செவ்வாய், 15 டிசம்பர், 2015

கண்ணீர் எனும் மருந்து

"கண்ணீர் விடுவது ஆணுக்கு அழகல்ல" , "கண்ணீர் விட்டே பெண்கள் காரியத்தை சாதிச்சுடுவாங்க" அழுகையைப் பற்றி இப்போதும் கூட நம் காதுகளில் சில சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்தான் இது... ஆனால் என்னைப் பொருத்தவரை "அழுகை ஒரு மருந்து".. அது கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து....

இங்கு தன் கண்ணீரால் தலையணையை ஈரப்படுத்தாத ஒருவருமே இருக்க முடியாது....

நான் பிறந்ததிலிருந்து தேவைகளுக்காக அழுத அழுகை இப்போது ஆறுதலுக்காக தேவைப்படுகிறது...எனக்கு அழுகையை பரிசாகக் கொடுத்து ரசிக்க காத்திருந்தவர்களும் உண்டு , தங்களை அறியாமல் என்னை அழ வைத்தவர்களும் உண்டு....

பொது இடங்களில் வரம்பு மீறி காயப்படும்போது பீறிட்டு வரும் அழுகையை அடக்கி வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட அழுகையை வெளிக்கொணர யாருமில்லாத இடம் தேடி இருக்கிறேன்.. இருந்தும் பொதுவான இடங்களில் நாம் மறைந்திருந்து அழுதாலும் பின்னர் நம் முகம் காட்டிக் கொடுத்து விடுமே என அதை என் வீடு வரை கொண்டு செல்வேன்... சில நேரம் என் தாய் மடியில் படுத்து ஆறுதல் தேடுவேன்.. அவர் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அச்சமயம் தேற்றினாலும் இரவில் படுக்கும்போது யாருமறியாமல் கண்ணீர் விட்டு அழுவது மட்டுமே மனசை லேசாக்கும்... சில சந்தர்ப்பங்களில் என் அழுகை எனக்கு தரும் ஆறுதலை நான் உணர்வதற்குள்ளேயே, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த அமைதியான உறக்கத்தைக் அழுகை கொடுத்து விடும்... இந்த உலகில் உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கும் வளர்ந்த மனிதர்கள் யார்? சந்தோஷமாக இருக்கும் நிமிடங்களிலும் கவலை என்னும் பாரம் எடை குறைந்தாவது முதுகில் தொற்றிக்கொண்டுதானே உள்ளது...

சில நேரங்களில் சில சம்பவங்களால் கட்டுப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வரப்படும் அழுகை வீட்டில் உள்ள குதூகல சூழலால் என்னை அறியாமல் என்னை விட்டு போயிருக்கும்.. போயிருக்கும் என்றவுடனே நிரந்தரமாக அச்சம்பவங்களை பற்றிய வலி தரும் அழுகை போயிருக்கும் என்று அர்த்தமல்ல.... மற்றொரு நாள் மனம் பாரமாக இருக்கும்போது இந்த சம்பவமும் அதே போல் முன்பு காயப்பட்ட சம்பவங்களும் வரிசையாக வந்து கண்ணீரைக் கொடுத்து என் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்....

வீட்டினுள் நான் நினைத்து நினைத்து அழும் அளவுக்கான சம்பவங்கள் இதுவரையில் நடந்ததில்லை . ஏதோ அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்... இப்படி ஆழ வைத்த சிறு சிறு சம்பவங்கள் கூட காலப்போக்கில் மறக்கக்கூடியவையாகவே இருந்தன... இப்போது இந்த சிறு சிறு சம்பவங்களுக்கு அழுததை நினைத்தால் சிரிப்பாக இருக்கும்... ஆகையால் இவை அதிக காலத்துக்கு கண்ணீரை இழுத்துக்கொண்டு வந்ததில்லை...

ஆரம்பத்தில் கண்ணீர் துயரப்படும்போது வரும் வேதனை ஊற்றாக தெரிய ஆரம்பித்தது மாறி நாளடைவில் மன அழுத்தம் போக்கும் மருந்தாகத் தெரிய ஆரம்பித்தது.. என் பெற்றோரோ, கணவரோ தரும் தேற்றுதலை விட ஆழ்ந்த ஆறுதலை அது தருகிறது... ஆனால் அதுவே தினசரி அழுவதற்காக காரணம் தேடும் வகையில் முற்றிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன்.....

நான் யாருக்கும் தொந்திரவு தராத மௌனமான அழுகையை நேசிக்கிறேன், எனக்கு அழுகையை தரும் மனிதர்களை அதை விட நேசிக்கிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.