இழுக்க ஆரம்பித்து என்னுடையதையும், பின் பெண்ணுடையதையும் கீழே தள்ளி விட்டு சத்தமாக சிரித்தாள்.. அவளின் இந்த சேட்டைகளை ஆரம்பத்தில் ரசித்துக் கொண்டிருந்த மகனுக்கு அவள் அவனின் தலைக்கு பின் இருந்த துணியையும் எடுக்க முற்படுகையில் ஒரு வித வெறுப்புடன் கைகளாலும் , தலையை பின் பக்கம் நன்றாக இறுக்கி சாய்ந்து கொண்டும் அவளை எடுக்க விடாமல் இருக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..ஆனால் இறுதியில் அந்த சிறு பெண்தான் ஜெயித்தாள்...
அந்த பெண்ணின் பெற்றோரும் அடிக்கடி அந்த பெண்ணை அதட்டியும் அந்த பெண் கேட்பதாக இல்லை.. பின் சிறிது நேரத்தில் அந்த குழந்தை முன்புறம் எங்கள் இருக்கைக்கு வர விரும்பி அழுதவாறே எங்கள் சீட்டுக்கு இடையில் வந்து விட்டாள். எங்களுக்கு தொந்தரவு எனக்கருதி அவளின் பெற்றோர் கூப்பிட்டு பார்த்தும் , மிரட்டி பார்த்தும் அங்கு செல்லவில்லை.. இங்கும் சிறு குழந்தைகள் இருப்பதால் அவள் இங்கிருக்க விரும்புகிறாள் என்பதை அறிந்து நானும் என் கணவரும் அவள் அப்பாவிடம்"கொஞ்ச நேரம் இங்கு இருக்கட்டும்" எனக் கூறியதும் அவர் சிரித்தவாறு ஆமோதித்து ,அவரின் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்..
அவள் எங்களுக்கு முன்புறம் வந்ததும் என் பிள்ளைகளும் ஒருவித வெட்கத்தோடு சந்தோசப்பட்டனர்.. அவளுக்கும் இருக்கையில் சிறு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உட்கார வைத்தேன்.. ஆனால் அவளோ என் மடியில் உட்கார விரும்பினாள்.. இதை பார்த்ததும் நிகிதாவுக்குள் கொஞ்சம் உரிமை போர் மூள ஆரம்பித்து அவள் முகம் வேறு கருக்க ஆரம்பித்தது.. "கொஞ்ச நேரம் இவங்க என் மடில இருக்கட்டும்" என்றதும் நிகிதா ஒருவாறு தலையை மட்டும் அசைத்தாள்.. பின்னர் அந்த பெண்ணை என் மடியில் உட்கார வைத்துக் கொண்டேன்..
அந்த குழந்தை மலையாளீ என்பதால் மலையாளத்தில் பேசி சிரித்தவாறே பிள்ளைகளை சீண்டியும், முன்புறம் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்களின் இருக்கைகளுக்கு இடையே கையை விட்டும், அவர்களின் தலைகளை வருடியும் தன் சேட்டையைத் தொடர்ந்தாள்.. அவர்களும் சிரித்தவாறே பின்புறம் திரும்பி திரும்பி அவளிடம் விளையாட ஆரம்பித்தனர்.. என் பிள்ளைகளும் அதை சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தனர்..
அதிலும் அவளுக்கு அலுப்பு தட்டி விடவே என் பிள்ளைகளின் கையை பிடித்து இழுப்பதாக சேட்டையத் தொடர்ந்தாள்.. இடையில் என் பிள்ளைகள் என்னை அம்மாவென கூப்பிடுவதை பார்த்ததும் அவளும் என்னை அம்மாவென கூப்பிட்டு ஏதோ மலையாளத்தில் (மலையாளம் ஓரளவுக்குத்தான் எனக்குப் புரியும்) என்னிடம் இடையிடையே பேசியவாறே இருந்தாள்...
அவள் "அம்மா" என என்னைக் கூப்பிட்ட முதல் நொடியிலிருந்து "அம்மா" என அவள் கூப்பிடும்போதெல்லாம் மனதுக்குள் ஒருவித சொல்ல இயலாத நெகிழ்ச்சி.. நம் பிள்ளைகள் முதன்முதலாக அம்மா என்று செல்லும்போதுதான் அந்த நெகிழ்ச்சி கிடைக்கும்.. ஆனால் மற்றவர்களின் குழந்தைகள் நம்மை அம்மா என கூப்பிடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுவித நெகிழ்ச்சி கிடைப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.. ஆனந்தத்தில் லேசாக கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.. என் கணவரை பார்க்கவும் அவரும் என்னைப் பார்த்து சிரித்தார்.. (அந்த நேரத்தில் அந்தக்குழந்தையுடைய அம்மாவுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று இப்போது யோசித்துப்பார்க்கையில்தான் புரிந்து கொள்ள முடிகிறது..)
அந்த பெண் ,என் பிள்ளைகளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததால் , என் பிள்ளைகள் சிரித்தவாறே அதிலிருந்து தப்பிக்க இருக்கையின் மீது எழுந்து நின்றார்கள் .. அப்போது திடீரென நிகிதாவின் சட்டையில் தைக்கப்பட்டு இருந்த ரிப்பன் பூவின் மீது ஈர்க்கப்பட்டோ என்னவோ , அக்குழந்தை அதை இழுக்க, அந்த இழுப்பில் அது பிய்ந்து தொங்கவும் நிகிதா ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்..
தங்கை அழ ஆரம்பித்ததும் ரோகித்தின் அண்ணன் மனம் விழித்துக் கொண்டது.. "இது பேட் கேர்ள் , இந்த பேட் கேர்ள் -ஐ அவங்க அம்மாகிட்ட விடுங்க" என கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.. நிகிதா அழுததும் அவளின் அப்பா அவளை தன்னிடம் கூப்பிடவே அங்கு சென்று விம்மியவாறே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்..
அந்த பெண்ணின் அப்பா திரும்ப எங்கள் சீட்டுக்கு வந்து அப்பெண்ணை இழுக்க முயற்சிக்க வரமாட்டேன் என அம்மா, அம்மா என்றவாறே அவள் என் மீது சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் ..
"ஒண்ணுமில்ல, கொஞ்ச நேரம் இருக்கட்டும்" என நானும் என் கணவரும் அவள் அப்பாவிடம் கூறியதும் அவர் திரும்ப தன் இருக்கையில் அரை மனதோடு போய் உட்கார்ந்து கொண்டார்.. இங்கு என் மகனோ "அவங்க அப்பாகிட்ட அவளை விடும்மா , இது பேட் கேர்ள்" எனக் கத்திக் கொண்டிருந்தான்..
"அப்படி சொல்லக்கூடாது தங்கம் , சின்ன பொண்ணுதானே , அதான் தெரியாம இழுத்துட்டா" என நான் அவனை சமாதானப்படுத்த முயலும்போது, "சின்ன பொண்ணா, நிகிதாவோட சட்டையை கிழிச்சு அவளை அழ வச்சுருக்கா , நிகிதாவை பாருங்க, எப்படி அழறான்னு , நீங்க இந்த கேர்ள்-ஐ வச்சுட்டு இருக்கீங்க, அங்க விடுங்க" என தன் கத்தலைத் தொடர்ந்தான்.. அந்தக் குழந்தையோ எதுவும் சொல்லாமல் என் மீது சாய்ந்து கொண்டிருந்தது.. மகனிடம் என் சமாளிப்புகள் வேலை செய்யாததை பார்த்துக் கொண்டிருந்த என் கணவர், அவனை அதட்டியதும் பேசாமல் முகத்தை தூக்கி வைக்கிக் கொண்டு அமர்ந்து விட்டான்..
அந்தக் குழந்தையோ அம்மா, அம்மா என்று கூறிக்கொண்டிருந்தவாறே என் மீது சாய்ந்து இருந்தாள்.. ஏசி-யும் போடப்பட்டிருந்ததால் அந்தக் குழந்தைக்கும் சேர்த்து சால்வை போர்த்தியவாறே சிறிது நேரம் வைத்திருந்தேன்.. அந்த குழந்தை கை, கால் , கழுத்து என எல்லாவற்றிலும் தங்கத்தை அணிந்திருந்ததால் சிறு பதட்டம் வேறு எனக்கு.. ஏதேனும் களைந்து விட்டால் நம்மை தப்பாக நினைப்பார்களென்ற பயம் மற்றும் அவர்களுக்கும் பிள்ளையை நகைகளுடன் அங்கு கொடுத்திருக்கிறோம் என்ற தவிப்பு வேறு இருக்குமோ என்ற எண்ணம் என எல்லாம் இருந்தாலும் அந்த குழந்தை என் கழுத்தை சுற்றி பிடித்திருந்த இறுக்கமான பிடிப்பு , அவளுக்கு வசதியாக அவளை சேர்த்து போர்த்தியிருக்க வேண்டும் என அதை செய்ய வைத்தது..
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து , எனக்கு சிரமம் இருக்கும் எனக்கருதியோ என்னவோ , அவளை அவள் அம்மா "இங்கு வந்துட்டு போவேன்" என எதையோ காண்பித்துக் கூப்பிட , திரும்ப இங்க விடணும் என சொல்லியவாறே சென்றவளை, பின் அவர்கள் பிடித்து வைத்ததும் அழ ஆரம்பித்து விட்டாள். அழுவதை பொறுக்க மாட்டாமல் திரும்ப கூப்பிட மனம் ஏங்கியும் அவள் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு மனதை அடக்கவே ஒருவித பதட்ட மனதோடவே அவள் அழுகை முடியும் வரை இருந்தேன்.. பின் அப்படியே தூங்கி விட்டாள் போல..
காலையில் ஷார்ஜாவில் Flight இறங்கியதும் , என் Bag-ல் வாட்டர் பாட்டில் வைக்க பின்புறம் திரும்பியபோது அச்சிறு பெண்ணின் பெற்றோர் என்னை பார்த்துக்கொண்டிருந்ததையும், அக்குழந்தை அவர்கள் அவர்கள் மடியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததையும் உணர முடிந்தது.. ஆனால் நான் நேரடியாக அவர்களை பார்க்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. ஆனால் மனது அக்குழந்தையை சுற்றியபடியே இருந்தது.. கொஞ்சம் கூட்டம் குறைந்ததும் எழுந்திருக்கலாம் எனக் கருதி உட்கார்ந்திருந்தனர்..
பின் ஏர்போர்ட்-க்குள் நுழைந்ததும் அவர்களையும், அந்த சிறு பெண்ணின் முகத்தையும் பார்த்திருக்கலாம் என மனது அடிக்கத் தொடங்கவே திரும்பி பார்த்தேன்.. உறங்கிக்கொண்டிருந்த பிள்ளையை தோளில் சாய்த்தவாறு அந்த கணவர் தன் மனைவியோடு வந்து கொண்டிருந்தார்..ஆனால் செக்கிங் எல்லாம் இருந்ததால் திரும்ப அவர்களை அந்த இடத்தில் என்னால் காண முடியவில்லை..
அக்குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒரு புன்னகையாவது சிந்தி விட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிக்கொண்டே இருந்தது, இன்னும் இருக்கிறது.. ஆனாலும் அக்குழந்தையின் முகம் இன்னும் என் மனதில் இருந்து முழுமையாக மறையவில்லை..
இப்போதும் சில நேரங்களில் மகன் "அன்னைக்கு நிகிதா டிரஸ்-ஐ கிழிச்ச கேர்ள்-ஐ மடில வச்சு இருந்தீங்க ,ஆனா அழுதுட்டு இருந்த நிகிதாவையும், என்னையும் மடில உட்கார விடல, அது பேட் கேர்ள் , ஆனா அந்த கேர்ள்-ஐ மட்டும்தான் உங்களுக்கு பிடிக்கும்" என குத்திக் காட்டுவான்..
சிரித்தவாறே சொல்வேன் "அந்த கேர்ள்-ஐயும் பிடிக்கும்" என....

-ஷார்ஜா 
  17-5-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.