புதன், 23 டிசம்பர், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (11)


  1. முன்பிருந்ததை விட வாழ்க்கை(நிலை)யில் சரிந்தவர்களும், சரிந்ததாக நினைத்துக்  
        கொண்டிருப்பவர்களும் பழைய தொலைந்த நட்புகளை தேடுவதில்லை..
  2. அன்பை விதைத்தால் அன்பேதான் முளைக்கும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் தவறு. பெரும்பாலும் துரோகமும், அலட்சியமும், அவமதிப்புமே முளை விடுகின்றன...
    இதற்கு தீர்வு....
    தகுந்த இடம் பார்த்து அன்பை விதைக்கும் தெளிவு வேண்டும்
    அல்லது
    முளைப்பது எதுவாக இருந்தாலும் அதை அன்பாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும்.
  3. வாய்ப்புகளை சூழ்நிலைகளுக்காக தவிர்த்து விடாதீர்கள். விட்டால், பின் வாய்ப்புக்கான சூழ்நிலைக்காக காக்க வேண்டி இருக்கும்.
  4. நிராகரிப்பு என்பது மிகுந்த வலி கொண்டது. அதுவும் காரணமறியா நிராகரிப்பு என்பது வலியோடு அவஸ்தையும் கூடியது....
  5. (பல)செயல்களை பொறுத்தவரை வாழ்க்கையும் ஒரு வட்டம்தான். வாழ்க்கை நம்மை எப்படி தள்ளிக்கொண்டு போனாலும் திரும்ப அதே செயல்களில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. என்ன, இப்போது அந்த செயல்கள் வேறு ஒருவரால் செய்யப்பட்டிருக்கும், அவ்வளவுதான்........
  6. நேர்மையானவர்கள் யாரிடமும் விலை போவதில்லை.. துரதிர்ஷ்டம், நேர்மையும் இங்கு எங்கும் விலை போவதில்லை...
  7. வலியை விட கொடியது அந்நேரம் உடனிருப்பவர்கள் அதை அலட்சியம் செய்வது
  8. ஒரு பாராட்டிலோ அல்லது வெற்றியிலோ திருப்தியடைந்து விட்டால், அதுதான் கடைசி பாராட்டாகவோ, வெற்றியாகவோ இருக்கும்...
  9. சுயம் மறைத்து பழகும் எந்த உறவும் நீடித்து செல்வதில்லை....
  10. சிலரிடம் ஆறுதலைத் தேடி நாம் சொல்லும் விஷயங்களே, நமக்கான சாட்டைகளாக மாறி விடுகின்றன.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.