புதன், 26 ஆகஸ்ட், 2015

கருக்கலைப்பு


பூமியில் உலவும் ஓர் உயிரை கொலை செய்வதை கொடுஞ்செயல் என எண்ணும் இந்த சமூகம்தான் வெளியுலகை காண்பதற்குள் கருவறைக்குள்ளே கொல்லப்படும் செயலை கருக்கலைப்பு என சுலபமாக கடந்து விடுகிறது..

தெரிந்தவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு தெரிந்த பெண் ஒருவரை குறிப்பிட்டு, அவருக்கு இரு குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் மூன்றாவது பிறப்பதாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் 5-வது மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதுவும் பெண்குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறினார்..

இதேபோல் திருமணமான உடனே சிறிது காலத்திற்கு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் போது குழந்தை உண்டானால் கருக்கலைப்பு செய்வது (இவ்வாறு கருக்கலைப்பு செய்துகொண்டவர்களில் பலருக்கு அதன் பின் குழந்தை பாக்கியமே இல்லாமல் போயிருக்கிறது..)திருமணத்திற்கு முன் தவறான நடவடிக்கைகளால் கரு உண்டானால் கலைப்பது என கருக்கலைப்பு ஒரு சாதரணமான விஷயமாக நம்மால் பார்க்கப்படுகிறது... சம்பத்தப்பட்ட பெண்ணே அதனால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகாத வண்ணம் அது எங்கெங்கும் சர்வசாதரணமாக நடந்து வருகிறது.. அதிலும் பெரும்பாலான பெண்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் , குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கும் அடங்கி தீர வேண்டிய நிலையிலேயே இதற்கு சம்மதிக்கின்றனர்..

பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக அரசாங்கம் கருவில் இருப்பது என்ன குழந்தை என தெரியப்படுத்த தடை விதித்திருந்தும் சில மருத்துவமனைகள் கருக்கலைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக சட்டத்தை மீறிக் கொண்டுதான் இருக்கின்றன... கருக்கலைப்பின் முழு நிலையையும் அறிந்திருக்கும் மருத்துவர்களே மனசாட்சியில்லாமல் இச்செயலை செய்து கொண்டுதானிருக்கின்றனர்..

என் விஷயத்திலேயே முதல் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே அடுத்த கரு உண்டானதறியாமல், நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதும், அங்கிருந்த மருத்துவர் ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களிற்குள்ளேயே, அடுத்த கரு உண்டாகி இருப்பதை அறிந்தவர் :கரு 3 மாதங்கள் கடந்து விட்டது, கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அபார்சன் பண்ணியிருக்கலாம், இப்பவும் கெட்டு போகல, உங்களுக்கு விருப்பம்னா பண்ணிடலாம்" என கூற , வயிற்றில் இருக்கும் குழந்தை நாங்கள் ஆசைப்பட்ட பெண்குழந்தையாக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்ற மறுத்து விட்டு வந்தேன்.. ஆனாலும் எனக்கும், உடனே அடுத்த குழந்தை பிறந்தால் முதல் குழந்தை எல்லாவிதத்திலும் ஏங்குமோ என்ற எண்ணமும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமும், இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள இயலுமா என்ற எண்ணமும் சேர்ந்து அழுத்த என் பெற்றோரிடம் டாக்டர் சொன்னதை கூறினேன்.. ஆனால் என் பெற்றோர் உடனே அதை கடுமையாக மறுத்தனர்.. இன்று அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.. ஒருவேளை அவர்களும் மருத்துவர் சொன்னதையே கூறி இருந்தால் , என் வாழ்நாள் முழுவதும் அழுது தீர்க்க முடியாத ஒரு பாவத்தை செய்திருப்பேன்...

ஆம், நிறைய பேர், சம்பத்தப்பட்ட பெண்கள் உட்பட ஒரு கரு எவ்வாறு கலைக்கப்படுகிறது என்பதனை அறியாததால்தான் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கும் செயல் இங்கு மிகுதியாகிக் கிடக்கிறது... கரு ஒரு உயிர் என்ற எண்ணம் பலருக்கு இல்லாததும் ஒரு காரணம்..

இதோ கரு எவ்வாறான முறைகளில் எல்லாம் கலைக்கப்படுகிறது என படித்துப்பாருங்கள்..

1. நுணிப்பகுதி கூர்மையான, மெல்லிய குழாய் வடிவிலானதொரு உபகரணம் தாயின் கர்ப்பப்பையினுள் செலுத்தப்படும். இதனுடன் பலமாக உறிஞ்சி இழுக்கும் வகையில் இயந்திரமொன்று வெளியே பொருத்தப்படும். இது வீடு சுத்தம்செய்யப் பயன்படுத்தும் நவீன இயந்திரமொன்றைவிட 29 மடங்கு உறிஞ்சும் சக்தியில் பலமிக்கது. இவ்வியந்திரத்தை இயங்கச்செய்தவுடன் சிசுவின் உடலுறுப்புகள் யாவும் வேகமாக உறிஞ்சப்பட்டு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்படும்.

2.கூர்மையானதோர் உபகரணத்தின் மூலம் இரத்தம் வழியவழிய சிசு உயிருடன் வெட்டி வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்தெடுக்கப்படும்.

3.மயிர்பிடுங்கிபோன்றதொரு உபகரணத்தின்மூலம் சிசுவின் கைகளும் கால்களும் பிடுங்கி எடுக்கப்படும். இவ்வாறு சிசுவின் உடலுறுப்புகளனைத்தும் கர்ப்பப்பையிலிருந்து முழுமையாக நீக்கப்படும். இதன்போது அச்சிசு வேதனையை உணரும் தறுவாயிலேயே இருக்கும். வெளியே எடுத்துப்பார்த்தால் மண்டையோடு நொறுங்கியிருக்கும். முதுகுப்பகுதி ஒடிந்திருக்கும். இந்த மானக்கேடான செயலின் இறுதியில் தாதியின் பங்கு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்பட்ட சிசுவின் உடற்பகுதிகளை ஒன்றுசேர்த்து பொருத்திப்பார்த்து கர்ப்பப்பையிலிருந்து சிசுவின் முழுஉடலும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்வதாகும்.

4.தாயின் வயிற்றினூடாக குழந்தையின் இதயத்துக்கு விசஊசி ஏற்றப்பட்டு கொல்லப்படும். இது இரட்டைக்குழந்தைகள் கருத்தரித்தால் அதில் ஒரு குழந்தையைக் கலைப்பதற்கே பெரும்பாலும் செய்யப்படும். ஆனால் ஒன்றுக்கு ஏற்றப்பட்ட விசம் மற்றைய சிசுவுக்கும் பரவி இரண்டுமே இறக்கும் சாத்தியப்பாடுதான் அதிகம்.

5.குறை மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தை அது முழுமையாக வெளிப்படாத நிலையில் அதன் மண்டையோட்டின் பின்பகுதியில் சிறியதொரு துளையிடப்பட்டு உறிஞ்சு குழாயின்மூலம் மூளை முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும். பின்பு குழந்தை மரணித்தே பிறக்கும்.

இதை தெரிந்துகொண்ட பின்பாவது ஆன் குழந்தை, பெண் கூழந்தை என்ற பாகுபாடுக்காகவும், நம் வசதிக்காகவும் கருவை கொலை செய்வதை தவிர்ப்போம்..

ஆண் குழந்தைதான் வம்சத்தை வளர்த்துச் செல்லும் என்ற கருத்தையும் விட்டொழிப்போம்.. அதே போல் ஆண் குழந்தைதான் பிற்காலத்தில் நம்மை காக்கும் என்ற எண்ணமும் வேண்டாம்.. பல இடங்களில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே பெற்றோரிடம் அதிக பற்றுதலாக இருக்கின்றனர்.. அது அவர்கள் திருமணம் முடித்தாலும் மாறாது.. வயதான காலத்தில் எந்த பிள்ளைகளையுமே எதிர்பார்க்க முடியாத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என நீங்கள் சொன்னாலும் அதை நான் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன்..

அந்நிய உயிர் கொல்லப்படுவதை கேள்விப்பட்டே கண்ணீர் வடிக்கும் நாம், நம் ரத்தம் , நம் வாரிசு உலகத்தை பார்க்கும் முன்னமே நம்மாலேயே கொல்லப்படுவதை அறிந்து கொண்டு, இனிமேலாவது இக்கொடும் செயலை தவிர்ப்போம்.. நம் வயிற்றில் வளரும் ஓர் உயிரை கொன்றாலும், நம் சந்ததியினருக்கு சந்ததியினரே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்ற விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட உண்மையையும் அறிவோம்.. உலகத்தில் பிறந்ததுதான் குழந்தை என்றில்லை.. கருவறையை உலகமாக எண்ணி வாழும் ஜீவனும் ஒரு குழந்தைதான்.. கருக்கலைப்பு நடக்கும்போது அது தன்னைக் காத்துக் கொள்ள எவ்வாறெல்லாம் ஓடுகிறது என அத்துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்..

இப்பதிவின் மூலம் ஒரு சில நண்பர்களுக்காவது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் அதை விட எனக்கு மகிழ்ச்சி வேறில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.