ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பூ

வெள்ளியன்று பர் துபாயில் உள்ள இந்து கோவிலுக்கு சென்றிருந்தோம்.. அங்கிருந்து கிளம்பும்போது அங்குள்ள ஒரு கடையில் ஒரு வாரத்துக்கு வைப்பதெற்கென மொத்தமாக மல்லிகைப்பூ வாங்கி வந்தோம்..
பூ என்றால் கொள்ளை இஷ்டம் எனக்கு.. அதிலும் மல்லிகை பூ என்றால் கேட்கவே வேண்டாம்.. நீளமான பின்னலிட்ட ஜடையில் இரண்டு மடிப்பாக பூக்களை முன்பக்கம் சிறிது விட்டு தொங்க விட்டுக்கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நெடுநாளைய கனவு.. ஆனால் துரதிருஷ்டம் பாருங்கள் முன்பக்கம் எவ்வளவு நீளத்துக்கு பூவை  தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும் என ஆசைபடுவேனோ அந்த அளவுக்கு கூட முடி வாய்க்காததுதான்..... அங்கிருந்தபோது இருந்த முடிக்கும் இங்கு வந்து முடிவு வந்தது இங்குள்ள தண்ணி வாயிலாக..ஆனால் , மிக நெருங்கிய வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் என் ஆசையை சவுரி முடி தீர்த்து வைக்கும்..
நேற்று இங்கு உள்ள ஒரு பெரிய மாலுக்கு செல்வதென முடிவெடுத்தோம்.. கிளம்பும்போதே பூ சூடிக்கொண்டு போக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.. பூவை சூடபோகும்போதுதான் , போவது பெரிய மால் ஆயிற்றே, அங்கு இந்தியர்களின் , குறிப்பாக தமிழர்களின் வருகை மிக மிக குறைவு.. ஒரு காட்சிப்பொருள் மாதிரி ஆகி விடுவோமா என்ற எண்ணம் எழுந்தது.. கணவரிடம் கேட்ட போது இதுல என்ன இருக்கு , அதெல்லாம் ஒன்னும் இல்ல , பூ வச்சுக்கோ ,என்று சொல்ல எனக்கும் வைத்து , பெண்ணுக்கும் சிறிது வைத்து விட்டேன்..
அங்கு சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை விசாரித்து வாங்கும் வரை மற்றவர்களின் பார்வையில் வித்தியாசம் தெரிகிறதா என கவனிக்க எண்ணம் எழவில்லை.. பின் மால்-ஐ சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு சில பெண்களின் பார்வை , குறிப்பாக நம் தமிழ் பெண்களின் பார்வை எதேச்சைக்கு பிறகு திரும்பவும் என்னை பார்க்குமாறு தெரிந்தது.. தொள தொளவென்று சுரிதார் அணிந்து, எவ்வளவு முடியோ அதை நுனி வரை பின்னலிட்டு இருந்த ஓரிரு பெண்களை பார்க்க நேர்ந்தபோது , இவர்கள் இங்கு இப்போதுதான் வந்திருக்கிறார்கள் போல என நான் எண்ணியதுண்டு.. என் எண்ணம் இப்படி இருக்க,என்னைப் பார்த்த பெண்களில் ஒருவருக்காவது அந்த எண்ணம் தோன்றுவது இயல்புதானே என்று பட்டது.. நான் என் உடல்வாகுக்கு பொருத்தமான சுரிதார்தான் அணிந்து சென்றேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
இதை என் கணவரின் காதுக்கு கொண்டு சென்றபோது நம்ம பாரம்பரியத்தை விட்டு கொடுக்க கூடாது, முக்கியமா அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைக்கவே கூடாது என்றவரிடம் , ரெண்டாவது பாயிண்ட் சூப்பரோ சூப்பர், அதுபடி நேரா போய் ரெண்டு ஜீன்ஸ் டாப்ஸ் எடுக்கறோம் என நான் சொல்ல, உடை சம்பந்தப்பட்ட தன் பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டார்..
ஒரு இடத்துக்கு தகுந்தபடிதானே உடையும், அலங்காரமும் இருக்க வேண்டும்.. அதிகம் வெளிநாட்டவர்கள் கூடும் இடத்துக்கு, பூ இவ்வளவு வைத்துக் கொண்டு வந்தது(என் கூந்தலுக்கு(!!!) அதிகம் என நினைக்கிறேன்) தவறோ என்ற எண்ணம் எழுந்தது.. நான் பார்த்த தமிழர்களில் என்னைத் தவிர்த்து இரண்டு பெண்கள்தான் சுரிதார் அணிந்திருந்தார்கள்.. நவீன நாகரீகம்அவர்களின் சிகையில் தெரிந்தது.. அவர்கள் என்னைப் பார்த்த பார்வையில் சொல்லத் தெரியாத ஒன்று தெரிந்தது..
பின் அங்குள்ள KFC -யில் சிக்கன் சாப்பிட்டு விட்டு வாஷ் ரூமுக்கு சென்ற போது அங்கிருந்த தன் முகத்துக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த அரபு பெண் ஒருவர் சில நொடிகளுக்கு பின் , ஆங்கிலத்தில் , இந்த பூ எங்கு வாங்கினீர்கள் எனக் கேட்க நான் இடம் சொல்ல , அவ்வளவு தூரமா என அவர் மறு பதில் கூறவே அருகாமையில் சில மால்களில் கிடைக்கும் விவரத்தைக் கூறினேன்.. நானும் சிலர் பூ வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன், விசாரிக்க வேண்டும் என்று எண்ணுவேன் என சொல்லி, நைஸ் என்று புன்னகைத்தவாறு முடித்துக் கொண்டார்.., நானும் நன்றி சொல்லி விட்டு திரும்பினேன்..
சில நிமிடங்களுக்கு முன் இருந்த எண்ண அலைகள் இப்போது அடியோடு மாறி இருந்தன..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.