செவ்வாய், 15 டிசம்பர், 2015

5

எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் என் பிறந்த வீட்டிலும் , புகுந்த வீட்டிலும் இருக்கும் திருமண ஆல்பங்களை ஒரு முறை புரட்டுவது என் வழக்கம்.. என்னதான் வீடியோ கவரேஜ் பண்ணி எடுத்து இருந்தாலும் , புகைப்படத்துல பார்க்கிற ஒரு திருப்தி வரவே வராது... அதுவும் இல்லாம, சிடி எடுத்து போட்டு பார்த்து முடிக்கறதுக்குள்ள வர்ற இடையூறுகள் திருப்திக்கு பதிலா அலுப்பையே தரும்கிறதால என் சாய்ஸ் ஆல்பம்தான்....

இப்போதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்பில் அடுக்கி வைத்திருந்த ஆல்பங்கள், அங்கு இங்கு நகரும்போது கண்ணை உறுத்தவே பார்ப்பதற்காக எடுத்தேன்..கூடவே பிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன்... அது தவறு என்று, எடுத்து இரு பக்கங்களை திருப்புவதற்குள் உணர்ந்து கொண்டேன்.. வரிசையாக பார்க்கலாம் என்று எடுத்தால் பசங்க நான்கைந்து பக்கங்களை ஒன்றாக சேர்த்து எடுத்தும், முன்னால் உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதற்கு திரும்ப திருப்பியும் என அலம்பல் செய்ததோடு அல்லாமல் இருவரும் ஆல்பத்தை புரட்டிப் பார்க்க சண்டையும் போட்டுக் கொள்ளவே திருமண ஆல்பத்தை பெண்ணிடமும், திருமண வரவேற்பு ஆல்பத்தை எடுத்து மகனிடமும் கொடுத்து விட்டு அவர்கள் பார்த்து வைத்து விட்டால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என உள் அறையில் வேறு வேலை பார்க்கத் திரும்பினேன்.

அதே நேரம் பக்கத்து வீட்டிலிருக்கும் ஒருவர் பிள்ளைகளை பார்க்க வர இவர்கள் ஆல்பம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் தானும் அருகில் அமர்ந்து கொண்டு மாமா எந்த போட்டோல இருக்கேன்னு கண்டுபிடி என மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. இடையில் அவர் நீ எங்கடா, போட்டோவுல காணுமே எனக் கேட்க, நானும் அனிசிதாவும் (அனிஸ்ரீயா) துபாய்ல இருந்தோம் என்ற அவன் பதிலும் என் காதில் விழுந்தது..

இடையில் அங்கிருந்த என் கவனம் திசை மாறி நான் செய்து கொண்டிருந்த வேலையின் மீது விழுந்த சில நிமிடங்களுக்குள் "சவிதா இங்க வா" என கோபத்துடன் அவன் அழைக்கும் குரல் கேட்கவே ஹாலுக்கு வந்து என்னவென கேட்க "ஏன் முதித்துக்க" எனக் கேட்க நான் புரியாமல் முழிக்க , பக்கத்து வீட்டுக்காரரோ , நீ பின்னாடி தலைமுடி அலங்காரம் முத்து எல்லாம் வச்சு பண்ணி இருந்தே இல்லையா, அந்த போட்டோவ பார்த்துட்டு கூப்பிட்டான் எனக் கூறவே சிரித்தவாறும், முத்து வைத்தா சிகையலங்காரம் செய்து இருந்தாங்க என்ற யோசனையுடனும் சரி என்று சொல்லி விட்டு உள்ளே திரும்ப எத்தனிக்கையில் திரும்பவும்" சவிதா இங்க பாரு, முதித்து இருக்க" என என் சிகையலங்காரம் தெரியுமாறு எடுத்திருந்த, ஆல்பத்தில் நான்கைந்து பக்கங்களுக்கு முன்னிருந்த போட்டோவை திரும்ப எடுத்து என்னிடம் காண்பித்தான்.. நான் புரியாமல் விழிக்க , இந்த போட்டோல நல்லா இருக்க, இந்த போட்டோல ஏன் முத்தித்து இருக்க என கோபமாக அருகிலிருந்த மற்றொரு போட்டோவுடன் ஒப்பிட்டுக் காண்பிக்கும்போதுதான் அவன் சொல்லிக் கொண்டிருந்தது புரிந்து அடக்க முடியாத சிரிப்பும் தொற்றிக் கொண்டது...

அதாவது நான் சுவற்றை பார்த்தவாறு நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு , நான் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கோபப்படுகிறான் என புரிந்தது.. அதை பக்கத்து வீட்டுக்காரரிடமும் நான் தெளிவாக சொல்ல அவரும் அடக்க முடியாத சிரிப்பில் கலந்து கொண்டார்.. மேலும் அவன் "இப்படி முத்திது இருந்தா செத்து போயிடுவே" என சொல்ல என் அம்மாவும் வந்து எங்களுடன் சிரிப்பில் கலந்துக் கொண்டார்....

"தங்கம், அம்மாவோட ஹேர் ஸ்டைல் போட்டோல தெரியறதுக்காக அம்மா திரும்பி நின்னு இருக்கேன்டா" எனக் கூறவும் உடனே அந்த குறிப்பிட்ட போட்டோ உள்ள பக்கத்தின் பின் பக்கத்தை பார்ப்பதற்காக திருப்பினான்.. பின்னர் முன்னும் பின்னும் பார்த்தவாறு என்னிடம் , "பின்னாடி அம்மா மூஞ்சி தெரியல, அப்போ முத்தித்துதான இருக்கே" என திரும்ப அவன் கோபமாகக் கேட்க எங்களின் சிரிப்பு மேலும் தொடர்ந்தது....

அவன் கேட்ட கேள்விகள் எனக்கும் எதுவும் அறியாத சிறு வயதில் மனதில் தோன்றியவைகள்தான்.. ஆனால் மனதில் எழும் கேள்விகளை எல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கி அனுபவத்தின் வாயிலாகவே தெளிவு பெற்றவள் நான்.. அதற்கு பதில் தர காலமும் அவகாசம் கூட எடுத்தது.. ஆனால் இப்போதுள்ள குழந்தைகளின் நுண்ணிய அறிவும் , கேட்டு பதில் வாங்கும் சூட்டிப்பும் என்னை உண்மையிலேயே மலைக்க செய்கின்றன.. நாமும் உண்மையையும், எதார்த்தத்தையும் தெளிவாக எடுத்துக் கூறப்பழகினால் இப்போதுள்ள இப்படிப்பட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்ப்பதும் சுலபம் என்றே தோன்றுகிறது..

கூடவே கேள்வி கேட்கும் நிலைக்கு வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்காக, .. இனி அவர்கள் கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான பதில்களை உடைய கேள்விகளுக்கு பொறுப்பான, அறிவார்ந்த பதிலை அளிக்க நானும் என் அறிவை வளர்க்க வேண்டுமே என்ற சிறு பயமும் தோன்றியது...
(படத்தில் இருப்பது மாடலே.......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.