புதன், 26 ஆகஸ்ட், 2015

யாசகம்

"அம்மா" என்ற ஒரு யாசக குரல் வாசலில் இருந்து கேட்டாலே, அந்த குரலின் கரகரப்பை வைத்தே அந்த குரலுக்கு சொந்தக்காரரான அந்த வயதான பெண்மணிதான் யாசகம் கேட்டு வந்து இருக்கிறார் என உறுதி செய்து கொள்வோம்... அவரின் அந்த திகைப்பூட்டும் குரலைப் போலவே அவரின் தோற்றமும் பார்த்தவுடன் பயமுறுத்தக் கூடியதாகவே இருக்கும்..

பொதுவாகவே யார் யாசகம் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காசு கொடுப்பது அப்பாவின் வழக்கம்.. ஆனால் உழைக்க முடியாத நிலையிலுள்ளவர்கள், வயதானவர்கள் வந்தால் அவர்களின் நிலையை காரணியாக எண்ணி யாசகம் இடலாமே ஒழிய ,உழைக்க வலு இருந்தும் பிச்சை கேட்பவர்களுக்கும் , பிச்சை கேட்கும் குழந்தைகளுக்கும் காசு போடுவதில்லை என்ற என் தீர்மானமோ சில இடங்களில் ஆட்டம் கண்டு விடுவதும் உண்டு... பேருந்து நிலையங்களில் சில குழந்தைகள் பசிக்குது என காசு கேட்பார்கள் அவர்களின் தாயை சில அடி தூரம் பின்னால் வைத்துக் கொண்டே.. சில்லறை இல்லை என அனுப்பினாலும் கையை பிடிப்பார்கள், காலில் விழுவார்கள், உடையை பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.. அவர்களின் இச்செயலால் அங்கு உள்ள பலருக்கும் நான் காட்சிப் பொருளாகியிருப்பேன்... எப்படியோ விட்டால் போதும் என காசு கொடுத்து அனுப்பிய சம்பவங்களும் உண்டு.., நன்றாக உள்ள சிலருக்கு கொடுக்காததால் அவர்களிடமிருந்து திட்டு வாங்கிய சம்பவமும் உண்டு...

மேலே குறிப்பிட்ட பெண்மணியை காணும்போதெல்லாம் எனக்குள் வருத்தம் குடிக்கொள்ளும்.. குடும்பம் , குழந்தைகள் இருக்குமா, அப்படி இருந்தும் இந்த தள்ளாத வயதில் இவர் பிச்சை கேட்க அவர்களே காரணமாக இருப்பார்களோ என எண்ணியதும் உண்டு.. ஏனெனில் வயதானவர்கள் பிச்சை எடுத்தால் வீட்டில் அவரை கவனிக்கவில்லை போல என்ற எண்ணமே நம்முள் தலை தூக்கும்.. நான் சூலூரில் பணி புரிந்து கொண்டிருந்த நேரம்.... பணி முடிந்து பேருந்து நிலையத்துக்கு ஒரு தெரு வழியாக திரும்பிக் கொண்டிருந்த வேளையில் என் எதிரே, சிறு அழுக்கும் இல்லாத வெள்ளை நிற வேட்டி , சட்டை அணிந்த ஒரு வயதானவர் தலையில் ஒரு சில்வர் சம்படத்தை வைத்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்.. உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவர் திடீரென பக்கத்தில் வந்ததும், டீ சாப்பிட காசு கொடும்மா என கூனிக் குறுகிக் கேட்கவும் நான் மெல்ல அதிர்ந்துதான் போனேன்.. எப்போதும் நான் பேருந்து ஏறுவதற்கு முன்பே காசை கையில் வைத்திருபேன் என்பதால் என் கையில் இருந்த 10 ரூபாயை உடனே நீட்டினேன்.. தான் பெறுவதை மற்றவர் பார்த்து விடுவார்களோ என்ற அவஸ்தையில் உடனே அதை பெற்றுக் கொண்டு வேகமாக என்னை கடந்து போனார். பேருந்து நிலையம் வந்து அடையும் வரை அவரின் மருமகள் (நல்ல நிலையில் உள்ள வயதானவர்கள் யார் இப்படி கேட்டாலும் முதலில் நாம் தப்பாக நினைக்கும் கதாபாத்திரம் மருமகள்தானே) சரியாக கவனிப்பதில்லையோ, மனைவியை இழந்திருப்பாரோ என்றே என் சிந்தனை இருந்தது...

நான் முன்னர் கூறிய வயதான பெண்மணிக்கு , நான் வீட்டில் இருக்கும்போது எப்போது அவர் வந்தாலும் நானே சென்று காசு கொடுப்பேன், அப்பா அப்போது இருந்தாலும் கூட என்னிடம் காசு கொடுத்து கொடுக்க சொல்வார்.. அப்போது காசை பெற்றுக் கொண்டு இரு கைகளையும் கூப்பி விட்டு பேசாமல் சென்று விடுவார்.. ஒரே ஒருமுறைதான் காசு கொடுக்கும்போது , தோசை என்கிட்டே இருக்கு, அதுக்கு ஏதாவது குழம்பு கிடைக்குமா என கேட்டார்.. வீட்டில் அன்று சுண்டைக்காய் குழம்பு.. அதை கொண்டு சென்று கொடுக்கும்போது தோசைக்கு இது நல்லா இருக்காதும்மா, சோறு கொண்டு வரட்டுமா என கேட்டேன்.. உடனே அவர் முக மலர்ச்சியுடன் இதே போதும்மா என சிரித்தவாறு பெற்றுக் கொண்டு திரும்பினார்.. அதுவே நான் அவரை பார்த்த கடைசி முறை என நினைக்கிறேன்.. இனி பார்ப்பேனா என தெரியவில்லை..

கடந்த முறை கோவை சென்றபோது அப்பாவிடம் அந்த பெண்மணி இப்போது வருவதுண்டா என கேட்டேன்.. இப்போது அதிகம் வருவதில்லை, ஒருமுறை ரயில்வே கேட் பக்கம் பார்த்தேன், ஒரு பெண்ணுக்கு சில்லறைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. அந்த பெண் சென்றவுடன் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு காசு கொடுக்க போனேன்.. காசை கொடுத்து விட்டு, சில்லறைகளை அந்த பெண்ணிடம் கொடுத்து ரூபாய் நோட்டு வாங்குவீர்களா என கேட்டேன்.. அதற்கு அவர், அது என் பொண்ணுங்க, புருஷன் இறந்துட்டான் , சின்ன பிள்ளைகளை வச்சுட்டு கஷ்ட படுது, அதுதான் நான் எனக்கு கிடைக்கிற காசை அவளுக்கு கொடுப்பேன் என கூறியதாக அப்பா என்னிடம் கூறினார்.. அதிலிருந்து தள்ளாத வயதிலும் தன மகளுக்காகவும் பிச்சை எடுக்கும் அந்த அம்மாவின் மேலுள்ள பரிவு மேலும் அதிகமானது..

உக்கடம் , காந்திபுரம் பேருந்து நிலையங்களில் அந்த முதியவர் பிச்சை கேட்டு வருவதை நான் வேலைக்கு சென்று கொண்டிருந்த காலம் (ஐந்து வருடங்களுக்கு முன்) வரை அதிகம் பார்த்திருக்கிறேன்.. 50 , 55 வயதிருக்கும்..காலில் ஒரு சின்ன கட்டு போட்டிருப்பார், கையில் ஒரு தடி வைத்து ஊன்றி நடந்து வருவார்.. ஆரம்பத்தில் அவருக்கு நான் காசு கொடுத்திருக்கிறேன்.. ஆனால் அவரை நன்றாக கவனிக்கும்போது பெரிதாக நடக்க முடியாமல் எல்லாம் இல்லை, அது மட்டுமல்லாமல் அந்த காயம் இன்னுமா ஆறாமல் இருக்கும் என்ற சந்தேகம் எழவே அப்போதிருந்து அவருக்கு காசு கொடுப்பதை விட்டு விட்டேன்.. ஒரு முறை அப்பாவிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது , அவரின் மேலும் சில அங்க அடையாளங்களைக் கூறி அவர்தான் என உறுதி படுத்திய பின்பு அவரைப் பற்றி கூறினார்.. அவரின் மகன்கள் இப்போது சொந்தமாக ஹோல்சேல் செருப்புக்கடை வைத்து நல்ல நிலையில் இருப்பதாகவும், இப்போது பிச்சை எடுக்க போக வேண்டாம் என அவர்கள் வற்புறுத்தியும், கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டும் , இப்படி கிடச்ச காசுலதான் உங்களை வளர்த்தேன் , இப்ப என்னால் பிச்சை எடுப்பதை விட முடியாது என மறுத்து , அவர் அதை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்   கூறினார்..

ஹும்ம், என்ன சொல்றது...அப்படி ஒருவர் , இப்படியும் ஒருவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.