புதன், 26 ஆகஸ்ட், 2015

பாபநாசம்

பாகுபலி படம் நன்றாக இருக்கிறதென்று கேள்விப்பட்டு குழந்தைகளுடன் திரையரங்கிற்கு சென்றோம்..திரையரங்கிற்கு பயணித்துக் கொண்டிருக்கும்போதே "அம்மா, சிமகாகா (சிவகார்த்திகேயன்) படத்துக்கா போறோம்" என்ற மகனின் கேள்விக்கு "இல்லடா தங்கம், நாம வேற ஒரு பைட் சீன் நிறைய உள்ள படத்துக்கு போறோம்" என நான் சொல்ல அவன் பைட்-க்கும் விளக்கம் கேட்க, அவனுக்கு விளக்கிகொண்டிருக்கும்போதே அங்கு சென்றடைந்தோம்..

ஆனால் பார்க்க சென்ற படத்தை வேறொரு திரையரங்கில் மற்றொரு நாள் சென்று பார்க்கலாம் என்று திட்டத்தை மாற்றி போடும்படி ஆயிற்று, அப்படத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பால். அதன் பின் அங்கேயே திரையிடப்பட்டு இருந்த பாபநாசம் படத்திற்கு டிக்கட் எடுத்தோம்..

ஏற்கனவே பாபநாசம் படம் நன்றாக இருக்கிறது, சென்று பாருங்கள் என நண்பர்கள் சிலர் கருத்து கூறியிருந்தனர்.. அதை பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுந்திருந்த நேரத்தில், முகநூலில் அப்படத்தைப் பற்றிய முழு கதையையும் விமர்சனமாக படித்து முடித்தபோது இனி பார்க்க சென்றால் ஒரு த்ரில் இருக்குமா என்ற சந்தேகமே பாபநாசம் படம் பார்க்கும் ஆவலை பின்தள்ளி இருந்தது.. தமிழ் தவிர மற்ற மொழி படங்களை திரையரங்கிற்கு சென்று பார்த்ததில்லை, அதற்கு ஆர்வமும் இருந்ததில்லை என்பதால் த்ரிஷ்யம் பற்றிய பேச்சு பலமாக இருந்தபோதும் அதை சென்று பார்க்கவில்லை...

படம் வெளியாகி நாட்கள் அதிகமாக ஆகி இருந்ததால் தியேட்டரில் எங்களையும் சேர்த்து 15 பேர்தான்.. ஓரளவு முழு படத்தின் கதையும் விமர்சனங்களின் வாயிலாக படித்ததுதானே, என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்று பார்க்க ஆரம்பித்த படம்தான்.. ஆனால் ஆரம்ப காட்சிகள் சிலவைக்கு பிறகு பட இறுதி வரை ஆர்வத்துக்கு சிறிதும் குறைவில்லாமல் படம் நகர்த்தப்பட்டிருந்தது...

படத்தில் கமலைப் பார்க்க முடியவில்லை, சுயம்புலிங்கம் தான் தெரிகிறார் என்ற விமர்சனத்தைப் படித்ததில் இருந்து கமலா, சுயம்புவா என்ற தேடல் படம் முடியும் வரை எனக்கிருந்தது.. அதிகமாக சுயம்புதான் தென்பட்டார்.. அதேபோல்தான் கவுதமி, மீனா ஒப்பீடும்.. ஒன்று புரிந்தது, அது, இனி படத்தைப் பார்ப்பதற்கு முன் முழு விமர்சனமும் படிக்கக்கூடாதென்பதே....!!!

உடைந்த மூக்கு கண்ணாடி ப்ரேம்-ஐ சரி செய்யும்போது , அதைபார்த்து மனைவி கண்டிக்க பின் அதைத் தூக்கி (உடையாதவாறு )எறியும் காட்சி, அணைக்க மறந்த மின் விளக்கை அணைக்க எழும்புதல் உள்ளிட்ட சில காட்சிகள் மனசை விட்டு அகலவில்லை..ஒரு நடுத்தர வர்க்கத்து தந்தையை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருந்தனர்..

நம் நெருங்கிய உறவு தெரிந்தோ , அறியாமலோ ஒரு குற்றத்தை புரிந்த பிறகு, சமூகத்தின் பார்வைகளுக்கும், பேச்சுக்கும் பயந்து, எப்படி யாருக்கும் தெரியாமல் அதில் இருந்து சம்மந்தப்பட்டவரை வெளிக்கொணர்வது என்ற எண்ணங்கள் மட்டுமே முதலில் தோன்றும்.. அதனாலும், அழகாக , சாமர்த்தியமாக பழியிலிருந்து வெளிவந்ததிலுமே படத்தின் வெற்றி அடங்கியிருந்திருக்கிறது...

திடீரென வருணைத் தாக்க தன் தாயிடம் இழிவாக நடக்க சொல்லுவதே காரணம் என்றாகும்போது , ஏனோ அந்த பாத்திரத்திற்கு கவுதமியின் முதிர்ச்சி தெரியும் தோற்றம் ஏற்புடையதாகவில்லை... மற்றபடி கவுதமியின் நடிப்பும், பிள்ளைகளாக நடித்த பெண்களின் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படிதான் உள்ளது..

கமலின் நடிப்புப் பற்றி சொல்ல வேண்டியதில்லை, அனைவரும் அறிந்ததே.... ஆனால் என்னை மிகவும் ஈர்த்தது, வருணின் பெற்றோர்களாக நடித்தவர்களின் நடிப்புதான்.. அதிலும் வருணின் தாயாக வரும் ஆஷா சரத்தின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அபாரம்.. அவர் மற்ற கதாபாத்திரங்களுடன் இணைந்து காணப்படும் காட்சிகளில் கூட அவரின் நடிப்பை மட்டுமே கவனிக்க வைத்து விட்டார்..

படத்தின் ஆரம்பத்தில் கிரிமினல் என காவல்நிலையத்தில் உட்கார வைத்திருக்கும் சுயம்புலிங்கம் கதாபாத்திரமே கடைசியில் தானே குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நினைப்பு கடைசியில் பொய்த்து போய், மிக அழகாக முடிந்தது..


அப்படத்தைப் பார்த்து முடித்து வெளியே வந்தும், அப்படத்தைப் பற்றிய தாக்கம் மனதில் இருந்து அகலாமல் இருந்தது.எந்த ஒரு படமுமே நம் வாழ்வியலோடு சிறிதேனும் சம்பத்தப்பட்டு நகர்த்தப்பட்டிருந்தாலே அது மக்கள் மனதில் இடம்பிடிக்கும் சிறந்த படமாக இருக்கும்..அதற்கு சற்றும் விதிவிலக்கல்ல பாபநாசம்..

நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.