வலைதளங்களில் பத்திரிக்கைகள் மூலம் பதிவிடும் பதிவுகளுக்கு வரும் விமர்சனங்களை எல்லாம் படித்திருக்கிறீர்களா? சிலர் இன்டர்நெட்/மொபைல் ரீசார்ஜ் என விளம்பரம் செய்திருப்பர்.. சிலர் ஊடகங்களுக்கு இதுதான் முக்கிய செய்தியோ என குறை கூறி அலுப்பை காண்பித்திருப்பர்.. ஆனால் அந்த விமர்சனங்களில் முக்கால்வாசி குதர்க்கமான, கிண்டலான, நேரில் சொல்ல தயங்குகிற விமர்சனமாகத்தான் இருக்கும்..
அதுவும் அது சினிமா/அரசியல் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய பதிவாக இருந்தால் வரும் விமர்சனங்கள் கண் கொண்டு படிக்க முடியாதவையாக இருக்கும்..பதிவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆணாக இருந்தால் அவர்களின் கடந்த/இப்போதைய பொது வாழ்க்கை, ஜாடைமாடையாக சொல்வது போல சில தனி வாழ்க்கை பிரச்சனைகளை பற்றி மேலோட்டமாக விளாசி தீர்த்திருப்பர்.. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெண்களாக இருந்தால் அவ்வளவுதான்.. ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களைப்பற்றி பேசுவதற்கென்றே கற்பு என்ற வார்த்தையை கையிலெடுத்து வக்கிரமான, ஆபாசமான வார்த்தைகளால் கருத்துப் பக்கத்தை அசிங்கம் செய்திருப்பர்..
இவர்கள் அந்த பெண்களை யாரிடம் எல்லாம் இணைத்துப் பேசுகிறார்களோ, அந்த ஆண்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.. ஏனென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரிய சொத்துதானே இங்கு..
சில நடிகைகள் ட்விட்டரில் பதியும் தனிப்பட்ட/குடும்ப புகைப்படங்களை முகநூலில் சிலர் அதற்கென பக்கம் ஆரம்பித்து அவர்கள் பெயரில் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் போடப்படும் படங்களுக்கு வரும் விமர்சனங்களில் அவர்களின் குடும்பப் பெண்களை கூட விட்டு வைக்காமல் கிண்டல் என்ற பெயரில் தன் வக்கிர புத்தியை காண்பித்திருப்பர்... அரசியலைச் சார்ந்த சில பெண்களை அவர்களின் உருவத்தை வைத்து விமர்சிப்பது எனவும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.. அப்படி விமர்சித்து இருப்பவர்களின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால் சிலர் நல்ல நல்ல செய்திகளின் ஷேர்களும் , சிலர் சிறந்த மனிதர் என்பதை காண்பிக்கும் விதமாக பதிவுகளும் இட்டிருப்பர்...
இது பத்திரிக்கைகள் பதிவிடும் பதிவு என்று மட்டும் அல்லாது தனி நபர்கள் சில அரசியல்/சினிமா பிரபலங்களைப் பற்றி பதியும் பதிவுகளுக்கும் விமர்சனங்களாக இருக்கும்.. இதை எதிர்த்து விமர்சிக்கும் ஒரு சிலருக்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லா விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.. அப்படியெனில் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களின் பொது வாழ்க்கையை மட்டும் விமர்சியுங்களேன்..அதற்காக ஆபாசமாக, அந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை/நடத்தையை விமர்சிக்க வேண்டாமே... அதையே அவர்களுடன் இணைத்து பேசப்பட்ட அரசியல்வாதி/ நடிகர்களின் மீது அவர்கள் தெளிப்பதில்லை...
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் எல்லா விமர்சனங்களையும் தாங்க வேண்டுமெனில், அப்படி கூறுபவர்கள் தங்கள் குடும்பப்பெண்களை பின்னர் ஏன் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறார்கள் என தெரியவில்லை.. வேலைக்கு வெளியில் வரும் பெண்ணும் குடும்பத்திலிருந்து சமூகத்துக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்.. அந்த பெண்களின் மீது வேறொருவர் ஆதாரமில்லாத குற்றத்தைக் கூறி இப்படி இழிவாக பேசினால் இவர்கள் அதை ஆமோதித்து எளிதாக கடந்து விடுவார்களா? .
இப்போது சிம்பு-அனிருத் கூட்டணி பெண்களை கொச்சைப்படுத்தி இசையமைத்து பாடியுள்ள பாடலுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோருமே எதிர்ப்பு கிளப்பியுள்ளோம்.. ஆனால் அரசியல்/சினிமா துறை சம்பந்தப்பட்ட பெண்களைப் பற்றி தனித்து கூறப்படும் ஆபாசமான கருத்துக்களுக்கு ஒட்டுமொத்தமாக எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.. ஓரிருவர் அதன் பின்னாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் வாயை அடைக்குமளவுக்கு சம்மந்தப்பட்ட/சம்பந்தமே இல்லாத காரணங்களை வக்கிர முறையில் தெரிவித்து வாயடைப்பர்.. அவர்கள்தான் இப்போது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பின் மேல் வியப்பு..
பெண்களை மொத்தமாக ஆபாசமாக பேசினால்தான் இங்கு தப்பா? தனியொரு பெண்ணை பற்றி இழிவாக விமர்சிப்பது குற்றமில்லையா?இப்படி சொல்வதால், அந்த பாடலை ஆமோதிக்கிறேன் என்ற அர்த்தமில்லை.. மிகவும் கண்டிக்கக்கூடியதுதான்..தண்டிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அதையும் அரங்கேற்றியே ஆக வேண்டும்..
நான் சொல்ல வருவது , ஒட்டுமொத்த பெண்களின் மீது வரும் விமர்சனத்தை எதிர்க்கும் நாம் தனிப்பட்ட பெண்களைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களையும் எதிர்க்க ஆரம்பிக்க வேண்டும்.. இன்று அந்த பெண்கள் , நாளை நம் குடும்பப் பெண்களாகக் கூட இருக்கலாமல்லவா?
நான் சொல்ல வருவது , ஒட்டுமொத்த பெண்களின் மீது வரும் விமர்சனத்தை எதிர்க்கும் நாம் தனிப்பட்ட பெண்களைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களையும் எதிர்க்க ஆரம்பிக்க வேண்டும்.. இன்று அந்த பெண்கள் , நாளை நம் குடும்பப் பெண்களாகக் கூட இருக்கலாமல்லவா?
கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.. ஆனால் அந்த கருத்தை ஆபாசமில்லாமல்/இழி சொற்களை பயன்படுத்தாவண்ணம் நாகரீகமாக தெரிவிப்போமே.. அதே போல் தனிப்பட்டவர்களின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாமே..நீங்கள் விமர்சிக்கும் பெண்களுக்கும் குடும்பம் இருக்குமே, உங்களைப் போன்றே ஒரு உறவும் அதை படிப்பாரே?
அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவுவதை தடுக்கவென கூறி , அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதென தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் கடந்த காங்கிரஸ் அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.. பின் கடந்த மார்ச்சில் சுப்ரீம் கோர்ட் அந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்..
நாம் மேலும் தரம் தாழ்ந்து, வக்கிரமான எல்லை மீறிய விமர்சனங்களைக் கொடுத்து நமக்கு கிடைத்துள்ள இந்த கருத்து சுதந்திரம் என்ற வாய்ப்பை இழக்க வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.