"நாளைக்கே எனக்கு பர்த்டே வைக்கணும்" ஜெகனுக்கும் , பெனிட்டுக்கும் சாக்லேட் கொடுக்க மாட்டேன், மேம்-க்கும், மத்த பிரெண்ட்ஸ்க்கும்தான் கொடுப்பேன்" என பள்ளிப்பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபத்துடன் கூறினான்..
"ஏன் தங்கம்" என கேட்டதும் "இன்னைக்கு கிளாஸ்-ல ஒரு ப்ரெண்ட்-க்கு பர்த்டே.. எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தான்.. நான் பேக்-ல வச்சுருந்தேன், பஸ்-ல வரும்போது, ஜெகன் என் பேக்-ல இருந்து என் சாக்லட்டை எடுத்து தின்னுட்டான், சோ அவனுக்கும் , பெனிட்டுக்கும் (இதற்கு முன் சண்டையிட்ட காரணத்தால் பெனிட்டும் அந்த லிஸ்டில் சேர்ந்திருந்தான்..) கொடுக்க மாட்டேன்" என நான் எழுதியது போல் அல்லாமல் வரிசை மாறி மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சொல்லி முடித்தான்..
"சரி,உன் பர்த்டே-க்கு இன்னும் 8 மந்த்ஸ் இருக்கு.. அப்போ பார்த்துக்கலாம்" என கூறினேன்.. அதெல்லாம் தெரியாது, எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும், அவ்ளோதான் என ஸ்ட்ரிக்ட்-ஆக சொல்லி விட்டு போகோ-வில் சோட்டா பீமுடம் ஐக்கியமாக சென்று விட்டான்..
மறுநாள் எழுந்ததும், இதை ஆரம்பிப்பானோ என்று பயந்திருந்தேன்.. ஆனால் அதை மறந்து விட்டிருந்தது அந்த காலை நேர பரபரப்பை கொஞ்சம் குறைவாக்கி இருந்தது..
ஒரு வாரம் கடந்த நிலையில், இன்று காலை, அவனுக்கு ஷூ போட்டு விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் "பர்த்டே" என்னும் வார்த்தை எவ்வாறோ எங்கள் பேச்சில் உள்நுழைந்து விட்டது.. (இப்போது யோசித்துப் பார்த்தால் நினைவுக்கு வரவில்லை.. ) உடனே அதை பிடித்து விட்டான்..
"எனக்கு பர்த்டே கொண்டாடனும், நான் ஸ்கூலுக்கு கொண்டு போய், கிளாஸ்-ல எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கணும் என்று கூறினான்..(இந்த ஒரு வாரத்தில் ஜெகன் மற்றும் பெனிட் மீதுள்ள கோபம் அவன் இன்னும் குழந்தை என்ற காரணத்தால் காணாமல் போய்விட்டிருந்தது..)
அவன் வகுப்பில் இருந்து "பிரெண்டுக்கு பர்த்டே" என அடிக்கடி சாக்லேட் கொண்டு வருவது வழக்கம். ஒரு முறை டீச்சர்-க்கு பிறந்தநாள் என்று கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட், சாக்லேட் என கொண்டு வந்தான்.. நேற்றும் சாக்லேட் கொண்டு வந்திருந்தான்..
"உனக்கு ஆகஸ்ட்-லதான் பர்த்டே வரும், அப்போ உங்க ஸ்கூல்-ல சம்மர் ஹாலிடேஸ் விட்டுருப்பாங்க.. சோ நீ உன் பிரெண்ட்ஸ்-க்கு சாக்லேட் கொடுக்க முடியாது" என சொன்னதும் அழ ஆரம்பித்து விட்டான்..
"இல்லை, நான் சாக்லேட் கொடுக்கணும், எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும்" என சிணுங்கவே, "சரி, அனிஸ்ரீயா பர்த்டே-க்கு நீ உன் கிளாஸ்-ல போய் சாக்லேட் கொடு" என்று சொன்னாலும், "நோ, எனக்கு எல்லோரும் ஹாப்பி பர்த்டே சொல்லணும்,என் பர்த்டே க்குத்தான் சாக்லேட் கொடுப்பேன்" என அழ ஆரம்பித்தான்.. அவனால், பிறந்தநாள் எப்போது வரும் என்று புரிந்து கொள்ளவும் முடியவில்லை..
"சரி, நாம இந்தியால ஸ்கூல்ல சேர்ந்ததும் அங்க கொடுப்போம்" எனவும் , "சும்மா வேணா சாக்லேட் கொண்டு போய் கொடுக்கறியா" எனவும் என் சமாதானங்கள் நீண்டு கொண்டு சென்றும் , அவை எதுவுமே அவனை சமாதானமாக்கவில்லை..
"என்னப்பா, கஷ்டமா இருக்கு , இப்படி ஏங்கறான்" என என்னவரிடம் சொன்னபோது "நாம என்ன பண்ண முடியும்" என அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டார்..
பள்ளி கிளம்பும்போது , "எனக்கு பர்த்டே வைக்க மாட்டே இல்ல", என சொல்லிக்கொண்டே, கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க கிளம்பினான்.. கஷ்டமாக இருந்தது..
வரும்போது அவன் அதை மறந்திருந்தாலும் , ஆசை மனதின் உள்ளே இருந்து கொண்டேதானே இருக்கும்.. வரப்போகும் நாட்களில் சக மாணவர்களில் யாரேனும் பிறந்தநாள் கொண்டாடும்போது அது மீண்டும் எட்டிப் பார்க்கத்தானே செய்யும்..வகுப்பில் ஒரு பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடும்போது, மற்ற எல்லா பிள்ளைகளுக்கும் தனக்கும் இப்படி எல்லோரும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும்...
பிள்ளைகளின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்து பார்க்கவேண்டும் என்ற என் ஆசை , இந்த விஷயத்தில், அது எப்படி என்ற யோசனையிலேயே உள்ளது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.