புதன், 26 ஆகஸ்ட், 2015

மது என்னும் எதிரி

நான் இந்த பதிவில் சொல்லப்போகிற ஒருவனை நீங்கள் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் நெருக்கமானவருடனோ தினசரி பார்த்துக் கொண்டிருப்பவருடனோ அல்லது அறிமுகமே இல்லாத ஒருவருடனோ பார்த்திருப்பீர்கள்..... ஒருவேளை உங்களுக்கு கூட அவன் எப்போதாவது சந்தித்துத் கொள்ளும் நண்பனாகவோ அல்லது தினமும் சந்தித்துக் கொள்ளும் நெருங்கிய நண்பனாகவோ இருக்கக்கூடும்.... 

இவன் உங்களுக்கு சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திலோ அல்லது துக்கத்தில் உழன்று கொண்டிருக்கும்போதோ ஏதேனும் ஒரு நண்பரால் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பான்... அதன் பின்னான நாட்களில் உங்கள் சூழ்நிலையை பொறுத்து அவன் உங்களுக்கு நெருக்கமான நண்பனாகவோ அல்லது எப்போதாவது தேவைக்கு மட்டும் பழக்கம் கொள்ளும் நண்பனாகவோ மாறி இருப்பான்...

ஆரம்பத்தில் அவன் உங்களுடன் பழக்கமாகி இருக்கும்போது அவனுடனான நட்புறவை உங்கள் குடும்பத்தினரிடமோ, தெரிந்தவர்களிடமோ மறைத்திருப்பீர்கள் . ஆனால், அவர்களுக்கு தெரியாமல் அவனுடனான நட்பை வளர்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள்...

அவன் உங்கள் நெருங்கிய நண்பனான பிறகு உங்களின் சுய மரியாதையை பல இடங்களில் , ஏன் உங்கள் வீட்டில் கூட இழந்திருப்பீர்கள்...நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும்,, எவ்வளவு பணம் கொண்டிருந்தாலும் அவனிடம் கொண்டுள்ள நட்பால் சமுதாயத்தால் மட்டமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்......

உங்களின் இந்த நட்புறவால் உங்கள் குடும்பத்தினர் நிம்மதியிழந்து போயிருப்பர்.... அவர்கள் இந்த நட்பை விட சொல்லி எவ்வளவு வற்புறுத்தி கெஞ்சி இருந்தாலும் அதை தொடர்வதற்கு என்று ஏதேனும் காரணத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள்... உங்களின் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காத நிலை உருவாகும்... உங்கள் பிள்ளைகளின் தவறையும் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையை அந்த நண்பன் உருவாக்கி விட்டிருப்பான்..... உங்களால் உங்கள் குடும்பம் சில நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாமல் வெட்கி குனிய வேண்டி இருக்கும்...

இறுதி கட்டமாக தீராத நோயைக் கொடுப்பான்... அந்த நோயினால் நீங்கள் துன்புறும்போது உங்கள் குடும்பத்தினரிடமே ஆறுதல் வார்த்தைகளை விட வசவு வார்த்தைகளையே கேட்க வேண்டி வரும்..... ஒரு கட்டத்தில் தனி மரமாக்கப்படுவீர்கள்......

பதிவின் பாதியிலேயே அவன் யாரென ஊகித்து இருப்பீர்கள்.... ஆம், தமிழகத்தில் இளவயதினர் முதல் முதிர் வயதினர் வரை அனைவரையும் சுலபமாக தன் வலையில் வீழ்த்தி வரும் மது என்னும் அரக்கனை பற்றிதான் சொல்கிறேன்.....

உங்கள் குடும்பத்தினருக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டுமென நீங்கள் விரும்பினாலும், சமூகத்தில், குடும்பத்தில் உங்கள் மதிப்பு சரியாமல் இருக்க வேண்டுமென்றாலும், முக்கியமாக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க விரும்பினாலும் இந்த மது என்னும் புதைகுழியில் சிக்கியிள்ளோர் அதிலிருந்து மீண்டு வாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்காகவாவது அதிலிருந்து வெளிவர பாருங்கள்.

மற்றவர்களின் வற்புறுத்தலும், அறிவுரையும் இந்த பழக்கத்திலிருந்து உங்களை மீட்டெடுக்காது. உங்கள் மனமாற்றமும், மனக்கட்டுப்பாடும் மட்டுமே இதிலிருந்து மீள வழி வகுக்கும்...

உங்கள் வாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இல்லை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் உங்கள் கையில்..... யோசித்து முடிவெடுங்கள்........

வாழ்க்கை நல்லபடி வாழ்வதற்கே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.