புதன், 26 ஆகஸ்ட், 2015

எம்ஜிஆர்

கடந்த பல வருடங்களுக்கு முன் டிசம்பர் 24-ம் தேதி-ல் நாங்கள் குடியிருந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து எங்கள் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் வைத்து இருந்தனர்.. அடுத்த காலனியில் அங்குள்ளவர்கள் ஒரு படத்தை வைத்திருந்தனர்..எங்கள் பகுதியில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வரானதற்கு பின் உள்ள (தொப்பி அணிந்து உள்ள புகைப்படம்) புகைப்படமும், அடுத்த தெருவில் எம்ஜிஆர் அவர்கள் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் உள்ள புகைப்படமும் வைத்து மாலை அணிவித்து இருந்தனர்.. ரெண்டு எம்ஜிஆர்-க்கு மாலை போட்டு இருக்காங்க பாத்தியா, அவங்க வச்சு இருக்க போட்டோ-ல இருக்க எம்ஜிஆர் தம்பி.. சினிமாவில் நடிச்சு இருக்கார்.. நம்ம காலனி-ல வச்சு இருக்க கண்ணாடி போட்டு இருக்க எம்ஜிஆர் அண்ணன்.. இவர் நம்ம CM-ஆக இருந்தார் என என் தோழிக்கு நான் கொடுத்த மேதாவித்தனமான விளக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது.. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும்...

அந்த எம்ஜிஆர் பின்னாளில் என் மனதிற்குள் வாழ அவரின் கொடை வள்ளலை எடுத்துரைத்த பத்திரிக்கைகளும் காரணம்.. அதுவும் வாரமலரில் அவரை பற்றி நான் நிறைய படித்ததுண்டு... அது என்னவோ என் மனதில் எளிதில் வந்து அமர்பவர்கள் தர்மவான்களே....கலைவாணர் NSK அவர்கள் , திரு.கல்யாணசுந்தரம்(தன் 30 வருட முழு ஊதியத்தையும், 10 லட்சம் ஓய்வூதிய பணத்தையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்த எளிமையான இந்தியர்)என இன்னும் சிலர் உள்ளனர் அந்த வரிசையில்....
எம்ஜிஆர் அவர்களின் தர்ம குணத்தையும் இரக்க குணத்தையும் படிக்கும்போதும், கேள்விப்படும்போதும் மெய் சிலிர்த்துப் போவேன்..இல்லையென்று கூறாமல் கொடுத்தவர்.. அவருக்கு நெருங்கிய மருத்துவ நண்பர் என நினைக்கிறேன், வெளிநாட்டில் இருந்து வரும்போது உங்களுக்கு என்ன வேண்டும் என எம்ஜிஆரிடம் கேட்டதற்கு இதுவரை எல்லோரும் கேட்டுதான் வந்திருக்கிறார்கள், நீங்கள்தான் முதன் முதலில் எனக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளீர்கள் என கண்ணீர் மல்க எம்ஜிஆர் கூறியதாக படித்த போதும், என் அண்ணனுக்கு நிறைய பிள்ளைகள், ஆனால் எனக்கு ஆண்டவன் ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லை என வருந்தியதாக படித்த போதும் என்னாலும் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை..
அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த மறைந்த நடிகர் நம்பியார் அவர்கள் மறைவதற்கு முன் எம்ஜிஆர் அவர்களுடனான சண்டை காட்சிகளை அந்த காலத்திலுள்ள சிறுவர்கள், எம்ஜிஆர்-ஆகவும், நம்பியாராகவும் எப்படி சண்டை போடுவார்கள் என குழந்தை தனத்துடன் நடித்துக் காட்டியதையும் என்னால் மறக்க முடியவில்லை.. அவருடன் இணைந்து நடித்தவர்கள், அவருடன் நெருங்கிய நட்பிலிருந்தவர்கள் என அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றவர்..
பாரபட்சம் பார்க்காமல் அன்பை செலுத்தியவர்.. ஒரு கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தவர்களிடம் மேடையில் இருந்த தடுப்பை தாண்டி, குனிந்து தானாக கைப்பட மனுக்களை பெற்றவர்.. வேறு எந்த முதல்வர் இப்படி செய்து இருக்கிறார்.. இப்படி இன்னும் பல...

அவரின் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என சொன்னாலும், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற குறையும் மனதில் நிழலாடுகிறது... உண்மையில் அவரை தரிசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... 


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்...
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்...
- கவிஞர் கண்ணதாசன்..
அப்படி சரித்திரத்தில் மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் திலகம்..  
அவரை போல் இனி எவரும் பிறக்கவும் முடியாது, அவரை போல் ஆகவும் முடியாது.... தர்மவான்கள் இறந்தும் வாழ்வர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புரட்சி தலைவர் அவர்கள்.... 

காலத்தை வென்றவர்...மறைந்தாலும் இன்றும் என்றும் மக்களின் மனதில் வாழ்வார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.