புதன், 5 ஆகஸ்ட், 2015

விசித்திரம்

கனவின் தடம் அறியாமல்
பயணித்துக் கொண்டிருந்த
வாழ்க்கையொன்றில்  
பெரும் மன சண்டைக்கு பின்
பிரிந்து சென்ற உறவுப்பெண் ஒருத்தி
பாசத்தோடு தோள் பற்றி நடக்கிறாள்...!!!

அவளுக்கு இம்மியளவும்
பரிச்சயமில்லாத
என் நெடுநாள் தோழியை
பற்றிய பேச்சோடு
வார்த்தைக்கு வார்த்தை
புன்னகைக்கிறாள்......

அவளின்  குதூகலம்
என்னையும் தொற்றிக்கொள்ள 
அதை பிரதிபலிக்க
பேச்சின் நடுவே
அவள் முகம் காண்கிறேன்...!!!

அங்கே அவள் முகம் மாறி
என் நெருங்கிய தோழி
அவள் பாத்திரமேற்றிருக்கிறாள்...!!!!

அப்போதுதான்
சுற்றியும் கவனிக்கிறேன்
முன்பு அளவளாவிக் கொண்டிருந்த
இடமும் மாற்றம் எடுத்திருக்கிறது...!!!

ஆளும் இடமும்
மாறி மாறி குழப்பினாலும்
கண்ணாமூச்சி காட்டும்
கனவு வாழ்க்கைதான் வேண்டும்
என உள்மனம் எதிர்பார்க்க
இவையனைத்துக்கும்
நேரெதிரான வாழ்க்கை
விடியலின் கூடவே
விழித்தெழும்  உண்மையை
விழிப்புத்தான் உணர்த்துகிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.