செவ்வாய், 15 டிசம்பர், 2015

பகல் கனவு

நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது விழிப்பு வந்து விட்டது..ஆனால் கண்களை திறக்க முடியவில்லை.. திறக்க முயற்சித்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.. அலாரம் அடித்ததாக நினைவு.. அதனால் எழுந்தே ஆக வேண்டிய கட்டாயம்..ஆனால் கண்களை திறக்கவே முடியவில்லை..
பக்கத்தில் படுத்திருந்த என் பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி மட்டும் கண்கள் திறக்க முயற்சித்து பாதி வெற்றி பெற்று மீண்டும் தோல்வியுறும் தருணங்களில் தெரிகிறது.. எப்படியோ எழுந்து நின்று விடுகிறேன்.. இப்போது அவளை நான் தூக்கி வைத்திருக்கவில்லை.. ஆனால் என் பார்வைக்கு அருகிலேயே யாரோ அவள் படுத்தவாக்கிலேயே தூக்கி வைத்திருப்பதாக தெரிகிறது..
யார் தூக்கி வச்சுருக்காங்க என அதிர்ந்து கேட்டதும், "நான்தான் , இன்னைக்கு வெளில போயிட்டு லேட்-லாதான் வேலைக்கு வருவேன்னு சொல்லி இருந்தேன்ல" என வேலைக்காரப் பெண்ணின் குரல் மட்டும் தெளிவாக கேட்கிறது.. ஆனால் கண் திறந்து பார்க்க முடியவில்லை..
சாவி எப்படி கிடைத்திருக்கும் என நினைவு வர அவளிடம் இருந்த சாவியால் திறந்திருப்பாள் என்று ஊகித்துக் கொள்கிறேன்..
உடனே"கொஞ்சம் முன்னதான் அம்மாவுக்கு போன் பண்ணினேன்" என நான் சொன்னவுடன் "ஏன் பண்ணிணே" எனக் கோபித்துக் கொள்ளும் குரலில் கேட்கிறாள்.. " இல்லை சும்மாதான் , தம்பியும் இப்ப வந்துட்டே இருக்கேன்னு சொன்னான் " என எங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டோடு பொய் சொல்கிறேன்.. ஏனெனில் வந்த உருவம் யாரென்று இன்னும் என் கண்ணில் தெளிவாக படவில்லை.. இப்போதும் இமைகளை நன்றாக திறக்கும் முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..
ஒருவேளை முகம் கழுவினால் கண்களை திறக்க முடியுமோ என்ற எண்ணம் வர மெதுவாக அவளை கையைப் பிடிக்க சொல்லி குளியலறைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.. நுழைந்ததும் அது அவள்தானா என்ற என் உறுத்தும் சந்தேகத்தால் திரும்ப அவளை பார்க்க முயன்றவாறே கதவை சாத்துவதற்கு தயாராகிறேன்..
இப்போதும் ஏதோ தெளிவில்லாத உருவம் மட்டும் அங்கே தெரிகிறது..
முட்டி மோதி, கஷ்டப்பட்டு இமைகளுக்கு உந்துதல் கொடுத்து திறந்தபோதுதான் அது கனவு என்றே புலப்பட்டது..
ஒருவேளை உண்மையிலேயே அலாரம் அடித்து இருக்குமோ என , பக்கத்தில் கைபேசியை வைக்காததால் வரவேற்பறையில் கடிகாரத்தை பார்க்க எழுந்து போனேன்.. ஏற்கனவே முழித்து விட்டிருந்த பெண்ணும் என்னுடனேயே எழுந்து வந்தாள்..
மணி 11.25 AM என்றிருந்தது.. பள்ளி சென்றிருக்கும் மகனை அழைத்து வருவதற்காக 12 மணிக்குதான் அலாரம் வைத்திருந்தேன்..
அசதியால் தூங்கி 1 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு கனவா? பகல் கனவும், காணும் நேரத்தை பொறுத்து பலிக்கும் என்று படித்த நினைவு, திடீரென எழுந்ததால் வந்த தலைவலியின் கூடவே வந்தது..
இருந்தும்,நினைவிலிருக்கும் கனவுகளை குறித்து வைக்கும் பழக்கமிருப்பதால் அந்த வலியுடனேயே டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன்.. (ஏனெனில் கனவில் மறந்துவிட்ட நினைவுகளை மீட்டெடுப்பது சிரமம்) இப்போது இதிலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.